3/13/2011

2011 தாயகப் பயணம் - 1

பெருநடை தாம்பெறினும் பெற்றிப் பிழையாது
ஒருநடைய ராகுவர் சான்றோர் - பெருநடை
பெற்றக் கடைத்தும் பிறங்கு அருவிநன்னாட
வற்றாம் ஒருநடை கீழ்!

அதிகாலை நான்கு மணி. கட்டார் நாட்டு நகரான தோகா நகரில் இருந்து வந்த விமானம் மெல்லத் தரையைத் தொட்டது. என்றுமில்லாதபடிக்குப் பயணியர் எவரும் தள்ளுமுள்ளுகளுக்கு ஆட்படவில்லை. தத்தம் முறை வந்தபோதும், அருகில் இருப்பவருக்கு முன்னுரிமை கொடுப்பதைப் பார்த்துச் சிலிர்த்தது மனம்.

புன்னகை தரித்து, மென்மனம் படைத்து, விமானநிலையக் கிரிகைகள் முடித்து வெளியேற முற்படுகையில், அருகில் வந்த விமான நிலையப் பணியாளர், “மணிவாசகம் நீங்கதான? நல்ல பெயருங்க... உங்க சரக்குப் பெட்டிகள் தாமதமாத்தான் வந்து சேரும். இந்தாங்க அதுக்காக நீங்க கொடுத்த விண்ணப்பத்தின் நிழற்படிவம்” எனக் கையளித்தார். ஊர் மண்ணை மிதித்ததும் உயிர்க்கும் கீழ்மை என்னை ஆட்கொண்டது. சட்டைப்பையைத் துழாவினேன். “என்ன தேடுறீங்க? நான் நல்ல ஊதியத்துக்கு வேலை பாக்குறவங்க. நீங்க நிம்மதியாப் போய்ட்டு வாங்க.. 48 மணி நேரத்துக்குள்ள உங்க பெட்டிக வீட்டுக்கே வந்து சேரும்!”.

என்னை நானே நொந்து கொண்டேன். இருப்பினும், அவரின் செயல்பாடு குறித்த பெருமிதத்தில் மிதந்தபடியே, உள்ளூர் விமான நிலையத்தில் நுழைந்தேன். ”கோயமுத்தூர் செல்லும் விமானம்,IT-2901, பயணிகள் பாதுகாப்புச் சோதனைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனும் அறிவிப்பு, தெளிதமிழில் கொஞ்சு மொழியில் சிணுங்கியது. மனம் குதூகலித்தது.

நுழைந்த பதினைந்து மணித் துளிகளில் எல்லாம் உள்ளூர் விமானமான கிங் பிஃசர் IT-2901 ஊர்தியில் இரண்டாவது வரிசையில், தாய் மண்ணைத் தரிசிக்கும் பொருட்டு சாளர ஊடாடியோரம் அமர்ந்தேன். சென்னை வந்தடைந்ததும் வீட்டாருக்கு அழைத்துச் சொல்கிறேன் எனக் கூறியிருந்தமை மனதிற்குள் சலனமூட்டியது. அழைத்துச் சொல்வதற்கு வாய்ப்பேதும் அமையப் பெற்றிருக்கவில்லை.

நியூயார்க்கில், ச்செட் ஏர்வேசு விமானம் தொழில்நுட்பக் கோளாறுகளால் புறப்படவே இல்லை. மாற்று ஏற்பாடாக, கத்தார் ஏர்வேசில் தோகா அனுப்பி வைத்தார்கள். என்னுள்ளிட்ட 32 சென்னை நகரப் பயணிகளை எதிர்பாராமல் உள்வாங்கியதால், அவ்விமானம் தாமதமாகவே நியூயார்க் நகரைவிட்டுப் புறப்பட்டது. அதன் பொருட்டு, தோகா நகரில் சென்னை செல்லும் விமானமும் இரண்டு மணித்தியாலங்கள் தாமதம். இப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக, இடைவெளி ஏதுமில்லாத் தொடர்ச்சியால் வீட்டாரை அழைக்க இயலாமற்ப் போய்விட்டிருந்தது. கிடந்து தவிப்பார்களே என எண்ணிப் புழுங்கிக் கொண்டு இருக்கையில் எமது அடுத்த இருக்கையில் இளைஞ்ர் ஒருவர் அமரக் கண்டேன்.

“Excuse me sir! Could I ask for a help?"

"Sure... Sure.."

"May I borrow your cell phone for a minute?"

"Certainly"

நன்றிகூடச் சொல்லாமல் மனையாளின் அலைபேசி எண்களை அழுத்தினேன், “மாமாய், எங்க இருக்கீங்க? பத்திரமாத்தானே இருக்கீங்க??””, பதைபதைத்தாள்.

“நல்லபடியா இருக்கேன். இதான் கிங்பிஃசர்லதான் உக்காந்திருக்கம் பாப்பு. அப்ப வந்துருங்க.. செரியா? வச்சிர்றேன்”

அலைபேசியைத் திருப்பிக் கொடுக்கும் இத்தருணத்தில் நன்றிகூறத் தலைப்பட்டேன். ஆனால் அவர் அதைக் காதிலே வாங்காமல் மகிழ்ச்சிப் பிரவாகத்தில்,

“அண்ணா நீங்க நம்பூருங்களா?”

“ஆமாங்க தம்பி, நான் உடலப்பேட்டைதானுங்”

“எம்பேரு அருணுங்... நான் பல்லடமுங்...”

“பல்லடமேதானுங்களா.. பக்கத்துல வேற எதனாச்சியுமு ஊருங்ளா?”

“இப்ப எல்லாமும் பல்லடந்தானுங்க.. ஆனா, எங்கூரு ஆண்டிமுத்தம் பாளையமுங்க, கரடிவாவிக்குப் பக்கத்துல...”

“தெரியுந் தெரியும்... எங்க பெரியம்மாவிக ஊரு, மல்லேகவுண்டன் பாளையந்தானுங்க... ரேமண்ட்சு விநியோக உரிமையல்லாங்கூட அவிகளுதுதானுங்..”

”அப்படீங்களா? இப்ப நீங்?”

“நான் அமெரிக்காவுல இருக்கணுங்க... ஊட்டுல அல்லார்த்தையும் பார்த்துட்டுப் போலாமுன்னு வந்துட்டு இருக்கறனுங்க...”

“அது உங்க நெறத்தைப் பாத்தாலே தெரீதுங்களே?”

“நீங்க தம்பீ?”

“நான் சிட்னியில MBA படிச்சனுங்க... இப்ப, அப்போவோட தொழில்களை அல்லார்த்தையும் நானே பாக்க ஆரமிச்சிருக்கனுங்க..” எனச் சொல்லிவிட்டு, பின்னால் யாரோ இருப்பதாகவும், பார்த்துவிட்டு வருவதாகவும் சொல்லிச் சென்றார்.

இடைப்பட்ட இந்நேரத்தில், உள்ளூர் விமானம், கிட்டத்தட்ட 30 மணித்துளிகளுக்கு முன்பாகவே சென்னையில் இருந்து புறப்பட்டு, கொங்குதேசம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. சாளர ஊடாடியின் வாழியாக தாய்மண்ணைப் பார்த்தேன். காரிருட்டையும் கடந்து ஊர்கள் தெரிந்தன. மகிழ்வாய் உணர்ந்தேன்.

கிங்ஃபிசர் விமானத்தில் ,முதலிரு வரிசைகளிலும் எதிரெதிர் இருக்கைகள். மிகவும் வசதியாகப் போனது. பல்லடம் அருண் அவர்கள், அவர்தம் நண்பர் திருப்பூர் மதன் அவர்களோடு தம் இருக்கைக்குத் திரும்பி இருந்தார்.

திருப்பூர் மதன் அவர்களோடு அறிமுகப்படுத்திக் கொள்ளலானேன். “நான் மணிங்க; சார்லட்டுல இருந்து வாறனுங்க”

“நான் மதனுங்க... எல்லாமே திலுப்பூர்தானுங்.. சொந்தமாத் தொழில்... பனியன், ஏற்றுமதின்னு போகுதுங்க வாழ்க்கை... நீங்க எவ்வளவு காலமா வெளியூர்ல?”

“நான் போயி பத்து ஆண்டுகளுக்கும் மேலாவுதுங்க... திலுப்பூர் கேரளா க்யூன் ப்ரா கிருஷ்ணமூர்த்தி என்ற கூடப் படிச்சவனுங்க...”

“அட, அவன் நம்ம பங்காளிதானுங்.. இப்ப ப்ராவெல்லாம் கெடையாதுங்க... அவன் ஆப்செட் ப்ரிண்டிங் பார்த்துட்டு இருக்காருங்க... அவங்கண்ணன் பாலுதான் எல்லாமே.. ஆமா, அவரை எப்படி உங்களுக்கு?”

“நானுமு அவனுமு ஒட்டுக்கா, லட்சுமிநாயக்கான் பாளையத்துல படிச்சமுங்க... அறைத் தோழர்களுங்கூட...”

“அப்படிங்களா? நான்பாருங்க ஒரு கான்பெரன்சுக்கோசரம் ஃபின்லாந்து போய்ட்டு வாறனுங்க...”

”செரிங்க... சாயப்பட்டறை எல்லாம் மூடிக் கெடக்குதுங்களே? மாற்று ஏற்பாடுங்க??”

வினா தொடுத்ததுதான் மாயம், இளைஞர்கள் இருவரும் சடசடவென[ப் பொழிந்து தள்ளினார்கள். வாய்ப் சொல் வீரர்கள் நாங்களடா என்பதெல்லாம் அக்காலமடா எனச் சொல்லாமற் சொல்லியது அவர்கள் பகர்ந்து கொண்ட தகவல்கள். உலகநாடுகளில் இருக்கும் தொழில்நுட்பங்களை விரலிடுக்கில், நாநுனியில் வைத்திருக்கிறார்கள்.

ஆற்றுத் தண்ணீரில் உப்பின் அளவு 2000 TDS அலகுகள், கடல்தண்ணீரின் உப்பளவு 5000 TDS(total dissolved solids) அலகுகளுக்கும் மேலாக... உயிர்வழிச்செலுத்தலின் மூலம் சாயக்கழிவை பிரித்தெடுத்தல், seeweed கடற்பாசிகள் கொண்டு, சாயக் கழிவிலிருந்து உப்பு நீரைத் தனியாகவும் திடமக் கழிவைத் தனியாகப் பிரித்தெடுத்தல், திருப்பூரில் இருந்து குழாய்கள் வழியாக கடலுக்குக் கொண்டு செல்லப்படுவதன் சாதக, பாதகங்கள், குசராத் முதல்வர் மோடியின் பரிந்துரை எனப் பல தகவல்களை, முழுமையான தகவுகளுடன் அடுக்கிக் கொண்டே போனார்கள்.

குறிப்பாக மதன் அவர்கள், தொழில்நுட்பம் மற்றும் வணிகக் கூறுகளை தனக்கேயுரிய அமைதியுடன் வெளிப்படுத்துவதில், அவருக்கு நிகர் அவரே எனும் பாங்கில் மிளிந்தார். மின்பற்றாக் குறையை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள் என வினவினேன். மிக அனாயசமாக, அருணும் மதனும் தத்தம் முயற்சிகளை நம்முடம் பகர்ந்து கொண்டார்கள்.

சக்தி சர்க்கரை ஆலையில் தான் பெற்ற அனுபங்களை மதன், தெள்ளத் தெளிவாகப் பகர்ந்தார். ஒரு வினாடிகூட இடைநிறுத்தம் இல்லாது இருத்தல் வேண்டும் சர்க்கரை ஆலைக்கு. ஒரு வினாடி இடை நிறுத்தம் என்றாலுங்கூட, கிட்டத்தட்ட 20-25 நாட்கள் ஆகுமாம் மீண்டும் இயந்திரங்களும், ஆக்கச்செலுத்தலும்(process control) நடைமுறைக்கு வர. ஒரு ஆண்டுக்கு ஒருமுறை கூட மின்தடை என்பது இல்லாமல் எப்படி அவர்களால் செய்ல்பட முடிகிறது? Biofuel உயிர்கலவையின் மூலம் எரிசக்தி என்பது அவர்களுக்கு எப்படி சாத்தியமாகிறது? நம்மால் ஏன் அதை நடைமுறைக்கு கொண்டுவர இயலாது? கொண்டுவர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?? மதன் அடுக்கிக் கொண்டே போனார்.

இடையில், நாமும் நம்பங்குக்கு சிலதைப் பகர்ந்து கொண்டோம். சைப்ரசு மற்றும் வடகரோலைனாவில், சூரிய எரிசக்தி தயாரிக்கப்படுவதைப் பகர்ந்தோம். கற்றைத்தகடுகள் வடிவமைப்பு மற்றும் கல்நெய்யுடன் கூடிய சூரிய எரிசக்தி, மின்கல எரிசக்தியுடன் கூடிய கல்நெய் எரிசக்தி முதலானவற்றின் சாதக, பாதங்களைக் குறிப்பிட, வினாக்களால் துளைத்தெடுத்தார்கள் இருவரும்.

அடுத்து வந்த அருண் போட்டாரே ஒரு போடு! ஆடிப் போய்விட்டேன் நான். மனித எச்சங்களில் இருந்து கிடைக்கும் எரிசக்தி பரவலாகப் பாவிக்கப்படுகிறது நம்நாட்டில். அதன் சாதக பாதகங்கள் இன்னவை என அடுக்கினார். அதைத் தொடர்ந்து, கோழிப்பண்ணையில் இருந்து கிடைக்கும் எச்சங்களின் பய்ன்பாடு பற்றிச் சொல்ல, நாம் இனி அமைதியாகக் கேட்டுக் கொள்வதே உசிதம் என வாளாதிருந்தோம்.

அப்படியாக நினைத்திருந்த தருணம், விமானத்தில் இருந்தோர் அனைவரும் கீழே இறங்கி விட்டுப் போயிருத்தனர். “அட, அதுக்குள்ள ஊர் வந்துருச்சுங்களா? உங்க ரெண்டு பேர்த்து கூடவமு பேசுனதுல, ஊர் வந்ததே தெரில போங்க தம்பி” எனச் சொல்லி விடைபெற்றோம்.

இந்த இரு இளைஞர்களிடத்தும் நாம் கண்டவை இவைதான். யார் மீதும், குற்றம்குறை கூறவில்லை. மாறாக, இருக்கும் சவால்களை ஆராய்கிறார்கள். அதற்கான மாற்றுத் தேடி அலைகிறார்கள். மனிதநேயம் போற்றுகிறார்கள். தாயகம் வெல்லப் போவது இவர்களாலன்றோ?! இவ்வேளையில்தான் நமக்குத் தெரிந்த நாலடிகளில் ஈரடி நினைவுக்கு வந்தது; பெருநடை தாம்பெறினும் பெற்றிப் பிழையாது ஒருநடையராகுவர் சான்றோர்!!

11 comments:

Unknown said...

Positive and inspiring experience of yours.

தாராபுரத்தான் said...

தாயகப்பயணத்திலும் ஒரு அகப்பயணம்..அதுசரி..வாங்க..வாங்க..

ஓலை said...

ஊரு போய் சேர்ந்தது சந்தோசமுங்க. ஏனுங்க என்னிக்குமே மண்ணின் மைந்தர்கள் கொஞ்சம் அதிகமே அறிந்து உள்ளனர் என்பதற்கு இது இன்னொரு உதாரணமுங்க.

vasu balaji said...

வாங்க வாங்க:) காப்பிக்கடை அம்முணி பாவம்:(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிறப்பான பயணமாக இருந்திருக்கும் போல..

திருப்பூர்க்காரங்க கூட நடந்த உரையாடல் சிறப்பு..

Unknown said...

உரையாடல் சிறப்பு..

இராஜராஜேஸ்வரி said...

ஆக்கப்பூர்வமான பயண உரையாடல்.
முத்தாய்ப்பான மொழிகள், அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஆக்கப்பூர்வமான பயண உரையாடல்.
முத்தாய்ப்பான மொழிகள், அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

ராஜ நடராஜன் said...

ஊருக்குப் போயிட்டீங்களா?அனுபவிங்க!

தாறுமாறு said...

இதெல்லாம் சரிதான். ஆனால் இவ்வளவு விவரமாக பேசும் இவர்களுக்கு இத்தனைக் காலம் இந்த சாயக்கழிவு பிரச்சனையால் அங்கு நிலத்தடி நீரும் நொய்யலாறும் வீணாகப் போனதைப் பார்த்தும் ஒரு உருப்படியான சுத்திகரிப்புத் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்து விட்டு இப்போ கோர்ட் ஆப்பு வெச்ச பிறகு விவர ஞானம் பிறக்கிறது? சும்மாவா சொன்னாங்க அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்று?

வடுவூர் குமார் said...

சர்கரை ஆலை விஷயங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை.