4/12/2023

your weakness is my strength


பொருளியல் உலகில் இந்தக் கூறு ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. அதாவது, உன் வலுவீனமே என் வலு. எப்படி?

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு. பிள்ளையை ’புவனா கோச்சிங் செண்ட்டர்’ அனுப்ப வேண்டுமெனக் கோரிக்கை. அவர்கள் அனுப்புகின்றார்கள், இவர்கள் அனுப்புகின்றார்கள், அப்படி, இப்படி எனப் பீடிகை. நம் கேள்வி, ’தெரியாததைத் தெரியப்படுத்தும் வகுப்பா? அல்லது, வினாக்களை எப்படி எதிர்கொள்வதெனும் பயிற்சியா?’. உடனடி விடை, ‘இரண்டும்தான்’. ’அப்படியானால் அனுப்பத் தேவை இல்லை’, நம் பதில்.

வீடு இரண்டாகி அல்லோகலப்பட்டு விட்டது. அவர்கள் பிள்ளை விடிய விடியப் படிக்கிறாள். அது ரொம்ப முக்கியம். அல்லாவிடில் நல்ல பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. நான் வேண்டுமானால் என் அம்மாவிடம் பணம் வாங்கிச் செலவு செய்கின்றேன். அதறா புதறா. கண்ணீரும் கம்பலையுமாய்!

தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கு இன்னமும் 10ஆம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. நம் பிள்ளை முதற்பத்து பதினைந்து இடங்களுக்குள் வருபவர். அது போக, பயிற்சிக்கான வளங்கள் ஏராளமானவை இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அப்படி இருக்க, வாராவாரம் போக ஒருமணி நேரம், வர ஒருமணி நேரம், வகுப்பு ஒன்னரை மணி நேரம், ஆக மொத்தம் மூன்றரை மணி நேரம், பிளஸ் ஐயாயிரத்திலிருந்து பத்தாயிரம் டாலர்கள் வரை பணச்செலவும். எதற்கு? பணத்தைக் காட்டிலும், பிள்ளையின் நேரவிரயம், அழைத்துச் சென்றுவர நம் நேரவிரயம். இத்தனையையும் கடந்து, கொள்கை அளவில் முரண்பாடான செயலைச் செய்கின்றோமேயெனும் குற்றவுணர்வுடன் வதைபட்டாக வேண்டும். ஆகவே, நோ!!

பதினோராம் வகுப்பில் பள்ளியிலேயே கட்டணமின்றி தேர்வு நடத்தப்படுகின்றது. அதில் கிடைத்த மதிப்பெண்களே போதுமானது. என்றாலும், கூடுதலாக்கிக் கொள்ளும் நப்பாசையில், குறைவாக மதிப்பெண் பெற்ற பாடங்களில் மேம்படுத்திக் கொள்ள, ஒரு மணிக்கு எண்பது டாலர்கள் வீதம் ஐந்து வகுப்புகளைப் பிறிதொரு பயிற்சி நிலையத்தில் கொள்வனவு செய்தாகிற்று. அதன்பின்னர் ஒருநாளில் தேர்வு. 36க்கு 35 மதிப்பெண்கள். மகிழ்ச்சி. அடுத்தடுத்த மாதங்களில் அறிவிப்பு. பல்கலைக்கழகங்களின் சேர்க்கைக்கு ACT, SAT தேர்வு மதிப்பெண்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இஃகிஃகி, போச்சா?

scarcity marketing

The fear of missing out can have a powerful effect on us. அதாவது அண்டி இருப்போரைக் கண்டு, அதை அடைவதற்கான வாய்ப்பு நமக்கு இல்லாமலே போய்விடுமோயென்கின்ற பதற்றம், அச்சம், பொச்சாவாமை என்பன நம்மைக் காவுகொண்டு விடும். இந்த வலுவீனம்தான் விற்பனையாளர்களின் வலு. ஐபோனிலிருந்து, கார்களிலிருந்து, எல்லாவற்றிலும் நாமே நம்மைத் தொலைத்துக்கொள்ளும் இடம் இதுதான். எருமைக்குப் புல் பிடுங்கலாம்; பெருமைக்குப் புல் பிடுங்கலாகுமா?

ஏக்கப்பாட்டினைக் கட்டமைத்து விட்டால் போதும். மக்கள் அந்தந்தப் பொருட்களைத் தேடிப் படையெடுப்பர். அதற்கான வழிகளாகச் சிலவற்றை, மார்க்கெட்டிங் உத்திகளாகப் பல்கலைக்கழகங்களிலேயே கற்பிக்கப்படுகின்றன.

1. இது இல்லாவிட்டால் உங்கள் எண்ணம் ஈடேறுவது கடினம் எனக் கட்டமைத்தல் எடுத்துக்காட்டு: கோச்சிங் இல்லாவிடில் மற்றவர்கள் உங்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவர்.
2. இருப்பு விரைவில் தீர்ந்து விடுவதாகக் கட்டமைத்தல், எடுத்துக்காட்டு: இன்னும் 3 பொருட்களே இருப்பில் உள்ளன
3. நுகர்வாளர்களுக்கிடையே போட்டியைக் கட்டமைத்தல். எடுத்துக்காட்டு: இன்னும் 12.5 நிமிடங்களுக்கு மட்டுமே இந்த விலை
4.உடனடிக் கொள்வனவு செய்வோர் முதலில் பயனை அடைந்தவர்களெனும் பெருமையை அடைவர். எடுத்துக்காட்டு: முதல் 100 பேருக்கு 10% விலைக்கழிவு
5. உடனடிக் கொள்வனவு செய்வோருக்கு கூடுதல் பொருள்/சேவை விலையில்லாமல். எடுத்துக்காட்டு: ஃபோன் வாங்கினால் உறை விலையின்றி முதல் ஐந்து நாட்களுக்கு மட்டுமே

இப்படிப் பட்டியல் நீளுகின்றன. இவற்றுக்கு அடிப்படை, எப்படியாகினும் நுகர்வாளரிடத்திலே ஏக்கப்பாட்டினைக் கட்டமைத்துத் துரிதப்படுத்தி விட வேண்டும் என்பதுதான். அப்படியானால் நாம் எதையுமே வாங்கத் தேவை இல்லையா? அப்படியும் இல்லை. தேவைக்கு ஏற்றாற்போல உகந்தவற்றை அதிக விலை கொடுத்தேனும் வாங்கத்தான் வேண்டும். “தேவைக்கு ஏற்றாற்போல” என்பது முக்கியம். இஃகிஃகி. நான் இன்னமும் ஐபோன்-6தான் வைத்திருக்கின்றேன். அதுவே தேவைக்கும் அதிகமானதாக இருக்கின்றது.



No comments: