பரங்கிமலைத் தாத்தனுக்கு
ஒத்தடம் குடுக்கப் போன இரத்தினமே!
ஒதடு வீங்கி
நொம்பலத்துல வீங்குறயே இரத்தினமே!!
********************
********************
இப்படியெல்லாஞ் சொல்லிக் கூத்தடிப்போம். ஆனால், அதிமுகவின் மீதோ, அதன் தலைவர் மீதோ, ஒருபோதும் மனதில் வெறுப்பு, சினம், கோபம் என்பது வந்தது கிடையாது. மக்களொடு மக்களாக, நாங்களும் போய் புரட்சித் தலைவர் பேச்சைக் கேட்போம். அதே போலப் பேசி நையாண்டி செய்வோம். அதெல்லாம் ஒரு காலம்!
ஆனால் இன்றைக்கு? எப்படி M.G.R அவர்கள் தனக்கென ஒரு நிரந்தர ஓட்டு வங்கியை வைத்திருந்தாரோ, அதேபோல அதிமுகவுக்கு நிரந்தர எதிர்ப்பு வாக்குகளும் அமையப் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே, ஓட்டுகள் பலவிதமாகப் பிரிந்து தேமுதிக முதலான கட்சிகளுக்குப் போய்ச் சேரவும் செய்கிறது. அப்பின்னணியில், 2011 தேர்தலில் அதிமுக எதிர்ப்பு வாக்குகளைக் கொண்டு சேர்க்கும் காரணங்கள் கீழே வருமாறு:
10. ஒரு குறிப்பிட்ட சாதியினர்க்கு மட்டுமே ஆதரவான கட்சி அதிமுக.
9. கடந்த கால ஆட்சியில், சொல்லிக் கொள்ளும்படியான திட்டங்கள் எதுவுமில்லை.
8. திராவிடத்திற்கு ஒவ்வாதவர் அதிமுக பொதுச் செயலாளர் எனும் பிம்பம்.
7.பழிவாங்கும் போக்கினைச் செயல்படுத்தும் கட்சி அதிமுக எனும் கருத்து.
6. நல்லதொரு எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை எனும் ஆதங்கம்.
5. அதிமுக பொதுச் செயலாளர், சிறுபான்மையினருக்கு எதிரானவர் எனும் பிம்பம்.
4. கடந்த காலத்தில், அரசு ஊழியர்களைச் சிறுமைப்படுத்தி விட்டார் எனும் மனப்பான்மை.
3. தலைவர்களைச் சிறையில் அடைத்ததால், அதன்பொருட்டுப் புழுங்கும் பொதுமக்கள்; குறிப்பாக தமிழார்வலர்கள்.
2. அதிமுக பொதுச் செய்லாளர் ஆணவம் பிடித்தவர். தனிமனிதராக, அரவணைத்துச் செல்லும் போக்கு அற்றவர். எனவே அவர் முதல்வராக வரக்கூடாது எனும் பாங்கு.
1. கூட்டணிக் கட்சிகளை அலைக்கழித்துப் பேசியது; தேவையான இடங்களைக் கொடாமல் இறுதி வரையிலும் காத்திருப்பில் வைத்திருந்தமை.
திமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு, அதிமுக ஆதரவு மற்றும் அதிமுக எதிர்ப்பு வாக்குகளுக்கான காரணிகளை எவ்வித விருப்பு வெறுப்புமின்றிப் பார்த்துவிட்டோம். ஏற்கனவே குறிப்பிட்டபடி, வாக்காளர்களில் கட்சி சார்புடையவர்கள் 35% பேர். கட்சி சார்பற்றவர்கள் 65% பேர் எனத் தோராயமாகக் கணக்கிட்டுள்ளோம்.
தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடியால், தேர்தல் வேலைகள் மிகவும் மந்தமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சைக் கேட்க, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கூட்டமும் வரவில்லை. குறிப்பாக, நகர மக்கள் தத்தம் வேலைகளில் மூழ்கிப் போயிருப்பதைக் காண முடிகிறது. இது இப்படியே தொடருமானால், அதிமுக கூட்டணிக்கு மிகப் பெரும் சரிவாகவே முடியும்.
மேலும், திமுக ஆதரவு வாக்குகளுக்கும் அதிமுக ஆதரவு வாக்குகளுக்கும் பெரிதாக ஏற்றத்தாழ்வு இருக்காது. திமுக, அதிமுகவை விடச் சற்றுக் கூடுதலான வாக்குகளைப் பெறும். ஆனால், எதிர்ப்பு வாக்குகளில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது.
நடப்பு ஆட்சியின் மீது ஒரு அதிருப்தி கொண்டிருப்பது மனித இயல்பு. அவ்வகையில், திமுக எதிர்ப்பு வாக்குகள், அதிமுக எதிர்ப்பு வாக்குகளைவிட மிக அதிகம். இதைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், ஜெயலலிதாவின் முதல்நாள் பிரச்சாரம் அமையவில்லை. குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்பதற்கே முன்னுரிமை கொடுத்துப் பேசுகிறார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளப் படம் பிடித்துக் காட்டத் தவறுகிறார். குறிப்பாக, உள்ளூர்ப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவே இல்லை. இது திமுகவுக்கே சாதகமாய் இருக்கும்.
முடிவாக, திமுக எதிர்ப்பு வாக்குகள் என்ன ஆகும் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமைய இருக்கின்றன. கள நிலவரத்தை மீண்டுமொரு இடுகையில் இட்டுச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது,
கோவையிலிருந்து பழமைபேசி!