2/14/2023

காதல்நாள்

பிணைப்பில் இருக்கும்
பேச்சுமடத்தின்மீது காதல்

பச்சிளங்காற்றைப் புசிக்க
சுமந்துசெல்லும் சைக்கிளின்மீது காதல்

சாளரக்கதவைத் திறந்ததும்
மறுபக்கம்வரும் குருவியின்மீது காதல்

அஞ்சலெடுக்கச் செல்லும் போதெலாம்
அகோ சொல்லும் எதிர்வீட்டுத் தாத்தாவின்மீது காதல்

கணக்குவழக்குகளில் பிழைகள் இருப்பினும்
சகித்துத்திருத்திக் கொள்ளும் அட்மின்பாட்டிமீது காதல்

மூன்றுதிங்களுக்கொருமுறை பல்மராமத்து செயும்
தூய்மைக்கலைஞர் டேவிட்காக்ஸ்மீது காதல்

வீட்டுப்பிறவடையின் புற்தரையினைப் பேணும்
அழகுநர் ஆன்செரகோவின்மீது காதல்

காதலுக்குக் கண்ணில்லை
வீட்டுநாயின் மீது காதல்
அமர்ந்து கதைகள்பல பேசும்
மொட்டப்பாறையின்மீது காதல்

காலைக்காஃபிகுடித்து உட்கார்ந்ததும்
கழிபடுசுகத்தைக் கொடுக்குமந்த பேசின்மீது காதல்

உற்றார்மீது காதல் உறவினர்மீது காதல்
நட்பின்மீது காதல் கேட்பின்மீது காதல்
புல்லின்மீது காதல் பூண்டின்மீது காதல்
மரத்தின்மீது காதல் மனிதனின்மீது காதல்

காதலைப் போற்றுவோம்!
வாழிய காதல்! வாழியநலம்!!

💓💓💓💓💓💓💓💓💓

2/09/2023

Bandwagon Fallacy

நண்பர் அழைத்திருந்தார். ஒரு தமிழ்ப்பள்ளி. செயற்பாட்டில் முன்பின் முரண். தன் கருத்துகளைச் சொல்லி ஆற்றாமையை வெளிப்படுத்தினார். ஆறுதல்களைச் சொல்லி, என் கருத்துகளையும் சொன்னேன். நிலைமை காரசாரமாகி விட்டது.

நண்பர் செயற்குழுவில் இருப்பவர். பல்லாண்டு காலமாகத் தமிழ்ப்பணி செய்து வருபவர். அமைப்பில் சில செயற்பாடுகளைத் தொன்று தொட்டுச் செய்து வருகின்றனர். புதிதாக வந்த சிலர் அவற்றைக் கேள்விக்குள்ளாக்கி விட்டனர். நானும் அதை ஒட்டியே கருத்துச் சொல்லப் போய், அவருக்கு என்மீதும் சினம் கிளர்ந்து விட்டது.

செயற்குழு, பொதுக்குழு, துணைக்குழு, எதுவானாலும் சரி, கொள்கை முடிவுகளில் பெரும்பான்மை எந்தப் பக்கமோ அந்தப் பக்கமாக முடிவு மேற்கொள்வது சரி. ஆனால் அமைப்பின் செயற்பாட்டு விதிகளை, குழுவில் பெரும்பான்மை என்பதற்காகவே அதுதான் சரியென்பது பத்தாம் பசலித்தனம். எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்க வேண்டுமென்பதும் இல்லை. எதிர்ப்பு, மாற்றுக் கருத்து வருகின்றதென்றால், அதுகுறித்த விழைவும் தேடலும் நாடலும் நாம் கொள்ள வேண்டும். தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

வரிவிலக்குப் பெற்ற அமைப்பாக இருக்கும் போது, அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்கள் மிகவும் கண்ணியத்தோடும் கடமையுணர்வோடும் இருந்தாக வேண்டும். ஒன்றிய அரசின் compliance guide (https://www.irs.gov/pub/irs-pdf/p4221pc.pdf), அடுத்து, பதிவு செய்யப்பட்டிருக்கின்ற மாகாணத்தின் நிறுவன அமைப்பு நெறிமுறைகள் இவற்றுக்குத்தான் முன்னுரிமை.

Transparency

Public charities are encouraged to adopt and monitor procedures to ensure that information about their mission, activities, finance and governance is made publicly available.

எந்தக் குடிமகனும் எந்தவொரு இலாபநோக்கற்ற அமைப்பின் எந்தவொரு தகவலையும் அறிந்து கொள்ள முற்படலாம். கூடுமானவரை அவர்களும் பகிர்ந்து கொள்ளலாம். தகவலே கேட்கக் கூடாதென நினைப்பதும், அமைப்பின் பெரும்பான்மை என்ன சொல்கின்றதோ அதுதான் சரியென்பதெல்லாம் கூட்டுக்குழுவாத மேட்டிமைத்தனம். அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. இதற்கும் இவர்களிடம் வினவியவர் ஒரு சக ஆசிரியர்.

Bandwagon Fallacy: The bandwagon fallacy describes believing something is true or acceptable only because it is popular. 

அந்த ஆசிரியர் அப்படி என்ன கேட்டுவிட்டார்? தைப்பொங்கல் கொண்டாடுவது இந்த ஆண்டுக்கு இல்லை என்பது செயற்குழுவின் முடிவு. அந்த முடிவுக்கான கோப்பு கேட்டிருக்கின்றார். அது இவர்களிடத்திலே இல்லை என்பதாக நான் புரிந்து கொண்டேன். அல்லது, இவர் கேட்டு நாம் ஏன் கொடுக்க வேண்டுமென்கின்ற ஒரு போக்கு.

How are minutes approved?

Meeting minutes should be approved by the appropriate body at its next meeting. So, for a board meeting, the board would approve those minutes at its next meeting. For a membership meeting, the membership body would approve the minutes at its next meeting.

The organization should carefully review the meetings to ensure that it is an accurate record of the previous meeting. Make sure that not too much time passes between meetings so that mistakes can be caught.

Do we have to keep copies of minutes?

Yes, your organization must keep copies of all meeting minutes.

https://cullinanelaw.com/nonprofit-board-minutes/

இத்தகைய பிணக்குகளின் அடிப்படை என்ன?

குறுங்குழுவாதமும் வணிகநோக்கமும்தான். வணிகநோக்கத்தைக் கூட சகித்துக் கொண்டு விடலாம். குறுங்குழுவாத மனப்பான்மை என்பது மற்றவருக்குத் தீங்கானது என்பது மட்டுமேயல்ல. அத்தகைய போக்குடையவருக்குத்தான் மிகவும் தீங்கானது. கூட்டமாகச் சென்று குழியில் விழ வேண்டி வரும். Americans usually view every person as self-sufficient individual, and this idea is important to understanding the American value system. 


1/31/2023

திருவாசகம்

 

நண்பர்கள் எங்கிருந்தும் அழைப்பார்கள். எந்த நேரத்திலும் அழைப்பார்கள். தோராயமாகச் சொல்லின், எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக எனச் சொல்லலாம்; அழைப்புக்குச் செவிமடுத்து விடுவேன். வேலைநிமித்தமாக இருந்தாலும் கூட, அழைப்புக்குச் செவிமடுத்து, வேலையாக இருக்கின்றேனெனச் சொல்வதுதான் வாடிக்கை.

பெரும்பாலான நேரங்களில் வேலைபார்த்துக் கொண்டேவும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பேன். இப்படியான பின்னணியில்தாம், அண்மையில் ஓர் அனுபவம்.

நண்பருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுதான். சில நாட்களில் அழைக்காமல் விட்டுவிட்டாலும், நான் அழைத்து விடுவேன். பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்பவர் அவர். சென்றிருக்கின்ற இடத்திலே நலமாக இருக்கின்றாரா என்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால் மனம் சமநிலை கொள்ளும். அவ்வளவுதான்.

தனிப்பட்ட அழைப்பாக இருந்திருந்தால் அவர் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அது ஒரு கூட்டழைப்பு; பலரும் அழைப்பில் இருந்தனர். இப்படிச் சொல்லிவிட்டார், “பழமைபேசி நம்முடன் பேசித் தம் பொழுதைப் போக்கிக் கொள்கின்றார்”. அப்போதைக்கு நான் சிரித்துக் கொண்டேன். ஆனாலும் கூட, நம் மன அகந்தை நம்மை விட்டபாடில்லை. அவர் வெறுமனே நையாண்டிக்குக்கூடச் சொல்லி இருக்கலாம். அறிவுக்குத் தெரிகின்றது. ஆனால் அகந்தை அடங்க மாட்டேனென்கின்றது.

பெரும்பாலான நேரங்களில், கூட்டு அழைப்புகளில் நாம் பேசுவதில்லை. மற்றவர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருப்பதுதாம் நம் வாடிக்கை. அழைப்பு தொய்வடைகின்ற நேரத்திலே அல்லது சுவாரசியம் இழக்கின்ற நேரத்திலே எதையாவது கிள்ளிப் போட்டுவிட்டு மீண்டும் அடங்கிவிடுவது. நாம் நம் வேலையைப் பார்க்கவும் வசதியாக இருக்கும். இப்படியான சூழலிலே, மனம் அடங்க மாட்டேனென்கின்றது.

உண்மையில் சொல்லப் போனால் நமக்கு 24 மணி நேரம் என்பது போதுமானதாக இல்லை. பிழைத்திருப்பதற்கான வேலையில், அதாவது வருமானம் கொடுக்கின்ற வேலையில், உடன் பணி செய்வோர் அயல்நாடுகளில் இருந்து பணி செய்வோரும் உண்டு. ஆகவே இன்ன நேரமென்று இல்லை. பணிநிமித்தம் தகவல் கேட்பார்கள். பேச விரும்புவார்கள். உடனுக்குடனே பேசிவிட்டால், வேலையில் தொய்வு ஏற்படாது.

நமக்கான சமையலை நாமே பார்த்துக் கொள்வதென்பது இன்பகரமாக ஆகிவிட்டது. விருப்பமானதை, விரும்பிய அளவில், விருப்பமான முறையில் உண்டு கொள்ளலாம். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலான பழக்கவழக்கமது. அதனாலே, கடைகளுக்கும் நாமே சென்று நமக்கானதை வாங்கியாக வேண்டும். அதன்நிமித்தம், புதிது புதிதாக பன்னாட்டுத் தாவரப்பொருட்களை வாங்கி முயல்வதிலே ஒரு நாட்டம். எடுத்துக்காட்டாக, சிக்கரிப்பூ என்பது ஆண்டுமுழுமைக்கும் கிடைக்காது. அந்தப் பருவத்தில்மட்டும்தான் கிடைக்கும். இப்படி அந்தத்தந்தப் பருவத்தில் மட்டுமே கிடைப்பவற்றை வாங்கிச் சமைப்பதில் ஒரு சுவை. அம்மா அவர்கள் ஊரிலிருந்து கொடுத்தனுப்பும் நாட்டுக்காய்களில் வற்றல் முதலானவற்றைக் கொண்டு எதையாவது செய்வது, இப்படியாக அதற்கும் நேரம் ஒதுக்கியாக வேண்டும்.

உடற்பயிற்சி என்கின்ற பேரிலே எதையாவது செய்வது. அருகிலே தம்பி ஒருவர் இருக்கின்றார். அவருடன் சேர்ந்து கொண்டு ஊர்நாயம் பேசிக் கொண்டு வீதிகளில் திரிவது. அல்லது நாமகவே ஓடித்திரிவது, சைக்கிள் ஓட்டுவது, பூங்காக்களில் திரிவது, இப்படியாகப் பொழுதுகள் ஒதுக்கியாக வேண்டும்.

அமெரிக்கத் தமிழ் அமைப்புகளிலே எப்போதும் ஏதாகிலும் ஓர் அக்கப்போர் இருந்து கொண்டிருக்கும். அதைப்பற்றிப் பேசியாக வேண்டுமே? இஃகிஃகி. சிரிப்பும் நக்கலும் நையாண்டியுமாக அதற்கும் சில பொழுதுகள் ஒதுக்கப்பட்டாக வேண்டும். உரையாடல் என்பது இடம் பெற்றால்தான், நாம் நம்மை திருத்திக் கொள்ள முடியும். அல்லது திருத்த முடியும். குழந்தைகளிடமிருந்தே அமெரிக்க வாழ்வுமுறை, பண்பாடு போன்றவற்றைக் கற்றுக் கொள்கின்றோம். ஆனால் இந்தத் தமிழ் அமைப்புகள் அவற்றைக் கிஞ்சிற்றும் தத்தம் செயற்பாடுகளிலே இடம்பெறச் செய்வதில்லை. ஆகவே தொடர்ந்து சக நண்பர்களிடத்திலே பேசுவதன் மூலம் கற்றுக் கொள்ளவும் சுட்டிக்காண்பிக்கவும் முடிகின்றது.

அன்றாடம் குறைந்தது ஒருபக்கமாவது நம் எண்ணவோட்டங்களை எழுதிப் பார்க்க வேண்டியதாய் இருக்கின்றது. சிந்தையைக் கசக்கி எழுதத்தலைப்படும் போது, நம்முள்ளே இருக்கின்ற கசடுகள் புலனாகின்றது. அதற்காகவேனும் எழுத வேண்டி இருக்கின்றது. எழுதுகின்ற நேரத்திலே நீரில்லாக் கொடியைப் போலே மனம் அறியாமையின் பொருட்டுத் தத்தளிக்க நேரிடுகின்றது. நாடலுக்கும் தேடலுக்கும் அது வித்திடுகின்றது. நூல்கள், காணொலிகள், ஆவணங்கள் போன்றவற்றுக்காக நேரம் செலவிட்டாக வேண்டும்.

ஊரில் இருப்பவர்களுடன் பேச வேண்டும். பேசி நிலைமையைத் தெரிந்து கொண்டால் அன்றைய நாள் இனிதாய்க் கழியும். அல்லாவிடில் மூளையின் ஏதோ ஓர் ஓரத்தில் அந்த ஓர் நரம்பியலணு குத்திக் கொண்டே இருக்கும். மற்ற மற்ற வேலைகளின் போக்கினைப் பாழ்படுத்தும்.

முன்பெல்லாம் இப்படி இல்லை. வீடு கட்டிக் குடியேறிவிட்டால் இன்பம். காலாகாலத்துக்கும் வீடு நமக்குத் தொண்டாற்றிக் கொண்டு இருக்கும். அஞ்சாது அரவணைப்புடன் உறங்கிக் கிடக்கலாம். தற்காலத்தில் அப்படியன்று. வீட்டுக்கு நாம் தொண்டு செய்தாக வேண்டும். துப்புரவாக வைத்திருப்பதினின்று, வீட்டிலே பூட்டப்பட்டிருக்கின்ற கருவிகளைப் பழுது பார்ப்பது, மாற்றுவது, பேணுவது எனப் பல பணிகளும் இடையறாது இருந்து கொண்டுதான் இருக்கும். அவற்றைப் பங்கு போட்டுக் கொண்டாக வேண்டும். வீட்டுப்பணிகளென்றால் வீட்டுப்பணிகள் மட்டுமேயல்ல. மாதாமாதம் சில பல கட்டணங்கள் கட்டியாக வேண்டும். அவையெல்லாம் கிரமத்தில் இருக்கின்றனவாயெனப் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி வீட்டுக்குள்ளேயும் ஏராள பணிகள் உண்டு.

சில பல குழுக்கள். அமைப்புகள். அவற்றுக்கும் தீனி போட்டாக வேண்டும். ஒரு கை நமக்கு வேலை செய்து கொள்கின்றதென்றால், இன்னொரு கை சமூகத்துக்காக எதையாவது செய்துதானே ஆக வேண்டும்?  ஊரைத் திருத்தி விட முடியுமாயென்றால் முடியாதுதான். ஆனால் நம்மால் பயன் அடைபவர் ஏதோவொருநாள், ஏதோவொருவர் இருக்கத்தானே செய்வர்? அந்த ஒருவருக்காக நாம் தொடர்ந்து இயங்கித்தானே ஆக வேண்டியுள்ளது??

இத்தனைக்கும் மேற்பட்டு பொழுது போக்க வேண்டிய தேவை ஏற்படாது. ஏதோவொன்றின் காரணம், மனவலி, மனச்சோகை. இருக்கவே இருக்கின்றது மணிவாசகரின் திருவாசகம். 13 ஆண்டுகட்கு முன்பு நண்பர் ஆரூரன் அவர்கள் கொடுத்தது. பிரித்து உரக்கப் படிக்கலாம். பாடலாம். பழந்தமிழ்ப் பாடல்களுக்கு இசைப்பயிற்சி தேவையே இல்லை. உரக்கப் பாடுங்கள். கோர்வையாக வராமல் தடுமாற்றம் ஏற்படும். அதற்கொப்ப சொல்லை நீட்டியும் விரைவாக்கிக் குறுக்கியும் பலுக்க முற்படுவோம். பாடலாக அதுவாகவே உருவெடுத்து விடும். தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கலாம். இஃகிஃகி. மனம் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டு அம்மணமாக நிலைகொண்டிருக்கும்.  தமிழ் கற்கலாம். நம் சிந்தனை என்பதையே ஈசனாக உருவகப்படுத்தி, பாடலுக்குக் கீழே கொடுத்திருக்கும் உரையை வாசிக்கும் போது புதுப்புது தத்துவார்த்த எண்ணங்கள் மேலெழும்.  எடுத்துக்காட்டாக,

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!

ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர், உண்மை இன்மை என எல்லாமும் தாமேயெனவும் கருதிக் கொள்பவரைக் கண்டு மனம் கோணாமல் தற்காலிகக் கொண்டாட்டத்தில் இருப்பவரெனக் கருதுகின்ற சிந்தையை நான் வாழ்த்துவனே!!

இப்படியாக, தனியாக ஓர் அறையில் இருந்து படிக்கப் படிக்கப் போதாமை எங்கிருந்து வந்து விடப் போகின்றது?  கருவிகளின் உதவியோடு பலவற்றையும் செய்யத் தலைப்படும் போது போதாமை வரும். நினைத்துப் பாருங்கள். 100 ஆண்டுகட்கு முன்னம், உடற்பயிற்சி செய்தாக வேண்டுமென்கின்ற கட்டாயம் இருந்ததா? இல்லை. ஏதோவொரு வகையில் உழைப்புக்காட்பட்டதாக இருந்தது உடல். பாடுவதைக் கூட ஏனோதானோவெனப் பாடிக்கொள்ளலாம். அந்த ஒலியைக் கருவிக்குள் செலுத்தி எடுத்துவிட்டால் அது தரம்கூட்டப்பட்டதாக ஆகிவிடுகின்றது. பாடும்கலை செத்துப் போகின்றது. கலை செத்துப் போவதுமட்டுமன்று. அந்த இடத்தில் வேறு ஏதோவொரு பிரச்சினை வந்து உட்கார்ந்து கொள்கின்றது. புலன்செய்ப்(conventional methods) பண்புகள் நம்முள் குடிகொண்டிருக்கும் வரையிலும் போதாமைக்கு இடமில்லை.

1/29/2023

கஞ்சாப்பித்து

ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எது கொண்டு மதிப்பிடலாம்? அவருடைய மனநிலையைக் கொண்டு, அவரால் மட்டுமே மதிப்பிட முடியும். எப்படி?

ஒருவரைப் பார்த்து, ’அவருக்குக் கார்கூட இல்லை; அவர் இன்ன வேலைதான் செய்கின்றார்.  அப்படி, இப்படி...’ எனப் பலவாறாக எடைபோடுவது, எடைபோடுபவரின் கண்ணோட்டம்தானேவொழிய, அவரின் வாழ்க்கைத்தரமாக இருந்துவிடாது.

மருத்துவர் அவரைப் பரிசோதித்து, நல அளவீடுகள் எல்லாமும் வரையறைக்குள் இருக்கின்றன. இவரின் வாழ்க்கைத்தரம் நன்று எனச் சான்றிதழ் அளித்துவிட முடியுமா? முடியாது. அவருடைய மனத்துக்குள் என்னமாதிரியான சூழல்நிலவு என்பது மருத்துவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தொடர்புடையவரேயாகிலும், அக்குறிப்பிட்ட வேளையில் மற்றவர்கள், சமூகம் எப்படி அவரைக் கருதுகின்றதென்பதை வைத்து மகிழ்வோ, வருத்தமோ கொண்டு, அதற்கொப்ப தம்நிலைப்பாட்டைச் சொல்வாரேயெனில் அது தற்காலிகமானதாகவே இருக்க முடியும். அடுத்த சிலமணி நேரங்களில் அவரின் இயல்பான நிலை அவரைப் பீடித்துக் கொள்ளும்.

சரி, எப்படித்தான் ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை அளவிடுவது?

அவருக்கு மெய்நலம் நன்றாக இருத்தல் வேண்டும். மெய்நலம் நன்றாக இருந்தால்தான் உளநிலை சமநிலை கொள்ளும். வருத்தங்கள், கவலைகள் இல்லாத நிலை ஏற்படும்.

மெய்நலம் நன்றாக இருக்க, மெய்நலத்தைத் தொடர்ந்து அவர் பேணிக்கொண்டு இருக்க வேண்டும். அப்படிப் பேணுவதற்கான தொடர் ஊக்கம் அவரிடத்திலே இருந்தாக வேண்டும். அத்தகு தொடர் ஊக்கத்திற்கு மனநலம் நன்றாக இருத்தல் வேண்டும். 

இஃகிஃகி, இது கோழியிலிருந்து முட்டையா முட்டையிலிருந்து கோழியா என்பதைப் போன்றது. ஆமாம். உளநலம் மெய்ப்பட மெய்நலம் வாய்க்க வேண்டும். மெய்நலம் வாய்க்க உளநலம் வாய்க்க வேண்டும். 

ஒருவர் தன்னிச்சையாக மனம் திறக்கும் போது, அவர் அவரைப் பற்றியே யோசித்து, மனநிறைவில் எப்படி இருப்பதாக உணர்கின்றாரோ அதுதான் அவரின் வாழ்க்கைத் தரமாக இருக்க முடியும்.

சரி, ஒருவர், தம் வாழ்க்கைத்தரம் ஐம்பது விழுக்காடு என்பதாக உணர்ந்து, அதை மேம்படுத்திக் கொள்ள விரும்புகின்றார். எந்தப் புள்ளியிலிருந்து துவங்குவது?

இந்த என் எண்ணவோட்டத்தை மீண்டும் மீண்டும் படிப்பதில் இருந்து துவங்கலாம். எப்படி? மேற்கொண்டு படிக்கத் தெரியவரும். உடல்நலம், உளநலம், சைக்கிளிக் ரெஃப்ரன்ஸ் (ஒன்றிலிருந்து இன்னொன்று) எனப் பார்த்தோம். ஆனாலும் ஏதோவொரு புள்ளியிலிருந்து மேம்பாட்டைத் துவக்கித்தானே ஆக வேண்டும். ஆக, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, விளையாட்டு, ஏதோவொரு உடற்பயிற்சி, சேர்ந்திசை(பஜனை), கும்மி போன்ற கலைப்பயிற்சியிலிருந்து துவங்கலாம். எடுத்துக்காட்டாக நடைப்பயிற்சி/ஓட்டப்பயிற்சி என வைத்துக் கொள்வோம்.

உடற்பயிற்சி மேற்கொள்வதாலேயே மரணத்தை வென்று விடலாமா? முடியாது. அவர் ஃபிட்னஸ், ஆனாலும் செத்து விட்டாரேயென்கின்றனர் பலர். சாவுக்கான காரணங்கள், மரபணு, சூழல், விபத்து எனப் பலவாகவும் இருக்கலாம். அறிந்தது சிட்டிகையளவு; அறியாதது பெரும் கடலளவு. அவற்றுள் நாம் அறிய முற்படுவது, வாழ்ந்திருக்கும் காலத்தில் மனநிறைவாக, தரத்துடன் இருக்க என்ன செய்யலாமென்பதே!

இயல்பான உங்களின் ஆற்றல் எல்லைக்கு அப்பாற்பட்டு அதில் ஈடுபடும் போது, உடலில் ஆங்காங்கே மெல்லிய வலி தோன்றும். அதுகண்டதும் உடலின் சிலபல இயக்குநீர்கள்(ஹார்மோன்கள்) சுரக்கத் துவங்கும். அதாவது உடல்வலியை மனக்களிப்பால் ஈடுகட்டுவதற்காக. அத்தகைய இயக்குநீரில் முக்கியமானது எண்டோர்ஃபின். உடல் எனும் வேதிக்கூடத்தில் இயக்குநீர்கள் எல்லாமே ஒரு தகவற்சமிக்கைதாம். ஆற்றில் செந்நீர் வந்தவுடன் நாம் மேல்நாட்டில் எங்கோ மழை பெய்திருக்கின்றதெனப் புரிந்து கொள்கின்றோமல்லவா அது போலே. இந்த எண்டோர்ஃபின் வேதிப்பொருளை குருதியாற்றில் கண்டதும், கீழுறுப்புகள் வலியறு நிலை, களிப்புறுநிலை முதலானவற்றுக்கான செயலிகளுக்குத் தகவற்சமிக்கைகளை மேற்கொள்ளும். அவற்றுள்,  எண்டோக்கானபினாய்ட் endocannabinoid எனும் தகவற்சமிக்கையானது மூளையில் களிப்பூக்கப் பித்துநிலையைக் கட்டமைக்கும். இரண்டு மைல்கள் ஓடிவந்து, இளைப்பாரும் நிலையில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள். மிக இலேசாக உணர்வீர்கள்; சிரிப்பு வரும். எதிர்காலம் ஒளிமிகுந்ததாகக் கருதுவீர்கள். இப்படிப் பல உணர்வுகள்.  நடுவே கஞ்சாப்பூ வைத்திருக்க, தேன்கலந்த திணையுருண்டையைத் தின்றால் எழும் களிப்புநிலை ஏற்படும். அந்த மெல்லிய நுண்ணர்வே அடுத்தடுத்த செயற்பாடுகளைச் செய்வதற்கான ஊக்கநிலையையும் மேற்கொள்ளும்.

கடந்தகாலம், எதிர்காலம் சார்ந்த கவலைகள், வருத்தங்கள், ஏமாற்றங்கள் போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட்டுத் தற்காலத்தில் வாழத் தலைப்படுவீர்கள். அடுத்தநாளும் ஓட்டப்பயிற்சிக்கு அது நம்மை இழுத்துச் செல்லும். சிலருக்கு அது போதையாக மாறிவிடுவதும் உண்டு. மனத்தளவில் பெரும்பாலும் துள்ளலாக இருப்பீர்கள். இப்படியாக, வாழ்க்கைத்தரத்திலும் மேம்பாடு நிலைகொள்ளும்.

1/21/2023

விற்பனைநுட்ப நிறுவனங்களும் சீனாவும்

சீனா தன் பொருளாதாரத்தை 1978ஆம் ஆண்டு, பன்னாட்டுப் பொருளாதாரமயமாக்கலுக்கு உட்படுத்துவதாக அறிவித்துக் கொண்டு அதற்கேற்ப தம் நாட்டு பொருளாதாரக் கொள்கைகளைச் சீரமைத்துக் கொண்டது. இருப்பினும், 1995ஆம் ஆண்டு வரையிலும் எதிர்பார்த்த வளர்ச்சியை, முன்னேற்றத்தை அதனால் எட்டமுடியவில்லை. 1978ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 150 பில்லியன் டாலர்களில் துவங்கி, 1995 ஆம் ஆண்டு வெறும் 600 பில்லியன் டாலர்கள் என்பதாக இருந்ததைக் கண்டு ஏமாற்றம் கொண்டது சீனா. அதன்பொருட்டு, கடந்த 15+ ஆண்டுகளில் ஏற்பட்ட தாக்கங்களை மீளாவு செய்து கொள்ளத்தலைப்பட்டது.

கொள்கை அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி, சட்டதிட்டங்களைக் கடுமையாக்கிக் கொண்டது. அதன்படி டெக் கம்பெனிகளைக் கூடுமானவறை முடக்கிக் கொள்வதென்பதாகி விட்டது. இங்கே டெக் கம்பெனிகள் என்றால், எல்லாத் தொழில்நுட்பம் சார்ந்த அல்லது மென்பொருள்/கணினி சார்ந்த நிறுவனங்கள் எனப் பொருள் கொள்ளலாகாது. குறிப்பிட்ட தளத்தில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களென்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். அவை எத்தகைய நிறுவனங்கள்?

பொருட்களின் விற்பனையை நாட்டுமக்களிடம் சூதனமாகத் திணிக்கும் நிறுவனங்களெல்லாமும் இத்தகு நிறுவனங்களெனக் கருதியது சீனா. எடுத்துக்காட்டாக, அலிபாபா, Google, Facebook, Tencent, DiDi, Meituan போன்றவை. என்ன காரணம்?

உற்பத்தித்திறன், தரம், உலகளாவிய விற்பனை போன்றவற்றுக்கான கவனம் என்பது, உள்நாட்டு விற்பனை, பணம், இலாபம் என்பதான அடிப்படையில் சொந்தநாட்டு மக்களையே சுரண்டுவதும் ஒருசாரார் மட்டுமே இலாபம் அடைவதுமாகக் கொண்டு, மற்ற மற்ற துறைகள் எல்லாம் முடங்கிப் போகும் என்பதுதான் காரணம். மென்பொருள், மறைபொருளாக விளங்குகின்ற அல்கோரிதங்கள், விளம்பர யுக்திகள், சோசியல் மீடியா போன்ற கன்சூமரிசத்தைப் பெருக்குகின்ற கருவிகள் போன்றவற்றுக்கு கடுமையான நெறிமுறைகள்(ரெகுலேசன்) வகுக்கப்பட்டு செயற்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. நாட்டுக்குள் அடியெடுத்து வைக்கின்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அவை பொருந்தக் கூடியதாக இருந்தன. ஆகவே, தொழில்முனைவோர் எல்லாம் தளபாட உற்பத்திக்குத் தள்ளப்பட்டார்கள். கணினிக்குத் தேவையான மின்னணுக் கருவிகள், மருத்துவக்கூட நவீனக் கருவிகள், மற்ற மற்ற மின்னணு சாதனங்கள் இப்படியாக.

விளைவு, நாட்டின் உற்பத்தித்திறன் வேகமெடுத்தது. 1995ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர்கள் என இருந்த உற்பத்தித்திறன் 2022ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 8250 பில்லியன் டாலர்கள் என்பதாக இருக்கின்றது. இப்படியான டெக்நிறுவனங்களுக்கு எதிரான கிடுக்கிப் பிடிகளைக் கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் கடுமையாக்கிக் கொண்டது சீனா. அதனால் பொருளாதாரத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டன. அவை தற்காலிகமானவை; தொலைநோக்குப் பார்வையில் கடந்த இருபதாண்டு கால வளர்ச்சியைப் போலவே இதுவும் மேம்பாட்டையே தருமென்பது அரசின் கொள்கையாக இருக்கின்றது. விளம்பர யுக்திகள் எனும் போது, பொய், புரட்டு, மிகைபடக் கூறல், குன்றக்கூறல், மறைத்துக்கூறல், புனவுபடக் கூறல், செயற்கையாக அழகூட்டிக் கூறல் என எல்லாமும் உள்ளடக்கம்தானே? அவற்றுக்குக் கடிவாளம் இட்டுக் கொள்கின்றது. மேலும், தம் குடிமக்களின் தகவலைத் தனியார் நிறுவனங்கள் கொண்டிருப்பது தம் மக்களுக்கு எதிரானதென்றும் கருதுகின்றது சீனா.

சோசியல் மீடியாவில் வெகுமுனைப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலமும் உண்டு. 2017ஆம் ஆண்டு வாக்கில் குறைத்துக் கொண்டேன். காரணம், நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக எவரோ வழிநடத்திச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டதுதான் காரணம். அத்தகு கட்டமைப்புகள் நம்மைப் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றன. அதனைப் பயன்படுத்தி வணிகம் வளர்த்துக் கொள்ள தனிமனித விற்பன்னர்கள். இவர்களின் இலக்கு சாமான்யர்களான நுகர்வோர். எது சரி, தவறு என்பதையெல்லாம் சிந்தித்தறியாதபடிக்கு உள்வாங்குதிறன் கூட்டப்பட்டுவிடுகின்றது. ஆள்பிடிக்கும் களமாக உருவெடுத்திருக்கின்றன இவை. விளைவு, விழுமியம், அறம் போன்றவற்றில் தொய்வு.

சோசியல் மீடியாவில் குறிப்பிட்ட பங்குகளைப் பெருமைப்படுத்திப் பேசி சாமான்யர்கள் பெருத்த பொருள் இழப்புக்கு ஆட்பட்டதாகச் சொல்லி, நடவடிக்கை மேற்கொண்டதாகப் பல செய்திகள். SEC Charges Eight Social Media Influencers in $100 Million Stock Manipulation Scheme Promoted on Discord and Twitter. Cary man pitched real estate deals to defraud people in the Indian community, prosecutors say. இப்படியெல்லாம் செய்திகள் காணக்கிடைக்கின்றன. இந்த நேரத்தில்தாம் நம் கடந்தகால அனுபவங்களைத் திரும்பப் பார்க்கின்றோம்.

சகமனிதர்கள், ஒத்த விருப்பங்கள், ஒத்த கலை இலக்கியம் போன்றவற்றுக்காக மக்கள் தாமாக வந்து அமைப்புகளிலே குழுமினார்கள். தற்போதெல்லாம் இலவச உணவு, விருதுகள், பரிசுகள், அது, இது என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படுகின்றது. எதற்காக? விருந்தோம்பல் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் விளம்பரப்படுத்துவது எதற்காக?  தனிமனிதர்களுக்கும் விளம்பரங்கள் இடம் பெறுகின்றன. விளம்பரம் என்று வந்து விட்டாலே, அங்கு பொய்யும் புரட்டும் நூதனமான திணிப்பும் இடம் பெறத்தானே செய்யும்? சீனாவின் கொள்கையில் இருக்கும் தத்துவார்த்த உண்மை ஏதோவொன்றை நமக்குச் சுட்டிக் காண்பிக்கின்றதுதானே?

References:

How China Destroying Its Tech Companies is Actually a Smart Move https://youtu.be/-lW1M8lLZbo

Cary man pitched real estate deals to defraud people https://www.bizjournals.com/triangle/news/2023/01/17/ponzi-scheme-cary-town-of-chapel-hill-employee.html

SEC Charges Eight Social Media Influencers https://www.sec.gov/news/press-release/2022-221


1/19/2023

இளம்பிராயம்

அடிக்கடி எதிர்கொள்ளும் வினா இது. எப்படி சிற்சிறு நுண்ணியமான பற்றியங்களையெல்லாம் நினைவில் வைத்திருந்து சொல்ல முடிகின்றது? நேரிடையாக இதுதான் விடையென ஒன்றைச் சொல்லிவிட முடியாது. பரந்த பார்வையில்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது. கூடவே அறிவியற்பூர்வமான அணுகுமுறையும்.

In people, for example, researchers have found that having a greater density of dopamine receptors in the hippocampus results in better episodic memory. The Genetics of Why Some People Remember Events Better than Others as They Age: https://www.cogneurosociety.org/memorygenetics_papenberg/

நினைவேக்க அணுக்களின் அடர்த்தி காரணமென்கின்றது அறிவியற்கட்டுரை. சரி, அத்தகைய நினைவேக்க அணுக்களை எப்படிப் பெருக்கிக் கொள்வது?

சமூகமும் பெற்றோர்களும்தான் உயிர்ப்புள்ள சூழலைக் குழந்தைகளுக்கு அமைத்துத்தர வேண்டும். எடுத்துக்காட்டாக, நாங்கலெல்லாம் ஊராரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். அம்மா, அப்பா வளர்ப்பில் மட்டுமே வளர்ந்தவர்கள் அல்லர். பாட்டி, சின்னம்மா, பெரியம்மா, அத்தை, பக்கத்து வீட்டு அக்கா, ஹவுஸ் ஓனர், வேலைக்காக வருபவர்கள் இப்படிப் பல தரப்பின் மேற்பார்வையில். அப்படியான பலரும் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வர். ஒரே இடம், ஒரே மனிதர்கள், ஒரே பண்பாடு என்பதில்லை. குழந்தைகளுக்கு பன்மைத்துவம் அமைகின்றது. ஒப்பீட்டளவில் உள்வாங்குவதன் அளவு அதிகம்.

பாட்டி ஊரில் ஒரு விநாயகர் கோயில். அதையொட்டியே ஒரு பிறவடை. அந்தப் பிறவடைக்கு அப்பாலே ஒரு சேந்து கிணறு(பொதுக்கிணறு). மாலை வேளையில் எஞ்சோட்டுப் பையன்களெல்லாம் கூடிக் குலாவிக் கொண்டிருப்பர். கோயிலுக்குள்ளேயே ஒரு வேம்புமரம். அந்த மரத்துக்கடியில் ஒரு மடப்பள்ளி. மடப்பள்ளிக்கு ஒரு மரக்கதவு. அதைத் திறந்தவுடனே அந்த இடத்துக்கேவுரிய மணம்; கற்பூரமும் பச்சரிசியும் கலந்ததொரு மணம். கதவடிக்கு வந்ததுமே வேம்புமரத்தின் வாடை. மரநிழலைக் கடந்தவுடன் சுண்ணாம்பு வாடை. ஒரு அடி கோவிலுக்குள் வைத்தவுடன், பிசுபிசுத்துப் போன அந்த எண்ணெய் வாசம். அய்யோ அவன் வந்துருவானேயென ஓடுகையில், பிறவடையெங்கும் முளைத்துக் கிடக்கின்ற தும்பைச்செடியின்(பட்டாம்பூச்சிச் செடி) வாசம். கிணற்றடி வந்து விடும். ஈரத்தில் நனைந்து கிடக்கும் அந்த சேந்து கயிற்றின் வாசம். கைப்பிடிச் சுவருக்கு மேலே எத்தனித்துக் குனிகையில், கைப்பிடிச் சுவரில் ஆங்காங்கே இருக்கும் சிட்டுக்குருவிகளின் பீ மணம். ஆழப்பார்க்கையில் நீரின்வாசம். இவையெல்லாமுமே அந்தச் சிறுவனின் மூளையில் பதிகின்றது. இப்படியாக, ஒரு பிள்ளை வெவ்வேறான புலனனுபவங்களை பெற்றுக் கொண்டே இருக்கும் போது, அந்த மூளைபூமி வளம் பெற்றதாய் ஆகிவிடுகின்றது. களிப்பூட்டு அணுக்களின் அடர்த்தியும் செறிவடைகின்றது.

மாறாக இப்படி எண்ணிப் பாருங்கள். ஆறு மணிக்கு எழுந்த குழந்தை துரித கதியில் புறப்பட்டு, வண்டியேறி பள்ளிக்குப் போய், மீண்டும் வீட்டுக்கு வந்து, வீட்டுப்பாடங்கள் செய்து, மனப்பாடம், மனப்பாடம், மனப்பாடம் செய்து, டிவியிலோ செல்போனிலோ கொஞ்ச நேரம் மூளையைக் கசக்கி விட்டுத் தூங்கி எழுந்து, மீண்டும் துரிதகதியில் புறப்பட்டு. விடுமுறை வருகின்றது; பாட்டிக்கும் தாத்தாவுக்கும் ஆண்ட்டிக்கும் ஒரு ஹாய் சொல்லியான பின்னர், சிறப்பு வகுப்புகளில் சேர்க்கப்பட்டு, சிறப்புப்பாடங்களை உள்வாங்கி, பணம் பெண்ணுவது எப்படி?, தலைவன் ஆவது எப்படி? பாசறைகளுக்குச் சென்று, பெரியவனாகி, இஃகிஃகி.

Let's give him/her a life!

1/18/2023

விடைநாள்

தத்துவஞானி அரிஸ்டாட்டில் சொன்னதாகப் படிக்கின்றோம். அதையே திரும்பத் திரும்ப பலரும் பலவிதமாய்ச் சொல்லிக் கொண்டேதானிருக்கின்றனர்; இப்போது நானும் அந்தவரிசையில் ஒருவன். Man is a social animal. He can't survive in isolation. மாந்தன் ஒரு சமூகவிலங்கு. அதாவது கூட்டம் கூட்டமாக இருந்து வாழத்தலைப்பட்டவன். அதன்பின்னாலே பரிணாமவியல், சூழலியற்காரணங்களும் உண்டு. முதலாவது இன்னபிற உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பு. அடுத்தது உட்கிடைப் போர். சகமாந்தனின் ஆதிக்கவெறிக்கு ஆளாகிவிடாமல் இருக்க வேண்டுமேயானால் ஏதோவொரு கூட்டத்தில் இருந்து கொண்டால் வசதி. 

நடப்புக்காலத்தில், பொருள்முதல்வாத உலகின் வணிகத்துக்காக புத்தாக்கப் பொருட்கள் தேவைக்கும் மிகுதியாக வந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பாவிக்கவே அவனுக்கு நேரமில்லை. அதையுங்கடந்து, சக மனிதர்களுடன் கூட்டுறவாகக் கொண்டாட்டத்தைக் கடைபிடிக்க அவனுக்குத் தேவையில்லாமற்போய் விட்டது. ஒருகட்டத்தில், சலிப்பும் அலுப்பும் தோன்றுகின்றது. உடனிருந்த கொண்டாட ஆட்களில்லை. பொங்கல்விழா என்பது அப்படியானது அன்று.

சில பல வாரங்களுக்கு முன்பே மட்பாண்டங்கள் வனையப்படுகின்றன. கூடைகள் பின்னப்படுகின்றன. கயிறுகள் திரிக்கப்படுகின்றன. பொங்கலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மஞ்சள், வெல்லம் என எல்லாமும் பார்த்துப் பார்த்து கொள்வனவு செய்யப்படுகின்றன. உற்றார் உறவினரெல்லாம் ஊருக்குள்ளே ஒன்று சேர்கின்றனர். பட்டிகளெல்லாம் ஆர்ப்பரிக்கின்றன. படல்களெல்லாம் பிரித்து வேயப்படுகின்றன. கட்டுத்தாரைகள் புனரமைக்கப்படுகின்றன. சகமனிதர்கள் ஒருவருக்கொருவர் இல்லாததைக் கேட்பதும் இருப்பதைக் கொடுப்பதுமாய் இருக்கின்றனர்.

காப்புக்கட்டி, அவரவர் வீடு, அவரவர் குடும்பம், அவரவர் பட்டி, அவரவர் பொங்கல் என முதல் மூன்று நாட்களும் ஆனபின்னர், கூட்டுவிழாக்கள் கோலோச்சத் துவங்குகின்றன. பட்டி ஆவுடையாருக்குப் பொங்கல் வைத்து வழிபட்ட கட்டாந்தரையிலே கூட்டமாகக் கூடி அமர்ந்திருக்க துவரைமார் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும். அந்த வெளிச்சத்தின் கதகதப்பிலே திட்டமிடல்களும் ஆலோசனைகளும் பரபரக்கும்.

கரட்டுமடத்துக் கரடுகளுக்குப் பின்னாலே கோச்சைகள் நடக்கும். வெட்டாப்புச்சேவல், கட்டுச்சேவலென இரண்டு இரகம். வெட்டாப்புச்சேவலென்றால் எப்போது தண்ணிகாட்ட வேண்டும், முகைச்சலுக்கு என்ன செய்ய வேண்டும், யார் நடவுபோடுவது, நடவுபோடுகையில் எதிராளியிடம் என்னவெல்லாம் கவனிக்க வேண்டும், கட்டுச்சேவலென்றால் கத்தியைக் கட்டும்பகுமானமென்ன, கத்தியிலே மொளகாய் பூசியுடலாமா? இப்படியெல்லாம் பேச்சுகளில் அனலடிக்கும்.

தகர் சண்டையென்றால் சும்மாயில்லை. தகர் என்றால் ஆடு. ஆட்டுக்குக் கொம்புமுளைத்ததுமே பட்டும்படாமல் மேலாக உடைத்து விட வேண்டும். உடைத்துவிட்டதும் அது ஊதிப் பெருக்கும். மீண்டும் மேலாக உடைத்து விட வேண்டும். அது மீண்டும் பருத்துப் பெருக்கும். பொங்கல் வருவதற்குள்ளே இப்படியாக நான்கைந்து முறையாவது செய்து விட்டால்தான் அது கெட்டிப்படும். ஆடு பெருத்தும் போய்விடக் கூடாது; இளைத்தும் போய்விடக் கூடாது. மந்திராலோசனைகள் கொடிகட்டிப் பறக்கும்.

ரேக்ளாரேஸ் என்றால் வெறுமனே காளைகளைக் கட்டிப் பரிபாலனம் செய்வது மட்டுமேயன்று. வண்டியையும் பராமரிக்க வேண்டும். ஓட்டுகின்ற மனுசனும் வாகாய் உடம்பை வைத்துக் கொள்ள வேண்டும். வாலை எப்போது பிடிக்க வேண்டும், கயிற்றை எப்போது விட வேண்டும், சுண்ட வேண்டுமென்பதில் இருக்கின்றது ஓட்டுதாரியின் நுட்பம்.  இதெல்லாமுமே கூட்டுப்பணிதாம், கூட்டுறவுதாம். தனியாட்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. இப்படித்தான் சமூகத்திலே பிடிப்பும் கூட்டுறவும் நட்பும், தகைசால் மாண்பும் நிலைபெற்றது.

பாரி வேட்டை (முயல், காடை, கவுதாரி, முள்ளெலி, வெள்ளெலி) நடக்கும். எந்த மண்ணிலே, எந்த வங்கில் முயல் இருக்குமென்பது வேட்டையாளிக்குத்தான் தெரியும். அவனோடு இருந்துதான் மற்றவர் நுட்பம் பழகியாக வேண்டும். எந்தப் புதரில் எது இருக்குமென்பதும் அப்படியே. இவையெல்லாமுமே வழிவழியாய் அமையப்பெற்ற அறிவுக்கொடை, அனுபவக்கொடை. கூட்டியக்கமாய் செயற்பட்டால்தான் சாத்தியம்.

கூட்டியக்கத்துக்கு அவ்வப்போது புத்துணர்வும் ஊக்கமும் ஊட்டியாக வேண்டும். ஆங்காங்கே அதற்கேயான தந்தனத்தான்கள் உண்டு. அவர்களின் வாய் வருசம் முன்னூத்தி அறுவத்தி ஐந்து நாட்களும் தந்தனத்தன, தந்தனத்தனவென்று முணுமுணுத்துக் கொண்டே ஏதோவொரு பாடலைப் பாடிக்கொண்டேதான் இருப்பர். அவர்களுக்கு வேறுவேலை வெட்டி இருக்காது. அதனாலே அவர்கள் எள்ளிநகையாடப்பட்டனர். ஆனாலும் தைமாதம் வந்துவிட்டாலோ அவர்களின் இராஜ்ஜியத்தில் உய்யலாலா. அவர்களுக்கு வெகுகிராக்கியாய் இருக்கும். அவனைப் பார்க்கப் பார்க்க மற்றவர்காதுகளில் புகை. இப்படியாகப் பாடி தங்கள் ஆற்றாமையைத் தணித்துக் கொள்வர்:


எல்லாரும் கட்டும் வேட்டி
ஏழைக்கேத்த சாய வேட்டி! ஆனா,
தந்தனத்தான் கட்டும் வேட்டி
சரியான சரிகை வேட்டி!!

எல்லாரும் போடும் சட்டை
ஏழைக்கேத்த நாட்டுச்சட்டை! ஆனா,
தந்தனத்தான் போடும் சட்டை
சரியான பட்டுச் சட்டை!!

எல்லோரும் கட்டும் பொண்ணு
ஏழைக்கேத்த கருத்த பொண்ணு! ஆனா
தந்தனத்தான் கட்டும் பொண்ணு
சரியான செவத்த பொண்ணு!!

தந்தனத்தானுக்கு எல்லாமும் எளிதில் கிட்டும். இப்படியும் ஒரு பாட்டு உண்டு.

தந்தனத்தான் தோப்புல
தயிர் விக்கிற பொம்பள
தயிர்போனா மயிர்போச்சு
தங்கமடி நீயுங்கிட்ட வாடி!

இப்படியெல்லாம் தை நான்காவது, ஐந்தாவது நாட்கள் கூட்டுறவிலும் பல்விதமான செயற்பாட்டுப் பணிகளிலும் கரைபுரண்டு கிடக்கும் சமூகம். ஆவுடையப்பனுக்கு விளக்கேற்ற மாவிளக்குகள். அந்த மாவிளக்குகளுக்காகச் செய்யப்படுவதுதான் பச்சமாவும் தினைமாவும். அதையே விளக்குமாவு என்றுஞ்சொல்வர். நெல்லரிசி அல்லது தினையரிசியை நன்றாக இடித்து வெல்லஞ்சேர்த்து, தேன்சேர்த்துச் செய்யப்படும் மாவு. கூடவே அரிசி முறுக்கு, இராகி வடை. இதெல்லாம் தின்று ஆனதும், கரிநாள். கிடாவெட்டுகளும் வேட்டையாடிக் கொண்டு வந்ததுமாய் உண்டாட்டுகளில் ஊரும் ஊர்சார்ந்தகாடும் பரபரத்துக் கிடக்கும்.

எதற்கும் ஒரு முடிவு என்பது உண்டுதானே? உற்றார் உறவினரெல்லாம் மிஞ்சியதைக் கட்டத் துவங்குவர். மனம் கனத்துப் போகும். விடைநாள்! அதாவது விடை பெற்றுக் கொள்ளும் நாள்!!

காரிமயிலக்காளை பொன்னுப்பூங்குயிலே
கட்டினேண்டி வண்டியிலே பொன்னுப்பூங்குயிலே
பாதை கிடுங்ககிடுங்க பொன்னுப்பூங்குயிலே
போயிவாரேன் புங்கமுத்தூரு பொன்னுப்பூங்குயிலே

பண்ணையம் பார்க்க விடைபெற்றுப் புறப்படுகின்றான் கந்தசாமி! நாமும் பொங்கற்திருவிழாவினின்று விடைபெற்றுக் கொள்கின்றோம்!! 💓🌷🌷🌹