4/07/2023

We The People

 

அமெரிக்கா

உலகின் முதன்மை நாடாகக் கருதப்படுவது அமெரிக்கா. நாட்டின் மீது பல விமர்சனங்கள் தொடர்ந்து தொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அந்த நாட்டின் விழுமியங்களை, அரசியல் சாசனத்தை, தொடர்ந்து முதன்மை நாடாக இருந்து வருவதன் அடிப்படையைப் பெரும்பாலும் எவரும் கருத்தில் கொள்வதே இல்லை.

மக்களின் பேச்சுரிமை, கருத்துரிமை என்பதுதான் அச்சாணி. அரசின் நெஞ்சுத்துடிப்பென எழுதப்பட்டிருப்பது, “We The People".

1787ஆம் ஆண்டு எழுதப்பட்டது அரசியல் சாசனம். வரையறுப்பதன் முதற்கட்டங்களில் இடம் பெற்றவர்கள் மாணவர்கள். அடுத்த கட்டமாக இடம் பெற்றவர்கள் தோராயமாக 40 வயதுக்குட்பட்டவர்கள். விர்ஜீனியா திட்டம் முன்வைக்கப்பட்டது. மாற்றாக நியுஜெர்சி திட்டம் முன்வைக்கப்பட்டது. விர்ஜீனியா திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. விர்ஜீனியா திட்டத்தின் முதன்மையாளரான ஜேம்ஸ் மேடிசனின் வயது அப்போது 30+. கடைசி கட்டப் பணிகளில் பங்காற்றியவர்களின் சராசரி வயது 42. ஜோநாதன் டேட்டன் என்பார் 26 வயதுடையவர்.  பெஞ்சமின் பிராங்ளினின் வயது 81.

மார்ச் 26, 2023 அன்று டென்னசி மாகாணத்தின் பள்ளியொன்றில் துப்பாக்கிச்சூடு இடம் பெற்று, ஆறு பேர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். அதன் நிமித்தம், துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டுமெனச் சொல்லி மக்கள் போராடுகின்றனர். மாகாண அவைக்குள்ளும் கொந்தளிப்புகள் இடம் பெறுகின்றன. அவையின் மாண்புக்குப் பெருமளவில் குந்தகம் விளைவித்ததாகச் சொல்லி மூன்று டெமாக்ரட் உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய அவை முற்படுகின்றது. ஏப்ரல் 6, 2023 அன்று இரண்டு பேர் தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து அடுத்த பொதுத்தேர்தலுக்கான இடைவெளி ஓராண்டுக்கும் மேலாக இருந்தால், சிறப்புத் தேர்தல் இடம் பெற்றாக வேண்டும். அந்த சிறப்புத் தேர்தல் இடம் பெறும் வரையிலும் அந்தந்தப் பகுதிகளுக்கான மாகாண அவை உறுப்பினராகப் பணிபுரிய, அந்தந்தப் பகுதி உள்ளூராட்சி மன்றங்களால் தற்காலிக உறுப்பின்ர் நியமிக்கப்படுவார். இந்த இரண்டு பகுதிகளுக்கும், தகுதி இழப்புச் செய்தவர்களையே மீண்டும் நியமிக்கப் போவதாக உள்ளூராட்சிகள் அறிவித்து இருக்கின்றன. ஆக, இவர்கள் மீண்டும் அவைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.

தகுதி இழப்புச் செய்யப்பட்டவர்கள் மீண்டும் நியமனம் செய்யப்பட்டாலோ, தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்தாலோ, அவர்களை மீண்டும் ஒருமுறை, அதே காரணத்துக்காய் வாழ்நாள் முழுமைக்கும் தகுதி இழப்புச் செய்ய முடியாதென்பது அரசியல் சாசனம். Constitution says members can be expelled for disorderly behavior with a two-thirds majority vote, they cannot be expelled “a second time for the same offense.”

இவையெல்லாம் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? ஒருவரின் போராட்ட உணர்வு மதிக்கப்பட வேண்டும். பெரும்பான்மை என்பதாலேயே எதையும் முடக்கிவிடக் கூடாது. அப்படியான நிலை ஓங்குமானால் மக்களாட்சி, “We The People" என்பது அடிபட்டுப் போகும் என்பதுதான்.

தமிழ் அமைப்புகளில் இருப்போர் இத்தகைய அமெரிக்க விழுமியங்களைக் கற்றுணர முன்வர வேண்டும். குழுவாத வெறிகொண்டு அலையக் கூடாது. அல்லாவிடில், படிப்படியாக அது பெரும் தீங்காய் முடியும். எப்படி? இனவாதிகளும் தீவிரவாதம் தழுவியவர்களும் சொல்லி வருவது இதைத்தான், “குடிவரவாளர்களால் நாட்டின் இறையாண்மை, பண்பாடு சீர்குலைந்து வருகின்றது. ஆகவே இன்னாருக்கு வாக்களிக்க வேண்டும்” போன்றவையெல்லாம் அவர்களின் வாதங்கள். அதற்கு வலுச்சேர்க்கும்படியாக குடிவரவாளர்களும் செயற்படும்போது அது அவர்களின் கருத்துக்கு வலுச்சேர்க்கவே செய்யும்.



No comments: