5/27/2022

FeTNA:நிலைப்பாடும் கோரிக்கையும்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பது, அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழ்ச்சமூகத்தின் அடையாளம். அமெரிக்காவில் வாழ்கின்ற தமிழர்களுக்கான அமைப்பு மட்டுமே. அப்படியான அமைப்பில், தமிழ்நாட்டு அரசியல் உணர்வுகளைப் புகுத்துவதை நாம் என்றுமே செய்ததுமில்லை, ஆதரிப்பதுமில்லை. மாறாக, எதிர்த்தே வந்திருக்கின்றோம். பேரவையின் தேவை இன்றியமையாதது. எனவே அதன் கட்டமைப்புச் சீர்குலையாது இருந்திடல் வேண்டுமென்பதுதான் நம் அவா.

பேரவைக்கு நெருக்கடியான காலகட்டம் என்று இருந்தது உண்டு. பேரவை விழாக்களுக்கு வருவதற்கே அஞ்சுவர். அப்படியானதொரு காலகட்டத்தில்தான் நாங்கள் சில இளைஞர்கள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றயெண்ணித் திட்டமிட்டுப் பல பணிகளைச் செய்தோம். இணையத்தின் வாயிலாகப் பேரவைப் பணிகள் குறித்துப் பரப்புரை செய்வது. ஊடகங்களில் பேரவை குறித்த செய்திகள் இடம் பெறச் செய்வது இப்படி. இதன்விளைவாக நிறைய இளைஞர்கள் ஈர்ப்புக் கொண்டு பேரவைப் பணிகளில் நாட்டம் கொண்டனர்.

இலக்கியக் கலந்துரையாடலுக்கு தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தினர் அழைத்திருந்தனர். அப்போது தமிழ்நாட்டில் இவ்வளவு சேனல்கள் இருந்திருக்கவில்லை. மூன்றே மூன்று சேனல்கள்தாம். அப்படியான நேரத்தில், பேரவை குறித்துப் பேசவிழைந்து, அது பெரிய வீச்சினைக் கொண்டமைத்தது. இப்படிப் பல பணிகளைத் தொடர்ந்து செய்தே வந்திருக்கின்றோம்.

அன்றும் இன்றும் தொடர்ந்து சொல்லி வருவது ஒன்றே ஒன்றுதாம். பேரவைப் பொறுப்பாளர்கள், பேராளர்களை, உறுப்பினர்களை மதிக்க வேண்டும். அவர்களை ஊக்குவிக்க வேண்டும். கூட்டங்களை அடிக்கடி கூட்டி, அவர்களுடன் கலந்துரையாட வேண்டும். ஓரளவுக்குச் செய்யத் தலைப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பெரும்சரிவு ஏற்பட்டிருக்கின்றது. அப்போதைய வியந்தோதல் செய்திகளைக் கொண்டே அவர்கள் முடிவெடுக்கின்றனர். இது பேரவைப் பணிகளுக்குச் சிறப்புச் சேர்க்கவே சேர்க்காது.

தற்போது தேர்தல் நேரம். களத்தில் வேட்பாளர்களாக இருக்கின்ற பலருக்கே பேரவையின் கட்டமைப்பு, சட்டதிட்டம், என்ன தொய்வு நேரிட்டிருக்கின்றது போன்றவற்றைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.

ஒவ்வோர் ஆண்டும், முக்கியமாக எந்தெந்த விருந்திநர்கள் கலந்து கொண்டனர் என்கின்ற பட்டியலைப் போட்டு வைத்திருந்தோம். விழா மலர்களைப் போட்டு வைத்திருந்தோம். இப்படி தரவுகளின் பேழை என்பது கட்டமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அது இல்லாமற்போய் விட்டிருக்கின்றது. தரவுகள் இல்லாத சூழலில், எதைக் கொண்டு அமைப்பினை நடத்தப் போகின்றீர்கள்? ஒருவர் சொல்கின்றார், 2005இல் செயலாளராக இருந்தேன். எதைக் கொண்டு மெய்ப்பிப்பது?? 

அன்புகூர்ந்து அமைப்பின்பால் நாட்டம் கொள்ளுங்கள். அக்கறை கொள்ளுங்கள். அமைப்புக்கு ஏதாவது பங்களிப்புச் செய்யுங்கள். வீக்கான கட்டமைப்பின் மேல் நின்று கொண்டு பயணிக்க நேரிட்டால், எந்த நேரத்திலும் மூழ்க வேண்டி வரலாம். அறமும் பண்பும் மாந்தனுக்கழகு!

எந்தச்சகதமிழர் மீதும் விருப்பு வெறுப்பு இல்லை. மாற்றத்துக்கான வாக்காக, ‘பேரவை காப்போம்’ அணிக்குச் செலுத்துவதே என் தெரிவாக இருக்கும்.


No comments: