5/26/2022

FeTNA: பேரவைத்தேர்தலும் பேச்சுகளும்

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, பழைய சிந்தனைகள் என்பதிலெல்லாம் நமக்கு என்றும் உடன்பாடு இருந்ததே இல்லை. 2000 ஆண்டுகாலப் பழமை வாய்ந்ததுதான் திருக்குறள், ஆகவே பழைய சிந்தனை எனச் சொல்லிப் புறந்தள்ளிவிடல் ஆகுமா? எத்தனையோ மேம்பாடுகள் இருக்க, முன்னைய வழக்கத்தை வியந்தோதல் ஆகுமா? எல்லாமுமே இடம், பொருள், ஏவல் குறித்தனவே. அறம் செய விரும்பு என்பதுதான் அடிப்படை. எதையும் சீர்தூக்கிப் பார்த்து, பேசுவது தமிழர்க்கு அழகு. நெகடிவ் பேச்சு என்பதெல்லாம், பேச்சுரிமையை நசுக்கும் செயல். பேசுகின்ற பேச்சு உண்மையாக இருக்க வேண்டும். பேரவையின் மீது அக்கறை கொண்ட பேச்சாக இருக்க வேண்டும். அவ்வளவே!

பேரவை வரலாற்றில் முதன்முறையாக நாற்பது குழுக்கள்... வியந்தோதலும் உண்மைக்குப் புறம்பான பேச்சுமாகும் இது? எப்படி? இணையத்தில் முன்னைய ஆண்டுவிழா மலர்கள் இருக்கின்றன. யாரும் பார்க்கலாம். 35 - 45 குழுக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. வெள்ளிவிழா ஆண்டில் 60 குழுக்கள் பணியாற்றின. இந்த 40 குழுக்கள் எனச் சொல்லப்படும் ஆண்டுகளில் இடம் பெற்றவை: கடந்த இரண்டு ஆண்டுகளின் மலர்களைக் காணோம். கடந்த இரண்டு ஆண்டுகளின் காலாண்டு இதழ்களைக் காணோம். கடந்த ஆண்டின் ஃபோட்டோ/வீடியோக்களைக் காணோம். செய்தி அறிக்கைகளைக் காணோம். இந்த நேரத்தில் மேலுமொன்றைச் சொல்ல விரும்புகின்றேன்.

டாலாஸ், டெக்சாஸ் நகரில் மாபெரும் விளம்பரத்தன்மையோடு விழா நடைபெற்றது. சொல்லப்பட்ட தகவல்களில் முன்னுக்குப் பின் முரணானவை எண்ணிலடங்கா. விழா எப்படி இடம் பெற்றதென்பது ஊரறிந்த கதை. பேரவையின் தொன்மை, தொடர்ச்சி என்பதன் வீழ்ச்சி அங்கேதான் துவங்கிற்று. ஏகபோக தனியாவர்த்தனம் கொடிகட்டிப் பறந்தது. பொறுமையாக இருந்தேன். அடுத்த ஆண்டு சிகாகோ விழாவின் பொதுக்குழு முடிவடையும் வரையிலும் பொறுமையாக இருந்தேன். பொதுக்குழுவில் மழுப்பலும் நழுவலுமான பேச்சுகளே இடம்பெற்றன. செயற்குழுவுக்கு மடல் எழுதினேன், ‘மே மாதமே தாக்கல் ஆகின்ற வருமானவரிப் படிவம் ஏன் இன்னும் காணக்கிடைக்கவில்லை?’. யாதொரு பதிலுமில்லை. மீண்டும் முன்னாள் தலைவர்களையும் உள்ளடக்கி மடல் எழுதினேன். அதற்குப் பின் பதில் வந்தது, நவம்பர் மாதம் வரையிலான காலநீட்டிப்புக் கோரப்பட்டு இருக்கின்றதென. நவம்பர் வரை காத்திருந்தேன். நவம்பரில் வெளியானது. விழா நட்டம் என்பதாக. இப்போதும் மே 15 கெடு முடிவடைந்து விட்டது. இணையத்தில் வரிப்படிவம் காணக்கிடைக்கவில்லை. 40 குழுக்களென வியந்தோதுவர். ஆனால் பதில் கிடைக்காது.

என் அப்பா மூவாயிரம்தான் சம்பளம் பெற்றார். நான் முப்பதினாயிரம் பெறுகின்றேனென தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியுமா? என் அப்பாவின் சம்பளத்தில் ஒரு பவுன் 1200க்கு வாங்கினார். இன்று ஒரு பவுன்? ஆகவே எண்ணிக்கையைச் சொல்லி ரொமாண்டிசைசு செய்வதில் ஒருபொருளுமில்லை. செய்த பணிகளின் தரமென்ன? நயமென்ன? விழுமியமென்ன?? அதிகபட்சம் 45 விருந்திநர்கள்தான் இரண்டு நாட்கள் விழாவுக்கு. தற்போதெல்லாம் நூற்றுக்கும் மேற்பட்ட விருந்திநர்கள், அதுவும் ஏற்கனவே வந்தவர்களேவும் வரவழைக்கப்பட்டு, உள்ளார்ந்த கலைஞர்களுக்கு மேடையில் இடம் அளிக்கப்படுவதில்லை. போகின்ற பேச்சில் பேசுகின்ற பொய்ப்பேச்சு அல்ல. தகுந்த சான்றுகளுடன் நம்மால் நிறுவமுடியும். பேரவை வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு ஏகபோகம் மலிந்திருக்கின்றது. 2009இல் சிலம்பம், 2010இல் தெருக்கூத்து, 2011இல் பறை, 2012இல் கவனகக்கலை என ஆண்டுதோறும் பேரவையின் வாயிலாகக் கலைகள் அமெரிக்காவெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்தந்தக்கலைகளுக்கான சங்கங்கள் அமைப்புகள்கூடத் தோன்றின. விளம்பரப் பிரியர்களால் அப்படியானவற்றைப் பட்டியலிட முடியுமா?

களத்தில் இறங்கி, தமிழ்க்கலை, இலக்கியம், தமிழ்ப்பண்பாடு எனத் தொண்டாற்றும் தன்னார்வலர்களைத் தெரிவு செய்ய வேண்டியது ஒவ்வொரு வாக்காளரது கடமை. மாறாக, செல்வம், சமூக அந்தஸ்து, விளம்பரம் போன்றவற்றுக்காக சார்புநிலை கொள்வீர்களேயானால், அது மேலும் பின்னடைவுக்கே இட்டுச் செல்லும். 15 ஆண்டுகாலப் பேரவை ஆர்வலன் என்கின்ற முறையில், தமிழின் மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன், ‘பேரவை காப்போம்’ அணிக்கு வாக்களிப்பதே பேரவையின் இன்றைய தேவை.

https://vijay4fetna.com/

No comments: