12/30/2022

2022 கடைசிநாள்

கடைசி நாளை உணர்வுப்பூர்வமாகவும் அணுகலாம். ஆக்கப்பூர்வமாகவும் அணுகலாம். ஆனால் நமக்குத் தேவையானது, உகந்த அளவில் இரண்டுமேயாகும். உணர்வுகளுக்கு உகந்த இடமளிக்காவிட்டால் அது எந்திரத்தனமான வாழ்வாகிப் போகும். அறிவுப்புலத்துக்கு இடமளிக்காமற்போனால் அது ஆக்கப்பூர்வமான மேம்பாட்டுக்கு இடமில்லாமற்செய்து விடும். ஆகவே இரண்டையுமே அவரவர் தேவைக்கொப்பச் செய்து கொள்ள வேண்டியதுதான்.

ஆக்கப்பூர்வமான நோக்கில் நாம் செய்து கொள்ள வேண்டியதென்ன?

-அடுத்த 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை எனவொன்று இருந்தாக வேண்டும். வரவு, செலவு, சேமிப்பு என்பதெல்லாம் வரையறுத்துக் கொள்ள வேண்டியது. பொருளாதாரச் சுணக்கம் வருமென்கின்ற நிலை மேலோங்குகின்ற போது, வருவாய் இழப்பை எதிர்கொள்ளவும் திட்டமிட வேண்டியதாயிருக்கின்றது.

-கடன் இருந்தால், அது அடைபடும் வேகம், வட்டி, இவற்றையெல்லாம் கூர்நோக்கித் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

-குழந்தைகளின் கல்விக்கட்டணம், பயணம் முதலானவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

-சேமிப்பின் வேகம், இருப்பு, அளவு முதலானவற்றைச் சீராய்வு செய்து கொள்ள வேண்டும்.

-ஓய்வூதியக் கணக்கில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இனம் கண்டு திட்டங்களை வகுத்துக் கொள்ளப்பட வேண்டியது. நமக்குப் பின்னான பயனாளர்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

-மருத்துவச் செலவீட்டுச் சிறப்புக் கணக்கில்(healthcare spending account), கடத்துபணத்துக்கும்(ரோல்-ஓவர்) எஞ்சிய பணம் இருப்பின், இரவு 12 மணிக்கு முன்பாக, அப்பணம் கொண்டு அனுமதிக்கப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

-எல்லாக் கணக்குகளின் கடைசிநாள் இருப்பு உள்ளிட்ட விபரங்களைத் தரவிறக்கி ஆவணப்படுத்திக் கொளல். ஒவ்வொன்றிலும் நமக்குப் பிறகான பயனீட்டாளரின் பெயர் பதியப் பெற்றிருத்தல் வேண்டும்.

-கிரடிட் ஸ்கோர் கண்டறிந்து, தேவையற்ற கணக்குகளை முடித்துக் கொளல், ஈட்டுப்புள்ளிகளின் நலத்துக்கேற்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

-காப்பீட்டு(இன்சூரன்ஸ்)த் திட்டங்களை மறுசீராய்வு, திட்டமிடுதல் முதலானவற்றை மேற்கொள்தல்

-மரணம், நலமின்மை என்பது யாருக்கும் எப்போதும் நேரலாம். உயில் என்பது அவசியம். கூடவே வாழ்வியற்தெரிவுகளை வரையறுத்துக் கொள்ளக்கூடிய ஆவணங்களை(லிவ்விங் வில்)ப் புனரமைத்துக் கொள்ள வேண்டும்.

-கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), வாகன ஓட்டுதல், மருத்துவத்துறை உள்ளிட்ட தொழில்சார் உரிமங்கள்(லைசென்ஸ்) புதுப்பிப்பு, வரி செலுத்துநாட்கள், மருத்துவப் பரிசோதனைக்கான நாட்கள் உள்ளிட்ட யாவற்றையும் தத்தம் நிகழ்காட்டியில்(காலெண்டர்) குறித்துக் கொளல்.

-தொடர்பு வளையத்தில்(ஃபோன், சோசியல் மீடியா, மின்னஞ்சல் முதலானவை) இருக்கின்ற தொடர்புகளில் உறுப்பினர்களைச் சேர்த்தலும் நீக்கலுமாகச் சீர்படுத்திக் கொளல்.

-குறிப்பேட்டில்(டைரி) ஆய்வு, திட்டமிடுதல் மேற்கொள்ளலாம்.

-நிழற்படங்கள், காணொலிகள் முதலான ஆவணப்படுத்தலை முறைப்படுத்திக் கொள்ளலாம். சேமிப்பில் வரிசைப்படுத்திக் கொள்ளலாம். முக்கியமான ஆவணங்களின் மின்நகல்களை ஏதோவொரு இணையக்கணக்கில் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் நேரம் பிடிக்கும். ஒதுக்கிச் செய்து கொள்ளத்தான் வேண்டும். இன்று செய்ய முடியாவிட்டாலும் கூட, அதனதற்கான நேரத்தைக் காலண்டரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். Every task, goal, race and year comes to an end, therefore, make it a habit to FINISH STRONG.

உணர்வுப்பூர்மாக அணுகப்பட வேண்டியதும் அவசியம். எப்படி? நடப்பு ஆண்டில் நாம் செய்த தவறுகள், மேம்பாடுகள், இழந்தவை முதலானவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து குறித்துக் கொள்ள வேண்டும். நம்மால் சமூகத்துக்கு விளைந்த நன்மைகள் என்ன? கூர்நோக்க வேண்டும். 

முன்பெல்லாம் அவர்களாகவே சத்தியமங்கலம், கோபி எல்லாம் நல்லா இருக்கும் என்பார்கள். ‘இல்லை, நான், உடுமலை பொள்ளாச்சிக்கு இடைப்பட்ட அந்தியூரைச் சார்ந்தவன்’ என்பேன். இப்போதெல்லாம் அப்படியில்லை. மேம்பட்ட சாலைவசதிகள் ஏற்பட்டுவிட்டதன் காரணமாக, மதுரை, திண்டுக்கல், பழநி எனச் செல்பவர்கள் எல்லாம் எங்கள் ஊர் வழியாகச் செல்கின்றனர். செல்லும் போது, ’அந்தியூர்’ எனும் ஊர்காட்டிப் பலகையைப் படம் பிடித்து எனக்கு அனுப்பி வைக்கின்றனர். வாரம் ஒருமுறையாவது, முன்பின் தெரியாதோர் அப்படி அனுப்பி வைக்கின்றனர். சமையற்குறிப்புகளையும், மரபுசார் விழுமியங்களையும் ‘பொட்டிதட்டிச் சித்தர்’ எனும் பெயரில் (கம்ப்யூட்டர் பொட்டியைத் தட்டுபவன்) அவ்வப்போது எழுதுவது வழக்கம். இன்று பரமத்திக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த அன்பர் அங்கிருக்கும் ’பொட்டிதட்டி’ எனும் ஊர்காட்டிப் பலகையின் படத்தை எனக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். இப்படித்தானே இருக்கும் என் எழுத்துகளில் அறியக் கொடுக்கின்ற சிந்தனைகளும், தகவல்களும்? ஏதோவொரு தாக்கத்தை, வாசிக்கும் எவருக்கோ ஏற்படுத்தும்தானே? அதனைச் சரியாகவும் நேர்மையாகவும் அறத்தோடும் நான் செய்தாக வேண்டும்தானே? அக்கறையோடு சொல்கின்றேன். தமிழ் அமைப்புகளிலே, பொதுத்தளங்களிலே அப்படியான அறம் என்பது வணிகத்தாக்கத்தினால் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. பொய்யும் புரட்டும் தங்குதடையின்றிப் புரள்கின்றன. எங்கு பார்த்தாலும் மாயக்கணக்கு உணர்வுகள் ஊட்டப்படுகின்றன. எதற்காக?? சிந்தனைவயப்படுவோம்! மாற்றம் மனிதத்தை வார்த்தெடுக்கும்!!

The bad news is time flies. The good news is you’re the pilot. 

No comments: