5/29/2022

FeTNA: பேரவையும் நிர்வாகக்குழுவும்

தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்களிப்பு பெருமளவில் முடிந்திருக்கலாமென யூகிக்கின்றேன். வாக்களித்திராதவர்களையும் வாக்களித்திடுமாறு வேண்டுகின்றேன்.

பேரவையின் நிர்வாகக்குழுவில் இருக்கின்ற ஒவ்வொருவருக்கும், தலைவர் - துணைத்தலைவர், செயலாளர் - துணைச்செயலாளர், பொருளாளர் - துணைப்பொருளாளர், இயக்குநர்கள், இவர்களுக்கென தனித்தனிப் பொறுப்புகள் உள்ளன. அவர்கள் அவற்றினை முறையே செய்திடல் வேண்டும். நான் கடந்து வந்த இந்த 15 ஆண்டுகள் அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது சில படிப்பினைகள் நமக்கு உண்டு.

பொறுப்புகளுக்கான தனித்துவமான பணிகளைத் தவிர்த்து, நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களில் வைக்கப்படுகின்ற தீர்மான முன்மொழிவுகளை, கொள்கை அடிப்படையில் ஆதரித்தும், எதிர்த்தும் செயற்பட்டாக வேண்டும். அவற்றை இவர்கள் அறவே செய்வதில்லை. எப்படி?

தலைவர், அவருக்கு உதவிகரமாக, நிர்வாக்குழுவுக்கு வெளியே சிலபலர் இருப்பர். தவறில்லை. செல்வாக்குமிக்க, அனுபவமிக்க முன்னோடிகளின் உதவியின்றி நாடளாவிய அமைப்பினை நிர்வாகம் செய்யவே முடியாது. அப்படியான சூழலில், அவர்களின் ஆலோசனையின் பேரில், தலைவர் முன்மொழிவுகளைக் கூட்டத்தில் வைப்பார். நிர்வாகக்குழுவில் இருப்போர் ஆதரித்து ஓட்டளிப்பர். எப்போதாகிலும் ஓரிருவர் மாற்றுக் கருத்துகளை முன்வைப்பர். அப்படியான செயல், தொடர்ந்து இடம் பெறுமாயின் மாற்றுக்கருத்து வைப்பவர் கட்டம் கட்டப்படுவார். அண்ணன் மனம் கோணுமேயென்பதற்காக, ஆதரித்தே வாக்களிக்கும் தன்மை ஏற்பட்டுவிடுகின்றது. அல்லாவிடில் அடுத்தடுத்த ஆண்டுகளில் வாய்ப்புகள் அமையாமற்போகலாம்.

என்ன செய்யலாம்? நிர்வாகக்குழுவிற்குச் செல்வோர் பேரவையின் கட்டமைப்பு, வளர்ச்சி, தொலைநோக்குத் திட்டங்கள், கூடவே தாம்சார்ந்த தமிழ்ச்சங்கத்தின் கருத்தையும் உள்ளடக்கித் தன்னிச்சையாகவும் திடமாகவும் செயற்பட வேண்டும். அல்லாவிடில், அப்பொறுப்பில் இருப்பது வீண். பின்னடைவுக்கே இட்டுச் செல்லும். தலைவரும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தன்னுமை(லிபர்ட்டி)யை நிலைநாட்ட வேண்டும். [நீ யார் எனக்கிளம்பிவிட வேண்டாம். நாம் எப்போதுமே, நிர்வாகக்குழுவில் இருந்த போதும் சரி, வெளியில் இருக்கும் போதும் சரி, எதிர்க்கருத்துகளை முன்வைக்கத் தயங்கியதே இல்லை]

ஆயுள் உறுப்பினர்கள்? ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களுக்கு அது ஒரு அடையாளம். பேரவையின் அன்றாட அலுவல்பணிகளுக்கோ, தொடரியக்கத்துக்கோ கிள்ளுக்கீரையைக் கூட கிள்ளிப் போட மாட்டார்கள். முக்கியமான கொள்கைப் பிரச்சினையில் கருத்துச் சொல்ல மாட்டார்கள். எல்லாருக்கும் நல்லவராக இருக்க வேண்டுமென்கின்ற தன்னலம். 35 ஆண்டுகாலக் கட்டமைப்பின் தரவுகள் இல்லாமற்போனதற்கும், தொடர்ச்சி பாழ்படுவதற்கும் இவர்கள்தாம் முழுப்பொறுப்பு. அமைப்பின் தொடரோட்டத்துக்குப் பங்களிக்க வேண்டும்; அல்லது உறுப்பினர் பொறுப்பைக் கைவிட வேண்டும்.

வாக்களிக்கும் போது இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு வாக்களிக்க வேண்டும். வியந்தோதலுக்குப் பணிந்தும் லாபிகளுக்குப் பணிந்தும் வாக்களிப்பது கூட பொறுப்பற்ற செயல்தான். இஃகிஃகி!



No comments: