3/09/2011

மதுரை டெசோ மாநாடும், மு.கண்ணப்பன் அவர்களும்!!

இரம்யமான கிராமியச் சூழல். சாதிகளும், வேறுபாடுகளும் இருந்தனவே ஒழிய, இணக்கத்தில் எக்குறைபாடும் இருந்திருக்கவில்லை. பூர்விக அடிப்படையில் நாங்கள் வெளியூர்க்காரர்களாகவே இருந்திடினும், நாங்கள் வசித்து வந்த மற்றும் அண்டைப்புற ஊர்களான வீதம்பட்டி, வேலூர், சலவநாயக்கன்பட்டி, வாகத்தொழுவு, சங்கமநாயக்கன் பாளையம் முதலான ஊர்களைச் சேர்ந்தோர் எங்களுடன் மிகவும் பந்தபாசத்துடன் பழகி வந்த நாட்கள் அவை.

உழவு, வணிகம், நெசவு, மரமேறுதல், மட்பாண்டம் செய்தல், வேட்டையாடுதல், கட்டிடம் கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், தச்சுத் தொழில், தையல், இசைத்தொழில் முதலான தொழில்களைத் தன்னகத்தே கொண்டு முழுமை பெற்ற கிராமம்தான் வாகத்தொழுவு கிராமம். வாகத்தொழுவு கிராமத்தில், வீதம்பட்டி, வேலூர், சங்கமநாயக்கன் பாளையம், சலவநாயக்கன் பட்டி, சலவநாயக்கன் பட்டிப் புதூர், கொசவம்பாளையம் ஆகிய ஊர்கள் அடக்கம்.

அன்றாடம், சலவநாயக்கன் பட்டிப் புதூரில் இருந்து வேலூர் உயர்நிலைப் பள்ளிக்குக் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று வர வேண்டும். பள்ளிக்குச் சென்று வந்த பின்னர், மாலையிலும் வார ஈறிலும் உள்ளூர்ச் சிறுவர்களோடு மாடு மேய்க்கச் செல்வது வழமை. அப்படிச் செல்லும் போதெல்லாம், அங்கு குழுமி இருக்கும் என்னையொத்த சிறுவர்களுக்குள் அரசியல் பேச்சுகள் வெகு சூடாக நடைபெறும். ஒட்டு மொத்தமும் அதிமுகவை ஆதரிக்க, அடியேன் மட்டும் திமுகவை ஆதரித்துப் பேசுவேன். இதற்கும், எங்கள் வீட்டார் அனைவரும் அரசியல் எதிர்ப்பாளர்கள்; அதிலும் திமுகவை மிகக்கடுமையாகச் சாடுபவர்களும் கூட.

அப்படிப்பட்ட சூழலில்தான், மா.அரங்கநாதன் என்பவரும், சர்க்கரை ஆலையில் அலுவலராகப் பணியாற்றி வந்த கோ.சாரங்கபாணி அவர்களும் எங்கள் ஊருக்குப் புதிதாக குடி வந்திருந்தார்கள். இருவருமே திமுகவைச் சார்ந்தவர்கள். என்னுடைய நினைவுக்கு எட்டியவரை, அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஊர்களுக்கும் இவர்கள்தான் திமுகவினர். அதிமுகவும், பேராயமும்தான் கோலோச்சிக் கொண்டிருந்தன. பின்னர், அவர்கள் இருவருமாகச் சேர்ந்து, பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போன டாக்டர் கிருஷ்ணசாமியின் உதவியோடு, திமுக கிளைக் கழகத்தை நிறுவி இருந்தார்கள்.

நான் கோடை விடுமுறையில், மாடு மேய்ப்பதை முழுநேரப் பணியாகச் செய்து கொண்டிருந்தேன். அப்படித் தரிசு நிலங்களில் மாடு மேய்க்கும் வேளையில், அரசியல் விவாதங்கள் சூடு பறக்கும்.

இப்படியாக, நான் திமுகவின் அபிமானியாக இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்ட சாரங்கபாணி அண்ணன், என் பெற்றோரிடம் வந்து உங்கள் பையனை மதுரைக்கு அழைத்துச் சென்று வருகிறேன்; அனுப்பி வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். என் தாயார், முடியவே முடியாது என மறுத்து விட்டார். நான் இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தேன்.

அதைப்பார்த்த என் தந்தையார், நான் உன்னை அனுப்பி வைக்கிறேன் என ஆற்றுப்படுத்தி, காலையில் எட்டு மணிக்கெல்லாம் என்னை சாரங்கபாணி அண்ணாவின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். நான் பள்ளிக்கு அணிந்து செல்லும் காக்கி அரைக்கால்ச் சட்டையும், வெள்ளை நிறச் சட்டையும் அணிந்திருந்தேன். சாரங்கபாணி அண்ணா, அவரது மூத்த மகனான பார்த்தசாரதியின் சல்லடத்தையும்(pant), சட்டையையும் கொடுத்து, என்னை அணீந்து கொள்ளச் செய்தார்.

சரக்குந்து ஒன்று வர, நாங்கள் அதில் ஏறிக் கொண்டோம். அது, ஊர் ஊராகச் சென்று மற்றவர்களையும் ஏற்றிக் கொண்டு உடுமலைப் பேட்டையை அடைந்தது. சாரங்கபாணி அண்ணன் எங்களுக்கெல்லாம் தின்பண்டம் வாங்கிக் கொடுத்தார். நல்ல வெள்ளை உடுப்புடன் ஒருவர் எங்கள் அருகே வந்து, ”என்ன சாரங்கன், இந்த ரெண்டு பொடிப்பசங்களுமா மாநாட்டு வர்றாங்க?” என்றார் அவர். அப்படிக் கேட்டவர் வேறு யாருமல்ல; கோவைத் திமுகவின் மாவட்டச் செய்லாளரும், சாரங்கபாணி அண்ணனின் நண்பரும், திமுக தலைவரால் அன்போடு அழைக்கப்பட்ட காரோட்டிக் கண்ணப்பன்தான் அவர்.

பிறகு ஏராளமான வாகனங்களுடன் மதுரை சென்றடைந்தோம். 1986, மே மாதம் நான்காம் நாள், மதுரையில் கூடிய பெரும் கூட்டத்தைப் பார்த்தேன். எங்கு சென்றாலும், சாரங்கபாணி அண்ணன் அவர்கள் என்னையும், பார்த்த சாரதியையும் கூடவே அழைத்துச் சென்றார். அன்றைய தினத்தில் அதிமுகவில் இருந்த கா.காளிமுத்து அவர்களின் மனைவியான நிர்மலா அம்மையார் வீட்டிற்கு கூடச் சென்றிருந்தோம்.

அம்மாநாட்டில் ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்), எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்), பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல் ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங் எம்.பி., சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸாம் கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி., க.அன்பழகன், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம், வல்லரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன், சாரங்கபாணி அண்ணன் அவர்கள் அவர்களுடைய மகன் பார்த்தனையும், என்னையும் அழைத்துப் போய் வாடிப்பட்டி அருகில் உள்ள குட்லாடம்பட்டி சர்க்கரை ஆலை விருந்தினர் இல்லத்தில் நித்திரை கொள்ளச் செய்தார்கள். நாங்கள் நித்திரை கொண்டு எழுந்ததும், மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வந்தோம்.

அதற்குப் பிறகு, எனது மாபெரும் வளர்ச்சியை(?)க் கண்டு மிரண்ட என் பெற்றோர், என்னைக் கொண்டு போய் விடுதியில் சேர்த்து விட்டார்கள். குடும்பப் பொருளாதாரம் அதற்கு ஈடு கொடுக்க இயலாத சூழ்நிலை இருந்தும். அப்படியாக்ச் சில காலம் கழிந்தது. என் மூத்த சகோதரர், சூலூருக்கு வடக்கே, கோவை - அவினாசி சாலையில் இருக்கும் செங்கோட கவுண்டன் புதூர் எனும் ஊரில் வசித்து வந்தார். நானும் அவருடன் சென்று இணைந்து கொண்டேன்.

அந்தக் காலகட்டத்தில், செங்கோட கவுண்டன் புதூருக்கு இரு பிரச்சினைகள். முதலாவது, குடிநீர்ப் பிரச்சினை. அடுத்தது, இருக்கும் ஓராசிரியர் பள்ளியை இரத்துச் செய்யும் சூழல். எங்கள் ஊரான செ.க.புதூரோ மிகவும் சிறிய ஊர். யாருமே உதவ முன் வரவில்லை. இருந்தாலும், ஊருக்குள் இருந்த இளைஞர்களான எங்களுக்குள் ஒரு வேகம் மற்றும் துணிவு.

அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவரான A.K.பழனிச்சாமி அவர்களைச் சென்று பார்த்தோம். சூலூர் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவரான செ.ம.வேலுச்சாமி அவர்களைச் சென்று பார்த்தோம். பலனில்லை!

இறுதியாக, யாரோ சொன்னார்கள் என்று, சூலூர் பேரூராட்சித் தலைவரான S.S.பொன்முடியைச் சென்று பார்த்தோம். நாங்கள் கிட்டத்தட்ட நான்கைந்து பேர்தான் சென்றிருந்தோம். எங்களை நன்கு வரவேற்று உபசரித்தார். ”நான் வேறு ஊராட்சியின் தலைவர்; என்னால் ஒன்றும் செய்ய இயலாது; ஆனால், அமைச்சர் வரும் போது நான் உங்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்”, என்று கூறினார் பொன்முடி.

அவர் சொன்ன நாளில், செங்கோட கவுண்டன் புதூர் இராசகோபால், சுந்தரான், மனோகர் அண்ணன், இராசகோபாலின் தாய்மாமா தங்கவேலு அண்ணன் மற்றும் நான் ஆகிய ஐந்து பேரும், கோவை சுங்கம் அருகில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்திற்குச் சென்றோம். சென்ற பத்து மணித் துளிகளில் எல்லாம், எங்களை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

அங்கே முன்னறையில், காட்டம்பட்டிக் கந்தசாமி M.L.A, மாவட்ட துணைச் செயலாளர் R.T.மாரியப்பன் முதலானோர் அமர்ந்திருந்தார்கள். “நீங்கெல்லாம் யாருப்பா? காலேஜ் பசங்களா??” என்று கேட்டார் கந்தசாமி M.L.A. நாங்கள் அமைச்சரின் தொகுதியில் இருந்து வந்திருக்கிறோம் எனக் கூறினோம். உடனே அமைச்சரைப் போய்ப் பாருங்கள் எனக் கூறினார்கள்.

உள்ளே சென்று, அமைச்சரைப் பார்த்தோம். பிரச்சினையை எடுத்துக் கூறினோம். ”யாருமே உதவ முன்வரவில்லை. எங்கள் ஊர் சிறிய ஊர், மொத்தமே அறுபது வீடுகள்தான் உள்ளன. எனவே, அதிகாரிகள் செவிமடுக்க மறுக்கிறார்கள்” எனக் கூறினோம். குறைந்தபட்சம் நாற்பது குழந்தைகளாவது வேண்டுமே என அங்கலாய்த்தார். எங்கள் ஊரில் 22 குழந்தைகள்தான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். தேசியப் பெருஞ்சாலையைக் கடந்து, அண்டை ஊரான அரசூர்ப் பள்ளிக்குச் சென்று வருவதில் இருக்கும் இடைஞ்சல்களை எடுத்துச் சொன்னோம். கேட்டுக் கொண்டார்.

அடுத்ததாக, எங்கள் ஊருக்கென இருந்த ஆழ்துளைக் கிணற்றினை அண்டைக் கிராமத்தார் அபகரித்துக் கொண்டதைப் பற்றிக் கூறினோம். சரி, உங்களுக்கு வேண்டுமானால் வேறு இடத்தில் புதியது உடனே என் செலவில் தோண்டித் தருகிறேன் என்க் கூறி, அதற்கான வேலைகள் உடனே ஆகட்டும் என ஆணையிட்டார். பள்ளி குறித்து, கல்வி அமைச்சருடன் பேசுகிறேன் என்றும் உறுதி அளித்தார். அனைத்தும் முடிந்து, கிளம்பும் போது அவரிடம் கூறினேன், நான் சாரங்கபாணியின் நண்பனென. “அட, மொதல்லயே சொல்லி இருக்கலாமல்லோ?”, கொங்கு மொழியில் அன்பு மொழிந்தார்.

இக்காலகட்டத்தில் நடந்த அரசியல்? எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், அதிமுக இரண்டாக உடைய, பேராயக்கட்சி தனித்து நிற்க, ராஜீவ் காந்தி வாயுதூத்தில் ஊர் ஊராக வந்து பிரச்சாரம் செய்ய, ஓட்டுகள் பலவாறு பிரிய, 1989 ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் திமுக ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அந்த ஆட்சியில்தான், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் மு.கண்ணப்பன் அவர்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர்.

ஜனவரி மாதம் பிரிந்திருந்தவர்கள் அனைவரும் ஓரணியில் திரள, 1989 நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்து, ஒரு இடத்தைக் கூடக் கைப்பற்ற இயலவில்லை. கூட்டணிக் கட்சியான பொதுவுடமைக் கட்சி மட்டும் நாகப்பட்டினத்தில் ஒரு இடத்தை வென்றது. மீதம் இருந்த 39 இடங்களையும் அதிமுக கூட்டணி வென்றது. ஆனாலும், மத்தியில் வென்றது வி.பி.சிங் ஆயிற்றே? முரசொலி மாறன் கேபினட் அமைச்சரானார்.

இடப்பட்ட காலத்தில், நாங்கள் மீண்டும், மீண்டும் அமைச்சரைச் சென்று பார்த்ததின் விளைவு, செங்கோட கவுண்டன் புதூர் ஓராசிரியர் துவக்கப் பள்ளியின் இரத்து ஆணை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆழ்துளைக் கிணறும் வெட்டப்பட்டது. ஊர் மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

வி.பி சிங் அரசு கவிழ, சந்திரசேகர் அரசு பதவி ஏற்றது. 1986 டெசோ மாநாட்டில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சாமி அமைச்சர், சுபோத்சிங் சகாய் அமைச்சர், இருவருமாகச் சேர்ந்து கவிழ்த்தார்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த திமுக அரசினை. மீண்டும், 1991 ஜூன் மாதம் 24ந் தேதி சட்டமன்றத் தேர்தல்.

திமுக எதிர்ப்பு அலை பேராவேசமாக வீசிக் கொண்டிருந்தது. இராஜிவ் காந்தியின் மரணம் தமிழகத்தை உலுக்கிவிட்டிருந்த நேரமது. திமுகவுக்கு ஓட்டுக் கேட்டு எவனாவது போவானா?? ஆனால், செங்கோட கவுண்டன் புதூர் ஊர்க்கூட்டத்தில், கட்சி சார்பின்றி அனைவரும் திமுகவுக்கே வாக்களிப்பது என முடிவு செய்தோம். ஊர்ப் பொதுமக்கள் சார்பில், சுவரொட்டிகள் ஒட்டினோம்.

சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குகள், சூலூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணப்பட்டது. தொகுதிக்கு யாரென்றே தெரியாத, அதிமுகவுக்குத் துளியும் தொடர்பில்லாத, ஜெயலலிதா அம்மையாரின் வகுப்புத் தோழியினுடைய சகோதரன், K.S. துரைமுருகன் என்பார் ஏராளமான வாக்குகள் அதிகம் பெற்று முன்னுக்கு வந்தார், அனைத்து வாக்குச் சாவடிகளிலும்! செங்கோட கவுண்டன் புதூர் வாக்குச் சாவடியைத் தவிர!!

செங்கோட கவண்டன் புதூர் மற்றும் சுப்பராம்பாளையம் அடங்கிய எங்கள் ஊர் வாக்குச் சாவடியில் எண்பது சத வாக்குகள், எங்கள் மக்களுக்கு குடிநீரும், கல்விச்சாலையும் அளித்த வேட்பாளருக்குப் பதிவானது தெரிந்து, கட்சி சார்பின்றி வெடிகள் வைத்து மகிழ்ந்தோம் நாங்கள்!!

பொறுப்பி: என் நினைவில் இருப்பதைப் புலம் பெயர்ந்து வாழும் சூழலில், அயல் மண்ணில் இருந்து எழுதுகிறேன். பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க!

எம் தாய் மண்ணுக்குச் சேவை புரிந்த, காலஞ்சென்ற அதிமுக அமைச்சர் ப. குழந்தைவேலு M.A.B.L அவர்களை, எம் தாய் மண்ணில் இருந்து கொண்டு நினைவு கூறுவேனாக!! அதுகாறும் தங்களிடம் இருந்து வணக்கம் கூறி விடைபெறுவது,

பணிவுடன்,
பழமைபேசி.

8 comments:

ஓலை said...

Arumai pazhamaiyaare. Arumai. Nice rememberance.

Ennoda aasai neenga oru vetpu manu kodukkalaam. Nalla time paarththu naattukku poreenga.

பழமைபேசி said...

@@ஓலை

தமிழ் வலைஞர் கட்சி சார்புல நிக்கவா? நிதியை அள்ளித்தருவீங்கதானே?!

Unknown said...

ஊருக்கு வரீங்களா..??
வாங்க.. வாங்க..!!

naanjil said...

வி. பி. சிங் ஆட்சி கவிழும் போது நான் சென்னையில் இருந்தேன். அப்பொழுது நான் கிழக்கு ஆப்ரிக்காவில் பணியில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்த்திருந்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் கூறும் பலபேர்களின் பெயர்களைப் செய்திதாள்களில் படித்திருக்கிறேன்.
நடைமுறை செய்திகளை ஆவணப்படுத்துவதாக உள்ளது உங்கள் எழுத்து.
இப்பணி வளர வாழ்த்துக்கள்.

அன்புடன் அண்ணன்
நாஞ்சில் இ. பீற்றர்

Rathnavel Natarajan said...

நண்பரே,
நல்ல தமிழ் நடை. எனக்கு பிடித்த இலங்கை தமிழ் மாதிரி 'அழகு தமிழ் நடை'
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

குறும்பன் said...

1991 ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட செய்தி கேட்டு பள்ளியின் நண்பகல் இடைவெளியின் போது கோபத்தின் காரணமாக நண்பன் அழுதது நினைவுக்கு வருது.

குறும்பன் said...

நல்லபடியா போயிட்டு வர வாழ்த்துகள்.

தாராபுரத்தான் said...

சுவையான பழைய நினைவுகள்..