6/07/2022

மேல்நிலை vs ஆழ்நிலை

In shallow communities, status is based on outer appearances. You gain influence by accumulating money, power, and prestige.

In deep communities, status is based on inner character. You earn respect by becoming a person of generosity, integrity, curiosity, and humility. https://twitter.com/AdamMGrant/status/1533815641253216257

இந்த நிலைத்தகவலைப் பலகுழுக்களிலும் பகிர்ந்திருந்தேன். மருத்துவர் ஜெரால்டு அவர்கள், ”இன்னும் கூடுதலாக இதைப் பற்றி எழுதலாமே?” என்று கேட்டிருந்தார்.

”நாம் உதிரிகளாக இருக்கும் போது மட்டுமே விடுதலையின் முழுப்பயனையும் அனுபவிக்க முடியும். தமிழ் வளர்க்கின்றேனெனக் கூடுகின்றனர். குழு மனப்பான்மைக்கு இரையாகிப் போகின்றனர். இலக்கியம் வளர்க்கின்றேனெனக் கூடுகின்றனர். ஆசிரியப் பித்துப் பிடித்தவராய் ஆகின்றனர். ஆன்மீகம் வளர்க்கின்றேனெனக் கூடுகின்றனர். சாமியாருக்கு அடிமை ஆகின்றனர். நாட்டைக் காப்பாற்றுகின்றேனெனக் களமிறங்குகின்றனர். தலைவர்களுக்கு அடிவருடியாகின்றனர். நாம் உதிரிகளாக இருக்கும் போது மட்டுமே விடுதலையின் முழுப்பயனையும் அனுபவிக்க முடியும்.”

ஆடம் அவர்கள் சொல்வதும் இதைத்தான். பணம், அதிகாரம், அந்தஸ்துக்குச் சோரம் போவதுதான் மேல்நிலை மனோபாவம். ஆழ்நிலைப் புரிதல் கொள்ள முயல்பவர்கள், நோக்கம், செயல் குறித்த சிந்தனைக்கே முன்னுரிமை கொடுப்பர். எடுத்துக்காட்டாக நான் கண்டவற்றைச் சொல்கின்றேன்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். அந்த பெண்கலைஞர் கோயமுத்தூருக்கு வந்திருந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து யார் வெளிப்பட்டாலும், எங்கள் கல்லூரி வளாகத்தைக் கடந்துதான் நகருக்குள் சென்றாக வேண்டும். அவரைக் காண அப்படி அலைமோதினர் மக்கள். இதற்கும் அவருடைய வயது அதிகபட்சம் இருபதுதான் இருந்திருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சென்னை தொடர்வண்டியில் அவரைப் பார்த்தேன். பக்கத்து இருக்கையில்தான் அமர்ந்திருந்தார். நலமாயென்று விசாரித்தேன். மிக எளியராகக் காட்சி அளித்தார். பலரும், அவர் யாரெனத் தெரிந்திருந்தும் கண்டும் காணாதது போல இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு ஒரு பெண்கலைஞர் வந்திருந்தார். குறித்த நேரத்துக்கு வந்திருந்து, குறுகிய நேரத்தில் கிளம்பி விட்டதாக நண்பர்கள் கூறினர். மனிதச்சங்கிலிக்கு நடுவே வந்து போனதாகப் பகிரப்பட்ட படங்கள் சொல்லிற்று. நினைத்துக் கொண்டேன். இளமைதானே இத்தனைக்கும் காரணம்? அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து வந்தால் இந்த அமர்க்களம் வாய்க்கப்பெறுவாரா? எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.

எத்தனையோ நல்லவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், உழைப்பாளர்கள் வந்து போகின்றனர்; கேட்பாரற்ற தெருவோரத்து மலர்கள் போலே! இந்த பாரபட்சத்துக்கு யார் காரணம்? அண்மையில் அமெரிக்காவில் ஓர் தேர்தல் இடம் பெற்றது. அமெரிக்காவிலே சட்டம் பயின்றவர், சட்டெனத் துரிதமாய்ச் செயற்படுவதில் எடுத்தியம்புவதில் வல்லவர். முதலில் எனக்கு அவர் யாரெனத் தெரிந்திருக்கவில்லை. அறிமுகம் கிட்டியபின்புதான் கவனிக்கத் தலைப்பட்டேன். என் சிந்தனைகள் அடங்கிய சிறு கோப்பினைப் பகிர்ந்திருந்தேன். ஓரிரு விநாடிகளில் அதனை உள்வாங்கி, உடனுக்குடனே பெருந்திரளான மக்களுக்கு அவர் எடுத்தியம்பிய பாங்கு என்னைப் பெருவியப்பிலாழ்த்தியது. ஆனால் அவர் தேர்தலில் தோற்றுப் போனார். இழப்பு சமூகத்துக்கே!

பொருளின் தரம் பார்க்கப்படுவதில்லை. பொட்டலத்தின் அழகுதானே தீர்மானிக்கின்றன சந்தைக்கான வெற்றிவாய்ப்புகளை? கொந்தளிப்பிலும் பரபரப்பிலுமிருந்து விடுபட்டு, உபரியாக நிற்கும் போது நமக்கான தெளிவு பிறக்கலாம்.


No comments: