5/30/2022

FeTNA:கொண்டாடப்பட வேண்டிய தருணம்

தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. தலைவர் பொறுப்புக்கும் சேர்த்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆகவே இதனை முழுமையான தேர்தலெனக் கருதி, நாமனைவரும் கொண்டாடக்கூடிய தருணம். அமைப்பில் எதிரும் புதிருமான கொள்கைகள், திட்டமுன்மொழிவுகள், தொலைநோக்குப் பார்வைகள், சாதனைகள், நிர்வாகப்பிழைகள், செயற்பாடுகளை முன்வைத்து வாதவிவாதங்கள் இடம்பெற்று, அதன் அடிப்படையில் தேர்தல் நிகழுமேயானால் இன்னும் சிறப்பாகக் கொண்டாடலாம் நாம்.

தனிமனிதத் தாக்குதல்கள்! என் கட்டுரைகளையே முழுமையாக வாங்காமல் ஒரு நண்பர், ஆபாசம், இழிவு என்றெல்லாம் வசைபாடி, என் இருப்பிடம் முதற்கொண்டு என்னென்னவோ சொல்லித் திறந்தமடல் என்கின்றே பெயரில் எதையோ எழுதி இருந்தார். ஒரு வருத்தமுமில்லை. அன்பாகத்தான் கேட்டிருக்கின்றேன். ஏதாகிலும் அப்படி எழுதியிருந்தால், அந்த வரிகளைச் சுட்டுங்களென்று. இதுவரையிலும் பதில்கிடைக்கவில்லை. நான் 20 ஆண்டுகாலமாக எழுதி வருகின்றேன். ’அறம்சார்ந்த எளிய எழுத்தாளன்’ என்கின்ற இடத்தை இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அடைந்து விட மாட்டோமாயென்கின்ற மனநிலையில் முயன்று கொண்டிருப்பவன் நான். அப்படியானவற்றைச் சுட்டிக்காட்டினால் மகிழ்ந்து, அவற்றைக் களைய முற்படுவேன்.

தனிமனிதத் தாக்குதல்கள் என்றால் என்ன? எழுதுவதன் நோக்கம், ஏதொவொரு தனிமனிதரைக் குறிவைத்துச் சுட்டும் பொருட்டு மட்டுமே இருந்தால், சொற்கள் நாகரிகமாகவே இருந்தாலும் கூட, அது தனிமனிதத்தாக்குதல் என்றே பொருள். பேசுபொருள் செயலைக் குறித்ததாக இருக்கும் நிலையில், அது தனிமனிதத்தாக்குதல் ஆகா.

விளம்பரப்பிரியர்கள், விளம்பரப்போலிகள் நிறைந்து விட்டார்கள் என்கின்றோம். யாதொரு தனிமனிதன் பெயரும் சுட்டப்படவில்லை. பன்மையில் இருக்கின்றது. ஆகவே அது, எதனைக் குறிக்கின்றது? பணிகளுக்கு முக்கியத்துவம் கொடாமல், விளம்பரத்திற்கு, அதுவும் உண்மைக்குப் புறம்பான விளம்பரத்துக்கு மிகையான நேரம் செலவிடப்படும் பொறுப்பாளர்கள் மிகுந்துவிட்டனர் என்று பொருள். ஒரு செயலைச் சுட்டி, பேரவையில் ஏகாதிபத்தியம் மிகுந்து விட்டது என்கின்றோம். நோக்கம் செயலைச் சுட்டுவதுதானேயன்றி, தனிமனிதன் குறித்தானது அல்ல. தனிமனிதர்கள் பெயரை நாம் குறிப்பிடுவதேயில்லை.

பேரவை என்பது பேராறு. அது ஓடிக்கொண்டே இருக்கும். இடையில் மக்கள் வருவார்கள், போவார்கள். ஒவ்வொரு ஆண்டும் சிலபல செயல்கள் இடம் பெறும். காலத்தின் போக்கில், அப்போதைய தேவைகளுக்கொப்ப ஏதோவொரு கருத்தை நாம் வெளிப்படுத்துவோம். இந்தக் கருத்தில் உடன்பட்டிருப்போம். பிறிதொரு கருத்தில் உடன்படாதிருப்போம். மீண்டும் வேறொரு கருத்தில் கரம்கோக்கும் சூழல் வரக்கூடும். ’அன்று நீங்கள் ஒன்றாக இருந்தீர்கள்; இன்று பிரிந்திருக்கின்றீர்கள்!  அன்று எதிரும்புதிருமாய் இருந்தீர்கள், இன்று ஒன்றாய் இருக்கின்றீர்கள்!!’ என்பதெல்லாம் மனத்தின் மேல்நிலைப் பிரதிபலிப்புகள். ஆழ்ந்த சிந்தனை கொண்டோர் அப்படியான வாதங்களை முன்வைக்கத் துணியமாட்டார்கள்.

எழுத்தாளரை முதன்முதலில் பேரவைக்கு அறிமுகப்படுத்தியது நான்தான், 2010. அருவி இதழுக்குக் கட்டுரை தாருங்கள் எனக் கேட்டேன். அவரும் கொடுத்து உதவினார். பின்னர் விழாவுக்கு அழைக்க முடியுமாவென கேட்டுப்பார்த்தேன். அடியேனுக்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினாலே அப்படியே விட்டுவிட்டேன். காற்றடிக்கும் போது மாவுவிற்கப் போன கதையாக, ஒவ்வாத காலத்தில் அழைப்பு நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் நடந்தது ஊரறிந்த கதை. எதிர்த்தவர்கள் இரு அணிகளிலும் உண்டு. அதேபோல ஆதரித்தவர்களும் இரு அணிகளிலும் உண்டு. எனக்குப் பொய் பேச வேண்டிய அவசியமே இல்லை. தமிழ் வளர்ப்பதைக் காட்டிலும், சரியானதும் முறையானதுமான அமெரிக்கக் குடியாக இருப்பது முதன்மையெனக் கருதுபவன் நான். ஆகவே, ஒரு அணியை மட்டும் அந்த வரலாற்றுப் பிழைக்குப் பொறுப்பெனக் காட்டுவதுதான் பெரும்பிழை, அநீதி.

‘பேரவை காப்போம்’ அணிக்கு வருவோம். அணி வேட்பாளர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தேன். இயன்றவரையிலும், ’அறம் செய விரும்பு’ என்பதற்கொப்பவே அறிவுரைகளைப் பரிமாறிக் கொண்டோம். திறந்த மடல்களையும், திறந்த வெளிப்படையான கூட்டங்களையும் நடத்தினோம். ஒளிவு மறைவு இல்லை. உடனக்குடனே தரவுகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வைத்தோம். எங்கள் நோக்கம், எங்கள் பேசுபொருள், பேரவையின் மேம்பாடு மட்டுமே. ஆகவே எந்தத் தரவையும் கொடுப்பதிலே தயக்கம் இல்லை. இணையதளத்தில் இடுவதிலே தயக்கம் இல்லை. இதுதான் அமைப்பின் வளர்ச்சியாக இருக்குமென நம்புகின்றோம். உடன்படுவீர்களேயானால், உங்கள் வாக்குகளை, ‘பேரவை காப்போம்’ அணிக்கு அள்ளித்தாருங்கள். அணியினர் பணியாற்றுவார்கள். தவறினால், அவர்களையும் கேள்விக்குள்ளாக்குவோம் காலாண்டுக் கூட்டங்களின் வாயிலாக! அதுதான் ஜனநாயகம்!!


5/29/2022

FeTNA: பேரவையும் நிர்வாகக்குழுவும்

தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்களிப்பு பெருமளவில் முடிந்திருக்கலாமென யூகிக்கின்றேன். வாக்களித்திராதவர்களையும் வாக்களித்திடுமாறு வேண்டுகின்றேன்.

பேரவையின் நிர்வாகக்குழுவில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும், தலைவர் - துணைத்தலைவர், செயலாளர் - துணைச்செயலாளர், பொருளாளர் - துணைப்பொருளாளர், இயக்குநர்கள், இவர்களுக்கென தனித்தனிப் பொறுப்புகள் உள்ளன. அவர்கள் அவற்றினை முறையே செய்திடல் வேண்டும். நான் கடந்து வந்த இந்த 15 ஆண்டுகள் அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது சில படிப்பினைகள் நமக்கு உண்டு.

பொறுப்புகளுக்கான தனித்துவமான பணிகளைத் தவிர்த்து, நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களில் வைக்கப்படுகின்ற தீர்மான முன்மொழிவுகளை, கொள்கை அடிப்படையில் ஆதரித்தும், எதிர்த்தும் செயற்பட்டாக வேண்டும். அவற்றை இவர்கள் அறவே செய்வதில்லை. எப்படி?

தலைவர், அவருக்கு உதவிகரமாக, நிர்வாக்குழுவுக்கு வெளியே சிலபலர் இருப்பர். தவறில்லை. செல்வாக்குமிக்க, அனுபவமிக்க முன்னோடிகளின் உதவியின்றி நாடளாவிய அமைப்பினை நிர்வாகம் செய்யவே முடியாது. அப்படியான சூழலில், அவர்களின் ஆலோசனையின் பேரில், தலைவர் முன்மொழிவுகளைக் கூட்டத்தில் வைப்பார். நிர்வாகக்குழுவில் இருப்போர் ஆதரித்து ஓட்டளிப்பர். எப்போதாகிலும் ஓரிருவர் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பர். அப்படியான செயல், தொடர்ந்து இடம் பெறுமாயின் மாற்றுக்கருத்து வைப்பவர் கட்டம் கட்டப்படுவார். அண்ணன் மனம் கோணுமேயென்பதற்காக, ஆதரித்தே வாக்களிக்கும் தன்மை ஏற்பட்டுவிடுகின்றது. அல்லாவிடில் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாய்ப்புகள் அமையாமற்போகலாம்.

என்ன செய்யலாம்? நிர்வாகக்குழுவிற்குச் செல்வோர் பேரவையின் கட்டமைப்பு, வளர்ச்சி, தொலைநோக்குத் திட்டங்கள், கூடவே தாம்சார்ந்த தமிழ்ச்சங்கத்தின் கருத்தையும் உள்ளடக்கித் தன்னிச்சையாகவும் திடமாகவும் செயற்பட வேண்டும். அல்லாவிடில், அப்பொறுப்பில் இருப்பது வீண். பின்னடைவுக்கே இட்டுச் செல்லும். தலைவரும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தன்னுமை(லிபர்ட்டி)யை நிலைநாட்ட வேண்டும். [நீ யார் எனக்கிளம்பிவிட வேண்டாம். நாம் எப்போதுமே, நிர்வாகக்குழுவில் இருந்த போதும் சரி, வெளியில் இருக்கும் போதும் சரி, எதிர்க்கருத்துகளை முன்வைக்கத் தயங்கியதே இல்லை]

ஆயுள் உறுப்பினர்கள்? ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களுக்கு அது ஒரு அடையாளம். பேரவையின் அன்றாட அலுவல்பணிகளுக்கோ, தொடரியக்கத்துக்கோ கிள்ளுக்கீரையைக் கூட கிள்ளிப் போட மாட்டார்கள். முக்கியமான கொள்கைப் பிரச்சினையில் கருத்துச் சொல்ல மாட்டார்கள். எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டுமென்கின்ற தன்னலம். 35 ஆண்டுகாலக் கட்டமைப்பின் தரவுகள் இல்லாமற்போனதற்கும், தொடர்ச்சி பாழ்படுவதற்கும் இவர்கள்தாம் முழுப்பொறுப்பு. அமைப்பின் தொடரோட்டத்துக்குப் பங்களிக்க வேண்டும்; அல்லது உறுப்பினர் பொறுப்பைக் கைவிட வேண்டும்.

வாக்களிக்கும் போது இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு வாக்களிக்க வேண்டும். வியந்தோதலுக்குப் பணிந்தும் லாபிகளுக்குப் பணிந்தும் வாக்களிப்பது கூட பொறுப்பற்ற செயல்தான். இஃகிஃகி!



5/28/2022

2022 பேரவைத் தேர்தலில் டவுன்ஹால் மீட்டிங்

கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்து செயல்படுவதே சிறந்த அமைச்சியல் என்கின்றது குறள்.

’பேரவை காப்போம் அணி’ சார்பாக, வேட்பாளர்களுக்குள்ளும் அவர்களது அணி சார்ந்த பேரவை ஆர்வலர்களுக்குள்ளுமாகக் கலந்துரையாடல் பல கட்டங்களாக இடம் பெற்றன. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதைப் பின்னுக்குத் தள்ளி, பேரவையின் நடப்புக் கட்டமைப்பும் செயற்பாடும் எப்படி இருக்கின்றது?, இனி வருங்காலங்களில் அதனை எப்படி மேம்படுத்துவது என்பதை ஒட்டியே ஆய்வுக் கருத்தரங்கம் இடம் பெற்றது. நானறிந்த வகையில், ஒரு விழுக்காடு கூட, சாதி, சமயம், இதர அரசியல் குறுக்கீடுகள் இந்தப் பணிகளிலே இடம் பெற்றிருக்கவில்லை என்று எந்தன் தமிழின் மீது ஆணையிட்டுச் சொல்வேன்.

கூட்டத்தில் அலசி ஆராயப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டன. வினா விடைக் கோப்பு உருவாக்கப்பட்டது.  அமெரிக்காவில் நாம் கற்றுக் கொண்டிருக்கும் அத்தனை நிர்வாக/அரசியலமைப்பு நெறிமுறைகளையும் ஒழுகினால்மட்டுமே அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நம் தலைமுறையினர் நம்மை நோக்கி வருவர் என்கின்ற எண்ணத்தில் உருவானதுதான், பேராளர்களுடனான டவுன்ஹால் மீட்டிங் என்பது.

உள்ளபடியே சொல்கின்றேன். நானறிந்த வரையில், தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வாக்காளர்களுடனான கூட்டம் என்பது பேரவை வரலாற்றில் இதுதான் முதன்முறையாக இருக்கக்கூடும். முதல்நாள் கூட்டம் இரண்டு மணி நேரத்துக்கும் சற்று கூடுதலாக இடம் பெற்றது.  எதிரும் புதிருமாகப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. மலர்ந்த ஜனநாயகம் என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். அடுத்து, இரண்டாவது நாள் கூட்டமும் எழுச்சியோடு இடம் பெற்றது. வந்திருந்த பேராளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு, கூட்டுறவுக்குச் சான்றாகக் கூட்டம் நடைபெற்றது. அதற்குக் கூட்டத்தில் கலந்து கொண்ட வாக்காளர்களும் ஆர்வலர்களுமே சாட்சி!

நான் கடந்த 10 ஆண்டு காலமாகவே, காலாண்டுக்கூட்டங்களை வலியுறுத்தி வருபவன். கூட்டங்கள் நடந்தாலே போதும், ஏராளமான மேம்பாடுகள் நமக்கு அமையும். கூட்டுறவு என்பது மலர்ந்தே தீரும். அந்த வகையில், ”பேரவை காப்போம்” அணியின் செயற்பாடு மெச்சத்தக்கது. பேராளர்கள் உணர்ந்து செயற்பட்டால், தமிழர்க்கு வானமே எல்லை! வெற்றி நிச்சயம்!!

5/27/2022

FeTNA:நிலைப்பாடும் கோரிக்கையும்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பது, அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழ்ச்சமூகத்தின் அடையாளம். அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழர்களுக்கான அமைப்பு மட்டுமே. அப்படியான அமைப்பில், தமிழ்நாட்டு அரசியல் உணர்வுகளைப் புகுத்துவதை நாம் என்றுமே செய்ததுமில்லை, ஆதரிப்பதுமில்லை. மாறாக, எதிர்த்தே வந்திருக்கின்றோம். பேரவையின் தேவை இன்றியமையாதது. எனவே அதன் கட்டமைப்புச் சீர்குலையாது இருந்திடல் வேண்டுமென்பதுதான் நம் அவா.

பேரவைக்கு நெருக்கடியான காலகட்டம் என்று இருந்தது உண்டு. பேரவை விழாக்களுக்கு வருவதற்கே அஞ்சுவர். அப்படியானதொரு காலகட்டத்தில்தான் நாங்கள் சில இளைஞர்கள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றயெண்ணித் திட்டமிட்டுப் பல பணிகளைச் செய்தோம். இணையத்தின் வாயிலாகப் பேரவைப் பணிகள் குறித்துப் பரப்புரை செய்வது. ஊடகங்களில் பேரவை குறித்த செய்திகள் இடம் பெறச் செய்வது இப்படி. இதன்விளைவாக நிறைய இளைஞர்கள் ஈர்ப்புக் கொண்டு பேரவைப் பணிகளில் நாட்டம் கொண்டனர்.

இலக்கியக் கலந்துரையாடலுக்கு தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தினர் அழைத்திருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் இவ்வளவு சேனல்கள் இருந்திருக்கவில்லை. மூன்றே மூன்று சேனல்கள்தாம். அப்படியான நேரத்தில், பேரவை குறித்துப் பேசவிழைந்து, அது பெரிய வீச்சினைக் கொண்டமைத்தது. இப்படிப் பல பணிகளைத் தொடர்ந்து செய்தே வந்திருக்கின்றோம்.

அன்றும் இன்றும் தொடர்ந்து சொல்லி வருவது ஒன்றே ஒன்றுதாம். பேரவைப் பொறுப்பாளர்கள், பேராளர்களை, உறுப்பினர்களை மதிக்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். கூட்டங்களை அடிக்கடி கூட்டி, அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். ஓரளவுக்குச் செய்யத் தலைப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெரும்சரிவு ஏற்பட்டிருக்கின்றது. அப்போதைய வியந்தோதல் செய்திகளைக் கொண்டே அவர்கள் முடிவெடுக்கின்றனர். இது பேரவைப் பணிகளுக்குச் சிறப்புச் சேர்க்கவே சேர்க்காது.

தற்போது தேர்தல் நேரம். களத்தில் வேட்பாளர்களாக இருக்கின்ற பலருக்கே பேரவையின் கட்டமைப்பு, சட்டதிட்டம், என்ன தொய்வு நேரிட்டிருக்கின்றது போன்றவற்றைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

ஒவ்வோர் ஆண்டும், முக்கியமாக எந்தெந்த விருந்திநர்கள் கலந்து கொண்டனர் என்கின்ற பட்டியலைப் போட்டு வைத்திருந்தோம். விழா மலர்களைப் போட்டு வைத்திருந்தோம். இப்படி தரவுகளின் பேழை என்பது கட்டமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அது இல்லாமற்போய் விட்டிருக்கின்றது. தரவுகள் இல்லாத சூழலில், எதைக் கொண்டு அமைப்பினை நடத்தப் போகின்றீர்கள்? ஒருவர் சொல்கின்றார், 2005இல் செயலாளராக இருந்தேன். எதைக் கொண்டு மெய்ப்பிப்பது?? 

அன்புகூர்ந்து அமைப்பின்பால் நாட்டம் கொள்ளுங்கள். அக்கறை கொள்ளுங்கள். அமைப்புக்கு ஏதாவது பங்களிப்புச் செய்யுங்கள். வீக்கான கட்டமைப்பின் மேல் நின்று கொண்டு பயணிக்க நேரிட்டால், எந்த நேரத்திலும் மூழ்க வேண்டி வரலாம். அறமும் பண்பும் மாந்தனுக்கழகு!

எந்தச்சகதமிழர் மீதும் விருப்பு வெறுப்பு இல்லை. மாற்றத்துக்கான வாக்காக, ‘பேரவை காப்போம்’ அணிக்குச் செலுத்துவதே என் தெரிவாக இருக்கும்.


5/26/2022

FeTNA: பேரவைத்தேர்தலும் பேச்சுகளும்

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, பழைய சிந்தனைகள் என்பதிலெல்லாம் நமக்கு என்றும் உடன்பாடு இருந்ததே இல்லை. 2000 ஆண்டுகாலப் பழமை வாய்ந்ததுதான் திருக்குறள், ஆகவே பழைய சிந்தனை எனச் சொல்லிப் புறந்தள்ளிவிடல் ஆகுமா? எத்தனையோ மேம்பாடுகள் இருக்க, முன்னைய வழக்கத்தை வியந்தோதல் ஆகுமா? எல்லாமுமே இடம், பொருள், ஏவல் குறித்தனவே. அறம் செய விரும்பு என்பதுதான் அடிப்படை. எதையும் சீர்தூக்கிப் பார்த்து, பேசுவது தமிழர்க்கு அழகு. நெகடிவ் பேச்சு என்பதெல்லாம், பேச்சுரிமையை நசுக்கும் செயல். பேசுகின்ற பேச்சு உண்மையாக இருக்க வேண்டும். பேரவையின் மீது அக்கறை கொண்ட பேச்சாக இருக்க வேண்டும். அவ்வளவே!

பேரவை வரலாற்றில் முதன்முறையாக நாற்பது குழுக்கள்... வியந்தோதலும் உண்மைக்குப் புறம்பான பேச்சுமாகும் இது? எப்படி? இணையத்தில் முன்னைய ஆண்டுவிழா மலர்கள் இருக்கின்றன. யாரும் பார்க்கலாம். 35 - 45 குழுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வெள்ளிவிழா ஆண்டில் 60 குழுக்கள் பணியாற்றின. இந்த 40 குழுக்கள் எனச் சொல்லப்படும் ஆண்டுகளில் இடம் பெற்றவை: கடந்த இரண்டு ஆண்டுகளின் மலர்களைக் காணோம். கடந்த இரண்டு ஆண்டுகளின் காலாண்டு இதழ்களைக் காணோம். கடந்த ஆண்டின் ஃபோட்டோ/வீடியோக்களைக் காணோம். செய்தி அறிக்கைகளைக் காணோம். இந்த நேரத்தில் மேலுமொன்றைச் சொல்ல விரும்புகின்றேன்.

டாலாஸ், டெக்சாஸ் நகரில் மாபெரும் விளம்பரத்தன்மையோடு விழா நடைபெற்றது. சொல்லப்பட்ட தகவல்களில் முன்னுக்குப் பின் முரணானவை எண்ணிலடங்கா. விழா எப்படி இடம் பெற்றதென்பது ஊரறிந்த கதை. பேரவையின் தொன்மை, தொடர்ச்சி என்பதன் வீழ்ச்சி அங்கேதான் துவங்கிற்று. ஏகபோக தனியாவர்த்தனம் கொடிகட்டிப் பறந்தது. பொறுமையாக இருந்தேன். அடுத்த ஆண்டு சிகாகோ விழாவின் பொதுக்குழு முடிவடையும் வரையிலும் பொறுமையாக இருந்தேன். பொதுக்குழுவில் மழுப்பலும் நழுவலுமான பேச்சுகளே இடம்பெற்றன. செயற்குழுவுக்கு மடல் எழுதினேன், ‘மே மாதமே தாக்கல் ஆகின்ற வருமானவரிப் படிவம் ஏன் இன்னும் காணக்கிடைக்கவில்லை?’. யாதொரு பதிலுமில்லை. மீண்டும் முன்னாள் தலைவர்களையும் உள்ளடக்கி மடல் எழுதினேன். அதற்குப் பின் பதில் வந்தது, நவம்பர் மாதம் வரையிலான காலநீட்டிப்புக் கோரப்பட்டு இருக்கின்றதென. நவம்பர் வரை காத்திருந்தேன். நவம்பரில் வெளியானது. விழா நட்டம் என்பதாக. இப்போதும் மே 15 கெடு முடிவடைந்து விட்டது. இணையத்தில் வரிப்படிவம் காணக்கிடைக்கவில்லை. 40 குழுக்களென வியந்தோதுவர். ஆனால் பதில் கிடைக்காது.

என் அப்பா மூவாயிரம்தான் சம்பளம் பெற்றார். நான் முப்பதினாயிரம் பெறுகின்றேனென தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியுமா? என் அப்பாவின் சம்பளத்தில் ஒரு பவுன் 1200க்கு வாங்கினார். இன்று ஒரு பவுன்? ஆகவே எண்ணிக்கையைச் சொல்லி ரொமாண்டிசைசு செய்வதில் ஒருபொருளுமில்லை. செய்த பணிகளின் தரமென்ன? நயமென்ன? விழுமியமென்ன?? அதிகபட்சம் 45 விருந்திநர்கள்தான் இரண்டு நாட்கள் விழாவுக்கு. தற்போதெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்ட விருந்திநர்கள், அதுவும் ஏற்கனவே வந்தவர்களேவும் வரவழைக்கப்பட்டு, உள்ளார்ந்த கலைஞர்களுக்கு மேடையில் இடம் அளிக்கப்படுவதில்லை. போகின்ற பேச்சில் பேசுகின்ற பொய்ப்பேச்சு அல்ல. தகுந்த சான்றுகளுடன் நம்மால் நிறுவமுடியும். பேரவை வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு ஏகபோகம் மலிந்திருக்கின்றது. 2009இல் சிலம்பம், 2010இல் தெருக்கூத்து, 2011இல் பறை, 2012இல் கவனகக்கலை என ஆண்டுதோறும் பேரவையின் வாயிலாகக் கலைகள் அமெரிக்காவெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தந்தக்கலைகளுக்கான சங்கங்கள் அமைப்புகள்கூடத் தோன்றின. விளம்பரப் பிரியர்களால் அப்படியானவற்றைப் பட்டியலிட முடியுமா?

களத்தில் இறங்கி, தமிழ்க்கலை, இலக்கியம், தமிழ்ப்பண்பாடு எனத் தொண்டாற்றும் தன்னார்வலர்களைத் தெரிவு செய்ய வேண்டியது ஒவ்வொரு வாக்காளரது கடமை. மாறாக, செல்வம், சமூக அந்தஸ்து, விளம்பரம் போன்றவற்றுக்காக சார்புநிலை கொள்வீர்களேயானால், அது மேலும் பின்னடைவுக்கே இட்டுச் செல்லும். 15 ஆண்டுகாலப் பேரவை ஆர்வலன் என்கின்ற முறையில், தமிழின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன், ‘பேரவை காப்போம்’ அணிக்கு வாக்களிப்பதே பேரவையின் இன்றைய தேவை.

https://vijay4fetna.com/

5/25/2022

FeTNA: stick to the basics

கடந்த 2 மாதங்களில், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மூன்று முன்னாள் தலைவர்கள் என்னைத் தொடர்பு கொண்டிருந்தனர். இன்று காலை, தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவர் தொடர்பு கொண்டிருந்தார்.

நான் எந்தத் தமிழ்ச்சங்கத்திலும் உறுப்பினராகக் கூட இல்லை. பேரவையின் பேராளனும் இல்லை. ஆயுள் உறுப்பினனும் இல்லை. என்னை எதற்கு இவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும்?

பேரவைப் பணி சார்ந்த ஒரு வரலாற்று ஆவணத்தைக் கேட்டு ஒரு தலைவர். தலைவர் நல்லகண்ணு அவர்கள் பேரவைப் பணிகளில் கலந்து கொண்டதன் படங்கள் கேட்டு ஒரு தலைவர். குறிப்பிட்ட ஒரு எழுத்தாளர் பேரவைக்கு எழுதிய மடலின் நகல் கேட்டு ஒரு தலைவர். வெள்ளிவிழாவில் தாம் இடம் பெற்ற நிகழ்ச்சியின் படம் கேட்டு இன்றைய வேட்பாளர். இவர்கள் எல்லாம் செல்ல வேண்டிய இடம் பேரவை இணையதளத்துக்கும், பேரவைச் செயலாளரிடமும் அல்லவா? என்னை ஏன் நாடி வருகின்றனர்?

பேரவை என்பது அடிப்படைப் பணிகளில் வழுவியதும் நழுவி இருப்பதும்தான். இவர்களில் பெரும்பாலானோருக்கு அடிப்படை நோக்கம் இல்லை. அது ஒரு பிளாட்பார்ம், பொறுப்புகளில் இருந்து கொண்டு நிகழ்ச்சிகள் செய்ய வேண்டும், அடையாள அரசியல் செய்ய வேண்டும், குரூப்களாக இருந்து கொண்டு அக்கப்போர் செய்து பொழுது போக்கிக் கொள்ள வேண்டும். வணிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும். பேரவையின் இருப்பு, தொலைநோக்கு, கட்டமைப்புப் பேணல் என்பதெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், பழைய சிந்தனையைக் களைந்து மாற்றங்கள், வளர்ச்சி, புத்தாக்கம் என வானளாவப் பேசுவார்கள்.

2012 காலகட்டங்களிலே ஒவ்வொரு 3 மாதத்துக்கொருமுறை பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு கூட்டதிலும் 80% உறுப்பினர்கள் கலந்து கொண்டதற்கான அத்தனை சான்றுகளும் நம் வசம் உண்டு. ஆனால் இன்று? பொதுக்குழுக் கூட்டம் என்பது ஒரு வேடிக்கைப் பொருள் ஆகிவிட்டது. ஆண்டுக்கு ஒருமுறையாவது 80% பங்களிப்போடு நடக்கின்றதா? எனக்குத் தெரியாது. எல்லாம் வெறும் வாய்ப்பேச்சு. விளம்பரப் போலிகள் மலிந்து விட்டனர்.  ஆட்டோ அப்ரூவல் என்கின்ற எளிய வழியில் தீர்மானங்கள் நிறைவேறுகின்றன. சிந்தனைவயப்பட வேண்டிய நேரமிது.

It’s easy to learn the basics. This is good and bad. Since the basics are easy to learn, we assume they’re not relevant. But if you realize how relevant the basics are, you can make a lot of progress in a short period of time. முதலில் அடிப்படைப் பண்புகளைப் பேணுங்கள். பிறகு பார்க்கலாம், ஏனையவற்றை.

அடிப்படைப் பண்புகளை மீளக்கட்டமைக்கவும், சாமான்யர்களின், தன்னார்வலர்களின் பங்களிப்பு பேணவும், எனக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பு கிட்டுமேயானால், அனுபவமும்  அடிப்படைத் தொண்டுகளில் நாட்டமும் மிக்க தன்னார்வலர்களின் நேய அணியான “பேரவை காப்போம்” அணிக்கே என் வாக்கு.

Discipline and honor to commitment are the basics of self respect. Stick to basics and enjoy life with dignity.

5/24/2022

FeTNA Election 2022

பேரவையின் செயற்பாடுகளை எதனைக் கொண்டு அளவிடுவது? அதற்கான தரவுகளை எங்கு கண்டடையலாம். இணையதளத்தில் இருக்கின்ற கீழ்க்கண்டவற்றைப் பேரவையின் சுவடுகளாகக் கருதலாம். அவைதாம் வரலாற்று ஆவணங்கள்:

1. வருமானவரிப் படிவங்கள்

2. ஆண்டுவிழா மலர்கள்

3. அருவி காலாண்டு இதழ்கள்

4. விழா நிழற்படங்கள், காணொலிகள்

5. செய்தி அறிக்கைகள்

6. செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்

எனவே இவற்றின் இன்றைய நிலையை, ஒவ்வொன்றாக ஆய்வோம்.

1. நிதிநிலை

[Page 12, line#10, net assets from form 990 as of 5/24/2022]

2016 - 273,712 

2017 - 268,615

2018 - 297,614

2019 - 279,498

2020 - 269,861

2011இல், மொத்த வருமானமே 252 ஆயிரம். அதில் 66 ஆயிரம் டாலர்கள் இலாபம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பேரவை நட்டத்தைத்தான் கொண்டிருக்கின்றது. ஆனால், 5000க்கும் மேலோர் வந்தார்கள். ஒவ்வொரு அரங்க விழாவிலும்  மில்லியன் டாலர்கள் திரட்டினோம். வரலாற்று உச்சம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. எத்தனை விருந்திநர்கள், யார் யாரெல்லாம் வரவழைக்கப்பட்டார்கள்? ஃபோட்டோ/வீடியோ சுவடுகளைக் காணோம். ஒவ்வோர் ஆண்டுவிழா முடிந்ததும், சர்வே நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவது வழக்கம். அவை நடத்தப்பட்டனவா? முடிவுகளை எங்கே காணலாம்? பேராளர்கள்தாம் கேட்டுப் பெறவேண்டும்.

2. ஆண்டுவிழா மலர்கள்

பேரவையின் ஆகப்பெரும் வரலாற்றுச் சுவடு என்பது இவைதாம். வெள்ளிவிழா மலரிலிருந்து அதற்கு முந்தையவற்றைக் காணோம். 2020, 2021 ஆண்டுகளில் யார் யாரையோ அழைத்து வந்து இணையத்தினூடாக விழா நடத்தப்பட்டது. ஆனால், மலர் வெளியிடப்படவில்லை. ஏன்? டிஜிட்டல் காப்பிகளாகக் கூட வெளியிடப்படவில்லை. ஒரு பைசாச் செலவின்றி வெளியிட்டிருக்கலாமே?

3. அருவி காலாண்டு இதழ்

துவக்கத்தில் படைப்புகளோடு வந்து கொண்டிருந்த இதழ், பட இதழாகச் சுருங்கி விட்டது. அதுவும் 2014ஆம் ஆண்டுக்கு முந்தையவற்றைக் காணோம். அவைதாம் பேரவையின் வரலாறு குறித்த பல கட்டுரைகளைக் கொண்டிருந்தன. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக யாதொரு இதழும் காணோம்.

4. விழா நிழற்படங்கள், காணொலிகள்

பேரவையின் முதலாமாண்டு முதல் இடம் பெற்ற விழாக்களின் படங்களை, தேடித்தேடி சேகரித்து, சிவாஜி கணேசன், டி.எம்.எஸ், எம்.எஸ்.இராமமூர்த்தி, இன்னும் ஏராளமானோர் கலந்து கொண்டதன் சாட்சியாக, ஆண்டுகளும் இடங்களும் குறிக்கப்பட்டு படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. அவை எவையும் தென்படக் காணோம். மேலும், ’மில்லியன் டாலர் விழாக்கள்’ எனச் சொல்லப்படுகின்ற, 2018, 2019, மற்றுமுள்ள ஆண்டுகளின் படங்களையும் வீடியோக்களையும் காணோம்.

5. செய்தி அறிக்கைகள்

தமிழ்ச்சமூகத்தில், பேரவையில், அமெரிக்க நாட்டில், தமிழினத்தில் நிகழ்கின்ற சுகதுக்கங்களின்பாற்பட்ட அவ்வப்போதைய நடவடிக்கைகளின் நிமித்தம் பேரவை தத்தம் நிலைப்பாடுகளை அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டே இருக்கும். அந்தப் பக்கத்தையே சரிவர நிர்வகிக்கவில்லை. ஆங்காங்கே இருக்கும் தமிழ்ச்சங்கங்களின் விழா அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. முந்தைய காலகட்டத்தில் இடம் பெற்ற செய்தி அறிக்கைகளும் காணாமற்போய் விட்டிருக்கின்றன. https://fetna.org/blog/fetna-new-bylaw-accepted/

6.  செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்

சென்ற தேர்தலின் போது, இவை முறையாக வெளியிடப்படுமென தேர்தலில் போட்டியிட்டவர்கள் உறுதி கூறியதாக நினைவுப்பதிவுகள். ஆனால் அப்படி எதுவும் காணக்கிடைக்கப்படவில்லை.

இது தேர்தல் நேரம். எந்தச் சகதமிழர் மீதும் விருப்பு வெறுப்புக் கொள்ளாமல், செயற்பாடுகளை மட்டுமே சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டிய நேரம். பேசுகின்ற போது, பலரும் பலவிதமாக வியந்தோதுவார்கள். வாக்காளர்களாகிய நீங்கள், தரவுகளைச் சீர்தூக்கிப் பார்த்து, பேரவையின் முன்னேற்றத்துக்காகவும், பண்பாட்டு விழுமியத்துக்காகவும் வாக்களிக்க வேண்டியது உங்கள் கடமை. I think the first duty of society is justice. அறம் செய விரும்பு.

5/22/2022

அமெரிக்காவில் தமிழர் தேர்தல்

வணிகமும் அறமும் சமூகத்தின் இரு கண்கள். வணிகம் இல்லாவிடில் பொருளாதாரமும் பொருள் விநியோகமும் இல்லை. அறம் இல்லாவிடில் மனிதப்பண்பாடு இல்லை. ஆகவே இவையிரண்டும் இன்றியமையாதவை.

அமெரிக்காவில் தமிழரின் அடையாளமாக இருப்பது, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை. விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, அதுதான் உண்மை. 35 ஆண்டுகளாக இயங்கி வரும் அந்த அமைப்புக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் இதுவரையிலும், எவ்விதத் தொய்வுமற்று இடம் பெற்று வருகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நான் தொடர்ந்து, பேரவையின் நிர்வாகத்துக்கு எதிராக, நலம்விரும்பியாக, விமர்சகனாகக் குரல் கொடுத்து வருகின்றேன். தலையாய காரணம், அறப்பணிகளோடு வணிகத்தையும் கலக்கி விட்டிருப்பதுதான்.

சமூகப்பணிகளுக்கான கொடையாளராக வணிகர்கள் இருக்கலாம். தவறில்லை. ஆனால், நிர்வாகிகளாக வணிகர்கள் இருக்கும் போது, அவர்கள் மிகக்கவனமாகத் தன் சொந்த வணிக விருப்பு வெறுப்புகளைத் தன்பால் கொண்டிருக்கக் கூடாது. அல்லாவிடில், அறமுரண்(conflict of interest) இடம் பெற்றே தீரும். Murphy law states, "Anything that can go wrong will go wrong." ஆகவே, நான், எதிர்வரும் தேர்தலில், “பேரவை காப்போம்” அணிக்கு என் மானசீகமான ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்; நேரடியாக ஓட்டளிக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் கூட.  இதர காரணங்கள் கீழ்வருமாறு:

1. சேலை விற்பனை, புத்தகங்கள் விற்பனை  போன்ற செயற்பாடுகள்(வணிகக் குறுக்கீடுகள்) பேரவை நலனுக்கு ஒவ்வாதது. பேரவை என்பது, இலாபநோக்கற்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு. வரிசெலுத்தும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கேள்வி கேட்க, விமர்சிக்க உரிமைகள் உண்டு.

2. 30 ஆண்டுகளாகப் பேரவை விழாக்கள் தொடர்ந்து இடம் பெற்று வந்ததன் விளைவு, நெறிகள் படிப்படியாக மேம்பட்டு வந்திருக்கின்றன. அமைப்புக்குத் தொடர்பே இல்லாதவர்கள் நேரடியாகப் பொறுப்புகளுக்கு வந்ததன் பொருட்டு, அவையாவும் புறந்தள்ளப்பட்டு விட்டன. ஆகவே அவற்றை மீளக்கட்டமைக்கும் கடமை, “பேரவை காப்போம்” அணிக்கு உண்டு.

3. கடந்த சில ஆண்டுகளாக அரங்குகளில் விழாக்கள் இடம் பெறவில்லை. கடந்த 20 ஆண்டுகளில் அப்படிப்பட்ட விழாக்களை நடத்திய பேரவை ஆர்வலர்கள் மட்டுமே பொறுப்புக்கு வந்தாக வேண்டிய காலத்தின் கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

4. நெப்போட்டிசம், nepotism: the practice among those with power or influence of favoring relatives or friends, especially by giving them jobs. விழாக்களுக்கு ஏற்கனவே வந்திருந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவதைக் கவனிக்க முடிகின்றது. அப்படியான செயல்கள் பேரவை நலனுக்கு ஒவ்வாதவை.

5. பொறுப்புகளில் இருப்பவர்களின் தனிமனிதச் செயற்பாடுகளுக்கும் பேரவையின் மாண்புக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தனிமனித வாழ்க்கை எனச் சொல்லிவிட முடியாது. அப்படியான பார்வையில், பேரவையின் நிர்வாகிகள் நல்ல தமிழார்ந்த தன்னலமற்ற தொண்டர்களாக இருக்கும்படித் தெரிவு செய்வது அவசியம்.

இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை வாசிக்கும் நீங்கள் யாவரும், ஒவ்வொரு வேட்பாளரின் தகுதி, தற்குறிப்புகள், இணையதளம் போன்றவற்றைப் பார்த்து விட்டு, பேரவையின் கடந்த ஐந்து ஆண்டுகாலச் செயற்பாடுகளையும் கற்றறிந்து விட்டு, வாக்களித்துத் தங்கள் கடமையைச் செய்வீர்களென எதிர்பார்க்கின்றேன். நாம் அமெரிக்காவில் இருக்கின்றோம். தன்னாட்சியுடன் செயற்பட்டு, நம் அடுத்த தலைமுறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டாக வேண்டும். எனவே, ’இவர் சொன்னார், அவர் சொன்னார்’ என்பதையெல்லாம் விடுத்து, பாரபட்சமின்றிச் செயற்பட்டு பேரவை நலனுக்குப் பெருமை சேர்த்து உங்கள் கடமையை ஆற்றுங்கள். நன்றி.

பழமைபேசி, 
பேரவை முன்னாள் செயலாளர், pazamaipesi@gmail.com

5/17/2022

சிற்றின்பம்

Just because something feels good in the moment, that doesn’t mean it’s good for our long-term happiness, health, longevity, social relationships, or mental wellness. And just because something is uncomfortable, that doesn’t mean it’s dangerous. 

வாடிக்கை என்பது எப்படி ஏற்படுகின்றது? மறுகற்றல் என்பது ஏன் பெரும்பாலும் தோற்றுப் போகின்றது? வெற்றி கொள்வதற்கான வழிகள் என்ன?

ஏதோவொரு செயல் உடனடி இன்பத்தைக் கொடுக்கின்றது. மனம் நாடும். அந்தச் செயலுக்கும் மனத்திருப்திக்குமான இணைப்பென்பது உடனுக்குடனே மூளையில் இடம் பெறும். சிறு கால இடைவெளி போதுமானது. ஆகவேதான் அது சிற்றின்பம். சிலபல செயல்கள் அதன் பயனீட்டைத் தர வெகுகாலம் பிடிக்கும். அது அதனுடைய ரிசல்ட்டைக் கொடுக்குத் துவங்கினால் நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்கும். எனவேதான் அது பேரின்பம்.

அமெரிக்க டாலர் அழிவு. அமெரிக்காவுக்கு அழிவு. அமெரிக்காவில் உயிருக்கு உத்திரவாதமில்லை. இப்படிப் பல தலைப்புகள், அன்றாடமும் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. என்ன காரணம்? அமெரிக்கா என்பது வல்லரசு. சட்டத்தின் ஆட்சி நிகழ்கின்ற மண். தனிமனிதர்களின் ஆட்சிமைக்கு இடமில்லை. பொருளாதாரத்தில் மேலான இடம் பிடிக்கின்ற நாடு. உலக நகர்வுகளைத் தனக்கேற்றாற்போல் வளைத்துக் கொள்ளும். அதன்பொருட்டு இயல்பாகவே மாற்றுக்கருத்துகள், ஆற்றாமை முதலானவை இடம் பெறுவது இயல்பு. அத்தகைய உணர்வு உடையோர், தலைப்பைக் கண்டதும் மனத்திருப்தி கொள்வர். அவற்றைப் புழங்கப் புழங்க அதுவே வாடிக்கையாகிப் போகும். இப்படி, ஒவ்வொரு பேசுபொருளிலும் உணர்வுக்கு அடிமையாகிப் போவதினால், பொய்யான மாயையில் வாழ்வு சிக்குண்டு போகும். இதன்பொருட்டு, வாழ்வின் தரம் சீர்குலையும். யாரோ சிலர் பயனடைவர்; பலர் வீழ்ச்சி கொள்வர்.

மனத்துக்கு இதமான தகவலைத்தான் உள்வாங்க வேண்டுமென்பதில்லை. எல்லாவற்றுக்கும் இடமளிக்கின்ற சமநிலைத்தன்மை வாய்த்தல் நன்று. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் உயிருக்கு உத்திரவாதமில்லை எனும் தலைப்பில் ஒரு வீடியோ. என்னதான் சொல்கின்றார்களெனப் பார்த்தாயிற்று. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு. பத்து பேர் பலி. ஆக, துப்பாக்கிகளின் ஏகபோகப் பயன்பாடு இருப்பதினாலே அமெரிக்காவில் இருப்போரின் உயிருக்கு உத்திரவாதமில்லை என்பது கருத்து. சற்று மாற்றிப் பார்ப்போம். கத்திக்குத்துகளால் அதிக மரணம் நிகழ்கின்றது. முறையே, பிரேசில், தென்னமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில்தான் அதிக அளவில் கத்திக்குத்து மரணங்கள் நிகழ்வதாகத் தரவுகள் சொல்கின்றன. இந்தியாவிலிருந்து கத்திகளை அப்புறப்படுத்த முடியுமா? இந்தியாவில் உயிருக்கு உத்திரவாதமில்லை என்றுதான் சொல்ல முடியுமா? சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது இந்தியாதான். ஆகவே, இந்தியாவில் உயிருக்கு உத்திரவாதமில்லை எனத் தலைப்பிட்டு விட முடியுமா? [And India ranks number 1 as per number of persons killed and ranks number 3 as per number of persons injured in road accidents, Road Transport and Highways Minister Nitin Gadkari on Wednesday raised concern in Parliament].

சரி, ஏன் அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம்? வல்லரசு என்கின்றனர், அப்படியிருக்க இதென்ன காவாலித்தனம்? அது சாமான்யனுக்கு அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் கொடை. அமெரிக்காவில் உரிமைகள் கொடுத்துத்தான் பழக்கம். எந்தவொரு அரசியல் சட்டத்திருத்தமும் உரிமைகளைக் களைவதற்காக இதுவரையிலும் கொண்டு வரப்படவில்லை. அமெரிக்கா என்பது இந்தியாவைப் போல் 5 மடங்கு பெரிய நாடு. மக்கள்தொகை மிகவும் குறைவு. விலங்குகளிடமிருந்தும், மற்ற தீயவர்களிடமிருந்தும் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் துப்பாக்கி அவசியமென்பது அடிப்படை. மாறாக நினைத்துப் பாருங்கள். துப்பாக்கிகள் இல்லாவிடில் எத்தனை எத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்குமென. எல்லா இடத்திலும் போலீசைப் போட முடியாது. ஏனென்றால் இது ஒரு மாபெரும்நாடு. மேலும், மாநிலங்கள் தன்னாட்சி பெற்ற ஃபெடரலிச நாடு. பொதுமக்களிடத்திலே துப்பாக்கிகள் இருப்பதினாலே, நடுவண் அரசு மாநிலங்களைக் காவு கொண்டுவிடவோ அடக்கி ஆண்டுவிடவோ முடியாது. அமெரிக்காவில் இருப்பதைப் போல, ஏக போக துப்பாக்கிக் கலாச்சாரம் மற்றநாடுகளிலே இருக்குமேயானால், அந்தநாடு அந்தக் கணமே காணாமற்போய்விடும் எனக் கருதவும் இடமுண்டு என்பதறிக.

சரி, காலப்போக்கில் நம்மிடையே உண்மைக்குப் புறம்பான தகவல்கள் ஏராளமாக மண்டிக்கிடக்கின்றன. அதன் பொருட்டுத் தவறான நம்பிக்கைகளால் நிலைகொண்டிருக்கின்றோம். அவற்றையெல்லாம் திருத்திக் கொள்ள ஆசை. என்ன செய்யலாம்? அது அவ்வளவு எளிதல்ல. மறுகற்றல்(unlearning) என்பது, ஒன்றைப் புதிதாகக் கற்றுக் கொள்வதைக் காட்டிலும் மிகவும் கடினம்.  முதற்படி, feel good மகிழ்ச்சிக்காக அலைதலையும், ஒருசார்புப் பழக்கங்களையும் கைவிட வேண்டும். நல்ல நூல்கள் வாசித்தல் வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம்மில் முதலீடு செய்ய வேண்டும். அன்றாடமும், ஏதோவொரு வரலாற்றுப் புத்தகமோ, கட்டுரைகளோ சில பக்கங்களாவது வாசிக்க வேண்டும். அறிவியற்கட்டுரைகள் வாசிக்க வேண்டும். பத்துத் தகவல்களை உள்வாங்குகின்ற நேரத்தில், ஒரு தகவலை ஆழமாகக் கற்றுக் கொள்ள ஆசைப்பட வேண்டும்.

பணம் மிகவும் முக்கியம். ஆனால் அதுவே வாழ்வையும் மனிதனின் மதிப்பையும் தீர்மானித்து விடாது. எந்த அளவுக்கு மனித மனம் பயணப்பட்டது என்பதுவே மரணப்படுக்கையில் அவரது மதிப்பை உணர்த்தும். மனத்தின் பயணம் விரிவுபட வாசித்தலும், நேர்மையான கலந்துரையாடலுமே வழிவகுக்கும். தனிமனித ஏட்டிபோட்டிகள் புதைகுழிக்குத்தான் மனத்தை இட்டுச்செல்லும்.

https://www.business-standard.com/article/pti-stories/india-tops-world-in-terms-of-number-of-persons-killed-in-road-accidents-122040600670_1.html

https://www.pewresearch.org/fact-tank/2022/02/03/what-the-data-says-about-gun-deaths-in-the-u-s/

https://worldpopulationreview.com/country-rankings/stabbing-deaths-by-country

-பழமைபேசி.

5/08/2022

உக்ரைன் போர் 74ஆம் நாள் மே 9

மே 9ஆம் நாள் இரஷ்யா வரலாற்றில் மிக முக்கியமான நாள். இரண்டாம் உலகப் போரில், ஹிட்லர் படைகளைகளை வென்றதன் நிமித்தம், ஆண்டுதோறும் வெற்றிநாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அந்த மே 9ஆம் நாளில், உக்ரைனின் கிழக்கு மாநிலங்களை முழுதுமாகக் கைப்பற்றி விடுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. கைப்பற்றப்பட்ட பகுதிகளுள் 80% பகுதிகள் முதல் இரண்டு வாரங்களில் கைப்பப்பற்றப்பட்டவையே.

இரஷ்யாவுக்கு வெற்றி எனச் சொல்வதா? உக்ரைனுக்கு வெற்றி எனச் சொல்வதா?? அவரவர் பார்வையில் கண்ணோட்டம் மாறுபடலாம். பகுதிகள் இரஷ்யாவசம் போயிருக்கின்றன. உள்நாட்டில் அரசியல் நிலை, பொருளாதாரம் வலுவாகவே இருக்கின்றது. அப்படிப் பார்க்கின் இரஷ்யாவுக்கு வெற்றி.

4 நாட்களுள் ஒட்டுமொத்த உக்ரைனும் இரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமென எதிர்பார்க்கப்பட்டது. நடக்கவில்லை. தலைநகரைக் கைப்பற்றுமென எதிர்பார்க்கப்பட்டது. நடக்கவில்லை. வடக்குப் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்து இரஷ்யப்படைகள் பின்வாங்கின. இரஷ்யாவினால் ஒட்டுமொத்த வான்வெளியைக் கைப்பற்ற முடியவில்லை. 11 முன்னணித் தளபதிகள் பலியாகி உள்ளனர். நாட்டின் மிக முக்கியமான போர்க்கப்பல் மூழகடிக்கப்பட்டது. 60,000 வீரர்கள், மரணம் அல்லது காயத்தினால் படையிலிருந்து இல்லாமல் ஆகிவிட்டனர். இப்படியெல்லாம் பார்த்தால், உலகின் இரண்டாவது இராணுவமெனக் கருதப்படும் இரஷ்யாவுக்குத் தோல்வி.

மே 9ஆம் நாள் வெற்றிவிழாவில், தம் தரப்பு வெற்றி பெற்றிருப்பதாகத்தான் புடின் சொல்வார். சொல்லியாக வேண்டும். அல்லாவிடில் அவரது இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிடும்.

5/02/2022

குறிப்பீடு(specifics)

உலகம் என்பது ஏராளமான விருப்பு வெறுப்புகளால் சூழப்பட்டது. ஆளுக்காள் நம்பிக்கைகள் மாறும். நோக்கங்கள் மாறுபட்டு இருக்கும். ஆசைகள் வேறுபட்டனவாக இருக்கும். அதன்பொருட்டு உணர்வுவயப்படுவதும் இயல்புதான். ஆனால், பொதுவெளியிலோ அல்லது அலுவலகங்களிலோ ஒன்றை முன்வைக்கும் போது, தகுந்த குறிப்பீடுகள் முன்வைக்கப்பட வேண்டும். அல்லாவிடில், முன் வைப்பவர் உணர்வுவயப்பட்டுச் செயற்படுகின்றாரென்றேவும் கருதப்படும். பகுத்தாய்வுப் பார்வையில் அப்படியான முன்வைப்புகளுக்கு ஒரு விழுமியமும் இல்லை; மாறாக முன்வைப்பவருக்குத்தான் நேரவிரயம், நற்பெயர்க்களங்கம் முதலானவை ஏற்படும். இதுவரையிலும் சொல்லப்பட்டவை எல்லாமும் ஒரு பொத்தாம் பொதுவான கருத்து. அந்தக் கருத்துக்கு உகந்த குறிப்பீடு(specifics) அல்லது எடுத்துக்காட்டு கொடுக்கப்படும் போது, வைக்கப்படும் கருத்து முழுமை கொள்ளும்.

குறிப்பீட்டுக்கும் எடுத்துக்காட்டுக்கும் என்ன வேறுபாடு. குறிப்பீடு என்பது மெய்யாலுமே இடம் பெற்ற ஒன்று. எடுத்துக்காட்டு என்பது, கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புனைவாகவேனும் கட்டமைக்கப்படுகின்ற ஒரு நிகழ்வு.

தன் 14 வயது மகளுக்கு அரசு உறைவிடப் பள்ளியில் இடம் கேட்டுப் போகின்றார் ஒரு தாய். அரசு உறைவிடப் பள்ளியென்றால் எல்லாமும் கட்டணமின்றி அரசாங்கத்தால் கொடுக்கப்படும் சேவை. வறுமையைக் காரணம் காட்டி உதவி கோரலாம். அல்லது உகந்த காரணம் காட்டி உதவி கோரலாம். இவர், தன் குழந்தையின் நடத்தை, குடும்பத்துக்கு ஒவ்வாத பயங்கரவாதத்தன்மை கொண்டதாக் இருக்கின்றதென்பதைக் காரணம் காட்டுகின்றார்.

”சொல்லுங்கள், ஏன் உதவி தேவைப்படுகின்றது?”

”எங்கள் மகளுக்கு இடம் வேண்டும். எங்களால் வைத்துச் சமாளிக்க முடியவில்லை.”

“சமாளிக்க முடியவில்லை என்று சொன்னால்? எப்படி??”

“எங்கள் வீட்டில் எவராலும் அவரை வைத்துச் சமாளிக்க முடியவில்லை. பெரும் இரகளை”

“அப்படி என்ன செய்கின்றார்?”

“எப்போது பார்த்தாலும் எரிந்து எரிந்து விழுகின்றார்”

“இல்லை. குறிப்பிட்டுச் சொல்லுங்கள். யாரிடம், எப்போது, எப்படிச் செயற்பட்டார்?”

“அவருடைய அம்மாவிடம் இரகளை செய்தார். திட்டினார்”

“எப்போது? எதற்காக?”

“அது அவருடைய அம்மாவிற்குத்தான் தெரியும்”

“அம்மா எங்கே?”

“வீட்டில் இருக்கின்றார்”

“அப்பாவான உங்களிடம் ஏதும் தவறாக நடந்து கொள்ளவில்லையா? யாராலும் வைத்துச் சமாளிக்க முடியவில்லை என்று சொன்னீர்களே?”

இப்படியான உரையாடலில் குறிப்பீடு என்பது எதுவுமே இடம் பெறவில்லை. வந்தவருக்கு ஏமாற்றும் நோக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அது வேறேதோ காரணங்களால், ஒவ்வாமையினால் கூட ஏற்பட்டிருந்திருக்கலாம். அழுத்தம் திருத்தமான குறிப்பீடுகள் கொடுக்கப்படும் வரையிலும், அரசு அலுவலரால் அந்த உதவி கோரலை மேற்கொண்டு அடுத்த இடத்திற்கு எடுத்துச் செல்ல இயலாது. 

பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படும் செய்திகள், கருத்துகள் புறந்தள்ளப்பட வேண்டியவை. அவை ஒருபோதும் மேம்பாட்டைக் கொண்டு வந்து சேர்க்காது.  If you want to be interested, get a story, and if you want to be interesting, tell a story—just make sure to tell one that’s spontaneously relevant, and fairly brief, and keep the story moving along, and stop when you get to the end. Everyone is interesting when you get the specifics. ஒருவர் மீது குற்றம் சொல்கிறோமென்றால், ’இந்த இடத்தில் இன்னது’ என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னால்தான் அவரால் அதைத் திருத்தியமைத்துக் கொள்ள முடியும். அல்லாவிடில் அது வெற்றுப் பேச்சாகவே கடக்கப்பட்டு விடும்.

All my life, I always wanted to be somebody. Now I see that I should have been more specific. -Jane Wagner