8/26/2023

What is mob mentality?

Once entering a group, deindividualization and the loss of self awareness can occur. This ultimately results in people thinking as a group rather than as individual and is known as mob mentality. Though mob mentality can be helpful, it is often detrimental.

பரவலாகத் தமிழ் அமைப்புகளில் இப்படியான கலாச்சாரம் ஏற்பட்டு விடுவதைக் காணலாம்.  பேச்சில் கவர்ச்சி, சாதி, பணம் என ஏதாகிலும் ஒன்றில் மிடுக்காக இருப்பார். அவருக்குச் சிலபல நண்பர்கள். அதே சங்கத்தில் வேறொரு குழு. சன்னமாக எதிர் புதிர். ஒரு இன்னொரு குழுவைக் கலாய்க்கும். அதிலொரு இன்பம். கொஞ்சம் கொஞ்சமாக அது உள்ளிழுத்துக் கொள்ளும். சுயசிந்தனை அற்றுப் போகும்.  

இப்படியான சூழல் இளைஞர்கள், குடும்பங்களின் நலனைப் பதம் பார்த்து விடுகின்றது. அண்மையில்தாம் நண்பர் தம் மனைவியை இழந்து விட்டார். கடந்த பத்து ஆண்டுகளாகவும் தமிழ்ப்பள்ளி, சங்கம் என இருந்திருக்கின்றனர் இணையர் இருவருமே. குழந்தைகள் அவர்கள்பாட்டில். இன்று அம்மையார் தவறிவிட்டார். அவர் சொன்னதிலிருந்து, “தப்புப்பண்ணிட்டேன் பழமை, வேலை, சங்கம், ஸ்கூல், அக்கப்போர்”னே இருந்துட்டேன்.

Your digital footprints speak volumes than your cv. இஃகிஃகி, நான் தமிழ்ச்சங்கச் சூழல்களில் கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளாக இருந்து வருகின்றேன். சூழ்நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும். சுவடுகள் எங்கோ படியெடுக்கப்பட்டுக் கொண்டேவும் இருக்கும். அவை நமக்கே எதிராகவும் திரும்பக் கூடும். காட்டமாக எழுதுகின்றோம்தான்.  அதைச் சிந்தைக்கு ஆட்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். உள்வாங்கிக் கொள்ளாமலே புறம் பேசுவது என்பது அவரவர் விருப்பம்.

இயன்றமட்டிலும் மனதறிந்து நேர்மையாக இருந்து விடுவது.  கூட்டுக்குழுச் சுழலுக்குள் அகப்பட்டுக் கொள்வதில்லை. வாழ்க்கை என்பதே பயணம்தானே? எப்படியான பாதையில் பயணிக்கின்றோம் என்பது முக்கியம். எவ்வளவு வேகம், உயரம் என்பதல்லவே!!

-பழமைபேசி. 08/26/2023.

8/23/2023

தகவல் இயங்குநிலை (dynamic data)

அலுவலகக் கூட்டங்களின் போது கவனிக்கலாம். ஏதோவொரு பேசுபொருளின்பாற்பட்டு முன்வைக்கப்படும் கருத்துகளில் இழுபறி ஏற்படும். கூட்டத்தை நடத்துபவர், இது குறித்த தகவல்களை ஆய்வு செய்து விட்டு அடுத்த கூட்டத்தில் மேற்கொண்டு பேசிக் கொள்ளலாமெனக் கூட்டத்தைக் கடத்திச் செல்வார் அல்லது அதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளின் பொருட்டு இன்னார் வேலை செய்யப் பணிக்கின்றேனெனக் கடத்திக் கொண்டு போவார். பேச்சுகளை வளர்ப்பதில்லை. இழுபறிப் பேச்சு என்பது நேரத்தை வீணாக்கவே செய்யும் பெரும்பாலான நேரங்களில்.  ஆகவே தகவலின் அப்போதைய நிலையறிந்து செயற்பட வேண்டியதாயிருக்கின்றது.

மகள்கள் மருத்துவமனை ஒன்றுக்குத் தன்னார்வப் பணிக்குச் செல்வது வழக்கம். அப்படியாக அவர்களை அழைத்துச் செல்ல முற்படுகையில் அவர்களின் அலைபேசியில் வழித்தடத்துக்கான செயலியை முடுக்கிவிடக் கோரினேன். “அப்பா, எத்தினிநாளாகப் போய்வருகின்றோம். இன்னமும் டைரக்சன் போடணுமா?”. ஆமாம், போட்டுத்தான் ஆக வேண்டுமென்றேன். காரணம், இம்மாதிரியான செயலிகள் அந்த நேரத்துக்கான தகவலின் அடிப்படையில் செயற்படுபவை. செல்ல வேண்டிய தடம் மாறியும் வரலாம். ஏதோவொரு பாதையில் சாலைப்பராமரிப்பு இடம் பெற்றிருக்கலாம். விபத்து நேர்ந்திருக்கலாம். நிகழ்வு காரணம் முற்றிலுமாக அடைபட்டிருக்கலாம். நமக்குத் தெரியாது. செயலிகள் அவ்வப்போதைய தகவலின் அடிப்படையில் தடத்தைச் சொல்லக் கூடியவை. ஏனவே பாவித்துத்தான் ஆக வேண்டி இருக்கின்றதென்றேன். “that makes sense" என்பது மறுமொழியாக அமைந்தது.

அம்மாவின் உடன்பிறந்தோர் மொத்தம் 20 பேர் (மூன்று குடும்பத்துப் பிள்ளைகள்). அவர்களுள் மாமா ஒருவரை மட்டும் பார்த்திருக்கவில்லை. எப்படியாவது பார்த்தாக வேண்டுமென முயன்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் அப்படியே குலதெய்வக் கோயிலுக்கும் செல்ல வேண்டுமெனச் சொன்னார். அவரது விருப்பத்தைத் தட்டிக்கழிப்பானேன்? காலையில் வண்டி கிளம்பியானதும், சரிம்மா, கோயிலுக்கு எந்த வழியில் செல்ல வேண்டுமெனக் கேட்டேன். ஏன், உனக்கு நம் குலதெய்வக் கோயில் எங்கிருக்கின்றதெனத் தெரியாதா என விட்டேற்றியாகக் கேட்டார்.

அதற்கல்லம்மா, போகின்ற வழியில் அண்ணியாரை உடன் அழைத்துச் செல்ல வேண்டுமா? வேறு எவரையாவது பார்க்க வேண்டுமா? அதற்கேற்ப செல்கின்ற வழியும் மாறும்தானே, அதற்காகக் கேட்டேனெனச் சொன்னேன். இல்லை, அண்ணியார் கலக்டர் அலுவலகம் செல்கின்றார், தோட்டம் சென்று துணிமணிகளை எடுத்துக் கொண்டு நேராகக் கோயிலுக்குத்தான் என்றார். சரி, தோட்டத்திற்கு வருகின்றோமெனச் சொல்லுங்கள் என்றேன். தோட்டத்தில் இருக்கும் அண்ணனை அழைத்தால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. அலைபேசியில் அண்ணியாரை அழைத்தார். ”கலக்டர் அலுவலகம் செல்லத் தேவையில்லை, தோட்டத்திலும் யாருமில்லை, ஆகவே நான் இருக்குமிடத்துக்கு வாருங்கள், நானும் வருகின்றேன்”. ”இதற்குத்தானம்மா நான் கேட்டது, இப்போது பார்த்தாய்தானே?”. அம்மா சிரித்துக் கொண்டார்.

தகவல் என்பது நொடிக்கு நொடி இயங்குநிலையின்பாற்பட்டு இருக்கின்றது. அலைபேசி, இணையம் உள்ளிட்ட தகவற்தொழில்நுட்ப வளர்ச்சியின் நிமித்தம் அதன் இயங்குவேகம் பன்மடங்கு பெருகி இருக்கின்றது. ஆகவே பேச்சுகளில் அக்கப்போர் இடம்பெறுவதென்பதும் பலமடங்கு பெருகியிருக்கின்றது.

வயது மூப்பு, அடுத்தடுத்த மரணங்கள் காரணம், மனம் பணிந்து போய்க் கிடக்கின்றது. தற்போதெல்லாம் எவர் என்ன சொன்னாலும் எதிர்வினைவேகம் கொள்வதில்லை. மாறாக, முன்வைக்கப்படும் தகவலின் தன்மையைத் தெரிந்து கொள்ளவே இயன்றவரை முற்படுகின்றேன். நமக்கு நன்கு அறிந்த தகவல், தற்போது அதன் தன்மையை மாற்றிக் கொண்டிருக்கக் கூடும். ஆகவே காலாவதியான தகவலை அடிப்படையாகக் கொண்டு முட்டி மோதிக் கொள்வதில் பயனில்லை.


7/18/2023

இனியநாள்

 காலையில் நினைவுக்கு ஆட்படுவதிலிருந்து மீண்டும் நினைவிலிருந்து விடுபட்டு உறங்கிப் போவது வரையிலும் என்னவெல்லாமோ நடக்கின்றன. எதிர்பாராத ஒன்று, வெற்றி, வருமானம், இப்படி ஏதாகிலுமொன்று இடம் பெறுமேயானால் அந்தநாள் இனியநாள் என்பது பொதுப்புத்தி, வாடிக்கை. ஆனால் அது அப்படியன்று.

தலைவலி, நெஞ்செரிச்சல், கால்நோவு, பல்குடைச்சல், ஈறு வீக்கம், விரற்கண் குடைச்சல் , மனவுளைச்சல், தோல் அரிப்பு, தும்மல், இருமல்,  இப்படி ஏதோவொன்று இருந்து அந்த நாளின் தரத்தைக் குறைக்கும். அதன் வீச்சு அவ்வப்போது, சிற்சிறு பிசிறுகளாக சன்னமாக இருந்து இருந்து மனவெழுச்சியை மட்டுப்படுத்தக் கூடும். பெரும்பாலும் நாம் அதற்கொரு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம். ஆனால் அதனால் மட்டுப்படும் நாளின் தரம் பெரிதாகவே இருக்கும். இப்படியான எதுவுமற்ற ஒவ்வொருநாளும் இனியநாளே.

இப்படியான தொல்லைகள் ஏற்படும் போதெல்லாம் வலிமாத்திரைகளைப் போட்டு அந்தக் கணத்திலிருந்து முன்னேறிச் செல்கின்றோம். அதன் தோற்றுவாய் என்னவென அறிந்து கொள்வதற்கு முனைப்புக் கொள்வதில் நாட்டமிருப்பதில்லை.

சிற்சிறு தும்மல், மூக்கில் நீர்வடிதல், நெஞ்செரிச்சல் தொடர்ந்து இருப்பது போன்ற ஒரு கவனிப்பு சில ஆண்டுகளுக்கு முன்னம் இருந்தது. மருத்துவர், நண்பர்கள், அம்மா எனப் பலருடனும் பேசி இருக்கின்றேன். விடுபடவேயில்லை. பெரும்பாலும் நானே சமைத்து உண்பதுதான் வாடிக்கை. ஆகவே தொடர்ந்து மாற்றங்களைச் செய்து செய்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியானதில் அறிந்து கொண்டதுதான் இது.

காஃபி என்பது மட்டும் வீட்டில் அம்மையார் கைவண்ணத்தில்தான். அருமையாக இருக்கும். நெஞ்செரிச்சலின் நிமித்தம் எரிச்சலாக இருந்தேன். பால் இல்லாமல் வரக்காப்பி கொடு, போதுமென எரிச்சலாகச் சொன்னேன். இஃகிஃகி, அவரும் வரக்காப்பி கொடுத்தார். ஒரு நாள், ரெண்டுநாள், மூன்றுநாள், வாரேவா... பொதுவாக மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். ஆனால் அன்றுமுதல் இரவில் எவ்வித அல்லலுமின்றி உறங்கிப் போனேன். நீர்வடியக் காணோம். நெஞ்செரிச்சலையும் எதிர்கொள்ளவில்லை. நிற்க.

ஊரில் எத்தனையோ காஃபிகள். யாவித அழற்சிக்கும் ஆளாகவில்லை. சுகமாய் இருந்துவிட்டு இரண்டு மாதங்கள் கழித்து வந்திருக்கின்றேன். வான் அயர்ச்சி(jet lag) காரணம், ஒருமாதிரியான மனநிலை. உடல்நிலை. கொடுத்த காஃபியை கவனத்துக்கிடங்கொடாத மனநிலையில் குடித்து வந்தேன். 

நேற்றெல்லாம் அவ்வப்போது நெஞ்செரிச்சல். இன்று காலையில், ”காஃபி எப்படிப் போட்டாய்?” “பாதி பாலு, பாதி தண்ணி”. "சாரி, நாலே சொட்டுப் பாலோட வேற காப்பி போட்டுக் கொடுக்கலாமே?”

இன்றுமுதல் இனியநாள் is back again.❤️😍

-பழமைபேசி, 07/18/2023.


7/14/2023

உறவாடல்



அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும். தனித்தனியாக உங்கள் ஒவ்வொருவருடனும் உரையாட ஆசைதான். ஒரேநாளில் இயலாதுதானே?

இரண்டு மாதங்கள் தாயகத்தில் இருந்தேன். பேரின்பம். உற்றார் உறவினர் நண்பர்களெனக் கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேலானவர்களை நேரில் சென்று சந்தித்து உரையாடினேன். திருமணங்கள், உறவினர் மறைவு முதலானவற்றிலும் பங்கு கொண்டேன்.

அணுக்கமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கின்றது. முன்பெல்லாம் தாத்தா, பாட்டி எனும் வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமான இழப்புகளை உணர முடிந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக, அப்பா, சித்தப்பா, மாமனார் என்பதான இழப்புகள் என்றிருந்த நிலையில், தற்போது சம வயதுடையோரும் விடைபெறுவது இடம் பெற்று வருகின்றது. திரண்டிருந்த ஊரகத்திண்ணைகளும் சத்திரத்து மாடங்களும் பயிர்ப்பற்ற தரிசுகளாய்க் கிடக்கின்றன. வீடுகளுக்குள் இருந்தாலும் கூட்டத்துள் கூட்டமாய் இருக்கின்ற மனோபாவத்தில் நேரப்போதாமையுடன் முசுவாய்த்தான் இருக்கின்றனர் மக்கள்.

வாசிங்டன் வானூர்தி முனையத்தில் இறங்கிய அரை மணி நேரத்திலெல்லாம் குடிவரவு முறைமைகள் முடிக்கப் பெற்று, சரக்குப் பெட்டிகளைப் பெற்ற கையோடு அடுத்த வானூர்திக்காக திரும்பக் கொடுத்தும் ஆயிற்று. சார்லட் வந்தடைந்து காத்திருந்து காத்திருந்து காலங்கள் கரைந்தன. கடைசியில் பெட்டி வரவேயில்லை என்பதால், முறையிட்டு, அதற்கான பதிவுத்தாள் பெற்று வீட்டுக்கு வந்து சேர்ந்தாயிற்று. நல்ல உறக்கம்.

காலை ஐந்தரை மணிக்கெல்லாம் குறுஞ்செய்தி. சார்லட் வரும் விமானத்தில் பெட்டி ஏற்றப்பட்டு ஆகிவிட்டது. மகிழ்ச்சி. மீண்டும் உறங்கிப் போனேன். மீண்டும் குறுஞ்செய்தி. சார்லட்டில் பெட்டி இறக்கப்பட்டு ஆகிற்று. எழுந்து பல்துலக்கி கொடுக்கப்பெற்ற காஃபியைக் குடித்துக் கொண்டு இருக்கையில் மீண்டும் குறுஞ்செய்தி.

மாலை நான்கு மணிக்குள் பெட்டி வீட்டுக்கே வந்து சேருமென்பது தகவல். மறந்து விட்டிருந்தேன். நண்பகல் வாக்கில் அம்மாவுக்கு அழைத்துப் பேசினேன். கொடுத்தனுப்பிய பொருட்கள் குறித்து வினவினார். கொடுக்கப்பட்ட பதிவெண்ணைக் கொண்டு இணையத்தில் போய்ப் பார்த்தேன். காலை 9.42மணிக்கெல்லாம் பெட்டியைப் பெற்றுக் கொண்ட வண்டி புறப்பட்டாகி விட்டது என்பது நிலைத்தகவல்.

வீட்டுக்கு வண்டி வரவேயில்லை. மாலை ஏழு மணிவாக்கில் மீண்டும் இணையத்தில் சென்று பார்த்தேன். புதுத்தகவல் ஒன்றும் இல்லை. சரி, அழைத்துப் பேசலாமெனக் கருதி, தொடர்பு எண்ணைத் துழாவினேன். wheresmysuitcase எனும் நிறுவனத்துக்குத் தொடர்பு எண்ணே இல்லை. மாறாக மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுக்கப்பட்டு இருந்தது. விபரம் கேட்டு மடல் அனுப்பினேன். ஒரு பதிலும் இல்லை. நள்ளிரவில் விழிப்புக் கண்டு விட்டேன். சென்று பார்த்தேன். மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை. நிலைத்தகவற்தொடரிலும் புதுத்தகவல் எதுவுமில்லை.

ஐந்து நாட்களுக்குப் பின்னர்தாம் பெட்டி தொலைந்து விட்டதற்கான இழப்பீட்டு விண்ணப்பம் பதிய முடியும். $1700 வரையிலும் இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம். பெட்டியில் இருக்கும் பொருட்களின் சந்தைமதிப்பு எப்படிப் பார்த்தாலும் $250 கூடத் தாங்காது. ஆனாலும் அதற்கான விழுமிய மதிப்பு என்பது இருக்கின்றதுதானே? பேத்திகளுக்காய், ஆசையாசையாய் செய்து கொடுக்கப்பட்ட நிலக்கடலையுருண்டை, எள்ளுருண்டை, ஓலை முறுக்கு, மாவடு முதலானவற்றுக்கு ஈடு இணை ஏது? மனம் சோர்வு கண்டது. ஊருக்கு அழைக்க மனம் வரவில்லை. அழைத்தால் கேட்பார்களே??

காலை பத்து மணி இருக்கும், மின்னஞ்சலொன்று வந்தது, “ஓட்டுநர் லசோனியா என்பார்வசம் பெட்டி ஒப்படைக்கப் பெற்று இருக்கின்றது. எந்நேரத்திலும் பெட்டி வீடு வந்து சேரலாம்”. நேற்று காலை 9.42க்கு ஏற்றப்பட்ட பெட்டி, 20 மைல் தொலைவில் இருக்கும் வீட்டுக்கு இன்னுமா வந்து கொண்டிருக்கின்றது? அவ்வப்போது வாசலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். 24 மணி நேரத்தில் வந்து சேருமென்றார்கள். 48 மணி நேரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது. மீண்டும் ஒரு குறுஞ்செய்தி. ”நேற்று மாலை நான்கு மணிக்கு கொடுக்கப்பட வேண்டிய பெட்டி, கொடுக்கப்படுவதற்காக வண்டி வந்து கொண்டிருக்கின்றது”.

மனம் அலுத்துப் போய் விட்டது உடம்போடு சேர்த்து. உறங்கிப் போனேன். எங்கோ ஏதோ நடப்பது போன்ற உணர்வு. விறுக்கென எழுந்து சாளரத்துவழி வெளியே பார்த்தேன். வண்டியொன்று நின்று கொண்டிருந்தது. ஓடிப் போனேன். இதுதாம் என் பெட்டியென அடையாளம் காட்டினேன்.

அலைபேசி என்பது கையிலிருப்பதால் எப்படியெல்லாம் அது நம்மைப் படுத்துகின்றது? இப்படித்தான் ஒவ்வொருநாளும் ஒவ்வொருவருக்குள்ளும். நிமிடத்துக்கு நிமிடம் மாந்தனின் எண்ண அலைகள் மேலும் கீழுமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன. எல்லாரும் பரபரத்துக் கொண்டே இருக்கின்றனர். நாம் சென்று சந்தித்தால், பேசுகின்றனர். பேசிக் கொண்டே இருக்கின்றனர். மீண்டும் வருமாறு அழைக்கின்றனர். அவ்வளவு நல்லவனா நான்? பரபரப்பில் இருந்து விடுதலையான உணர்வு, அவர்களை அப்படியான குதூகலத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. நேர்கொண்டு பேசித் திளைத்திருப்போம்.

5/15/2023

தெரிவுகள்

Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.

வாழ்க்கை என்பது தெரிவு. எப்படி? அன்றாடமும் வாழ்வு என்பது ஒவ்வொன்றுக்குமென எண்ணற்ற தெரிவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். நீங்கள் எந்தத் தெரிவை மேற்கொள்கின்றீர்களோ அதைப் பொறுத்து உங்கள் வாழ்வின் அடுத்த கணம், அடுத்த நாள், அடுத்த மாதம், அடுத்த ஆண்டு என்பன எல்லாமும் அமையும். இப்படியாக வாழ்வின் முடிவுப் புள்ளியில் நின்று திரும்பிப் பார்க்கும் போது, உங்களின் பயணம் உங்கள் தெரிவுகளால் ஆனதான பயணமாக இருக்கும்.

இனிய நண்பர் அவர். உடனே தொடர்பு கொண்டார். சந்திக்கும் ஆவல். "என்ன திருப்பி...." என்பதற்குள்ளாகவே நான் சிரித்துக் கொண்டே இடைமறித்தேன், "ஏங்க, இது நம்ப கோயமுத்தூருங்க. எத்தினிவாட்டி வேணுமின்னாலும் வரலாம் போகலாம்", கலாய்த்தேன். 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்.

புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் ஒவ்வொருமுறை தாயகம் வரும் போதும் இக்குறிப்பிட்ட வினாவை எதிர்கொண்டு பழகிப் போய் விட்டது. ஆம், அவர் கேட்க வந்தது, "இப்போதுதானே வந்து போனாய், மீண்டும் இவ்வளவு சீக்கிரமே வந்திருக்கின்றாயே? எல்லாம் சுபம்தானே?" 

இவ்வினாவின் தோற்றுவாய் என்பது இருவிதமான அடிப்படைகளைக் கொண்டது. முதலாவது மேற்கூறிய காரணம். இரண்டாவது, வெளிநாடு என்றாலே அடிக்கடி வந்து போக இயலாது. நான்கு, ஐந்து ஆண்டுகட்கு ஒருமுறைதான் என்பதான பொதுப்பழக்கமும் பொதுப்புத்தியும்.

இரண்டாவது அடிப்படை நிமித்தம்தான் நாம் "தெரிவுகள்(சாய்ஸஸ்)" என்பது பற்றிப் பேச வேண்டியதாகின்றது. ஆண்டுதோறும் வருவாயுடன் கூடிய விடுப்பு என்பது பெரும்பாலான நாடுகளில் உண்டு. தாயகம் வந்து செல்ல, சராசரியாக தனிநபருக்கு இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் செலவாகும்.

பிறகு ஏன் அப்படியான பொதுப்பழக்கம் உண்டாகிற்று? விடுப்பு எடுப்பதால் பொறுப்பு உயர்வுகள், வணிக விரிவாக்கம், கல்வி மேம்பாடு, சேமிப்பு முதலானவை மந்தமாகும். ஆகவே ஆண்டுதோறும் வந்து செல்ல இயலாது. இயலாது என்பதன்று. ஏற்புடையதாக இருக்காது. ஆனால் இது அவர் அவருடைய தெரிவு என்பதுதான் அடிப்படை.

பயணங்களைக் கட்டுப்படுத்தி அதன் வழியாக வளர்ச்சிகளைக் கொண்டோரும் இருக்கின்றனர். அது அவர்களுடைய தெரிவு. இயன்றமட்டிலும் பயணங்களை மேற்கொண்டு, பெற்றோர், உற்றார் உறவினரோடு பொழுதுகளைப் பகிர்ந்தவரும் இருக்கலாம். அந்த அனுபவத் தேவை என்பது அவர்களின் தெரிவு.

இடைப்பட்ட இந்த 11 மாதங்களில் விடைபெற்றதில் நெருக்கமானோர் 10 பேருக்கும் மேல். கடந்தமுறை வந்திருந்த போது நாரகிரி எனும் ஊரில் 2 நாட்கள் தாங்கி இருந்தோம். ஆருயிர் நண்பன் இன்று விடைபெற்றவனாகிப் போனான். நண்பர் அலெக்ஸ் அவர்களைக் கண்டு உறவாடினோம். மரணப் படுக்கையிலும் எமக்காக அகல விரிந்த அந்தக் கண்கள், பார்வை இம்முறை எம‌க்கில்லை. ஒருவேளை நான் சென்றமுறை வராமல் இருந்திருந்தால்? எல்லாம் அவரவர் சாய்ஸ். உங்கள் வாழ்க்கை உங்கள் மனத்தில், உங்கள் மனத்தில் மட்டுமே!

Life is a choice. Life presents many choices, choices we make determine our Life.

‍பழமைபேசி, கோவை.

5/07/2023

சித்ரா பெளர்ணமி

தாய்த்தமிழ்நாட்டில் மாலைநேரம். பெளர்ணமி வழிபட மக்கள் ஆங்காங்கே கோயில்களில் குழுமி இருக்கின்றனர். அமெரிக்காவில் காலை மணி ஒன்பது. அடுத்தடுத்து அலுவலகக் கூட்டங்கள். ஊரிலிருந்து வாட்சாப் வழி ஓர் அழைப்பு. கூட்டத்தின் நடுவே அதற்குப் பணிய முடியவில்லை.

கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்குமான இடைவெளியில் அந்த வகுப்புத் தோழருக்கு அழைப்பு விடுத்தேன். வீடியோ காலில் வந்தார்.

நான் வாழ்ந்த ஊரில் இருப்பதாக நினைத்துக் கொண்டு வேறொரு ஊரின் கோயிலடியில் நின்று கொண்டு அழைத்திருக்கிறார். “உங்க ஊர்லதான் இருக்கன். இந்தா, இந்தக் கோயில் என்னனு சொல்லு பார்க்கலாம்”. எனக்குப் பிடிபடவே இல்லை. முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை. கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

நண்பர் அருகிலிருந்தவர்களை அழைத்து என் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கச் சொன்னார். அப்போதுதான் அறிய நேரிட்டது, அது நான் வாழ்ந்த ஊரல்ல. வேறொரு ஊர். ஆனால் அந்த ஊரையும் நான் நன்கறிவேன். அவருக்கு அருகில் இருந்தவர்களும் பரிச்சியமானவர்களே.

அருகில் இருந்த எல்லாருக்குமே மகிழ்ச்சி. எனக்கும் மகிழ்ச்சி. திடீரென அங்கே கோயிற்திடலில் இருந்த ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் வயதையொத்த சிறுவனிடம் என்னைக் காண்பித்து, இது யார் தெரியுமாவெனக் கேட்டனர். “இது, பழமைபேசிதானே?” என்றார் அந்த இளம்பிள்ளை.

அடுத்த கூட்டத்துக்கு நேரமாகிவிடுமேயென எண்ணி அழைப்பை முடித்துக் கொண்டேன். ஆனால் என்னால் அடுத்த அழைப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. மனம் சமநிலையில் இருந்திருக்கவில்லை. கூட்டத்தை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைக்க வேண்டினேன்.

நான் பார்த்திராத ஒரு சிறுவன். என் பேச்சுகள், எழுத்துகள்வழி அறிமுகமாகி இருந்திருக்க வேண்டும். எவ்விதத்திலும் என் பேச்சும் எழுத்தும் நடவடிக்கைகளும் அப்படியானவர்களைப் பாதித்து விடக் கூடாதுதானே? யோசிக்கலானேன். அறிஞர் ஆல்பர் ஐன்ஸ்டினின் கூற்று நினைவுக்கு வந்தது. வெற்றி கொள்வதில் இல்லை வாழ்வு, மதிப்புக் கொள்வதில் இருக்கின்றது.  “Try not to become a man of success, but rather try to become a man of value” ― Albert Einstein


5/04/2023

தனிமையெனும் கொள்ளைநோய்

சுற்றிலும் ஆட்கள் இருக்கின்றனர் என்பதாலேயே நாம் தனிமையாக இல்லை என்பதல்ல பொருள். ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பிணைப்போடு இருக்கின்றோமென்பதில் அடங்கி இருக்கின்றது பிணைப்பின் தரம். சென்ற மாதத்தில் ஒரு பேச்சொலியைப்(ஆடியோ) பதிவு செய்து வெளியிட்டிருந்தேன். அதில் இப்படியாக முடித்திருப்பேன், “ஒவ்வொருவருக்கும் தத்தம் வாழ்வுக்கான பயனீடு(purpose) இருக்கும். இயன்றமட்டிலும் தனிமையைக் களைவதை என் வாழ்வின் பயனீடாக் கொள்வேன்”.

மே 2ஆம் நாள், அமெரிக்க மருத்துவத்துறைத் தலைவரின் கட்டுரையொன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் குறிப்பிடுகின்றார், கோவிட் பெருந்தொற்று வருவதற்கு முன்பிருந்தேவும் அமெரிக்காவைத் தனிமையெனும் கொள்ளையோய்(epidemic) பீடித்திருக்கின்றது. https://www.npr.org/2023/05/02/1173418268/loneliness-connection-mental-health-dementia-surgeon-general

நிகழ்ந்த இருவேறு பற்றியங்களைக் குறிப்பிடுவது உசிதமாக இருக்கும். நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு வாட்சாப் குரூப். கிட்டத்தட்ட 110 பேர் வரையிலும் அதில் இருந்தனர். எல்லா வாட்சாப் குரூப்களைப் போலவே, இதிலேயும் ஃபார்வர்டுகளாகப் பகிர்வர். குட்மார்னிங் செய்திகள். பிறந்தநாள், திருமணநாள் போன்றவற்றுக்கான வாழ்த்துகள். பொது உரையாடலாக எது குறித்தும் பேச மாட்டார்கள். அப்படியே பேசுவது என்றாலும், பகிர்கின்ற பதிவுகளுக்கு, சூப்பர், அருமை போன்றன இடுவார்கள். ஒருகட்டத்தில், இரு குரூப்களாக ஆகிவிட்டது. முதலாவதில், இன்னமும் அதே போக்குத்தான். அடுத்ததில், நண்பர்களுக்குள் பேசிக்கொள்வது, கிண்டல் கேலி, பகிரும் செய்திகளைக் கேள்விக்குள்ளாக்குவதென உயிர்ப்புடன். இதேநிலைதான் சமூகத்திலும்.

உறவினர்களுக்கென ஒரு வாட்சாப் குரூப். நாற்பது, ஐம்பது பேர் இருக்கின்றனர். உரையாடல் என்பது எதுவும் இராது. வாழ்த்துச் செய்திகள் மட்டும் இடம் பெறும். இதேநிலைதாம் குடும்பங்களிலும். சாப்பிட்டாயா, சாப்பிட்டேன். கடைக்குப் போனாயா, போய்வந்தேன். பில் கட்டியாச்சா, கட்டியாச்சு. அவ்வளவுதான். சின்னஞ்சிறு கதைகள் பேசி, தூக்கிவிடக் கரம் நீட்டிக் களிப்புக் கொள்வதெல்லாம் பகற்கனாவாகி விட்டது.

வாழ்வென்பது ஒரு பயணம். பயணத்தில், காணும் காட்சிகளும் பேச்சுகளுமென ஐம்புலன்களினூடாகப் பெறுகின்ற அனைத்தும் நமக்கு வாழ்வின் பயனை, அனுபவத்தை ஈட்டித் தருகின்றன. இந்த ஐம்புலன்களின் பாவனையென்பது ஒன்றுக்கொன்று மிகாமலும் குறையாமலும் சீரோடு இருந்துவிட்டால் நலம். மேம்பட்டதாக இருக்கும். 

மருத்துவத்துறைத் தலைவர் சொல்கின்றார், “People now use social media as a replacement for in-person relationships, and this often meant lower-quality connections". இதில் இருவிதமான பின்னடைவுகளைக் காணமுடிகின்றது. முதலாவது, மனிதனோடு மனிதன் பேசுகின்றது(பலுக்கல்) இல்லாமற்போய் விடுகின்றது அல்லது குறைந்து போய் விடுகின்றது. அடுத்தது, சார்புத்தன்மை கொண்ட முன்பின் தெரிந்திராத அனாமதேயர்களுடனான நேரவிரயம் கோலோச்சுகின்றது. இப்படியாகக் கூட்டமாக இருந்தாலும், கூட்டத்தில் தனித்தனி ஆட்களாக இருக்க நேரிடுகின்றது. ஆறுதலும் ஊக்கமும் தேவையாக இருக்கின்ற நேரத்திலே ஈடு செய்ய ஆளில்லை.

நேரடியாகப் பாதிக்கப்படுவது ஐம்பது வயதுக்கும் மேற்பட்டோர். மருத்துவத்துறை அறிக்கை சொல்கின்றது, ”physical consequences of poor connection can be devastating, including a 29% increased risk of heart disease; a 32% increased risk of stroke; and a 50% increased risk of developing dementia for older adults”. எப்படி? தனிமையின் காரணம் ஊக்கமிராது. ஊக்கமில்லாவிடில் உடற்பயிற்சி உள்ளிட்ட உடலுக்கான நகர்வுகள் இராது. போதிய உணவுப்பழக்கம் இராது.

In response, the advisory outlines the framework for a new national strategy. It is based on six foundational pillars, which are:

1. Strengthening social infrastructure, which includes things like parks and libraries as well as public programs.

2. Enacting pro-connection public policies at every level of government, including things like accessible public transportation or paid family leave.

3. Mobilizing the health sector to address the medical needs that stem from loneliness.

4. Reforming digital environments to "critically evaluate our relationship with technology."

5. Deepening our knowledge through more robust research into the issue.

6. Cultivating a culture of connection.

முதல் ஐந்தும் அரசுக்கானவை, அமைப்புகளுக்கானவை. தனிமனிதனாக நாம் என்ன செய்ய வேண்டும்? நேரிலும் சரி, தொழில்நுட்பக் கருவிகளூடாகவும் சரி, மனிதன் சகமனிதனிடம் பேச வேண்டும். அலுவல் அல்லாத வாட்சாப் குரூப்களை, நண்பர்கள் உறவினர்களுக்கான வாட்சாப் குரூப்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். எந்திரத்தனமாக அவற்றுள் கிடந்து தனிமையெனும் கொள்ளைநோய்க்கு நெய் வார்க்கக் கூடாது. சமூகவலைதளங்களின் பயன்பாட்டைச் சீரமைத்துக் கொள்ள வேண்டும்.

https://www.npr.org/2023/05/02/1173418268/loneliness-connection-mental-health-dementia-surgeon-general