3/24/2011

2011: அதிமுக தோற்பதற்கான காரணங்கள்

என்னைப் போன்றவர்கள் எல்லாம், அதிமுகவைக் கேலி பேசுவார்கள். அதிமுக உள்ளூர்த் தலைவர்களைக் கிண்டல் செய்வார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பேச்சுகளை நையாண்டி செய்து, ஊர் முழுக்கப் பகடிப் பாட்டுகள் பாடுவார்கள்.

பரங்கிமலைத் தாத்தனுக்கு
ஒத்தடம் குடுக்கப் போன இரத்தினமே!
ஒதடு வீங்கி
நொம்பலத்துல வீங்குறயே இரத்தினமே!!
********************
********************

இப்படியெல்லாஞ் சொல்லிக் கூத்தடிப்போம். ஆனால், அதிமுகவின் மீதோ, அதன் தலைவர் மீதோ, ஒருபோதும் மனதில் வெறுப்பு, சினம், கோபம் என்பது வந்தது கிடையாது. மக்களொடு மக்களாக, நாங்களும் போய் புரட்சித் தலைவர் பேச்சைக் கேட்போம். அதே போலப் பேசி நையாண்டி செய்வோம். அதெல்லாம் ஒரு காலம்!

ஆனால் இன்றைக்கு? எப்படி M.G.R அவர்கள் தனக்கென ஒரு நிரந்தர ஓட்டு வங்கியை வைத்திருந்தாரோ, அதேபோல அதிமுகவுக்கு நிரந்தர எதிர்ப்பு வாக்குகளும் அமையப் பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே, ஓட்டுகள் பலவிதமாகப் பிரிந்து தேமுதிக முதலான கட்சிகளுக்குப் போய்ச் சேரவும் செய்கிறது. அப்பின்னணியில், 2011 தேர்தலில் அதிமுக எதிர்ப்பு வாக்குகளைக் கொண்டு சேர்க்கும் காரணங்கள் கீழே வருமாறு:

10. ஒரு குறிப்பிட்ட சாதியினர்க்கு மட்டுமே ஆதரவான கட்சி அதிமுக.

9. கடந்த கால ஆட்சியில், சொல்லிக் கொள்ளும்படியான திட்டங்கள் எதுவுமில்லை.

8. திராவிடத்திற்கு ஒவ்வாதவர் அதிமுக பொதுச் செயலாளர் எனும் பிம்பம்.

7.பழிவாங்கும் போக்கினைச் செயல்படுத்தும் கட்சி அதிமுக எனும் கருத்து.

6. நல்லதொரு எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை எனும் ஆதங்கம்.

5. அதிமுக பொதுச் செயலாளர், சிறுபான்மையினருக்கு எதிரானவர் எனும் பிம்பம்.

4. கடந்த காலத்தில், அரசு ஊழியர்களைச் சிறுமைப்படுத்தி விட்டார் எனும் மனப்பான்மை.

3. தலைவர்களைச் சிறையில் அடைத்ததால், அதன்பொருட்டுப் புழுங்கும் பொதுமக்கள்; குறிப்பாக தமிழார்வலர்கள்.

2. அதிமுக பொதுச் செய்லாளர் ஆணவம் பிடித்தவர். தனிமனிதராக, அரவணைத்துச் செல்லும் போக்கு அற்றவர். எனவே அவர் முதல்வராக வரக்கூடாது எனும் பாங்கு.

1. கூட்டணிக் கட்சிகளை அலைக்கழித்துப் பேசியது; தேவையான இடங்களைக் கொடாமல் இறுதி வரையிலும் காத்திருப்பில் வைத்திருந்தமை.

திமுக ஆதரவு, திமுக எதிர்ப்பு, அதிமுக ஆதரவு மற்றும் அதிமுக எதிர்ப்பு வாக்குகளுக்கான காரணிகளை எவ்வித விருப்பு வெறுப்புமின்றிப் பார்த்துவிட்டோம். ஏற்கனவே குறிப்பிட்டபடி, வாக்காளர்களில் கட்சி சார்புடையவர்கள் 35% பேர். கட்சி சார்பற்றவர்கள் 65% பேர் எனத் தோராயமாகக் கணக்கிட்டுள்ளோம்.

தேர்தல் ஆணையத்தின் கிடுக்கிப்பிடியால், தேர்தல் வேலைகள் மிகவும் மந்தமாகவே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சைக் கேட்க, முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கூட்டமும் வரவில்லை. குறிப்பாக, நகர மக்கள் தத்தம் வேலைகளில் மூழ்கிப் போயிருப்பதைக் காண முடிகிறது. இது இப்படியே தொடருமானால், அதிமுக கூட்டணிக்கு மிகப் பெரும் சரிவாகவே முடியும்.

மேலும், திமுக ஆதரவு வாக்குகளுக்கும் அதிமுக ஆதரவு வாக்குகளுக்கும் பெரிதாக ஏற்றத்தாழ்வு இருக்காது. திமுக, அதிமுகவை விடச் சற்றுக் கூடுதலான வாக்குகளைப் பெறும். ஆனால், எதிர்ப்பு வாக்குகளில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது.

நடப்பு ஆட்சியின் மீது ஒரு அதிருப்தி கொண்டிருப்பது மனித இயல்பு. அவ்வகையில், திமுக எதிர்ப்பு வாக்குகள், அதிமுக எதிர்ப்பு வாக்குகளைவிட மிக அதிகம். இதைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில், ஜெயலலிதாவின் முதல்நாள் பிரச்சாரம் அமையவில்லை. குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்பதற்கே முன்னுரிமை கொடுத்துப் பேசுகிறார். நாட்டில் நிலவும் பிரச்சினைகளப் படம் பிடித்துக் காட்டத் தவறுகிறார். குறிப்பாக, உள்ளூர்ப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவே இல்லை. இது திமுகவுக்கே சாதகமாய் இருக்கும்.

முடிவாக, திமுக எதிர்ப்பு வாக்குகள் என்ன ஆகும் என்பதைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் அமைய இருக்கின்றன. கள நிலவரத்தை மீண்டுமொரு இடுகையில் இட்டுச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுவது,

கோவையிலிருந்து பழமைபேசி!

2011: அதிமுக வெல்வதற்கான காரணங்கள்

முந்தைய இடுகையில், கட்சி சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பிரதிநிதித்துவம் மொத்த வாக்காளர்களில் 35% இருக்கும் எனக் கணக்கிட்டு இருந்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த அளவானது 50% இருக்கும் என நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. அது ஏற்புடையதாக இல்லை.

இது வரையிலும், திமுக வெல்வதற்கான காரணிகள், திமுக தோற்பதற்கான காரணிகள் முதலானவற்றைப் பார்த்தோம். எஞ்சி இருப்பது, அதிமுக வெல்வதற்கான காரணிகள் மற்றும் தோற்பதற்கான காரணிகள் மட்டுமே. இவற்றில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கப் போவது திமுகவின் தோல்விக்கான காரணிகளே!!

அதிமுக வெல்ல வேண்டும் என வெகுவாக யாரும் வாக்களிக்கப் போவதில்லை என்பதே இன்றைய வாக்காளரின் மனநிலை. ஒரு கட்சியை, தலைவரை நேசித்து வாக்களித்தது என்பது புரட்சித் தலைவர் M.G.R அவர்கள் காலத்தில் மட்டுமே. இன்னும் எமக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. பெருவாரியான மக்கள், அவரைக் கொடை வள்ளல் என்றார்கள். கண்மூடிகளாக நேசித்தார்கள். அந்த நேசிப்பு, நிச்சயமாக ஜெயலலிதா அம்மையாருக்குக் கிடையாது.

இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையும் தாமதமான ஒன்றாகும். இவரைப் பொறுத்த வரையில், தம்மீதான நம்பகத்தன்மையைத் தாமே சீர்குலைத்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். எனவே, என்னதான் இலவசங்களை அள்ளி வீசினாலும், மக்கள் ஐயத்துடனே அதை நோக்குவர்.

எனினும், அவருக்கே உரிய பல சிறப்பம்சங்களும் உண்டு. அவை, எஞ்சிய அந்த 65% வாக்காளர்களிடமிருந்து கணிசமான ஆதரவு வாக்குகளைக் கொண்டு சேர்க்கும் என்றே நம்பலாம்.

10. ஒடுக்கப்பட்ட(?) சமூகத்திற்கு ஆதரவான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

9. அண்டை மாகாணங்களுடன் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றிப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும்.

8. உலகவங்கிக் கடனைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

7. சமூகநலத்துறை வாயிலாக, பெண்கள் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் தீட்டப்படும்.

6. தொலைக்காட்சி இணைப்பகத்தில் நாட்டுடமை அறிமுகப்படுத்தப்படும். தனியாரின் ஆதிக்கம் ஒழிக்கப்படும். திரைப்படத்துறையில் இருக்கும் ஆதிக்கம் ஒழிக்கப்படும்.

5. மின்சாரப்பற்றாக் குறைக்குத் தீர்வு காண்பதில் அதிமுக முனைப்பாக இருக்கும்.

4. கல்வித்துறையைச் சீர்படுத்தி செம்மைப்படுத்துவதில் அதிமுக சிறந்து விளங்கும்.

3. அதிமுக செயலாளர் மிகவும் கண்டிப்பானவர். அதிகாரிகளிடம் கண்டிப்பைக் காண்பித்து, நிர்வாகத்தைச் செம்மைப்படுத்துவார். அதிமுக ஆட்சிக்கு வந்தால், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்.

2. திமுகவை விட, அதிமுக அதிக இலவசங்களை அளிக்கும் (மின்விசிறி, அரவைப்பொறி, கலவைப்பொறி, இலவசத் தொலைக்காட்சி இணைப்பு )

1. தேமுதிக மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடனான கூட்டணி, அதிக வாக்குகளைக் கொண்டு சேர்க்கும்.

குறிப்பு: திமுக ஆதரவு வாக்குகள், திமுக எதிர்ப்பு வாக்குகள் மற்றும் அதிமுக ஆதரவு வாக்குகள் முதலானவற்றுக்கான காரணிகளை இதுவரையிலும் பார்த்திருக்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகளுக்கான பிரச்சாரத்தை முதன்மையாக அதிமுக மேற்கொள்ளுமா? அல்லது, தேர்தல் வாக்குறுதி மற்றும் கடந்தகால சாதனை(?)களை முன்னிறுத்தி ஆதரவு வாக்குகளைப் பெற முயற்சிக்குமா என்பதை அரசியல் ஆய்வாளர்கள் எதிர்நோக்கி உள்ளனர். அதற்கான விடை இன்னும் ஓரிரு நாளில் தெரிய வரும்.

அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளுக்கான காரணிகளைப் பார்க்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது, கோவையிலிருந்து பழமைபேசி!

3/22/2011

2011: திமுக தோற்பதற்கான காரணங்கள்

ஒரு கட்சியினுடைய உறுப்பினர்கள் மற்றும் அபிமானிகளைப் பொறுத்த வரையில், அவர்களது நிலைப்பாடு என்பது எக்காரணத்திற்காகவும் மாறப் போவது இல்லை. வாக்களிக்கும் வாக்காளர்களில் கிட்டத்தட்ட முப்பத்தைந்து விழுக்காடு இவ்வகையினரைச் சார்ந்தவரே!

2011 பதினான்காவது சட்டமன்ற தேர்தலைப் பொறுத்த மட்டிலும், இந்த எஞ்சியுள்ள அறுபத்தி ஐந்து விழுக்காட்டினரை நாம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவதாக திமுக ஆதரவு வாக்குகள், இரண்டாவதாக திமுக எதிர்ப்பு வாக்குகள், மூன்றாவதாக அதிமுக ஆதரவு வாக்குகள், மற்றும் நான்காவதாக அதிமுக எதிர்ப்பு வாக்குகள்.

திமுக ஆதரவு வாக்குகளுக்கான காரணங்களை, திமுக வெற்றி பெறுவதற்கான காரணங்கள் எனும் தலைப்பிட்ட இடுகையில் நாம் நேற்றுப் பார்த்தோம். இதோ, திமுக எதிர்ப்பு வாக்குகளுக்கான காரணங்கள்:

10. உள்ளூர்ப் பிரச்சினையில் திமுகவின் நிலைப்பாடு ஏற்படுத்திய மனநிறைவின்மை மற்றும் ஏமாற்றம். உதாரணம் - சாயப் பட்டறைகள் மூடியமை

09. இந்து மதத்தினரை மட்டும் அலட்சியப்படுத்துவது அல்லது கொச்சைப்படுத்துவது போன்ற செயல்கள்

08. தனது அபிமானக் கலைஞர்(நடிகர்கள், திரைப்படம் சார்ந்தவர்கள்) தோற்பதற்கு இவர்களே காரணம் மற்றும் அபிமானத்துக்குரியவருக்கு நாட்டமில்லாத கட்சி இது எனும் மனப்பான்மை

07. வேட்பாளர் மீதான அதிருப்தி. கடந்த முறை வந்து சென்ற இவர், இதுவரையிலும் தொகுதிக்கென்று ஒன்றுமே செய்யவில்லை.

06.தமிழக மீனவர்களைக் காப்பாற்ற ஒன்றுமே செய்யவில்லை.

05. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றத் தவறிய இவர்கள் துரோகிகள்!

04.தொலைக்காட்சி, திரைப் படத்துறை, பத்திரிகை, மத்திய அரசு, மாநில அரசு, கல்விச்சாலைகள்  என சகலமானதையும் இவர்களே ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

03.கல்விக் கட்டணம் பல மடங்கு ஏறிவிட்டது. கட்சியினரே கல்விச் சாலைகள் நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள்.

02.குடும்ப ஆட்சி. குடும்பத்தில் உள்ளவர்கள் கோலோச்சுகிறார்கள். கோடி, கோடிகளாய்ச் சம்பாதிக்கிறார்கள்.

01. மாற்றம் வேண்டும். இவர்களே தொடர்ந்து இருந்தால், கேள்வி கேட்பாரற்றுப் போய்விடும். வளர்ச்சி தடைபடும்.

குறிப்பு: திமுகவிற்கு, அதிமுகவின் ஆதரவு வாக்குகள் பற்றிய கவலை இருப்பதாகத் தெரியவில்லை. இந்த திமுக எதிர்ப்பு வாக்குகளை, ஆதரவு வாக்குகளாக எப்படி மாற்றுவது என்பதுதான் திமுகவினரின் இலக்காக இருக்கும்.  வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, தமிழகத்திலே எதிர்ப்பு வாக்குகளை ஆதரவு வாக்குகளாக்கிக் காட்டுவது மிகவும் கடினமான செயல். 

திமுகவின் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், பணபலம், ஆள்பலம் முதலானவை, எதிர்ப்பு வாக்குகளை ஆதரவு வாக்குகளாக்கிக் காட்டுமா?? அதிலேதான் திமுக/அதிமுகவின் வெற்றி, தோல்வி அடங்கி இருக்கிறது!! 

2011: திமுக வெல்வதற்கான காரணங்கள்!!!

10. நுகர்வோர் நேரிடையாகப் பாதிப்புக்குள்ளாகும் பிரச்சினைகள் வெகுவாக இல்லை. இசுபெக்ட்ரம்(Spectrum) என்று சொல்லப்படுகிற அலைக்கற்றை ஊழல் கவனிக்கத்தக்க ஒன்று என்றாலும், அதனால் நேரிடையான பாதிப்பு இல்லை. நேரடி பாதிப்பான, மின்வெட்டுப் பிரச்சினை என்பது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தாலும், மக்கள் அதற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள் என்பதே யதார்த்தம்.

9. அரசு அலுவலகங்கள், சொத்துப் பிரச்சினை, விபத்துக்கால அவசர உதவி முதலானவற்றுக்கு ஓடிவரும் திமுகவினரின் அன்னியோன்யம். கையூட்டு என்பது இடம் பெற்றாலும், காரியம் ஆகிறது எனும் மன ஆற்றுமை!

8. அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் முந்தைய காலங்களில் ஏற்பட்ட விரும்பத்தகாதன எதுவும் நடப்பு ஆட்சியில் இடம் பெறாமை.

7. துணை முதல்வரின் எளிமை மற்றும் அனைவரையும் அனுசரித்துப் போகும் தன்மை. மேலும் அவரது ஆக்கப்பூர்வமான அணுகுமுறை.

6. கட்டித்தரப்பட்ட ஏழைகளுக்கான உயர்தர வீடுகள்.

5. தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்குள் ஈர்த்துப் போற்றுவதால் ஏற்படும் நேரிடையான வேலைவாய்ப்புகள்.(மறைமுகமாக ஆட்சியாளர்கள் பெரும்பேறு பெறுகிறார்கள் என்பது விமர்சனத்திற்கான ஒன்று!)

4.தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம்

3. தேர்தல் வாக்குறுதிக்கொப்ப வழங்கப்பட்ட இலவசத் தொலைக்காட்சிகள்

2. கிலோ அரிசி, ரூபாய் ஒன்றுக்கு தொடர்ந்து வழங்கப்படுவது

1. களப்பணி, கட்டமைப்பு, கூட்டணியினரிடம் காணப்படும் இணக்கமான போக்கு

குறிப்பு: மக்களே, அதிமுக வெல்வதற்கான காரணங்களும் வரும். அதுக்குள்ள பொங்கிடாதிங்க... ஆனாலும், திமுகவே முந்திய நிலையில் இருக்கிறது என்பது பொதுப்புத்தியுடன் கூடிய யூகம்.

3/19/2011

மதிமுக பரபரப்பு முடிவு!

போதிய அளவு இடங்கள் கிடைக்காததால் மதிமுக பதினான்காவது சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிக்கிறது. மதிமுக கட்சியினர் அதிமுகவின் மேல் கடும் எதிர்ப்பிலேயே உள்ளனர்.

மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவதன் மூலம், போதிய வாக்குகளைப் பெற முடியாமல் கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்பதால், மதிமுக இம்முடிவினை எடுக்க நேரிட்டு இருக்கிறது. இந்த யோசனையைத் தெரிவித்த அரசியல் விற்பன்னர் பதிவர் குடுகுடுப்பையாருக்கு வைகோ நன்றி தெரிவித்து உள்ளார்.

ஆனால், தமிழ் இனமான உணர்வாளர்கள் நிலை என்ன? தமிழகத் தேர்தல் காட்சிகள், என்றுமில்லாத அளவுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்க உள்ளது. பிரச்சார பீரங்கிகள், பரப்புரையாளர்கள் புரட்சிப்புயல் வைகோ, நாஞ்சில் சம்பத், செந்தமிழன் சீமான் முதலானோர் முழங்காமல் இருப்பார்களா? சுயமரியாதையை இழந்து குறைவான இடங்களைப் பெறாதவர்கள், மேடையேறாமல் இருப்பதன் மூலம் அந்த சுயமரியாதையைத் தக்கவைத்துக் கொள்வார்களா?? அவர்கள் எடுக்கவிருக்கும் நிலையைத் தமிழகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்குகிறது. அவர்களுக்கு, அண்ணன் குடுகுடுப்பையாரின் ஆலோசனை என்னவாக இருக்கும்??

திமுக கதாநாயகியின் கவர்ச்சி

  • மாதம் 35 கிலோ அரிசி இலவசம்
  • குடும்பம் ஒன்றுக்கு ஒரு மாவு அரைபொறி (grinder) இலவசம்
  • ஒரு ரூபாய் அரிசித் திட்டம் தொடரும்
  • மாவு அரைபொறி விரும்பாதவர்க்கு, எந்திர அம்மி(Mixi) இலவசம்
  • கோவையில் மின்சாரத் தொடர்வண்டி இயங்கு திட்டம்
  • 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்துக் கட்டணம் இலவசம்
  • தகுதியுள்ளோருக்கு மடிக்கணினி இலவசம்  
  • கிராமங்களில் உழவர் சந்தை போல், நகரங்களில் காய்கறிகளை விற்க நுகர்வோர் சந்தை
  • வயது முதிந்தவர்களுக்கு வீட்டுக்கு சென்று மாதம்தோறும் மருத்துவ சிகிச்சை.
  • அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடை
  • அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை, பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள்
  • பொங்கல் பண்டிகையின்போது, கிராமங்களில் அரசு செலவில் விளையாட்டுப் போட்டிகள்
  • சென்னையிலிருந்து கோவை, மதுரை இடையே அதிவேக ரயில
  • முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு
  • 2006-09ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கடனுக்கான வட்டியை அரசே ஏற்கும்.
  •  மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நான்கு லட்ச ரூபாய் கடன். அதில் இரண்டு இலட்ச ரூபாய் மானியம்

முடியலை சாமி...முடியலை.... திமுகவின் கதாநாயகி ஊர்கோலம் போகப் புறப்பட்டு விட்டாள். வெற்றிக்கனி அவளுடையதுதானா?? 

3/17/2011

வெல்வது திமுகவா? அதிமுகவா?? ஒரு நாடோடியின் பார்வையில்!

மார்ச் 17, அதிகாலை 3.15, கோயம்பத்தூர்.


முன்பெல்லாம் ஒரு ஊரை எடுத்துக் கொண்டால், இந்தந்த வீட்டார் இன்ன கட்சி, இந்த வீட்டாரைச் சேர்ந்தவர்கள் எக்கட்சியையும் சாராதவர் என எளிதில் தெரிந்து கொள்ளும் நிலை இருந்து வந்தது. ஆனால், இன்றைய நிலை அப்படி அல்ல. யாரும், யாரையும் அவ்வளவு எளிதில் எடை போட முடியாதபடிக்கு, தத்தம் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பின் பாதிப்பு அதைவிடப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதும் கண்கூடு. இதுகாறும் எங்கள் ஊர் இருந்து வந்த தொகுதி, உடுமலைப் பேட்டை சட்டமன்றத் தொகுதியாகும். அது நிலப்பரப்பிற்கு ஏற்றபடியாகவும் இருந்தது. உடுமலைப் பேட்டையில் இருந்து ஏழு மைல் தொலைவில் இருக்கும் ஒரு ஊர், உடுமலைப் பேட்டைத் தொகுதியில் இருப்பதில் என்ன பிரச்சினை இருந்துவிட முடியும்?

ஆனால் இன்றைய நிலை? உடுமலையைக் கடந்து கிழக்கே வெகுதொலைவில் இருக்கும் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது எனச் சொல்கிறார்கள். பெருவியப்பாக இருக்கிறது. மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உடப்பட்ட ஊர்கள் கீழே வருமாறு:

செல்லப்பம்பாளையம், புங்கமுத்தூர், உடுக்கம்பாளையம், பெரிய பாப்பனூத்து, சின்னப் பாப்பனூத்து, பாப்பன்குளம், ஆண்டிகவுண்டனூர், தும்பாளப்பட்டி, வடக்கு பூதநத்தம், ஆர்.வேலூர், பெரிய வாளவாடி, சர்க்கார்புதூர், தின்னம்பட்டி, தேவனூர்புதூர், ராவணபுரம், எரிசினம்பட்டி, கொடுங்கியம், ஜிலோபநாய்க்கன்பாளையம், அரசூர், ரெட்டிபாளையம், சின்னவாளவாடி, தெற்கு பூதிநத்தம், போதிகவுண்டந்தாசரபட்டி, கொழுமம், எலயமுத்தூர், குருவப்பநாய்க்கனூர், ஆலம்பாளையம், பள்ளப்பாளையம், மொடக்குப்பட்டி, தீபாளப்பட்டி, கிருஷ்ணபுரம், வலயபாளையம், ஜல்லிப்பட்டி, லிங்கமாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம், குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, கல்லாபுரம், காரத்தொழுவு, துங்காவி, தாந்தோணி, முக்கூடுஜல்லிப்பட்டி, வென்சப்பட்டி, மைவாடி, ஜோத்தம்பட்டி, கடத்தூர், சோழமாதேவி, வேடப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணர், அந்தியூர்,ராகல்பாவி, கண்ணம்மநாய்க்கனூர், குறள்குட்டை, போடிபட்டி, அமராவதி, குதிரையார், குக்கல், மற்றும் கஞ்சம்பட்டி, கொமாரலிங்கம், தளி, கணியூர் மற்றும் கணக்கம்பாளையம்.

நகராட்சி எனபது இல்லாது, நூறு விழுக்காடு ஊராட்சிகளைக் கொண்ட ஒரு தொகுதியாகும். வேளாண்மை என்பதே பிரதானம். எம்.ஜி.ஆர் காலத்திலே, இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இரட்டை இலை மட்டுமே. அதைக்கடந்து வந்தோமானால், மிட்டா மிராசுகள் அடங்கிய பேராயக் கட்சி. நிலச்சுவான்தார்கள் எல்லாம், காங்கிரசுப் பாரம்பரியத்தைப் போற்றி அதையொட்டி வாழ்ந்து வந்தார்கள். இவ்விரு கட்சிகளுக்குப் பின்னர்தான், திமுக என்பது வரும். உடுமலை நகராட்சியை விடுத்துப் பார்த்தால், இப்பகுதியில் திமுக வெல்வது என்பது குதிரைக் கொம்புதான்.

ஆனால் இன்றைய நிலை என்ன?? காட்சிகள் அடியோடு மாறிப் போய்விட்டன. எம்.ஜி.ஆரின் அடித்தட்டு வாக்குகள் அப்படியே பலவாறாகப் பங்கு போடப்பட்டு விட்டன. அவ்வாக்குகள், 50%, 30%, 20% என முறையே அதிமுக, திமுக, தேமுதிக என்ப் பிரிந்து விட்டன. எம்.ஜி.ஆரின் கட்சி நிர்வாகிகள் என்று எடுத்துக் கொண்டால், 50%, 40%, 10% என முறையே, அதிமுக, தேமுதிக, திமுக ஆகிய கட்சிகளில் ஐக்கியம் ஆகிக் கொண்டார்கள். அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்குள் பங்காளி மனப்பான்மை(கசப்புணர்வு) இருப்பதைக் காண முடிகிறது.

இச்சூழலில்தான், தமிழக சட்டமன்றத்தின் பதினான்காவது தேர்தல் களம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. மக்கள் சகலவசதிகளுடன் இருக்கிறார்கள். கட்ந்த ஐந்தாண்டு காலத்தில் எங்களுக்குக் கிடைத்தது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நிறைவாக இருக்கிறது. ஆனால், அவர்கள் ஊழல்வாதிகள் என முணுமுணுக்கிறார்கள்.

ஒரு ரூபாய்க்கு அரிசி, வேட்டி சேலைகள், தொலைக் காட்சிப் பெட்டி, மலிவு விலையில் இதரப் பொருட்கள் என்பனவற்றை சரளமாக நினைவு கூறுகிறார்கள். அதே வேளையில், வண்டி வண்டியாகக் கேரளாவுக்குக் கடத்தப்படும் அரிசியையும் நினைவு கூறுகிறார்கள். அத்தோடு, அரசியல்வாதிகள் பெரும் பணக்காரர்களாக மாறிவருவதையும் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை இவர்கள்.

பொருளாதாரத்தில் சிறிது மேம்பட்டவர்கள், அரசியலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எல்லாருமே திருடர்கள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். இவர்கள்தான் உணர்ச்சிகளுக்கான இலக்கு என்பதை அரசியல்வாதிகளும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். சாதி, மதம், பிடித்த நடிகர் முதலானவற்றில் ஏதோவொன்றின்பால் இரையாவதற்கு, அவர்களும் தயாராக இருப்பதையே காண முடிகிறது. சாதியுணர்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தலைவிரித்தாடுகிறது.

பொருளாதாரத்தில் மேம்பட்ட தொழில் அதிபர்கள், நிலப்பண்ணையார்கள் முதலானவர்கள், எடுத்த எடுப்பிலேயே குறிப்பிடுவது மின்பற்றாக் குறை, சாலை வசதிகள் ஆகிய இரண்டையும்தான். குறை கூறுவதை எல்லாம் குறிப்பிட்டுவிட்டு, அதிமுகவுக்கு திமுக எவ்வளவோ மேல் என்பதையும் சொல்கிறார்கள். காசைக் கொடுத்தாவது காரியம் சாதிக்க முடிகிறது. எந்த நேரத்திலும் இவர்களை அணுக முடிகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மற்றபடி, ஈழப் பிரச்சினை, ஸ்பெக்ட்ரம், அண்டைய மாகாணங்களுடன் இருக்கிற நதிநீர்ப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சி நிலை, நிதி நிலை முதலானவற்றை எல்லாம் யாரும் எண்ணிப் பார்க்கவோ அல்லது அதில் நாட்டம் கொண்டவர்களாகவோ இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படியான சூழலில் யார் முந்துகிறார்கள் என்பதைக் கணிப்பது எவருக்கும் இயலாத காரியம். அப்படி யாராவது சொல்வார்களேயானால், அது ஒருபக்கச் சார்பாகவே இருக்கும் என்பது திண்ணம்.

அதிமுக கூட்டணியின் வெற்றி என்பது கூட்டணிக் கட்சியினரின் அரவணைப்பில் அடங்கி இருக்கிறது. திமுக கூட்டணியின் வெற்றி என்பது, அவர்களின் பிரச்சாரத்தில் அடங்கி இருக்கிறது. அரவணைப்பு முந்துமா அல்லது களப்பணி முந்துமா என்பது இன்னும் பத்து நாட்களில் தெரியத்தானே போகிறது?!

- பழமைபேசி.