7/31/2022

உறவுச்சிறகுகளால் பறந்திருப்போம்

 


கோவை விமானநிலையத்தில் விமானம் தரையிலிருந்து எழும்பும் அந்த விநாடியில்தான் பகிர்ந்தேன். சரியாக இருபது நாட்களுக்கு முன்பாக ஒரு கவிதைத் துணுக்கினை எழுதிப் பகிர்ந்திருந்தேன். அது இப்படியாக முடியும், 

சென்றமுறை வந்திருந்தேன்

சிலபலரை இழந்திருந்தேன்

இம்முறையும் வந்திருக்கின்றேன்

சிலபலரை இழந்திருக்கின்றேன்

அடுத்தமுறை?

வருவேனே தெரியாது

உதிரும் சிறகுகள்

இருக்கும்வரையிலும்

பறந்திருப்போம் உறவுச்சிறகுகளால்!

இன்று சரியாக இருபதாவது நாள். பலரை இழந்திருக்கின்றேன். இழப்புகளின் வேகம் கூடிக்கொண்டே இருப்பதாய் உணர்கின்றேன். ஆண்டுக்கொருமுறை ஊருக்குச் செல்பவன், இனி ஆறுமாதங்களுக்கொருமுறை சென்று வந்தாலென்ன என யோசிக்கத் தலைப்படுகின்றேன். தேடித்தேடி மக்களைச் சந்திக்க விரும்புகின்றேன்.

இந்திராணி அக்கா. நண்பர் ஆரூரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் ‘ஊர்ப்பழமை’ எனும் நூல் வெளியிடப்பட்டது. பலரது பாராட்டுதலுக்கும் ஆட்பட்ட நூல். வெளியீட்டு விழாவுக்கு யாரை அழைக்க வேண்டுமெனக் கேட்டார்கள். சட்டென நினைவுக்கு வந்தவர்கள் மணிவாத்தியாரும் இந்திராணி அக்காவும்தான். முதன்முதலின் என் பெயரை எழுதிப் பழக்கியவர் மணி வாத்தியார். முதலாம் வகுப்பில் சேர்த்துப் பதிந்தவரும் வா.வேலூர்ப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அவர்தாம். இரண்டாம் வகுப்பிலேயே ஆங்கிலப்பாடம். அப்போதெல்லாம் ஆங்கிலம் என்பது மூன்றாம் வகுப்புக்குப் பின்னர்தாம் பாடத்திட்டத்திலேயே வரும். ஆனால் இவர் இரண்டாம் வகுப்பிலேயே எங்களுக்கு ஆங்கில ஆசிரியர். அதற்கும் மேற்பட்டு ஊரார் அனைவருக்கும் குடும்ப நண்பர். இளைஞர். திருமணமாகாதவர். இவர்மேல் மோகம் கொள்ளாத இளம்பெண்கள் இருந்திருக்க முடியாது. இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும். ஆனால் அதுதான் அன்றைய நாட்டுப்புற மனநிலை. காரணம், புற அழகு மட்டுமேயல்ல. கலகலவெனப் பேசுவார். சிரிப்பார். யாரும் அணுகக்கூடிய வகையிலே இருப்பார். ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்குத் திருமணம். யார் மணமகள்? அவர் எப்படி இருப்பார்? சக மாணவர்களுக்குள் பரபரப்பு. என்ன ஆச்சர்யம்? அவரே எங்களுக்கு அறிவியல் ஆசிரியராகவும் வந்தார். தோழியாக, அக்காவாகப் பழகினார். அதற்குப் பின் பல ஊர்கள், இடங்கள், நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வந்திருந்தாலும் கூட, அதே மாறாப்பற்றுடன் வாழ்வில் இடம் பெற்றிருந்தார். இன்று இழந்திருக்கின்றேன். பலமுறை அவரை வீட்டுக்குச் சென்று சந்தித்திருக்கின்றேன். விழாக்களுக்கு வந்திருக்கின்றார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

அலெக்ஸ். நண்பர். அன்றாடமும் இணையத்தினூடாக அளவளாவுவோம். மாதமொருமுறையாவது அழைத்துப் பேசிக் கொள்வோம். பத்து நிமிடங்களாவது பேசிவிடுங்கள். அந்த நினைவிலேயே நான் அடுத்த ஒரு மாதம் முழுதும் ஓட்டிவிடுவேனென்று மனம் திறந்து சொல்வார். மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். வியப்பில் மகிழ்ந்து வரவேற்றார், ‘இவன் எப்படி நேரில் இங்கே வந்திருக்கின்றான்?’ என நினைத்திருக்க வேண்டும். பரபரத்துக் கிடந்தார். அருகில் இருப்பவர்களிடம், ‘பழமைபேசிக்கு உடனே காஃபி வாங்கி வந்து கொடுங்கள்’ என்றார். எல்லாமுமே சைகை மொழியில்தாம். பார்க்க வந்த மருமகளிடம், ‘நீங்கள் யார்? என் மருமகளைப் பார்த்தால் வரச் சொல்லுங்கள்’ எனச் சொல்லி இருக்கின்றார். அந்த அளவுக்கு நினைவு தப்பி இருந்தவர், அழைத்துச் சென்ற மருத்துவர் சோமு அவர்களையும் என்னையும் கண்டு, முழு உணர்வும் பெற்று நடந்து செல்ல வேண்டுமென்கின்றார். புத்துயிர் பெற்றவரானார். அடுத்த வாரத்திலேயே விடை பெற்றுக் கொண்டார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

லெட்சுமண வாத்தியார். வா.வேலூர்த் தலைவாசல் பரபரத்துக் கிடக்கும். பெரிய ஊர். அண்மையில் இருக்கும் வாகத்தொழுவு, சங்கமநாயக்கன்பாளையம், மொகானூர், சலவநாயக்கன்பட்டி, சலவநாயக்கன்பட்டிப் புதூர், வீதம்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி எனப் பல ஊர்களுக்கும் இதுதான் பிரதானம். கரண்ட்பில் கட்ட, பள்ளிகளுக்கு வர, சந்தைக்கு வர, ஓட்டுப் போட, பஞ்சாயத்து ஆபிசுக்கு வர, மாட்டாஸ்பத்திருக்கு வர என எல்லாவற்றுக்கும் இங்குதான் வந்தாக வேண்டும். அப்படியான தலைவாசலில் ஓங்கி வளர்ந்த அரசமரங்கள் பல உண்டு. அவற்றின் நிழலிலே, நிழல்படிந்த திடலிலே எப்போதும் குறைந்தது ஐம்பது சிறார்களாவது திடலிலே விளையாடிக் கொண்டிருப்போம். குடிதண்ணீருக்கு சங்கமநாயக்கன் பாளையத்துக்கருகே இருக்கின்ற அய்யர் தோட்டத்துக்குத்தான் போயாக வேண்டும். மூத்த அண்ணன், வயது 13, 14 இருக்கும். சைக்கிளில் சென்று சைடுக்கு ஒன்றாக இருகுடங்களிலும் தண்ணீரோடு வந்து கொண்டிருந்தார். எதிர்ப்பட்ட லெட்சுமண வாத்தியார் அவர்கள் அண்ணனை நிறுத்தி, ‘பிரபாகர், எங்கிருந்து தண்ணி கொண்ட்டு வந்திருக்கிற?’. அண்ணனுக்கு பதில் சொல்ல நா வரவில்லை. பிதற்றிக் கொண்டிருக்கின்றார். அருகில் விளையாடிக் கொண்டிருந்த நாங்களெல்லாம் அருகில் ஓடிப் போகின்றோம். லெட்சுமண வாத்தியார் அண்ணனுக்கு ஆசிரியர். அதாவது எங்களுக்கெல்லாம் தமிழாசிரியர். ‘என்னடா? தண்ணி எங்கிருந்து கொண்ட்டு வர்றன்னுதான கேக்குறன்?’. அண்ணன் வெலவெலத்துப் போய் சொன்னார். ‘சார், நம்ம தோட்டத்துல இருந்துதான் சார் கொண்ட்டு வர்றன்’. ‘நம்ம தோட்டம்னா? எனக்கேதுடா தோட்டம்?’ என்கின்றார் ஆசிரியர். இஃகிஃகி. விசியமென்னவென்றால், லெட்சுமண வாத்தியார், தலைவாசலிலே இருக்கும் இராமய்யர் வீட்டு மருமகனும் கூட. ஆனால் அய்யர் தோட்டம் என்பது பெயர் மட்டுமே. தோட்டம் யாருக்கோ சொந்தமானது. அவரிடமே அய்யர் என உச்சரிக்க அண்ணனுக்குப் பயம். எனக்கும் உடன் விளையாடிக் கொண்டிருந்த பையன்களுக்கும் விளங்கி விட்டது பிரச்சினை. நான் சொன்னேன், ‘சார், எங்கண்ணன் உங்களப் பாத்து பயப்பட்றான் சார். நல்ல தண்ணிக் கெணத்து மோட்டார் காயல் கருகிப் போச்சி சார். அதான் அவன் அய்யர் தோட்டத்துக்குப் போயி தண்ணி எடுத்துட்டு வந்துருக்கான் சார்’. சொல்லி முடிக்கும் முன்பாகவே சைக்கிளை எடுத்துக் கொண்டு சிட்டெனப் பறந்து விட்டிருந்தார் அண்ணன். தமிழாசிரியரும் நேற்று மறைந்து விட்டார். இழப்புத்தான். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

நண்பர் ஆறு. அமெரிக்கத் தமிழ் வானொலி நிலைய நிறுவனர். நேரில் சந்தித்திருக்கின்றோம். பலமுறை உரையாடி இருக்கின்றோம். என்றாலும் கூட அந்த நாளை என்னால் மறக்க இயலவில்லை. வானொலி நிலைய நிகழ்ச்சி. பொங்கல் குறித்த கிராமிய நினைவுகளை நான் பகிர்ந்து கொண்டேன். ஒருமணி நேர நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிவுற்றதும் இவரும் நானும் உரையாடியது இரண்டு மணி நேரங்கள். எப்படி பழமைபேசி, இவற்றையெல்லாம் துல்லியமாக நினைவிற்கொண்டு சொல்ல முடிகின்றது? அப்படி இப்படியென மனமார்ந்து பாராட்டியதோடு, பல்வேறு வினாக்களையும் தொடுத்து அறிதலைத் தீட்டிக் கொண்டே இருந்தார். பலமுறை மகளாரின் வயலின் நிகழ்ச்சிக்காகத் தொடர்பு கொண்டவர், ஒருமுறையேனும் அவரிடம் நேரம் வாங்கிக் கொடுங்கள் என வேண்டிக் கொண்டார். அவரது ஆசையை நான் நிறைவேற்றிக் கொடுக்காமலே இருந்து விட்டேன். குற்றவுணர்வில் தவிக்கின்றேன். கடந்தவாரம் மறைந்து விட்டார். ஆனாலும் கொண்டாடுகின்றேன். நினைவுகளை!

நிலையாமை என்பது நிரந்தரம். நாம்தாம் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக சம வயதுடைய, மேற்பட்ட வயதுடைய மாந்தர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்தல் அவசியமானது. விடைபெற்றுக் கொண்டோருக்கு மலர்வணக்கங்கள். Life is too short not to celebrate nice moments!


7/29/2022

ஜீவன்

ஊருக்குச் செல்லும் போதெல்லாம், உற்றார் உறவினர்கள் நண்பர்களை மட்டுமே பார்ப்பதில்லை. சக ஜீவராசிகளையும்தான் பார்க்கப் போகின்றேன். எங்கள் வீட்டில், எங்களை நாடி வந்த மhaன் இருக்கின்றான். ஆமாம், அவனாக எங்களை நாடி வந்தவன்.  அந்தக் கதையை இங்குதான் நீங்கள் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்.  https://maniyinpakkam.blogspot.com/2016/03/ha.html

இராம்நகரில் உள்ள தெருக்களில் உலா வருவேன். அங்கிருப்போர் எல்லாரும் என்னுடன் அன்புடன் குழைவர். அவர்களுக்கான உலகம் ஒன்று உள்ளது. நாட்டத்துடனும் சிநேகத்துடனும் அண்டிப் பார்த்தால் மட்டுமே புலப்படும். நிற்க.

தெருக்களில் நிறைய விபத்துகள் நிகழ்கின்றன. நாய்களைச் சபிக்கின்றோம். ஆனால் சபிக்கப்பட்ட வேண்டியவர்கள் மனிதர்களே. ஏன்?

மனிதன், நேரத்தைச் சரியாகத் திட்டமிடுவதில்லை. மாறாக, சாலைகளில் விரைந்து செல்வதால் துல்லியத்தை அடைந்து விடலாமென நினைக்கின்றான். வேகத்தைக் கூட்டுகின்றான். அதனாலும் மனக்கண்களில் வேறெங்கோ உலாவிக் கொண்டிருப்பதாலும் சாலையின் மீதான கவனத்தை இழக்கின்றான். எதிர்ப்படும் நாயொடு மோதுகின்றான். விபத்து ஏற்படுகின்றது. அந்த விபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஹெல்மெட்டும் பெரும்பாலான நேரங்களில் அணிந்து கொள்வதில்லை. அப்படியே அணிந்திருந்தாலும், கச்சைகளை ஒழுங்காகப் பூட்டி இருக்கமாட்டான். இதற்கும் மேற்பட்டு, சக ஜீவராசிகளெல்லாம் இவன் விருப்பத்துக்கு அடங்கி, ஒடுங்கி ஒத்துழைத்து வாழ வேண்டுமென நினைப்பான். அவற்றின் உயிரியல், மனவியல் அறிந்து கொள்ளவும் அவனுக்கு நேரமில்லை. இதுதான் பெரும்பாலான நாய் விபத்துகளுக்குக் காரணம்.

பார்வை, விழிகளைப் பற்றிப் பேசுவது நலம் பயக்குமென நினைக்கின்றேன். மனிதனுக்கு விழிகள் இரண்டு. ஒவ்வொரு விழிக்கும் விழித்திரை, திரைக்குப் பின்னால் விழிமுன்னறை, விழிபின்னறை, இவற்றுக்கிடையே கண், கண்ணுக்குள்ளே கதிராளி, கண்மணி, வில்லை முதலானவை உள்ளன. காணப்பெறுகின்ற ஒளியானது கதிராளிக்குள்ளே(லென்ஸ்) ஊடுருவிச் சென்று மூன்று விதமான, சிவப்பு, பச்சை, நீல வண்ணப்புரிதற்ச் செல்களுக்கு சென்று சேரும். பெறப்படுகின்ற ஒளியின் அலைநீளம், தன்மையை இந்த மூன்றுவிதமான வண்ணப்பெறுகைச் செல்களும் வெவ்வேறு அளவிலாகப் பெறுகின்ற போது மனிதனுக்கு வெவ்வேறு வண்ணங்கள் புலப்படுகின்றன. இந்த மூன்றில் யாதொரு செல் பழுதடைந்தாலும், நிறக்குருடு, கலர்பிளைண்டஸ் ஏற்பட்டு விடும். குறைபாடுகள் மேலோங்கும் போது மாலையில் ஒளியின் தாக்கம் குறையக் குறைய பார்வைத் திறன் குன்றலுக்குள்ளாகும். இதற்கப்பாற்பட்டு மனக்குருடும் ஏற்பட்டு விடுகின்றது. அதுதான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் காரணம். அதாவது எல்லா சக ஜீவராசிகளும் தமக்கு அடங்கியொடுங்கி ஒத்துழைத்து இருக்க வேண்டுமென்கின்ற மனக்குருடு. அப்படியா?

நாய்களுக்கும் விழிகள் மனிதனைப் போலவே இருக்கின்றனதான். ஆனால் மனிதனுக்கு இருப்பதைப் போல அவற்றின் கண்களில் மூன்று கோன்கள்(நிறப்பெறுகைகள்) இல்லை. மாறாக, ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு கோன்கள்தாம் உள்ளன. நீலம், மஞ்சள் ஆகிய இரு பெறுகைகளே உள்ளன. ஆகவே மனிதன் பார்க்கும் வண்ணங்களையெல்லாம் அவை காண்பதில்லை. சிலபல நேரங்களில் சில பல வண்ணங்கள் அவற்றின் பார்வைக்குப் புலப்படாது. அதன் முதல் புலனறி உறுப்பு என்பது மோப்பசக்திதாம். அதைக் கொண்டுதாம் அது போய்க் கொண்டு இருக்கும். நாம் செல்லும் போது, குறிப்பிட்ட சில வண்ணங்கள் அவற்றுக்கு புலப்பட வாய்ப்பில்லையென்பதால் அது அதன்பாட்டில் மோப்பசக்தி, முகர்தலுக்கு ஏற்பவும் காணப்பெறுகின்ற வண்ணத்துக்கு ஏற்பவும்தான் சென்று கொண்டிருக்கும். இந்தப்புரிதல் மாந்தனுக்கு இருத்தல் வேண்டும்.

நாயைப் பார்க்கின்றான். அவற்றின் செயற்பாடுகள் தமக்கு ஏதுவாக இல்லை. எதையாவது கொண்டு அடிக்கின்றான். அடிபடும். துன்பத்தை அனுபவிக்கும். தற்காத்துக் கொள்ள கடிக்க வரும் அல்லது வாலைச் சுருட்டிக் கொண்டு அஞ்சி ஓடும். ஆனால் அவற்றுக்கு ’தவறு என்ன ஏது’ என்பது ஒன்றும் புரியாது. அவை நுண்ணிய உணர்வுகள் கொண்டவை. மனிதனுக்கு வண்டி வண்டியாகப் புத்தகங்கள் படிப்பதாலும், போதனைகள் கேட்பதாலும் ஏற்படும் நுண்ணுணர்வுகளைக் காட்டிலும் அவற்றுக்கான நுண்ணுணர்வுகள் அதிகமானது. எப்போதும் குட்மார்னிங் சொல்பவர், அன்று சொல்லாமற்போனால் அதற்கு அதன் மனம் நோகும். தன்னைத் தானே வருத்திக் கொண்டு அழும். அந்த அளவுக்கு சென்சிடிவ் ஆனவை. அவற்றுக்கான மொழியுண்டு. சமிக்கைகள் உண்டு.

இயல்புக்கு மாறாக, சரியல்லாதவொன்று, என்ன செய்யும்? கண்களால் பேசும், பார்க்கும். நாவால் சுருட்டி சுருட்டிக் காண்பிக்கும், உதடுகளைச் சுழித்துக் காண்பிக்கும்.  குழைதல், அரற்றல், ஒடுங்குதல், பரபரத்தலென வாலால் பேசும். உள்க்குரலால் முனகும். தொண்டையிலிருந்து செருமும். அதற்கும் புரிந்து கொள்ளப்படாவிடில், மென்மையாகக் குரைக்கும். சினமெனில் முன்னுதடுகளை விலக்கிப் பற்களை இளித்துக் காட்டும். இந்த சமிக்கைகள் எதற்கும் மறுவினை இல்லாத போதுதான் அவை அத்துமீறும், கட்டுப்பாடிழந்து செயற்படும். இப்படியான சமிக்கைகள் எல்லாம் சில பல விநாடிகள்தாம் இடம்பெறும். அவற்றைக் கவனிக்க மனிதனுக்கு நேரமில்லை அல்லது மனமில்லை. அதைத்தான் மனக்குருடு என்பது.

நாய்களின் மொழி, உடலியல், தன்மை, பண்பு இவற்றை அறிந்து செயற்பட வேண்டியது மனிதயினம்தான். ஜீவராசிகளிடம் இல்லாதவொன்றை, செயற்படுத்த முடியாதவொன்றை அவற்றிடம் இருந்து எதிர்பார்ப்பதில் ஒரு பயனுமில்லை. நுண்ணுணர்வுகளின் சக்ரவர்த்திகள் நாய்கள்! அன்பின் தூதர்கள்!!

7/25/2022

காம்பிளி நதிக்கரையில் 4

 

நினைவடுக்குகளில் புகுந்து புகுந்து பின்னோக்கிப் போகின்றேன். புலப்பட்டு விட்டது. முதன்முதலில் எப்போது காம்பிளி நதிக்கரையைக் கண்டேன்? அப்பா அவர்கள் ஆண்டுதோறும் சபரிமலை செல்வது வழக்கம். நான் பிறப்பதற்கு முன்பிருந்தேவும். இன்னமும் கூட, நான் பிறந்த ஊரான அந்தியூரில் என்னை மணிகண்டன் என அழைப்போர் உண்டு. அதன் தாக்கத்தில் அண்ணன் அவர்களும் மாலையிட்டுக் கொண்டார். போதிய சாலை வசதிகள் இல்லை. காலார நடந்துதான் மலையேற்றம். சென்று வந்தவர்கள் விவரிக்கும் போது கலக்கமாக இருக்கும். அப்போதெல்லாம் மலைப்பயணம் என்பது துணிவுப்பயணமாக, சாகசப்பயணமாகக் கருதப்பட்டது. இவர் பதினேழு பதினெட்டு வயதுடைய இளைஞர். துணிந்து களத்தில் இறங்கி விட்டார். தன் சொந்த ஊரான புள்ளியப்பம் பாளையத்தில் சிறிய அளவில் வழிபாடு நடத்தும் ஆசை அவருக்கு. உடன் அழைத்துக் கொண்டு போனார்.

ஆள் அத்துவானம் இல்லாத ஒரு மேட்டில் பேருந்து நிற்கின்றது. இறங்குகின்றேன். காற்று உய் உய்யென அடித்துக் கொண்டிருக்கின்றது. சாலையைக் கடந்து ஒரு சிறுக்கால் ஒத்தையடிப் பாதைக்குள் அழைத்துச் செல்கின்றார். சாராயம் காய்ச்சுவதை வேடிக்கை பார்க்க அணிக்கடவுக்கும் சலவநாயக்கன் பட்டிப் புதூருக்கும் இடையிலான உப்பள்ளத்துக்குச் சென்ற அனுபவத்தை ஒத்திருந்தது. எதிரே ஓரிருவர் வந்து கொண்டிருந்தனர். ’சின்னம்மா பையன்’ என அறிமுகப்படுத்தி வைத்தார். காம்பிளியில் கால் வைத்தேன்.

அடுத்தடுத்த நாள். உப்பாற்றங்கரையிலும் அண்டைய காடுகளிலும் ஐயப்பனுக்கு மாலை தொடுக்கத் துளசி பறிக்கச் செல்வதென்பது நமக்கு வழமையான ஒன்று. அதேபாணியில் சகோதரன் பாபுவும் நானும் ஒரு துணிப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றோம். மீண்டும் காம்பிளி நதிக்கரை, காடுகள். எங்கெங்கோ நுழைந்து பார்த்தோம். துளசிப்புதர்கள் மட்டும் கண்களுக்கு அகப்படவே இல்லை. வெறும் பையோடு திரும்பிச் செல்ல முடியாது. நதிக்கரையில் ஏராளமான மஞ்சணத்திகள் (ஆவரம்பூக்கள்) தென்பட்டன. பறிக்கலாமாயென்றார் உடன்வந்த பாபு அவர்கள். அம்மாவுக்குத் தெரிந்தால் தோலை உரித்து விடுவாரென்றேன். உங்க அம்மா ஊரில் அல்லவா இருக்கின்றாரென்றார். இஃகிஃகி. அதாவது, மாலை தொடுக்க இந்தப் பூக்கள் சரிவராது என்பது கருத்து. பிறகு, அங்கிருந்த பொன்னரளி, செவ்வரளிகளுடன் வீடு திரும்பினோம்.

ஓடைகளும், ஆற்றங்கரைகளும், நீர்நிலைகளும்தான் பல்லுயிர் ஓம்புதலுக்கான அடிப்படை. டார்வின் சொல்கின்றார், பரிணாமத்தின் தோற்றுவாய் நீர்நிலைகள். அங்கிருந்துதான் ஓரணு உயிரிகளிலிருந்து படிப்படியாக ஒவ்வோர் உயிரும் பரிணாமம் பெற்றுத் தோன்றின என்பது அவரது கருதுகோள். அப்படியானதும் இப்படியானதுமான ஆறுகளை, ஆற்றங்கரைகளைக் காப்பது நம் கடமைதானே? அப்பாவின் தாய், பாட்டி அவர்கள் சொல்வார், ’ஊரிலே நிறைய அன்னக்காவடிகள் இருந்தார்கள். அவர்களின் முழுநேர வேலையே குளம், குட்டைகளைப் பராமரிப்பதுதானாம். பசித்த நேரத்துக்கு ஊருக்குள் அன்னக்காவடிகளோடு வருவர். அவர்கள் இறைவனின் நேரடித் தூதர்களாகக் கருதப்பட்டனர். இப்படியான மரபில் திளைத்தவர்கள் நாம். என்ன செய்யலாம்?

நீர்நிலைகளின் மீது நாட்டம் கொள்ள வேண்டும். அதன் தோற்றம், இருப்பு, வரலாறு குறித்தெல்லாம் உணர்வு கொள்ள வேண்டும். அமெரிக்காவில் எங்கு சென்றாலும், சிற்றோடை ஓடிக் கொண்டிருந்தாலும் கூட, அதைச் சுட்டும் பொருட்டு பெயர்ப்பலகையை வைத்திருப்பர். சில இடங்களில் அது குறித்த சுருக்கவுரையைக் கூட பார்வைக்கு வைத்திருப்பர்.

பொருள்முதல்வாத உலகில் வீட்டுப் பாவனைக்கென நிறைய திரவப்பொருட்கள் வந்துவிட்டன. அவையெல்லாமுமே வேதிப்பொருட்கள். அதன் எச்சத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். எடுத்துக்காட்டாக, வடை, போண்டா, பலகாரங்கள் சுட்டு  எஞ்சிய எண்ணெய் கூட தரையில், கழிவுக்குழாயில் ஊற்றக்கூடாத ஒன்றுதான். உரிய முறையில் அதைக் கட்டி அதற்கான கழிவுக் கிடங்கில் சேர்க்கப்பட வேண்டும்.

லேசுபாசாக உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பாவிக்கலாம், தவிர்க்க முடியாது.  ஆனால் வீடுகளைச் சுற்றிலும் அவற்றைப் பாவிக்கும் போது, நேரிடையாக மழைநீர் வடிகாலில் அவை கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மாற்றாக எரு, இரசாயனமற்றவற்றைப் பாவிக்கலாம்.

சோளத்தட்டுப் பொசிவுகள், மக்காச்சோளக் கூளங்கள் போன்ற சருகான மக்கும் பொருட்களை வெகுவாகப் பாவித்து, கட்டுத்தரை, புறவாசல் போன்ற இடங்களை உலர வைத்துக் கொண்டிருந்த சமூகம் நம் சமூகம். காலத்தின் போக்கில் மக்காப் பொருட்களின் வீச்சு அதிகரித்து விட்டது. அவை நிலத்தின் நீருறுஞ்சும் தன்மையைப் பாழாக்குகின்றன. நீரோடி வெள்ளத்துக்கு அடிகோலுகின்றது. மாறாக, நம் ஊரிலிருந்து பீட் மாஸ், தென்னை நார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். அவர்கள் மண்ணைக் காப்பதற்கும் நீர்வளம் காப்பதற்கும் அவற்றைப் பாவிக்கின்றனர்.

உயிரினக்கழிவுகளைக் கொட்டுவது நீர்நிலைகளையும் அதனையொட்டிய பல்லுயிர் ஓம்புதலையும் கேடாக்கும். பல்லுயிர்கள் சூழலியல் பாழாகும் போது மண்வளம் கெட்டுப் போய், இறுகிப் போவதால் நீருறுஞ்சும் தன்மை இல்லாமற்போய் வெள்ளத்துக்கு வழிவகுக்கும்.

இப்படி எத்தனை எத்தனையோ நுண்ணியமான செயற்பாடுகளை, தத்தம் சமயம், பண்பாட்டில் இடம் பெறச் செய்துள்ளனர் மேலைநாட்டினர். இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் நாமும் அவற்றை நோக்கிச் சென்றுதான் ஆக வேண்டும். அது இந்தநாளாகவும் இருக்கலாம். காம்பிளிநதி மீண்டும் பொலிவுறுவாளாகட்டும்!

(முற்றும்)

7/24/2022

காம்பளி நதிக்கரையில் 3


உலகெங்குமே, மாந்தநாகரிகம் என்பது ஆறுகளால் பண்பட்டது. வரலாறு நெடுகிலும், மாந்தசமூகம் போக்குவரத்துக்காகவும் பாசனத்துக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் வெள்ளக்கட்டுப்பாட்டுக்காகவும் ஆறுகளைப் பேணுவதும் அவற்றோடு பிணைந்திருப்பதாகவுமே இருந்து வந்திருக்கின்றது. அதற்கு மாற்றாக, எந்த அளவுக்கு அக்கறையும் அணுக்கமும் கொண்டிருக்கின்றார்களோ அதற்கொப்ப அவர்களுக்கான பண்பாட்டை வடித்துக் கொடுக்கின்றன ஆறுகள். ஆறுகள் போற்றப்படுகின்ற இடங்களெல்லாவற்றிலும் இலக்கியமும் கலையும் ஓங்கி வந்திருக்கின்றன.

ஆறுகள் வளமாக இருக்கின்ற போது அதையொட்டிய மனிதர்களின் பண்பாடும் வளமாக இருக்கின்றது. அவற்றுக்கு ஊறு நேர்கின்ற போதும் பாழ்படுகின்ற போதும், மனிதப்பண்பாடும் பின்தங்கிப் போய் பாழ்பட நேர்கின்றது. ஆறு செழித்தால் ஊர் செழிக்கும். முப்போகமும் விளைச்சலைத் தரக்கூடியனவாக இருந்தன நிலங்கள். ஆறுகளும் ஓடிக் கொண்டிருந்தன.

நினைவுக்குத் தெரிந்தவரையில், முதன்முதலில் ஷாம்ப்பூ, ரோஜாபாக்கு, நிஜாம்பாக்கு முதலானவை பிளாஸ்டிக் பொட்டணங்களாக வரத்துவங்கின. கொஞ்சநாளில் சீயக்காய்த் தூள் கூடப் பொட்டணத்தில் வந்தது. அவற்றைக் கொண்டு போய் ஆறுகளில் குளிக்கும் போது பாவித்து விட்டு, ஆற்றுத்தண்ணீரிலேயே ஓடவிட்டோம். கொஞ்சநாளில் துணிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வரத் துவங்கின. எல்லாவீடுகளிலும் வீட்டுக்குப் பின்னால் குப்பைமேடு ஒன்றிருக்கும். அவற்றைப் பெற விவசாயிகள் தாவுகிடப்பார்கள். பணம் கொடுத்து அள்ளிக் கொண்டு போவது கூட உண்டு. எங்கள் வீட்டுக் குப்பை மேட்டை அள்ளிக் கொண்டு செல்பவர்கள் உறவினர்கள் என்றபடியினாலே, பணத்துக்கு மாற்றாக பருத்திமார் வண்டி வண்டியாகக் கொடுப்பார்கள் தண்ணி காயவைக்க. இப்படியான பிளாஸ்டிக் வஸ்துக்கள் வந்தபின் அவற்றுக்கான மவுசு படிப்படியாகக் குறைந்து போயின. எல்லாமும் காம்பளி நதியிலும் உப்பாற்றிலும் கொட்டப்பட்டன. 

வரலாறு நெடுகிலும் ஆறுகளைப் பேணுவதும் அவற்றோடு பிணைந்திருப்பதாகவுமே மாந்தசமூகம் இருந்து வந்திருக்கின்றது. அதற்கு மாற்றாக, எந்த அளவுக்கு அக்கறையும் அணுக்கமும் கொண்டிருக்கின்றார்களோ அதற்கொப்ப அவர்களுக்கான பண்பாட்டை வடித்துக் கொடுக்கின்றன ஆறுகள்.  ஆறுகளின் வரத்துக்கான மழையும் படிப்படியாகக் குறையத் துவங்கியது. மாந்தநாகரிகத்திலும் சீர்கேடுகள் பெருகத் துவங்கின. நீள அகலம் என்பதோடு உயரமெனும் மூன்றாவது அலகுடனும் பயணித்துக் கொண்டிருந்த மனிதன், உயரத்தைக் கைவிடத் துவங்கினான். தொடர்ச்சியாக வீடுகள் இருக்கும். வாசலில் தேங்கும் மழைநீர் வடிந்து கடை போவதற்கான தொனியில் வீடுகளின் தரை உயரம் படிப்படியாக இறங்கிச் செல்லும். கடைநீர் வடிந்து சிறுபள்ளங்களுக்குச் செல்லும். சிறுபள்ளங்கள் ஓடைகளாகும். ஓடைகள் காம்பளியிலும் உப்பாற்றிலும் வந்து சங்கமிக்கும். தரைதளத்தின் உயரங்கள் ஒன்றுக்கொன்று ஏற்ற இறங்கங்களாகின. மதில்சுவர்களைக் கட்டினார்கள். ஆங்காங்கே தேங்கி நின்றது மழைநீர். வரவேண்டியது வீடுகளுக்குள்ளேயே நின்று போனது. வரக்கூடாதது கரைகளைத் தேடி வந்தன குப்பைகூளங்களாக. ஆறுகள் சபித்தன. வற்றின.

வற்றிய நதியின் போக்கை இடை மறித்தான் மனிதன். கரையில் இருக்கும் காட்டோடு சேர்த்தேவும் உழத் துவங்கினான். குறுகிப் போயின அவை. உப்பாற்றில் ஆறாமீன்களையும் கெழுத்திகளையும் ஓடியோடிப் பிடித்த காலங்கள் உண்டு. அரிப்பைத் தடுக்க ஆங்காங்கே சாரங்கட்டி இருப்பர். மேலிருந்து கீழாக அருவி வீழும். வீழ்கின்ற நீரில் இருந்து கொண்டேவும் கீழிருந்து மேல்நோக்கிப் பாயும் மீன்கள். அவற்றைப் பிடிக்க அருவிக்குப் பின்னால் சுவரோடு சுவராக ஒட்டிக் கிடக்கும் நீர்ப்பாம்புகள். பள்ளிக்குச் செல்லும் நாங்களெல்லாம் அதனைக் கண்டு இன்புற்ற பொழுதுகள் எத்தனை எத்தனையோ. நதிக்கரையில் உயிர்த்துக் கொண்டிருந்த கண்டங்கத்திரிகளும் குப்பைமேனிகளும் வல்லாரைகளும் கோரைகளும் நாணல்களும் அமுக்குரான்களும் தத்தம் உயிர்ப்பை நிறுத்திக் கொண்டன. அவை இருந்த இடத்தில் டில்லி முட்களும் பார்த்தீனியாக்களும் தனதாக்கிக் கொண்டன. முயல்களும் கவுதாரிகளும் காடைகளும் நீலகாந்தாக்களும் அடைக்கலாங்குருவிகளும் நீர் தேடி எங்கோ சென்றுவிட, பல்லிகளும் பாம்புகளும் ராஜராஜ்ஜியம் நடாத்தின. ஒருகட்டத்தில் அவையும் வெறுப்புக் கொண்டு எங்கோ போய்விடலாயின. சமூகத்தில் அக்கறை கொண்டோர் இருக்கவே செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளைச் சுட்டிக்காட்டப் போய் அவமானப்படலாயினர். ஆங்காங்கே தடுப்பணைகளுக்கு அச்சாரமிட்டனர். தடுப்பணைகள் பல பிறந்தன.

ஓடிய காம்பிளி நதிக்கும் வற்றிய காம்பிளி நதிக்கும் இடைப்பட்ட காலம்தான் நம் காலம். அதாவது ஓடியும் ஓடாமலும் இருக்கும். காலையில் எழுந்ததும் நானும் பாபுவும் சமவயதுள்ள இன்னபிற சில வாண்டுகளும் நதிக்கரை நோக்கிப் போவோம் பேசிக்கொண்டேவும். ஆற்றைக் கடந்து காடுகரைகளுக்குச் செல்வோர் சென்று கொண்டிருப்பர். பாறைகளின் மீது நின்று கொண்டு நீர்ப்பரப்பையும் கொக்குகளையும் நாரைகளையும் பராக்குப்பார்ப்பது நம் வேலை.

காம்பளி நதியை நினைக்கும் போதெல்லாம் பலநினைவுகள் நிழலாடும். அதில் மிக முக்கியமானது பெரியப்பா. முற்றிலும் தனித்துவமானவர். மாலையில் வருவார். குளிப்பார். எல்லாரும் திண்ணைகள், வீட்டுச் சேர்களென இருப்பார்கள். இவர்மட்டும் வித்தியாசமாய், வீட்டின் முன்புறம் பாய்விரித்து நடுநாயகமாய் உட்கார்ந்து கொள்வார். மற்ற சமவயதுள்ளவர்களோடு வீண் அரட்டை, அரசியல் என நான் பார்த்ததேயில்லை. பாயில் அமர்ந்து கொண்டு, தன்னந்தனியாக சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார், அமைதியோடு. மிக அமைதியாக. சீட்டுகள் எல்லாம் குத்துக்கிடையாக வரிசைவரிசையாக வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து ஒன்றை இதில் வைப்பார். பின்னர் இதிலிருந்து ஒன்றை பிறிதொரு வரிசையில் வைப்பார். கடைசியில் எல்லாவற்றையும் கலைத்து ஒன்றாக்கி மீண்டும் குத்துக்கிடை வரிசை வரிசையாகச் சில வரிசைகள் வைப்பார். எஞ்சோட்டுப் பையன்கள் எல்லாம் பலமுறை அவருக்கருகே அமர்ந்து கூர்ந்து கவனித்தது உண்டு. ஒரு கோதாரியும் விளங்கவில்லை. சிரித்துக் கொள்வார். 

பல ஆண்டுகளுக்குப் பின் சிங்கப்பூர் வந்தபின்னர், ஒருநாள் மாலையில், இந்தா உனக்கான கம்ப்யூட்டரெனச் சொல்லி ஒரு கம்ப்யூட்டரை கம்பெனி முதலாளி கொடுத்தார். அதுதான் நமக்கான முதல் கணினி. எல்லாரும் அலுவல் முடிந்து வீடுகளுக்குச் சென்றபின்னர், கணினியின் இதர வசதிகளை நோண்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மலேசியச் சீனன், சியாவ் வந்து எலியைப் பிடுங்கி இப்படி விளையாடலாமெனச் சொன்னான். அப்போதுதான் விளங்கியது. பெரியப்பா அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தது Solitair Card Game.

(தொடரும்)


7/23/2022

காம்பிளி நதிக்கரையில் - 2

காம்பிளி நதியும் சரி, உப்பாறும் சரி, உயிரோட்டமாக இருந்தன. ஆற்றின் குறுக்கே செல்லக்கூடிய வழித்தடங்கள் நிறைய இருந்தன. மாதம் மும்மாரி எனும் சொலவடைக்கொப்ப, எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யக் கூடிய காலமும் இருந்தது. அன்றைய ஒருங்கிணைந்த கோயமுத்தூர் மாவட்டத்தில் வறட்சி என்பதே இல்லாமல் இருந்தது. அன்றைய ஒருங்கிணைந்த கோயமுத்தூர் மாவட்டம் என்பது, கொள்ளேகாலம், பவானி, கோபிசெட்டிபாளையம், அவிநாசி, ஈரோடு, தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயமுத்தூர் வட்டங்களைக் கொண்டதாக இருந்தது. பல்லடம் தாலுக்காவில் திருப்பூர் என்பது ஒரு பேரூராட்சியாக, நகரமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எங்கோ ஒரு ஊரில் மழை பெய்தால், காம்பிளியும் உப்பாறும் பெருக்கெடுத்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. இவற்றுக்குக் குறுக்கே நிறைய வண்டித்தடங்களும் இருந்தன. மாட்டு வண்டிகளெல்லாம் ஆற்றுக்குள் இறங்கி மறுகரையிலேறி அக்கம்பக்கத்து ஊர்களுக்குச் சென்று கொண்டிருந்தன. காடுகரைகளில் வேலை செய்வோர், கால்நடைகள் மேய்ப்போரெல்லாம் ஆற்றில் இறங்கித்தான் மறுகரைக்குச் சென்றாக வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தரைப்பாலங்கள் இருந்தன. எடுத்துக்காட்டாக, சிந்திலுப்பு, புள்ளியப்பம்பாளையம், நாதகவுண்டன் பாளையம், சலவநாயக்கன்பட்டி முதலான ஊர்களில் இவ்வகையான தரைப்பாலங்கள் இருந்தன. ஒருபாட்டம் மழை பெய்தாலே போதும், தரைப்பாலங்களுக்கு மேலேவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஊர்கள் துண்டிக்கப்பட்டு விடும். அந்த அளவுக்கு மழையின் ஆதிக்கமும் வீச்சும் அமைந்திருந்தன.

அப்பா ஒரு தானிய வணிகர். அறுவடைக் களத்துமேடுகளுக்கே சென்று தானியங்களையும் பருத்தியையும் கொள்முதல் செய்து, மாட்டுவண்டிகளினூடாகப் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் சந்தைகளுக்குக் கொண்டு செல்வார். அப்படியான நிலையில், இப்படியான மேல்வெள்ளத்தில் வண்டிகள் அகப்பட்டுக் கொண்டதும் உண்டு. குறிப்பாக சிந்திலுப்புப் பாலத்தில் மேல்வெள்ளம் ஏற்பட்டு விட்டால், வேலூர், வாகத்தொழுவு, சலவநாயக்கன்பட்டி, சிக்கநூத்து போன்ற ஊர்களெல்லாம் உடுமலைப் பேட்டையிலிருந்து துண்டிக்கப்பட்டு விடும். அண்மையில் ஓரிரு ஆண்டுகளில்கூட, உப்பாற்று வெள்ளத்தின் காரணமாக சலவநாயக்கன்பட்டி தரைப்பாலத்தில் வண்டி அடித்துச் செல்லப்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகச் செய்திகள் உண்டு.

காம்பிளி நதியை நம்பியும் உப்பாற்றை நம்பியும் நிறையத் தொழில்கள் ஆண்டுமுழுமைக்கும் நடந்து கொண்டிருந்தன. இருகரையிலும் இருக்கும் ஊர்களிலிருந்து கழுதைகள் பொதிகளைச் சுமந்து கொண்டு கரைகளுக்கு வரும். சலவை செய்து துணிகள் காயப் போட்டிருப்பதை ஆங்காங்கே காணலாம். மட்பாண்டக் கலைஞர்கள் ஒற்றைமாட்டு வண்டிகளைக் கொண்டு வந்து நீர் அள்ளிச் சென்று மட்பாண்டங்கள் வனையப்படுவதைப் பார்க்கக் கண்கள் போதாது. வீடுகளின் புறவாசலைப் பெருக்க தென்னையோலை ஈர்க்குச்சிகளாலான விளக்குமார் பயன்படுத்துவர். வீட்டு உட்புறத்தைப் பெருக்க, ஈச்சம்புற்களையும் நாணற்புற்களையும் கொய்து கொண்டு வந்து ஆற்றுப்படுகையில் வைத்து நனைத்து நனைத்துச் சீமாறுகளைக் கட்டிக் கொண்டிருப்பர். கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டுவதும் கழுவிவிடுதலுமாக இவை விளங்கிக் கொண்டிருந்தன. ஆற்றுப் பொருளாதாரம் என்பது இப்படித்தான் உள்ளோங்கிய கிராமங்களில் இருந்தன.

ஆற்றின் கரைகளில் ஆற்றின் பெயராலே கோயில்களும் அமைந்திருந்தன. எடுத்துக்காட்டாக, காம்பிலி அம்மன் கோயிலைச் சொல்லலாம். காம்பிளி நதிக்கும் வடப்புறத்தில் இது அமைந்திருக்கின்றது. இங்கும் மேல்வெள்ளம் ஏற்படுகின்ற தருணங்களில் ஊர்கள் துண்டிப்புக்காட்பட்டுவிடும். இந்தக் கோயில் அமைந்திருக்கின்ற நாதகவுண்டன் பாளையத்திலும், உப்பாற்றுத் தரைப்பாலம் இருந்த சிந்திலுப்பிலும் தற்போது உயர்நிலைப் பாலங்கள் கட்டுப்பட்டுவிட்டன என்பது கூடுதல் செய்தி. காம்பிளி நதிக்கரையில் புள்ளியப்பம் பாளையத்து விநாயகர் கோயிலும் அமைந்துள்ளது. நானறிந்த வரையிலும், அந்த விநாயகர் கோயிலுக்கு இருமுறை குடமுழுக்கு(கும்பாபிசேக) விழாக்கள் நடந்திருக்கின்றன. 1980+களில் இடம்பெற்ற முதல் குடமுழுக்கு விழாவின் போது கிட்டத்தட்ட 10 நாட்கள் நானும் அங்கிருந்து வாழ்வின் பயனை அனுபவித்தேன். ஊர்முழுக்க இளைஞர்கள். கோயில். காம்பிளி நதி, நதிக்கரையை ஒட்டிக் கிழக்காகச் செல்லும் மண்தடம், தடத்துக்கும் கோயிலுக்கும் இடையே ஓர் அரசமரத்து மேடை, மேடையை ஒட்டிக் கோயில். அந்த அரசமரத்தடியில் எப்போதும் ’சோ’வெனக் காற்றடித்துக் கொண்டேயிருக்கும். அந்த இடத்திலொரு பஞ்சாயத்து டியூப்லைட் மின்கம்பத்தில். மாலை ஆறுமணியிலிருந்து இரவு எந்நேரம் வரையிலும் இளைஞர் செட் செட்டாக வந்து அமர்ந்து கதைபேசிச் சென்றவண்ணம் இருப்பர்.  மாலைக்கருக்கலுக்குப் பின்னர், ஊருக்குள் செல்பவர்கள் அந்தவழியாகத்தான் சென்றாக வேண்டும். அங்கே உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரைக் கவனிப்பதும் அலாதியாக இருக்கும். எந்த வீட்டுக்குப் பலாப்பழம் போகின்றது, மாம்பழம் போகின்றது உட்பட எல்லாமும் இளைஞர்களுக்கு அத்துபடி.

அப்படியான கோயிலுக்குத்தான் குடமுழுக்கு விழா. எங்களுக்கெல்லாம் பரவசமாக இருந்தது. கோயில் மேல்மாடத்தில் அழகிய வேலைப்பாடுகள், வண்ணம் பூசுதலென பலவேலைகள் நடந்து கொண்டிருக்கும். பலரும் வந்து வேடிக்கை பார்ப்பது, பேசுவதென இருப்பார்கள். கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வர வேண்டுமெனப் பேசுவார்கள். விழாநாள் நெருங்க நெருங்க குதூகலம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. ஊர்மக்கள் எல்லாம் உற்சாகத்தில் இருந்தனர். கோயிலுக்குக் கிழபுறம் பள்ளிக்கூட வளாகம். திடலெங்கும் புங்கை மரங்களும் பூவரசன்களும் பொன்னரளிகளும் செவ்வரளிகளும் பச்சைப்பசேலக் காட்சியளித்தன. நதிக்கரையில் தென்றல். ஒயிலாட்டக் குழுவினர், பம்பை அடிக்கும் குழுவினர் எனச் சகலவிதமான கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. புள்ளியப்பம் பாளையத்து காம்பிளி நதிக்கரை அப்படியானதொரு நாளை அதற்குப் பிறகு கண்டிருக்குமாயெனச் சந்தேகிக்கக் கூடிய வகையில் இருந்தன கொண்டாட்டமும் ஊர்மக்களின் உவப்பும்.

(தொடரும்)



 

7/22/2022

காம்பிளி நதிக்கரையில்

அண்மையில் ஊருக்குச் சென்று திரும்பியதில் ஏற்பட்ட அனுபவங்களை மூத்த மகரிடம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், திடீரெனக் கூச்சலிட்டார். ‘அய்யே, இது அப்பட்டமான கிரைம். அப்படி, இப்படி..’யென பதறத் துவங்கினார் மகர்.

என் பாட்டனார், அவர்தம் மாமா மகளைத் திருமணம் செய்து கொண்டதாக நானும் அம்மாவும் உரையாடிக் கொண்டிருந்தமை குறித்துப் பேசிய போதுதான் இது நடந்தது. யாரெல்லாம் ஒரே தம்பதியினரைப் பாட்டன்/பாட்டியாகக் கொண்டுள்ளனரோ அவர்களெல்லாம் ஆள்வியர், கசின் என்பது ஆங்கிலமொழியில். அப்படியான உறவுமுறையினர் திருமணம் செய்து கொள்வது அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களுள் கிட்டத்தட்ட 24 மாகாணங்களில் சட்டப்படிக் குற்றம். ஏழு மாகாணங்களில் நிபந்தனைக்குட்பட்டது. எஞ்சியவற்றுள் பண்பாட்டுத் தளத்தில் பிற்போக்கானது, ஆனால் சட்டத்தில் இடமுண்டு. இதுதான் மகரின் பதற்றத்திற்கான காரணம்.

தாயகத்துப் பண்பாடு, மாமா, சின்னம்மா, பெரியம்மா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை போன்றோர் குறித்தெல்லாம் பேசி, அவர்களுடைய பிள்ளைகளில் எவையெல்லாம் திருமணம் செய்யக்கூடிய முறைகள் என்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்த வேளையில்தாம், உற்றார் உறவினரெல்லாம் எப்படிப் பின்னிப் பிணைந்த சமூகமாக இருந்தது, என் தனிப்பட்ட அனுபவம் என்ன என்பதைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான பேச்சு தங்குதடையின்றிச் சென்று கொண்டிருந்ததற்கு வேறொரு முக்கியமான காரணமும் உண்டு. ஆமாம், அம்மா என்னும் பெருங்கேரக்டர் தாயகம் சென்றிருப்பதுதான் அந்தப் பரிபூரணச் சலுகையை எங்களுக்கு அளித்திருக்கின்றது. இஃகிஃகி.

1980களில் பள்ளிகள் பெரும்பாலும் விடுமுறையில்தான் இருக்கும். ஈழப்போராட்டம் முனைப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தகாலமது. பாட்டி வீடு, சின்னம்மா வீடு, பெரியம்மா வீடுகளில்தான் எப்போதும். அப்படியான காலகட்டத்தில் காம்பளிநதிக்கரையில் ஓடித்திரிந்திருந்தோம். எப்படியெல்லாம் திளைத்திருந்தோமென்பதையும் மகளார் விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகருக்கு தென்மேற்கே இருப்பதுதான் அனுப்பபட்டி எனும் சிற்றூர். வேளாண்மை என்பதுதாம் பிரதானம். மாதம் மும்மாரி எனச் சொல்லப்பட்ட பூமியதுவல்லவா? மானாவாரியாகக் கூட பருத்தி விளைவித்து, நூற்பாலைகளுக்கு அனுப்புவார்கள். அப்படியான காடுகளில் இருந்துதான் புறப்படுகின்றாள் காம்பிளி. அனுப்பபட்டியில் உயிர்த்து, வெங்கட்டாபுரம் வழியாக பல்லடம் உடுமலை சாலையை இடைமறித்துக் கொண்டு புள்ளியப்பம் பாளையம், கரிசல்மடை, எலவந்தி, புத்தரச்சல், நிழலி ஆகிய ஊர்களில் வழியாகக் கிழக்கி நோக்கி ஓடி, வட்டமலைக் கரை அணையை அடைகின்றாள் காம்பிளி. அந்த அணையை நிரப்பிய பின்னாக, மீண்டும் கிழக்கு நோக்கிப் புறப்பட்டு  ஈரோடு மாவட்டம் மயில்ரங்கம் எனும் இடத்தில் அமராவதி ஆற்றோடு ஐக்கியமாகி விடுகின்றாள் காம்பிளி. 

உப்பாறும் காம்பிளியும் கசின்முறையினர்தாம். உப்பாறு என்பதும் கோவை மாவட்டம் செஞ்சேரிமலைக்கு மேற்கான அரசூர்க் காடுகளில் இருந்து புறப்பட்டு, சலவநாயக்கன்பட்டி, சிந்திலுப்பு, அம்மாபட்டி, பெரியபட்டி, பூளவாடி வழியாக உப்பாறு அணையைச் சென்று சேரும். பின்னர் அணையை நிரப்பியான பிறகு, மீண்டும் காடுகளினூடாக ஓடி தாராபுரத்தின் புறநகர்ப்பகுதியில் ஓடும் அமராவதியில் ஐக்கியமாகிவிடும். வாகத்தொழுவு வேலூர் உயர்நிலைப் பள்ளி விழாவில் ஆசிரியர் திருமிகு இந்திராணி அவர்கள் குறிப்பிட்டார், “பழமைபேசி உப்பாற்றங்கரைக் கள்ளிப்பழத்தைத் தின்று வளர்ந்த பிள்ளை, என் மாணவன்”. அந்த அளவுக்கு உப்பாற்றங்கரையோடும் நமக்குத் தொடர்புண்டு.

உப்பாற்றங்கரையிலிருந்து காம்பிளியாற்றங்கரைக்கு நேரிடையாகச் செல்லும் பேருந்து கூட இருந்தது அந்தக் காலகட்டத்தில். முதலில் ’கல்யாணி’ எனும் பெயரில் வா.வேலூர், மூங்கத்தொழுவுப் பிரிவு, செஞ்சேரிமலை, கம்மாளபட்டி, ஜல்லிபட்டி, பல்லடம், திருப்பூர் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. பின்னர், ’ஸ்ரீபதி’ எனும் பெயரில் நெகமம், வீதம்பட்டி, வேலூர், மூங்கத்தொழுவுப் பிரிவு, செஞ்சேரிமலை, கம்மாளபட்டி, ஜல்லிபட்டி, பல்லடம், திருப்பூர் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்தது. தற்போதைய நிலை நாமறியோம் பராபரமே.

வாழ்ந்திருந்த சலவநாயக்கன்பட்டிப் புதூர் உப்பாற்றங்கரையில் நின்று இந்தப் பேருந்தில் ஏறி, ஒரு ரூபாய் எண்பது காசுகள் கொடுத்தால் இரம்யமான பயணம் தொடரும். மனம் குதூகலத்தில் பரபரத்துக் கிடக்கும். உள்ளார்ந்த கிராமங்கள், மிளகாய்க் காடுகள், மக்காச்சோளக்காடுகள், நூலுக்காகப் பாவுணர்த்தும் கம்மாளபட்டி என எல்லாவற்றையும் மெதுவாய்க் கடந்து வந்து பின்னர், உடுமலை - பல்லடம் சாலை வந்தானதும் வண்டி பெருவேகம் எடுக்கும். நம் மனமும்தான். கேத்தனூர் தாண்டியானதுமே எழுந்து படிக்கருகே வந்து நின்று கொள்வோம். நாம் அடிக்கடி செல்வதாலேயும், திருப்பூர் பருத்தி மார்க்கெட்டுக்கு அடிக்கடி செல்பவர் அப்பா என்பதாலேயும் நமக்கான விசேட கவனிப்புகளும் உண்டு. மிகச்சரியாக காம்பிளி நதிக்கரையில் வண்டி நிற்கும். ஆமாம், அப்போதெல்லாம் புள்ளியப்பம் பாளையத்துக்கான பேருந்து நிற்குமிடம் அதுவாகத்தான் இருந்தது. பின்னாளில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாகப் பிரிவுச் சாலைக்கு இடம் மாற்றப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். 

கரையில் இறக்கிவிடப்பட்டால், டில்லிமுள் மரங்கள் நெருக்கமாக மண்டிக் கிடக்கும். அதனூடாக உட்புகுந்து ஆற்றில் கால்பதித்து, சிலுசிலுவென நீரோடும் அந்தப் பாறைகளின் மீதாகச் சற்று நடந்து போய் மேடேறினால் ஊருக்குச் செல்லும் பாதை வந்து விடும். யார் எதிர்ப்பட்டாலும், ’இப்போதுதான் வருகின்றாயா? ஊரில் எல்லாரும் நலமா? மழையா?’ என்று விசாரிப்பார்கள். அந்த அளவுக்கு ஊரில் இருப்போர் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஊரில் இருக்கும் எந்த வீட்டிற்கு யார் வந்தாலும், அவர்கள் ஊரின் விருந்திநர் என்றே பார்க்கப்பட்ட காலமது. சாலையை அடைந்ததும், சாலை வழியாகச் சென்று ஊர்த்தலைவாசலான விநாயகர் கோயிலடி வழியாகவும் செல்லலாம். அல்லது சாலையை ஒட்டியே உட்புகுந்து குறுக்காகச் சென்றாலும் பெரியம்மா வீடு வந்து விடும். பேரானந்தமாக இருக்கும்.

ஊருக்குள் இருக்கும் எல்லா வீடுகளும் நம் வீடுகளே. எந்த வீட்டுக்கும் போகலாம். எல்லா வீடுகளிலும், வீட்டுக்கு மூன்று முதல் எட்டுப் பேர் வரையிலும் பிள்ளைகள் இருப்பார்கள். ஒரு கணக்குக்காக, 25 வீடுகள், வீட்டுக்கு மூன்று பிள்ளைகள் என வைத்துக் கொண்டாலும், குறைந்தது 75 பிள்ளைகள் கூடக்குறைய சம வயதில் இருந்தனர். எப்படி இருந்திருக்குமென நினைத்துப் பாருங்கள். ஜெகஜோதியாக இருக்கும். எந்நேரமும் விளையாட்டு, வம்புகள், அளவளாவலென ஆர்ப்பரிக்கும் காம்பிளிநதிக்கரையில்.

(தொடரும்)


7/17/2022

வாய்மொழிக் கதைகள்

வாய்மொழிக் கதைகள் நீக்கமற நிறைந்திருந்த காலமென்பது உண்டு. சற்றேறக்குறைய 1990கள் வரையிலும் அவை இருந்தன. காரைவாசல், கோவில் மேடைகள், மரத்தடிகள், குளத்தேரிகள், கிணத்துமேடுகள் முதலான இடங்களிலும், ஆடு மாடு மேய்க்கும் போதான தரிசு நிலங்களிலும் வாய்மொழிக்கதைகள் புழங்குவதும் உயிர்ப்பதுமாக இருந்தன.

வயது ஐம்பதைக் கடந்தோர் தன் அனுபவங்களைச் சாதனைகளாக வெளிப்படுத்துவதாகவும் அவை இருந்தன. இளையோருக்கு அவை சுவாரசியம் ஊட்டக் கூடியதாகவும் கேளிக்கையாகவும் இருக்கும். வின் - வின் என்பதான அடிப்படையில் இருதரப்புக்குமே இலாபம்.

நிறையப் பேருக்குத் தாம் பேச வேண்டும். மற்றவர் கேட்க வேண்டுமென்கின்ற ஆவல் உண்டு. அது மனித இயல்பு. அவ்வாறான வேட்கையைத் தணிப்பவையாக இருந்தன வாய்மொழிக் கதைகள்.

ஊரில் சித்தப்பா ஒருவர் இருக்கின்றார். பேசித் தீர்க்க வேண்டுமென்கின்ற தணியாத ஆசை உள்ளவர். பேசுங்களெனச் சொல்லி உட்கார்ந்து விட்டேன். ஓரிரு நாட்கள் கழித்துக் கிளம்பும் வேளை வந்து விட்டது. மீண்டும் எப்போது வருவாய்? அடுத்த வாரம் வர முடியுமா என்கின்றார் குழந்தையைப் போலே! எதொ அமெரிக்கா என்பது ஆட்டையாம்பாளையத்துக்கு அருகில் இருப்பதைப் போலே!!

நண்பர் அலெக்ஸ் இருக்கும் வரையிலும் மாதமொருமுறையாவது ஃபோன் செய்து விடுவேன். அவர்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருப்பார். ஸ்பீக்கர் ஃபோனில் போட்டுவிட்டு மற்ற மற்ற வேலைகள் கூடச் செய்து கொண்டிருப்பேன். அடிக்கடி அழையுங்கள் என்பார்.

அம்மாவிடம் ஊரைப் பற்றியும் ஊர் மக்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். இடைக்கிடையே பேசிக் கொண்டிருப்பதினின்று கிளைத்து மற்றொரு விசியத்துக்கு மாறிவிடுவார். சிலமுறை வெட்டி, பேசுபொருளுக்குள் இழுத்து வருவேன். சிலமுறை போக்கில் விட்டுவிடுவதும் உண்டு. அப்படி விட்டுவிட்டால்தாம் அவர்களுக்கான மனநிறைவு கிட்டும்.

எதிர்பாராத விதமாக அந்தப் பெண்மணியைச் சந்தித்தேன். நான் பாலகனாக இருந்த போது எப்படியெல்லாம் குறும்புகள் செய்தேன், என் பெற்றோர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்களென்றெல்லாம் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். கடைசியில் என் முகவாய்க்கட்டையைத் தொட்டுத் தடவினார்.

கவனிப்பாரற்ற மக்களுக்கானவை வாய்மொழிக் கதைகள். அப்படியான ஒரு கதையைக் கேட்கின்றோமென்றால், சொல்பவரின் வாழ்வின் பயனை நீட்டிக்கின்றோமென்பதே பொருள்.


7/14/2022

மழைத்தூரல்

மழைக்காலம், நிறைய சாலை விபத்துகள், மரணங்கள் பற்றிய செய்திகள். கவனக்குறைவும் புரிதற்குறைவும் மேலோங்கி இருப்பதுதான் காரணம்.

1. எந்த நேரத்திலும் வெளிச்சமின்மை(இன்விசிபிலிட்டி) ஏற்படலாம். முகில்கள் நகர்ந்த வண்ணமே இருக்கும். திடீரெனக் கார்முகில் வரக்கூடும். அப்படி இடைப்படும் போது இருள்குவியும். நமக்கான பார்வையின் தூரம் குறையக் கூடும். ஆகவே, நல்ல சூரிய வெளிச்சமிருந்தாலும் ஹெட்லைட் போட்டுக் கொள்ள வேண்டும்.

2. சாலையில் நுண்ணிய தகடு போன்ற நீர்ப்படலம் இருந்து கொண்டே இருக்கும். ஒருதுளி டீசல்/ பெட்ரோல்/ லுபிரிகண்ட் ஆயில் போன்ற எண்ணெய்த் துளிகள் கலக்கும் போது வழுக்க நேரிடும்.

3. ஆங்காங்கே நீர் தேங்கும் போது, நீர்ப்பாலம்(hydroplaning) தோன்றி விடும். அதாவது வண்டியின் டயருக்கும் நிலத்துக்கும் இடையே கனமான நீர்ப்பாளம்(layer) இருக்கும். வேகமாகச் செல்லும் போது, டயருக்கும் நிலத்துக்குமான உராய்வு இல்லாமலே போய்விடும். வண்டியின் வளைவு, வேகம், பிரேக் என்பதெல்லாவற்றுக்கும் இந்த உராய்வுதான் அடிப்படை. அதுவே இல்லாதபோது, கட்டுப்பாடின்றிப் பயணிப்பதும் இடம் பெற்று விடுகின்றது. 

4.குறைவான வேகத்தில் செல்லும் போது, நீரை அடித்து விலக்குவதற்கான கால அவகாசம் டயர்களுக்கு ஏற்படுகின்றன. எனவே நிலைத்தன்மை ஏற்படும்.

5. கானல்நீர் கண்களைப் பறிக்கும். மினுமினுப்புகள் கவனத்தைச் சிதறடிக்கும். ஆகவே போதிய இடைவெளியுடன் பயணிப்பது அவசியம்.

Overall you want to be extra cautious in wet weather. Slow down, avoid hard braking or turning sharply and allow ample stopping distance between you and the cars in front of you.


7/12/2022

வாழ்வின் பயன்

 

ஒருநாள் மாலைப் பொழுது. பார்ப்பதற்காக நண்பர் வந்திருந்தார். மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசினார். பேசிக்கொண்ட தனிப்பட்ட தகவல்களையெல்லாம் பொதுவில் வைக்க முடியாது. ஆனால் பொதுப்படையாக எங்கள் உரையாடல் வளமானதாக இருந்தது. வினா விடையென்ற ரீதியில் அமைந்திருந்தது, இராம்நகர் தெருக்களில் அந்த இதமான காற்றை அனுபவித்துக் கொண்டேவும்.

வாழ்வின் பயன் என்பதென்ன? மகிழ்வாக இருத்தல் என்பதாகத்தானே இருக்க முடியும்? எல்லாமும் அமையப் பெற்றிருந்தால்தான் ஒருவரால் கூடுமான வரையிலும் மகிழ்வாக இருக்க முடியும். அல்லாவிடில், பதற்றம், வலி, அழுத்தம் என்பதாக அதன் இருப்புக்குப் பங்கம் ஏற்பட்டு விடும். அந்த மகிழ்வை எப்படி அடைவது?

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து இரவு பத்து மணி வரையிலும் உழைப்பது. உழைப்பில் ஈட்டிய பணத்தை நல்லவிதமாக முதலீடு செய்வது. அந்த முதலீட்டின்வழிக் கிடைத்த பணத்தை மறுமுதலீடு செய்வது. இப்படிச் செய்யும் போது, நமக்கான சொத்துகள் பெருகிக் கொண்டே இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இன்பம் கொள்கின்றோம். மகிழ்ச்சியாக இருக்கின்றது. அந்தப் பணத்தைக் கொண்டேவும் பிறருக்கு உதவவும் முடிகின்றது. இது போதும்தானே எனக்கு? இதற்கு மேல் வேறென்ன வேண்டிக் கிடக்கின்றது. நண்பர் வினவுகின்றார்.

அவரவர் வாழ்வின் பயனுக்கான வரையறையை அவரவர்தான் வகுத்துக் கொள்ள முடியும். பிறரின் வாழ்வை எடை போடுவதற்கு நான் யார்? ஆனாலும் அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாகக் கேட்டுவிட்டார். சொல்லித்தானே ஆக வேண்டும்?

நான் சொன்னேன், “நாலும் கலந்ததுதான் வாழ்க்கை. ஏதோவொன்றின் பேரில் மிகையான நேரத்தைச் செலவிட்டு விடுகின்றோம். பின்னாளில் ஆசை பிறக்கின்றது. எடுத்துக்காட்டாக, காலார மலை ஏற வேண்டும் போல இருக்கின்றது. உடல் ஒத்துழைக்க வேண்டுமே? முடியாமற்போவதற்கான வாய்ப்புகள் கூடுதல். ஆகவே அந்தந்த வயதில் செய்ய வேண்டியதைச் செய்துவிடல் நன்று. எல்லாமுமே ஒரு பேலன்சிங் ஏக்ட்தாம்”. சரியெனச் செவிமடுத்துக் கொண்டு, அமெரிக்கா சுற்றிப் பார்க்க எவ்வளவு செலவாகுமென்றார். நான் ஏதோ பதில் உரைத்தேன்.

பொதுவாக, இந்திய, தமிழகப் பண்பாடென்பது பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் அமைந்தது. ஆனால், அமெரிக்காவைப் பார்த்து முதலாளித்துவ ஏதேச்சதிகாரமெனக் கூவுவர். இந்தச் சிக்கல் பேசியவர்களில் பெரும்பாலானோர்க்கும் இருப்பதைக் காணமுடிகின்றது. பண்பாட்டின் இத்தகைய அடிப்படையைக் கட்டமைப்பதே, பண்பாட்டைப் பேண வேண்டிய சமயவாதிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் போன்றவர்கள்தாம். அவர்கள், ‘கல்ட்’ என்பதை எல்லாத்தளங்களிலும் கட்டமைத்துக் கொண்டே இருக்கின்றனர். சாமான்யர்கள் எல்லாம் தம் உழைப்பை, பணத்தை இந்த கல்ட் தலைவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். கூடுதல் பணத்தைக் கொடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். நண்பர் பூபதி சொன்னார், “ரெடி கேஷுடன் வருபவனுக்கு வியாபாரம் முடியாது. ஆனால் பல கோடிகள் கடனில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு இடம் விற்பனையாகும். காரணம், முன்னையவன் வந்திருப்பது சாதா கார், பின்னையவன் வந்திருப்பது உயர்ரக வெளிநாட்டுக் கார்!”. அமெரிக்காவில் இது சாத்தியமா? ஆட்களைப் பார்த்தோ, புறவுலகைப் பார்த்தோ வணிகம் இடம் பெறுவதில்லை. எல்லாமும் தரவுகளை வைத்துத்தான். தரவுக்கப்பாற்பட்டு வணிகம் இடம் பெற்றால், அது சட்டப்படிக் குற்றம். ஒரு வீடு விற்பனைக்கு வருகின்றது. யார் அதிகம் விலை வைத்திருக்கின்றனர் என்பதோடு கிரிடிட் ஹிஸ்டரி/அல்லது முன்பணம் என்பதுதான் தீர்மானிக்கும்.

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு! இதை விடச் சுருக்கமாக சொல்லி விட முடியாது. பொருள் இல்லாவிடில் புறவாழ்க்கை இல்லை. ஆனால் அதைப் போன்றே அருள் இல்லாதவிடத்து அகமே இல்லாமற்போகும். நம்மையொத்த மனிதர்களிடத்திலே நேரம் செலவு செய்யவில்லை. அணுக்கம் போற்றவில்லை. பிறகெப்படி அகம்(மனநலம்) அமையும்? ஆகவே நாலும் கலந்ததுதான் வாழ்வின் பயனை நமக்கு ஈட்டித்தரும்.

பொருள், மெய்நலம், மனநலம், உறவுநலம், வினைநலம், தனிப்பட்ட அந்தரங்கம் என ஆறும் அமையப் பெற்றதுதான் சிறப்பாக இருக்க முடியும். ஏககாலத்தில்(concurrently), அதாவது, இவையனைத்திற்கும் ஒருங்கே கவனம் செலுத்தியாக வேண்டியது அவசியம். எடுத்துக்காட்டாக, அறுபது வயதுக்கப்புறம், சொத்துச் சேர்த்து பெரிய ஆள் ஆனதற்கப்புறம், உறவுக்காரர்களைப் பார்த்துக் கொள்ளலாமென இருந்துவிட முடியுமா? அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலானோர் போய்ச் சேர்ந்திருப்பர். இஃகிஃகி, எல்லாமும் அப்போதைக்கப்போது சமச்சீரோடு கொண்டு போக வேண்டும். அல்லாவிடில் நம் மனமே நம்மைப் பதம் பார்க்கத் துவங்கி விடும், குற்றவுணர்வின் பொருட்டு!

திமிர்

luxury: the state of great comfort and extravagant living.

ஆடம்பரம்னா என்ன? விலை உயர்ந்த கார், ஆடை, ஆபரணங்கள் சூழ் வாழ்வு. அப்படின்னு நினைச்சிருந்தா, அது தவறு. வசதிகளுடனும் பொது எல்லைக்கோடுகளுக்கு அப்பாற்பட்ட வாழ்வுமுறையும் என்பதுதான் ஆடம்பரம்னு ஆக்சுஃபோர்ட் அகரமுதலி சொல்லுது. உண்மைதானே? எப்ப ஊருக்கு வந்தாலும் கோத்தகிரி மலைக்குச் செல்வது வாடிக்கை. அது நண்பர்களால் நமக்கு வாய்த்த கொடை. ஏதோவொரு காரணத்தால் பேருந்தில் பயணிப்பதும் அதுவாகவே நிகழ்ந்து விடுகின்றது. இம்முறையும் அப்படியே. கீழிறங்கும் தருணத்தில்தான் நண்பரின் அண்டைவீட்டுக்காரர் ஒருவர் இறந்து விட்ட தகவல். ஆகவே அவர் அந்த இழவுவீட்டுக்குச் சென்றாக வேண்டிய கட்டாயம். தன்னுடன் வருமாறும், பதினைந்தே நிமிடங்கள் இருந்து விட்டு வந்துவிடலாமென்றும் சொன்னார். நான், இல்லை, பஸ்ஸில் சென்று விடுகின்றேனெனச் சொல்ல, அவருக்கு வருத்தம். அங்கிருந்த வந்திருப்பவனைப் பஸ்ஸில் செல்ல அனுமதிப்பதா? நான் சொன்னேன், ஏற்கனவே பலமுறை பஸ்ஸில் சென்றாகிற்று. இதுவொன்றும் எனக்குப் புதிதல்லவென.

காரமடை to காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம். காரமடையில் ஏறினேன். ஆகாசத்தில் பயணிப்பது போலவும், சாலையில் உடன் பயணிப்பவர்களெல்லாம் வறிய பிச்சைக்காரர்கள் போலவும் உணர்ந்தேன். ஆமாம், BMW,பென்ஸ், ஸ்கோடா என எல்லா வண்டிளும் சின்னஞ்சிறுசுகளாகத் தெரிந்தன. காரணம், காரில் உட்கார்ந்து பயணிக்கும் போது உயரம் குறைவான நிலையில், சம உயரத்தில் ஏராளமான மோட்டார் பைக்குகள், இதரக் கார்கள், குண்டுகள் குழிகள் என எல்லாவற்றோடும் பயணிப்பதுதான் காரணம். பஸ்ஸில் பயணிக்கும் போது, அவை எதுவும் தெரிவதில்லை. மேற்குப்புறமாகத் தெரியும் மலைகளை ஏகாந்தமாகத் தரிசிக்கலாம். முன்னே பார்க்கின் சில பல மைல்கள் தொலைவுக்கும் பார்வை கிட்டும், தனிப்பட்ட பயணம். எட்டப்பார்வையில் ஒரு செருக்கு. இஃகிஃகி, 21 ருவா டிக்கட். முப்பது ரூபாய் கொடுத்தேன், பத்து ருவா நோட்டைத் திருப்பிக் கொடுத்துச் செருப்பால் அடித்தான் அந்தப் பையன். ஆகமொத்தம் இரவது ருவா டிக்கெட்ல என்னாவொரு திமிர்த்தனமான பயணம்?! பப்ளிக் பஸ்ல போங்கடே!