12/20/2025

எழுத்தாளர் பிரபஞ்சன்

எழுத்தாளர் பிரபஞ்சன்

தமிழிலக்கிய உலகின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவரான பிரபஞ்சன் (1945–Dec 21, 2018), புதுச்சேரியைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர், விமர்சகர் ஆவார். இவருடைய இயற்பெயர் எஸ். வைத்தியலிங்கம். மனித உறவுகளின் சிக்கல்கள், வரலாற்றுப் பின்னணிகள், விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக இருந்துள்ளார்.

இவரது படைப்புகளில் மிக முக்கியமானது 'வானம் வசப்படும்' எனும் வரலாற்று நாவல். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலுக்காக, 1995-ஆம் ஆண்டு இவருக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. ஆனந்தரங்கம் பிள்ளை (1709–1761) என்பவர் புதுச்சேரியில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற வரலாற்றுப் பதிவாளர்.. இவர் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும், பிரெஞ்சு ஆளுநர் டூப்ளெக்ஸின் மிக நெருங்கிய உதவியாளராகவும் பணியாற்றினார்.

பெண்களின் உணர்வுகளையும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் மிகுந்த புரிதலுடனும் மரியாதையுடனும் தனது கதைகளில் கையாண்டவர் பிரபஞ்சன். மிகக் கடினமான தத்துவங்களைக் கூட பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், எளிய  அழகான தமிழ் நடையில் எழுதுவது இவரது தனிச்சிறப்பு. 'மானுடம் வெல்லும்', 'மகாநதி', 'பெண்' உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்களைப் படைத்துத் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்தியுள்ளார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின், 2004ஆம் ஆண்டுத் தமிழ்விழாவுக்காக அமெரிக்கா வருகை புரிந்துள்ளார். பேரவை மாநாட்டில், மாந்தநேயமும் நுண்ணுணர்வும் நகையுணர்வும் கூடிய கதைகளைச் சொல்லி சிறப்பானதோர் உரையை வழங்கியதன் வாயிலாக, மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 25 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்திருக்கின்றார்.

எழுத்தாளர் பயிற்சிப்பட்டறை, வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் 25ஆவது ஆண்டு விழாக்கூட்டமெனப் பல நிகழ்வுகளில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் கலந்து கொண்டிருக்கின்றார். https://shorturl.at/3xdl2 ஊருக்குச் சென்றான பின், அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்துப் பேசியிருக்கின்றார்.

”நிறைய பேருக்கு இந்தியா திரும்பி வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது முடியாது என்பதுதான் உண்மை. அமெரிக்காவிலும் சாதி சங்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சமுதாயக் கூட்டங்கள் என்று இதனைச் சொல்கிறார்கள். மனவேதனை அளித்த விஷயம் அது. நவீன இலக்கியம் நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தன் என்ற பெயர் தெரிந்திருக்கிறது. விதிவிலக்குகளாக சில பேர் இருக்கிறார்கள்”. 21 ஆண்டுகளுக்கும் முன்னர்.

இந்தப் பின்னணியில், இன்று இடம் பெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கிய அமர்வு, https://shorturl.at/4719d நமக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மாந்தநேய, வாழ்வியல்க்கதைகள், மானுடவியல் நுண்ணுணர்வுகள் ஏன் நமக்கு முக்கியமென்பதை பிரபஞ்சன் நமக்குப் படம் பிடித்துக் காண்பிக்கின்றார்.

அண்மையில் நாம் நேரடியாகப் பெற்ற அனுபவம். Holistic review in MD admissions is a mission-aligned selection process that evaluates applicants based on a balanced combination of Experiences, Attributes, and Academic Metrics (E-A-M). Rather than relying solely on test scores and GPAs, admissions committees assess how an individual’s unique journey and qualities will contribute to the medical school’s learning environment and the future physician workforce. 

நிறைமதிப்பீடுகள். ஆனால் கிடைக்குமா கிடைக்காதாயெனக் காத்துக் கிடக்கின்றனர். காத்துக் கிடப்பதென்பது பெரும் வாதை. அவ்வளவாக மதிப்பீடுகள் இல்லாத நிலையிலும் சிலருக்கு இடங்கள் உறுதி செய்யப்படுகின்றன. என்ன காரணம்? அவர்களின் மாந்தநேய அடிப்படையிலான அணுகுமுறையும் தன்னார்வப்பணிகளும்.

ஒருவருக்கு இத்தகைய மனப்பான்மை மனத்துள் தரிக்கப் பெற்றிருந்தால் சிறப்பு. சரி, ஒருவருக்கு அது எப்படி வாய்க்கப்பெறும்? இளம்வயதிலேயே வாழ்வியல்க் கதைகளைப் பெருமளவில் நுகர்ந்திருந்தால் மனப்பண்பாடு அமையப் பெற்று, சமூகத்துக்கான தொண்டு மனப்பான்மை உருப்பெறும்.

எழுத்தாளுமை பிரபஞ்சன் அவர்களின் படைப்புகள், காலமெல்லாம் நின்று வாழும்!

-பழமைபேசி.


12/17/2025

2025 பேரவைத் திருவிழா - பன்மைத்துவப் பெருவிழா

பண்பாட்டு மாநாடுகளில் சமநிலையைப் பேணுவதற்கான பல முக்கியமான பற்றியங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பண்பாட்டு விழாக்களில் பன்மைத்துவம் என்பது வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் உயிர்ப்பாகும். பலதரப்பு மக்களுக்கும் உரிய கவனத்தைக் கொடுத்து, பங்களிப்புக்கான இடத்தைக் கொடுத்து, சமநிலையோடு நன்றி பாராட்டி ஒன்றிணைந்து கொண்டாடும் போது, நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு உறவு தழைக்கின்றது. நம் பிள்ளைகள் இத்தகைய மாநாடுகளைப் பார்க்கும்போது, உலகம் என்பது பலதரப்பட்ட மக்களைக் கொண்டதென்பதை இயல்பாகவே புரிந்துகொள்கிறார்கள். இது அவர்களையும் நம்மையும் சகிப்புத் தன்மை கொண்டவர்களாகக் கட்டமைத்துக் கொள்ள வழிகோலுகின்றது.

🎭 உள்ளடக்கம், பல்சார்புப்பங்களிப்பு 

பல்வேறு விழுமியங்கள், கோட்பாடுகளின் வெளிப்பாடுகள்; மாநாட்டில் விவாதிக்கப்படும், காட்சிப்படுத்தப்படும் விழுமியங்கள், சிந்தனைகள் ஒரே வட்டத்திற்குள் அடங்கிவிடாமல், பரந்துபட்ட, வட்டார, சகல தரப்புப் பண்பாடுகளையும் விருப்பங்களையும் சமமாக வெளிப்படுத்தவும் உட்பட்டதாயும் இருத்தல் வேண்டும்.

பல்வேறு கருப்பொருள்கள்: கலை, இலக்கியம், மொழி, வரலாறு, உணவு, இசை, உடை போன்ற பல்வேறு பண்பாட்டுப் பண்புகளுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கூறு ஓங்கலான ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பழமை, புதுமை: பாரம்பரிய, பழமையான பண்பாட்டு வடிவங்களுடன், சமகால பண்பாட்டுப் போக்குகளுக்கும் இடம் அளிக்க வேண்டும்.

🎤 பேச்சாளர்கள், பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், அரங்குகள்

இணையான வாய்ப்பு: மாநாட்டுப் பேச்சாளர்கள், குழு விவாத அறிஞர்கள், வழங்குநர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, பாலினச் சமநிலை, பல்வேறு வயதுக் குழுக்கள், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புக்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.

மாறுபட்ட சிந்தனைகள்: கல்விசார் அறிஞர்கள், கலைஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் என மாறுபட்ட பின்னணிகளைக் கொண்டவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்.

சிறுபான்மைக்குரல்: மாநாட்டில் குரல் குறைவாக ஒலிக்கக்கூடிய சிறுபான்மை, ஒதுங்குநிலைச் சமூகங்களின் பண்பாடுகளுக்கும் அவர்களின் தரப்பாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

📝 நடைமுறை ஏற்பாடுகள் 

மொழி அணுகல்த்தன்மை: பேச்சுகள், நிகழ்வுகள், ஆவணங்களைச் சீரான முறையிலும் ஏற்றத்தாழ்வுக்கு இடமளிக்காத வகையிலும் தொடர்ந்து இடம் பெறச்செய்தல் வேண்டும்.

வெளிப்படையான கொள்கைகள்: பங்கேற்பாளர்கள், கலைநிகழ்ச்சிகள், பேச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வரையறைகள், கொள்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

🧘 உரையாடல் அணுகுமுறை 

திறந்தமனப்பாடு: விமர்சனங்கள், மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், கருத்தாடல்கள் எல்லாத் தரப்பினருக்கும்  இடமளிக்கக் கூடிய வகையிலும், பண்பட்ட முறையில் நடைபெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை: எந்த ஒரு கூற்றினையும் தரப்பினையும் மதிப்புக் குறைவாக வெளிப்படுதலைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஆக்கிரமிப்பு, மேலாதிக்கம், வியந்தோதலின் வீச்சு எல்லைமீறப்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மறுமொழிகள்: மாநாடு முடிந்த பிறகு, பங்கேற்பாளர்களிடம் இருந்து கருத்துகள் பெற்று, அடுத்த மாநாட்டில் சமநிலையை மேலும் மேம்படுத்த முயன்றாக வேண்டும்.

இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம், மாநாடு என்பது, அனைவரையும் உள்ளடக்கிய, மரியாதைக்குரிய, பண்பாட்டுப் பன்முகத்தன்மையைக் கொண்ட ஒரு தளமாக அமைந்து விடுகின்றது. சிற்சிறு நகர்வுகளையும் நன்கு திட்டமிட்டு, அன்பையும் அக்கறையையும் சேர்த்துச் சேர்த்து, குருவி கூடு கட்டுவதைப் போல, ஒவ்வோர் இணுக்கு இணுக்காகக் கொணர்ந்து கொணர்ந்து, பின்னிப்பின்னிக் கட்டமைப்பதற்கான உழைப்பினை, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் செய்கின்றபடியால்தான் இப்படியான மாநாடு நமக்கு வாய்க்கப் பெறுகின்றது. அத்தகைய கூட்டுப்பணிக்கு இடைஞ்சலாக, திட்டமிட்டுக் குறுக்கீடுகள் நிகழும்போது எவனொருவனும் அறச்சீற்றம் கொண்டாக வேண்டும். 𝐇𝐮𝐦𝐚𝐧𝐢𝐭𝐲 𝐬𝐭𝐚𝐧𝐝𝐬 𝐭𝐨𝐝𝐚𝐲 𝐛𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐮𝐧𝐬𝐞𝐞𝐧 𝐰𝐨𝐫𝐤 𝐨𝐟 𝐬𝐞𝐥𝐟𝐥𝐞𝐬𝐬 𝐚𝐜𝐭𝐢𝐯𝐢𝐬𝐭𝐬.

ஜூலை 6, 2025. இலக்கியக் கூட்டத்தில் பேசிய ஆளுமைகள் எல்லோராலும் சொல்லப்பட்டு அன்று, வலியுறுத்திச் சொல்லப்பட்ட கருத்துதான் இது. ”பன்மைத்துவம் ஓங்கிய பெருவிழா, இந்தக்கால கட்டத்தில் இது போன்ற விழாக்களைத் தமிழ்ச்சூழலில் காணக்கிடைக்காத விழா”. குறிப்பாக, இலக்கிய ஆளுமைகள் சு.வேணுகோபால் அவர்களும், ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களும் வெகுவாகப் பாராட்டிப் பேசினர். ‘பெருமாள் முருகன் வரக்கூடாது; அண்ணாமலை வரக்கூடாது; ஸ்டாலின் ராஜாங்கம் வரக்கூடாது; செந்தலை கவுதமன் வரக்கூடாது”, இது போன்ற வரக்கூடாதுகள் பிற்போக்கானவை. எல்லாத் தரப்புகளும் வர வேண்டும். நமக்குள் பண்பட்ட உரையாடல்கள் நிகழவேண்டும். நமக்குள் இணக்கம் மேலோங்க வேண்டும். அழைக்கப்படுகின்ற விருந்திநர் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்க வேண்டும். அதே நேரம் சமநிலை தவறாமல், சீர்த்தன்மைப் பிறழ்வின்றிச் சகலகூறுகளும் இடம் பெற வேண்டும். தனிப்பட்ட பகைமைகளைப் பாரமாக்கி, மேட்டிமைகளைத் தூக்கித் திரிந்து கொண்டிருத்தல் என்றென்றும் ஆகாது. யாதும் ஊரே யாவரும் கேளிர்! 

ஐயா மணியரசன் அவர்கள், தாமாகவே நம்மை அழைத்து, ’நீங்கள் யார்?, பல இடங்களில் உங்களைப் பார்க்கின்றேன், மங்காத தமிழென்று சங்கே முழங்கு என நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது கண்டு மகிழ்கின்றேன்’ என்றெல்லாம் சொல்லி, பாவேந்தர் பாரதிதாசன் குறித்துத் தம் நினைவுகளைப் பகிர்ந்து ஊக்கமூட்டிப் பேசினார்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது ஆண்டு விழா, கேரொலைனா தமிழ்ச்சங்கத்தின் செம்மாந்த விருந்தோம்பல்ப் பெருவிழா, பன்மைத்துவம் போற்றியதன் உச்சகட்டம். அதில் நாமும் பங்காற்றினோமென்பதில், தன்னார்வலர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்நாள்ப் பெருமை உண்டு. வாழிய நற்றமிழ்!

𝐌𝐞𝐠𝐚 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐡𝐚𝐩𝐩𝐞𝐧𝐬 𝐰𝐡𝐞𝐧 𝐨𝐩𝐭𝐢𝐦𝐢𝐬𝐦, 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲, 𝐚𝐧𝐝 𝐭𝐨𝐥𝐞𝐫𝐚𝐧𝐜𝐞 𝐣𝐨𝐢𝐧 𝐟𝐨𝐫𝐜𝐞𝐬.

-பழமைபேசி.


#Truth,Transparency & Trust

#FeTNA2025

#Empathy

#Inclusiveness


12/16/2025

பேரவை விழா 2025 - மாநாட்டு மேடை நிரல் மேலாண்மை

 

மாநாட்டு மேடை நிரல் மேலாளர் என்பது திட்ட மேலாண்மை, மக்கள் தொடர்பு, நிகழ்நேர செயலாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முக்கியப் பணியாகும். இந்த நபர், நிகழ்ச்சி உள்ளடக்கத்தையும் அட்டவணையையும் கவனிக்கும் நிரல் மேலாளரின் பொறுப்புகளையும், அதே சமயம் மேடையின் தொழில்நுட்பச் செயல்பாட்டைப் பிழையின்றி இயக்கும் ஒலி ஒளி நுட்ப மேலாளரின் கடமைகளையும் ஒருங்கிணைப்பவர் ஆவார்.

மாநாட்டுக்கு முன்னதான பணிகள்

  • பங்களிப்பாளர்கள், பேச்சாளர்கள், வீடியோ இடைவேளைகள், மேடை மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அட்டவணையையும் இறுதி செய்தல்.
  • அனைத்துப் பேச்சாளர்கள், பங்களிப்பாளர்களிடம் அவர்களின் ஸ்லைடுகள், வீடியோக்கள், இசைக் குறிப்புகளை முன்கூட்டியே சேகரித்தல்.
  • ஒளி, ஒலி, வீடியோ தொடக்கம், பேச்சாளர் நுழைவு போன்ற ஒவ்வொரு தொழில்நுட்பக் குறிப்பையும் உள்ளடக்கிய விரிவான நிகழ்ச்சிப் பட்டியல்  ஆவணத்தை எழுதுதல்.
  • உள்ளடக்கம் மற்றும் பேச்சாளர்களின் தேவைகளின் அடிப்படையில் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு (மைக், மானிட்டர்கள், லைட்டிங்) வழிகாட்டியை வழங்குதல்.
  • பேச்சாளர்கள், கலைஞர்கள் மற்றும் குழுவினர் வந்து செல்லும் பாதைகள் தெளிவாக இருக்க, மேடைக்குப் பின்னால் உள்ள பகுதிகளை வடிவமைத்தல்.

மாநாட்டுத் தருணம்

  • அடுத்த பேச்சாளர் சரியான நேரத்தில், மைக்கைப் பொருத்திக்கொண்டு, மேடைக்குத் தயாராகக் காத்திருப்பதை உறுதி செய்தல்.
  • நிகழ்ச்சிப் பட்டியலின் நேரத்தையும், நிகழ்நேர நேரத்தையும் தொடர்ந்து கண்காணித்தல். ஒரு பேச்சாளர் அதிக நேரம் எடுத்துக் கொண்டால், நிகழ்ச்சியின் நேர அட்டவணையைக் காக்க, அடுத்த பகுதியின் நேரத்தைக் குறைக்க தயாரிப்பாளருடன் ஒருங்கிணைத்தல்.
  • விருதுவழங்கல், பாராட்டுரைகள், சிற்றுரைகள், நெறியுரைகள் முதலானவற்றை நேரத்துக்குத் தக்கபடி செயல்படுத்துதல்.
  • ஏதாவது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், உடனடியாகக் குழுவினருக்குத் தீர்வை விரைவாகத் தெரிவித்து, பார்வையாளர்கள் எந்தவிதக் குழப்பமும் அடையாமல் பார்த்துக் கொள்வது.
இப்படியாக, மாநாட்டு மேடை நிரல் மேலாளர் என்பவர், தொழில்நுட்பத் துல்லியத்துடனும், சரியான நேரத்துடனும், அமைதியான அணுகுமுறையுடனும் நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் ஆவதனை உறுதிசெய்யும் செயல்பாட்டு முதுகெலும்பாக ச் செயல்படுவர்.

நிகழ்ச்சிக்குழு என்பது, விருந்திநர்களையும் இடம் பெறும் நிகழ்ச்சிகளையும் தெரிவு செய்யும் குழு. நிகழ்ச்சிநிரல் அமைப்புக்குழு என்பது, மாநாட்டின் முக்கிய அரங்கில் இடம் பெறும் நிகழ்ச்சிகளுக்கான நிரல்வகுக்கும் குழு. மாநாட்டு மேடை நிரல் மேலாளர் குழு என்பது, நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதோடு மேடையை நிர்வகிப்பவர் அல்லது மேலாண்மை செய்பவர்கள் குழு.

2025 பேரவை மாநாட்டினைப் பொறுத்தமட்டிலும், நாம் நிகழ்ச்சிக்குழுத் துணைத்தலைவர் எனப் பெயரளவில் இருந்தாலும் கூட, ஒன்றமுடியாமல், ஒரு கட்டத்தில் குழுவிலிருந்தேவும் வெளியேறிவிட்டோம். நிகழ்ச்சி நிரல்வகுப்புப் பணிகளைச் செய்து வந்தோம். கடைசி கட்டத்தில் நம் ஆன்மாவுக்கு எதிராக நம்மால் செயற்பட முடியவில்லை. 2025 ஜூலை 1ஆம் நாள் நண்பகல்வாக்கில், தார்மீக எதிர்ப்பு களுடன் நம் பணிகளை முடித்துக் கொண்டோம். ஆதிக்க, அதிகார சக்திகள் நிரலைக் காவு கொண்டு விட்டன. தோராயமாக நம்மால் வகுக்கப்பட்டிருந்த 85% நிகழ்ச்சிகள் செம்மையாகவே இடம் பெற்றன. ஆனால், இடைச்செருகலாக என்னவெல்லாம் புகுத்தப்பட்டனவோ, ஒன்றுவிடாமல் அத்தனையும் நேரக்கடைபிடிப்பில் தோற்றுப் போயின; நிலைகுலைந்தும் போயின. மக்கள் இரசிக்கவில்லை.  இன்னின்னது எங்கள் தேவைகள்; செய்து தாருங்களெனச் சொல்லி இருந்தால், நாமே செம்மையாகச் செய்தும் கொடுத்திருப்போம். அதிகாரத்தை நம்பினார்கள் போலும். Honest work may be quiet, but it’s undefeated.

இத்தனைக்கும் பிறகும், ஜூலை மூன்றாம் நாள், மாநாட்டுக்கும் முதல்நாள், நண்பர்களுடன் இணைந்து மேடை நிர்வாகத்தைச் செம்மையாகக் கையாள்வது குறித்தான கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஆலோசனைகள் பெறப்பட்டன. விருதுகளை இனங்காணுதல், தனித்தமிழில் அவ்விருதுகளுக்குப் பெயர் சூட்டுதல், பட்டயம் உருவாக்குதல் முதலான பணிகளிலும் நாம் ஈடுபட்டிருந்தோம். தொகுப்பாளர்களுக்கான சிற்றுரைகளையும் கட்டமைத்திருந்தோம். காலை ஆறரை மணிக்கெல்லாம் மாநாட்டு அரங்குக்கு முதல் ஆளாகச் சென்றிருந்தோம். மாநாட்டு மேடை நிரல் மேலாளர் பணியை நாம் ஆற்றுகின்ற வாய்ப்பு நமக்கு அமைந்திருக்கவில்லை. மாநாட்டிலிருந்து கிளம்பும் தருவாயில், கடந்தகாலத்தில் நம்மால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த முன்னாள் தலைவரொருவர் சொன்னார், “இது பேரவைவிழா இல்லை. பழமைபேசியின் பேரவை விழா”. நாம் சொன்னோம், “ மெய்யாலுமே ஊர்கூடித் தேரிழுத்த சாமான்ய மக்களின் வரலாற்றுப் பெருவிழா

𝐁𝐚𝐥𝐚𝐧𝐜𝐞 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞𝐬 𝐡𝐚𝐫𝐦𝐨𝐧𝐲, 𝐢𝐧𝐬𝐢𝐝𝐞 𝐚𝐧𝐝 𝐨𝐮𝐭.

-பழமைபேசி.

#Truth,Transparency & Trust
#FeTNA2025
#Empathy
#ConventionStageProgramManager


12/15/2025

பேரவை விழா 2025 - நிகழ்ச்சி நிரல்க் கட்டமைப்பு 2

வேலையின் தன்மை, தரவுகள், முடிவெடுத்தல், செயல்முறைகள் தொடர்பாகத் திறந்த மனப்பான்மை, அணுகல், தெளிவு ஆகியவற்றை மேம்படுத்த, கையில் உள்ள தொழில்நுட்பத்தை நேரிய வழியில் பயன்படுத்துவது உகந்தது. தொழில்நுட்பம் என்பது தற்போது வெறும் உற்பத்தித்திறனுக்கானது மட்டுமல்ல; வெளிப்படையான கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதன்மை வழிமுறையாகவே நாம் கருத வேண்டும்.

தொழில்நுட்பப் பயன்பாடு என்பது, விவாதங்கள், கூட்டக்குறிப்புகள், ஆவணங்களை ஒருங்கே திரட்டி, முடிவுகளையும் அவற்றின் காரணங்களையும்  பதிவுகளாக ஆக்கி, தேடக்கூடியதாகவும், சான்றுகளாகவும் வெளிப்படைத் தன்மையைக் கட்டமைப்பதையும் உறுதி செய்கின்றது. அந்த வகையில் நிகழ்ச்சிநிரல் வகுப்பிலும், தரவுகளும் செய்யறிவுத் தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டன.

2009 - 2017 ஆண்டுகளுக்கிடையேயான சில ஆண்டுகளின் நிகழ்ச்சி நிரல்களை செய்யறிவுத் தொழில்நுட்ப வழங்கியிடம் கொடுக்கவும், அது அவற்றைப் பகுப்பாய்ந்து பொதுவான ஓர் அட்டவணையைக் கொடுத்தது. அதன்படிக்கு, முதல்நாள் இத்தனை மணி நேரம், இரண்டாம் நாள் இத்தனை மணி நேரம், ஆண்டுதோறும் இடம் பெறுகின்ற நிகழ்ச்சிகள் இன்னின்னவை, அவை ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு காலம் என்பதையெல்லாம் கொடுத்து, ஒரு மாதிரி நிரலையும் நமக்குத் தந்துவிடுகின்றது.

மேற்படித் தரவுகள் நிகழ்ச்சிக்குழு, வழிகாட்டுதல்க்குழு ஆகியவற்றிடமும் காண்பிக்கப்பட்டு, கூடுமானவரையில் கிட்டத்தட்ட 50 விருந்திநர்கள் வரையிலும் அழைக்கலாமென்பதாகப் பணிகள் துவங்கின. செய்யறிவு(AI) கொடுத்த வரைவினையே அடிப்படையாகக் கொண்டுதாம் நிகழ்ச்சிநிரல்ப் பணிகளும் இடம் பெற்றன. இப்படியான நிகழ்ச்சிநிரல் என்பது தகவல் தொடர்புக்குரிய மின்னஞ்சல் கணக்கில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் கூட, தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட சிலருக்கும் இணைப்பராமரிப்பு (edit access) வழங்கப்பட்டிருந்தது.  எந்தவொரு திருத்தமும் தன்னிச்சையாகச் செய்யப்படவில்லை. தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையிலேயே ஒவ்வொன்றும் செய்யப்பட்டன.

70% அளவுக்கு அட்டவணை முதிர்ச்சித் தன்மை கண்டதுமே, சுட்டி(url) இருப்போர் எவரும் பார்க்கக்கூடிய அளவில் வசதியமைப்புச் செய்யப்பட்டு ஒலி ஒளிக்குழுவினரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது. காரணம், அவர்கள் ஒவ்வொரு நிகழ்ச்சிப் பொறுப்பாளரிடமும் நேரிடையாகப் பேசவும் ஒலி, ஒளி, நுட்பங்களைப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கும் வசதியாக. அந்த நாளிலிருந்து, அது நிகழ்நிலை ஆவணமாகவே இன்று வரையிலும் இருந்து வருகின்றது.

95% முதிர்ச்சி கண்டவுடன், செயற்குழுவின் ஒப்புதலுக்குப் பகிரப்பட்டது. சில திருத்தங்கள் சொல்லப்பட்டன. தலைவர், ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அவை செய்யப்பட்டன. பிற்பாடு, நிகழ்ச்சிக்குழுவுடன் பகிரப்பட்டது. சில நிகழ்ச்சியின் பெயர்கள், வடமொழி, ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றுக்கான மாற்றுப் பெயர்கள் வைக்கச் சொல்லப்பட்டது. அப்படியாகப் பெயர்கள் மாற்றப்பட்டன. வழிகாட்டுதல்க் குழுவுக்கும் பகிரப்பட்டது. இப்படியாக அந்தச் சுட்டியினூடாக, நிகழ்நிலை ஆவணம் பொதுப்பார்வைக்கும் திறந்துவிடப்பட்டது. 

மேற்படிக்குழுக்களின் ஒப்புதல்களும் திருத்தங்களும் செய்யப்பட்டு இன்றளவும் பேரவைக் கணக்கில் காணக்கிடைக்கும் ஆவணம் இதுதான். https://shorturl.at/WLrx3 ஜூலை 2ஆம் நாளுக்குப் பின்னர் எவ்விதத் திருத்தங்களும் எம்மால் மேற்கொள்ளப்படவில்லை. இணைப்பராமரிப்பாளர்கள், பதிப்பு வரிசையையும்(version history) இன்றளவும் காணமுடியும். மனிதர்கள் மாற்றிப் பேசலாம். ஆவணங்கள் பேசுவதில்லை.

𝐃𝐨𝐜𝐮𝐦𝐞𝐧𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐚𝐧 𝐚𝐜𝐭 𝐨𝐟 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲 𝐟𝐨𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐫𝐞𝐚𝐝𝐞𝐫𝐬, 𝐢𝐧𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐬𝐞𝐥𝐟.

-பழமைபேசி,

#Truth,Transparency & Trust
#FeTNA2025
#Empathy
#ProgramLineUp

12/14/2025

பேரவை விழா 2025 - நிகழ்ச்சி நிரல்க் கட்டமைப்பு



உழைப்புக்கு நிகர் எவருமில்லை. துணிந்தவனின் சாதனைகளுக்குத் தடைகள் வந்திடினும் இலக்குகளில் மாற்றமிருப்பதில்லை . 2009ஆம் ஆண்டு துவக்கம், 2017ஆம் ஆண்டு வரையிலான நிகழ்ச்சி நிரல்கள், ஒவ்வோர் ஆண்டும் நம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். காரணம், இரண்டு நாள் நிகழ்வுகளுக்கான தொகுப்புரைகள் எழுதுவது நாம்தான். மணித்துளிக்கு மணித்துளி, நேர விரயம் ஏற்பட்டு விடக் கூடாதெனும் அக்கறையும் ஈடுபாடும் மேலோங்கி இருக்கும். அந்தப் பின்னணியில், தகவல்தொடர்பு , வட அமெரிக்க வாகை சூடி , இவற்றுடன் நாம் ஈடுபட்டுக் கொண்டது நிகழ்ச்சி நிரல் கட்டமைப்பு .

நாம் பார்த்த பணிகளில், மிகவும் நுணுக்கமாகப் பார்த்துப் பார்த்துச் செய்ததில் அதிக உழைப்பினை எடுத்துக் கொண்டது இப்பணிதாம். முதல்நாள் ~35 நிகழ்ச்சிகள், இரண்டாம் நாள் ~30 நிகழ்ச்சிகள், இவற்றை ஒன்றுக்கொன்று முரண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பங்களிப்பாளர்களின் முகம் கோணாமல், அன்பையும் அக்கறையையும் குழைத்துக் குழைத்து, அவர்களின் வேண்டுதலுக்கெல்லாம் “no" சொல்லாமல், அதேநேரம் நிரலும் நிறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, காலை பதினொரு மணிக்கு இன்ன நிகழ்ச்சி என்றால், அதில் பங்கேற்கும் இந்த இன்னின்னார், அதே நேரத்தின் இலக்கிய இணையரங்கு நெறியாளர்கள் எனத் தகவல் வரும். தீர்வு கண்டாக வேண்டும். இன்ன நிகழ்ச்சிக்கு 40 மணித்துளிகள் என்றால், அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், எனக்கு ஒரு மணி நேரம் கொடுங்களென்பார். ஐந்து பத்து மணித்துளிகள் கூட்டிக் கொடுத்து அவரையும் அவர்தம் குழுவினரையும் மகிழ்ச்சியாக, அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். 65 நிகழ்ச்சிகள், அதன் பங்களிப்பாளர்களின் தேவைகள், நேரம், இணையரங்குகள், போட்டிகள் இவற்றையெல்லாம் அணு அணுவாகப் பார்த்துப் பார்த்து அவதானித்துச் செல்வதின் வழிதான் இது ஈடேறும் . அதிகார சக்திகளுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் இவை குறித்துக் கவலையிராது. தேர்ந்த களப்பணியாளர்களுக்கு மட்டுமே புரியக் கூடியன இவை.

பொதுவாக இரு நாள் விழாக்களின் நிகழ்ச்சி நிரல்க் கட்டமைப்பு எப்படி இருத்தல் வேண்டும்?

1. ⚡ ஆற்றல் மேலாண்மை, வேகக்கட்டுப்பாடு (Energy Management and Pacing)

மூன்று நாள்களிலும் எழுச்சி குறையாமல், தளவு, தொய்வின்றி, வருகையாளர்களின் உற்சாகம் குன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியானால், பங்களிப்பாளர்களை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். வெறுமனே பார்வையாளர்களாக இருக்கவிடக் கூடாது.

நாள் 1: வலுவாகத் தொடங்கி உத்வேகத்தைக் கட்டியெழுப்புதல்

துவக்கம் : அதிக ஆற்றல் கொண்ட, ஊக்கமளிக்கும், அல்லது அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுடன்(எ.கா: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு, போட்டி) தொடங்கி, ஒரு வலுவான தொனியை அமைத்து, பங்கேற்பாளர்களின் பங்களிப்பை  உறுதிப்படுத்த வேண்டும்.

உச்ச நேரம் : பங்கேற்பாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கும் பிற்பகலுக்கு முன்னதான நேரத்தில், அதிக கவனம் தேவைப்படும் அல்லது மிகவும் முக்கியமான உள்ளடக்கத்தைக் கொண்ட நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

முடிவு : முதல் நாளை ஒரு முக்கியமான நிகழ்ச்சி, சமூகச் செயல்பாடு, அல்லது தமிழ்ப் பண்பாடு சார்ந்த தூக்கலான நிகழ்ச்சியுடன் முடிக்க வேண்டும். இது ஒரு வெகுமதியாகவும், உறவுகளை உருவாக்க உதவுவதாகவும், இரண்டாம் நாள் தவறவிடக் கூடாதெனும் விரைவுத் தொனியில் திரும்புவதற்கு ஒரு வலுவான காரணமாகவும் இருக்கும்.

நாள் 2: ஈடுபாட்டைத் தக்கவைத்து, சிறப்பாக முடித்தல்

காலை மனமாற்றம் : முதல் நாள் இரவு நிகழ்வினால் ஒருவேளை தாமதமான தொடக்கம் இருக்க வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகத் தொழில்நுட்பம் நிறைந்த அல்லது சிக்கலான அமர்வுகளை அதிகாலையில் வைக்கக் கூடாது. மக்களை எளிதாக நிகழ்வுக்குள் கொண்டுவர, சற்றே லேசான, அதிகமாக ஊடாடக் கூடிய நறுக்கான நிகழ்வுடன் தொடங்கலாம்.

மதியச் சோர்வு : இரண்டாம் நாள் பிற்பகலுக்கு முன்னதான நேரம் சோர்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதி. இங்கு அதிகமாக ஊடாடும் வடிவங்களை (குழு விவாதங்கள், பார்வையாளர்களின் கேள்விகள், நேரடிப் பயிலரங்கங்கள், விநாடி வினா, பரிசளிப்புகள்) நிகழ்ச்சிகளாக இருக்க வேண்டும்.

நிறைவு : நிகழ்வைச் சக்திவாய்ந்த, மறக்கமுடியாத நிறைவு அமர்வுடன் (எ.கா:, ஒரு தொலைநோக்குடைய அமெரிக்க வாழ்வியலை மேம்படுத்தும் நிகழ்வு, பேச்சாளர், ஒரு பெரிய அறிவிப்பு, தெளிவான அழைப்பு அல்லது அறைகூவல்) முடிக்க வேண்டும்; கூடவே எப்போதும் போலத் துள்ளலைக் கட்டியெழுப்புகின்ற மெல்லிசை நிகழ்ச்சி. இது பங்கேற்பாளர்கள் விழா முடிந்த விட்டதேயெனும் ஏக்கத்துடன் வீடு திரும்புவதைக் கட்டமைப்பதாக இருக்க வேண்டும்.

2. கட்டமைப்பு நுணுக்கப்பாடுகள் (Structural & Logistical nuances)

  • அமர்வுகளுக்கு/அறைகளுக்கு இடையில் பங்கேற்பாளர்கள் செல்ல, A/V அமைப்பு மாற்றங்கள், இடத்தைப் புதுப்பிக்கத் தேவைப்படும் நேரம்.
  • நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்கள், போட்டிகள், இணையரங்குகள், உணவு இடைவேளை, தொழில்நுட்பத் தேவைகள், இவையாவும் ஒன்றுக்கொன்று முரண்படாமல் பார்த்துக் கொள்தல்.
  • முக்கியப் பேச்சாளர்களை முன்பே சரிபார்த்து, A/V சோதனையை அவர்களின் நேரத்திற்கு முன்பே முடித்தல். சிலரை, அவர்தம் பின்னணியைக் கொண்டு, அதற்கேற்ற நேரத்தில் நேரம் ஒதுக்குதல் வேண்டும்.
  • தொய்வு நேரத்தில், இடைவெளி நேரத்தில், மேடையைப் பயன்படுத்திக் கொள்ள மாற்று ஏற்பாடுகள் எப்போதும் கைவசம் இருத்தல் வேண்டும்.

இரண்டு நாள் நிகழ்வுக்கான அட்டவணையைப் பொறுத்தவரை, மிக முக்கியமான நுணுக்கம் என்னவென்றால்,  இரவு நேர இடைவெளியுடன் கூடிய இரண்டு ஓட்டப் பந்தயங்களாக (two sprints with a deliberate overnight pause) நினைத்து, ஓட்டத்தின் வீச்சு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

( படம் : Truth, Transparency & Trust என்பதற்கொப்ப, நிரலைப் பலரும், எந்த நேரத்திலும் பார்க்கும்படியாக, செயற்குழு, வழிகாட்டுதல்க்குழு, இணையரங்குக்குழு, நிகழ்ச்சிநிரல்க்குழு, எனக் குறைந்தது 75+ பேருடன் பகிர்ந்துகொண்டு,  நாள்தோறும், நிகழ்ச்சி நிரலை ஒலி ஒளிக்குழுவினருடன் இணைந்து பேசிப் பேசிக் கட்டமைத்தன் சான்று)

𝐖𝐡𝐞𝐧 𝐰𝐞 𝐟𝐞𝐞𝐥 𝐰𝐢𝐭𝐡 𝐨𝐭𝐡𝐞𝐫𝐬, 𝐨𝐮𝐫 𝐢𝐧𝐯𝐨𝐥𝐯𝐞𝐦𝐞𝐧𝐭 𝐦𝐮𝐥𝐭𝐢𝐩𝐥𝐢𝐞𝐬.

(தொடரும்..)


-பழமைபேசி.

#FeTNA2025
#ProgramLineUp
#Empathy

12/08/2025

நட்பின் கதை

நட்பென்பது யாதெனில் வாழ்க்கைப் பயணத்தில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது. ஏன், பேசிக்கொள்ளாமலே ஒரு *புன்முறுவல் பூப்பதாகவும்* இருக்கலாம்.

மனித வாழ்க்கையின் மிக முக்கியமான, ஆழமான உறவுகளில் நட்பு தனித்துவமானது. அது ரத்த உறவையொத்த பிணைப்பைக் கொண்டிருந்தாலும், எந்தவித கட்டாயமும் இன்றி, மனதின் ஆழத்தில் இருந்து தானாகப் பூக்கும் பூவைப் போன்றது. ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில், இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வரும் ஏதோவொன்றாகக் கூட இருக்கலாம் அது.

நட்பென்பது வெறும் பேச்சால் மட்டும் கட்டப்பட்டது அன்று. ஒருவருக்கொருவர் தத்தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதும் நட்பின் வெளிப்பாடுகள்தான். ஆனால், அதைவிட மேலானது மௌனத்தின் மொழி. சில நேரங்களில், ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத உணர்வுகளை, இரு நண்பர்களுக்கு இடையேயான ஒரு புன்முறுவல் ஊட்ட வேண்டிய உணர்வினைப் பூக்க வைத்துவிடும். அந்தச் சிரிப்பில், ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையும், புரிதலும், அன்பும் அடங்கியிருக்கும். எதிர்பார்ப்புகள் இல்லாமல் கொடுப்பதும், ஆறுதல் சொல்வதும், தவறு செய்தால் சுட்டிக்காட்டுதும்தான் அதன் இலக்கணம். அது ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலைப் போன்றது. அதன் அடியில் அமரும்போது, எல்லா கவலைகளும் மறைந்து, மனம் அமைதி அடையும்.

வாழ்க்கைப் பாதையில், நாம் பலரைச் சந்திக்கிறோம்; பலருடன் பழகுகிறோம். ஆனால், ஒரு சிலரே நம் இதயத்தில் அவர்களுக்கானதொரு இடத்தைப் பிடிக்கின்றனர். அவர்கள்தான் நம் *நண்பர்கள்* . அவர்களின் வருகை நம் வாழ்வை வண்ணமயமாக்குகிறது. எனவே, அத்தகைய நட்பைப் போற்றுவது கடமையாகும். அந்தப் புன்முறுவல்களின் கதைகளும், பேசாத வார்த்தைகளின் பொருண்மியங்களும் என்றென்றும் நீடிப்பதே நட்பின் கதையாகத் தொடரும்.

கண்டம் விட்டுக் கண்டமாக அந்நியப்பட்டுவிட்ட நமக்கு, *வேணுகோபால்* என்பவர் யாரென்றே தெரியாது. புனைவாக நாம் அடித்து விட்ட கதைகளைக் கண்டவர், தனித்தகவல்களாக அவ்வப்போது எதையாவது அனுப்புவார். முன்பின் தெரியாத ஒருவரிடம் நாம் பெரிதாக ஒன்றும் அளவளாவிட முடியாதுதானே? நன்றி சொல்தலும் வணக்கம் சொல்தலுமாக இருந்த காலகட்டம். கோவிட் பெருந்தொற்று.

*வேணு* , போலந்தில் இருக்கும் மகளைப் பார்க்கச் சென்றவர் அங்கேயே இருக்கும்படி ஆகிவிட்டது. அன்றாடம் நம்மிடம் பேசுவார். எங்கள் அலுவலகம் _கிராக்கோவ்_ , _வார்சா_ ஆகிய இரு நகரங்களிலுமே உள்ளது. அணுக்கமான நண்பர்கள் நமக்கு அங்கு உண்டு. ஏதாகிலும் உதவி தேவைப்பட்டால் சொல்லுங்களென்றேன். ஊருக்கு டிக்கெட் மாத்திரம் ஏற்பாடு செய்யக் கேட்டுக் கொண்டார். நானும் அலுவலகத்தில் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் எனக்குத் தகவல் வருவதற்கு முன்னம் அவரேவும் ஏற்பாடுகள் செய்து கொண்டார். பயணக்கட்டுப்பாடுகள் எல்லாம் தளர்ந்தபின்னர் ஊருக்கு வந்திருந்த நேரத்தில் ஒரு சில முறை சந்தித்துக் கொண்டோம்.

வாழ்க்கை என்பது நிச்சயமற்ற ஒரு பயணம். எப்போது எந்தத் திருப்பம் வருமென்று யாருக்கும் தெரியாது. மரணம் என்பது வாழ்வின் நிரந்தரம். அந்த நிஜத்தின் முன் நின்று பார்க்கையில், நம் கையில் இருப்பது இந்தத் தற்காலம் மட்டுமே! இறப்பைப் பற்றிய அச்சத்திலோ அல்லது கடந்த காலத்தின் வருத்தங்களிலோ, நம் பொன்னான நிகழ்காலத்தை விரயம் செய்ய வேண்டியதில்லை. இனிமேல் வரப்போகும் நாட்களைப் பற்றிக் கனவு காண்பதை விட, இன்று என்ன செய்ய முடியுமென்பதில் கவனம் செலுத்தியாக வேண்டும். ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய வாய்ப்பு; ஒவ்வொரு மூச்சும் ஒரு கொண்டாட்டம். இந்த நொடியில் முழுமையாக வாழ்ந்திடுவோம்; உணருங்கள், சிரியுங்கள், அன்பு செலுத்துங்கள்!

நேசித்தவர்களோடு நாம் கழித்த நாட்களை நினைத்துத் துயரப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் நமக்கு அளித்த மகிழ்ச்சியான தருணங்களை எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் இருந்து விடைபெற்றுக் கொண்டோரின் நினைவுகள்தான் நம்முடைய விலைமதிப்பற்ற சொத்து. நாம் சிரித்த சிரிப்புகள்... ஒருவருக்கொருவர் அளித்த ஆறுதல்கள்... ஒன்றாகப் பகிர்ந்து கொண்ட தருணங்கள்... இவை அனைத்தும் காலத்தால் அழியாத செல்வம். அந்த நினைவுகளின் ஒளியில், நம் எஞ்சிய வாழ்வை நாம் வாழ வேண்டும். அவர்கள் நம்முடன் இல்லாவிட்டாலும், அவர்களின் அன்பின் சுவடுகள் நம் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும்.

துயரத்தை ஒதுக்கிவிட்டு, நேசத்துக்குரியவர்களுடன் நாம் பகிர்ந்த அனுபவங்களின் ஆனந்தத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த வாழ்க்கை நமக்கான, ஒரு அற்புதமான கதை. அதில் ஒவ்வொரு நொடியும் நாம் நாயகனாக வாழும்போது, மரணம் என்பது ஒரு முடிவாக இல்லாமல், நிறைவான ஒரு பயணத்தின் ஓய்வாக மாறும். வாருங்கள், வருத்தம் வேண்டாம். அன்னாரின் அன்பின் நினைவுகளோடு, தற்காலத்தைத் துணிவாக எதிர்கொள்வோம்! அன்பனுக்கு *மலர்வணக்கம்* !

𝐌𝐚𝐲 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐝 𝐭𝐢𝐦𝐞𝐬 𝐰𝐞 𝐞𝐱𝐩𝐞𝐫𝐢𝐞𝐧𝐜𝐞𝐝 𝐫𝐞𝐬𝐨𝐧𝐚𝐭𝐞 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐞𝐬𝐭 𝐨𝐟 𝐨𝐮𝐫 𝐣𝐨𝐮𝐫𝐧𝐞𝐲.


-பழமைபேசி.

12/06/2025

மணிகண்டன் கனகசபை

மணிகண்டன் கனகசபை

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தகவல்தொடர்புக்குழு உறுப்பினர். தொடர்ந்து தொடர்பில் இருந்து கொண்டு, பேரவை நிகழ்ச்சிகள், திருவிழா முதலானவற்றின் காணொலிகளைப் பராமரித்து வந்தவர். 

தொடர்ந்து ஒத்துழைப்புக் கொடுப்பது என்பது, தனிப்பட்ட உறவுகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து மட்டங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான ஒரு மிக முக்கியமான பண்பாகும். இது வெறுமனே ஒருமுறை உதவுவது அன்று; மாறாக, ஒரு பொதுவான இலக்கை அடைய, ஒரு நல்லுறவைப் பேண, தொடர்ந்து இணைந்து செயல்படும் மனப்பான்மையைக் குறிக்கிறது. அந்த வகையில் திரு.மணிகண்டன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

திட்டங்கள் மாறும்போதோ அல்லது புதிய சவால்கள் வரும்போதோ, வளைந்து கொடுத்து, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒத்துழைக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படியாக, திரு மணிகண்டன் அவர்கள் சிறப்புச் சேர்த்தார். விழாவில் நம்மைக் கண்டதுமே, வேலைகளுக்கு ஆட்கள் வேண்டுமாயெனக் கேட்டு, சில பலரை அறிமுகப்படுத்தினார். இஃகிஃகி, நமக்குத்தான் எவரையும் நினைவில் இருத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் வந்து, இடைக்கிடை, ‘அண்ணா, எதனா செய்யணுமா? எதனா செய்யணுமா??’ எனக் கேட்டபடி இருந்தனர்.

மேற்படி இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுள் ஒருவர் வந்து, ‘அண்ணே, மாரி செல்வராஜ் அவர்களுக்குத் தொண்டை வலியாம்; இன்ன மருந்துதான் வேண்டுமென்கின்றார். டாக்டரின் மருந்துச் சீட்டு இருந்தால்தான் வாங்க முடியும்’, என்றார். மருத்துவர் திரு. செந்தில் சேரன் அவர்களை அழைக்க, அவர் தமக்கு அந்த உரிம அனுமதி இல்லையென்றும், இன்னாரை அழையுங்களென, ஒருங்கிணைப்பாளர் திருமிகு. மீனா இளஞ்செயன் வழியாகத் தொடர்பு கொள்ளப் பணித்தார். திருமிகு மீனா அவர்கள், மருத்துவர் சுஜாந்தி இராஜாராம், மருத்துவர் சுஜாதா சஜிவன் ஆகியோரைத் தொடர்பில் கொணர்ந்தார். நண்பரிடம் அவர்களைக் கோர்த்துவிட்டபின் நாம் விடுபட்டுக் கொண்டோம். ஆனாலும் மற்றவர்கள் விடவில்லை. அடுத்தடுத்து மருத்துவம் குறித்த உதவிகளுக்கு முறைப்பாடுகள் வந்து கொண்டிருந்தன. சார்லட் மருத்துவர் இராஜேஷ் தோட்டா அவர்களிடமும் மகர் அவர்களிடமும் தள்ளிவிட்டுக் கொண்டோம். இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.

𝐖𝐡𝐞𝐫𝐞 𝐨𝐭𝐡𝐞𝐫𝐬 𝐬𝐚𝐰 𝐨𝐛𝐬𝐭𝐚𝐜𝐥𝐞𝐬, 𝐓𝐡𝐢𝐫𝐮 𝐌𝐚𝐧𝐢𝐠𝐚𝐧𝐝𝐚𝐧 𝐬𝐚𝐰 𝐬𝐩𝐚𝐜𝐞𝐬 𝐰𝐚𝐢𝐭𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐛𝐞 𝐟𝐢𝐥𝐥𝐞𝐝, 𝐚𝐧𝐝 𝐡𝐞 𝐟𝐢𝐥𝐥𝐞𝐝 𝐭𝐡𝐞𝐦 𝐰𝐢𝐭𝐡 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞, 𝐤𝐢𝐧𝐝𝐧𝐞𝐬𝐬, 𝐚𝐧𝐝 𝐩𝐮𝐫𝐩𝐨𝐬𝐞.

அன்புடன் தாங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும், இந்த நாளை ஒரு மறக்க முடியாத அழகான நினைவாக மாற்றும் ஆற்றல் கொண்டது. தங்கள் உதவிகள் ஏதோவொரு வகையில், ஏதோவொரு தருணத்தில் தங்கள் வாழ்விற்கான பொருண்மியத்தைக் கொடுக்க வல்லது. சிறப்புகள் பெற்றிடுவீர் திரு மணிகண்டன் கனகசபை.

-பழமைபேசி.
#PROTeam #FeTNA2025

12/02/2025

செந்தில்குமார் கலியபெருமாள்

செந்தில்குமார் கலியபெருமாள்

மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தின் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தகவல்தொடர்பு, தொழில்நுட்பக் குழுக்களின் துணைத்தலைவர், நம் நெடுங்கால நண்பர்.

கருப்பெட்டிச் சோதனை என்பது  சோதனையின் ஒரு வகையாகும். இதில், ஒரு சோதனையாளர், சோதிக்கப்படும் பொருள், அதன் உள்ளீடு, குறியீடுகள், விவரங்கள் பற்றி எந்தவொரு தகவலும் அறிந்திரா நிலையில், முன்நிலைப்பாடற்றுச் சோதனைகளைச் செய்வார். இந்தச் சோதனையில், பொருளானது ஒரு 'கருப்பெட்டி' போலக் கருதப்படுகிறது. அதாவது, அதன் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. கருவில் இருக்கும் உயிரின் அடையாளத்தன்மைகள், பண்புநலன்கள் எதுவும் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது போல, இன்னபொருள், இன்ன கருவி முதலானவற்றின் உள்ளீடுகள், தனிநபர்கள், இடம் முதலானவற்றின் எதன் பின்னணியும் அறிந்திராமல், அது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதனை சோதித்துப் பார்க்கும் முறை. தகவல் தொடர்புக்குழுவுக்குக் கிடைத்த அப்படியான ஒருவர்தாம் ‘அண்ணாச்சி’ என அன்போடு அழைக்கப்படுகின்ற திரு. செந்தில் கலியபெருமாள் அவர்கள்.

சச்சரவு, விமர்சனம், கொந்தளிப்பு போன்ற நுண்ணுணர்வு கூடிய தகவலை வெளிப்படுத்துகின்ற போது, நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது தனிப்பட்ட நபரின்பால் வெளியிடப்படும் தகவல் அன்று. மாறாக, ஆகக்குறைந்தது 20 ஆயிரம் பேருக்கு, அமைப்பின்பால் தெரிவிக்கப்படுகின்ற தகவல். 5% நுகர்வோர் மனம் புண்பட்டுவிடுகின்றதென வைத்துக் கொள்வோம். எஞ்சியிருக்கின்ற 95% பேரை நல்லவிதமாக அணுகியிருக்கின்றோம்தானே எனக் கொண்டுவிடலாகாது. ஏனென்றால், இதுவே வாடிக்கையாகி, பத்துமுறை நிகழ்கின்றதென வைத்துக் கொண்டால், 50% நுகர்வோரின் ஒவ்வாமைக்கு அது வித்திட்டுவிடும். நல்லதொரு தகவல்தொடர்புக்கு அடையாளம், நூற்றுக்கு நூறு வெற்றி கொள்வதாக இருந்திடல் வேண்டும். அப்படியான, நுண்ணுணர்வு கூடிய தகவல், செய்தியறிக்கை முதலானவற்றைச் சோதிக்க, திரு. செந்தில் அவர்கள் மிகவும் உதவிகரமாக இருந்தார். வெகுளித்தனமாக ஒவ்வொன்றையும் வினவும் போது, சரிசெய்து கொள்ளும் வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

அண்ணாச்சி அவர்கள் கலையுணர்வு மிக்கவர், பாடகர், தமிழுணர்வாளர் என்ற முறையில், காலவுணர்வினை வலியுறுத்தக் கூடியவர்.  “கோடைவிடுமுறைக் காலத்தை நம் பிள்ளைகள் குதூகலமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செலவிட்டுக் கொண்டிருப்பரென நம்புகின்றேன். அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்”, தலைவர் மடல் முதலான பலவற்றிலும்,  இது போன்ற வாழ்வியலுக்கு நெருக்கமான வரிகள் இடம் பெறுவதற்கு, அளவளாவலின் போது இவர்கள் தருகின்ற கண்ணோட்டங்களே காரணமாக இருந்தன.

விழா துவங்கி விட்டது. நேரலை உலகுக்கே வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ‘மங்கல இசை’, ‘மங்கள இசை’, அக்கப்போர். இஃகிஃகி. இவருக்குப் பதற்றம். ஏனென்றால், விழாவின் அரங்குகளுக்கான ஒவ்வொரு பின்னணிப் படத்தையும் வடிவமைத்துச் செயற்படுத்தியவர் இவரே. “அண்ணாச்சி, உங்ககிட்ட சரி பார்த்திட்டுதானே செய்தன்?”, அலறுகின்றார். ‘மங்கல இசை சரிதானுங்க. என்ன பிரச்சினை இப்ப?’. ‘இல்ல அண்ணாச்சி, இன்னாரே சொல்றாங்க, அது பிழையின்னு’. மங்கலம் என்ற சொல் ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, நன்று போன்ற இடங்களில் கையாளப்படுவது. மங்களம் என்பது, நற்காரியத்தின் முடிவினைக் குறிப்பது’ என்றெல்லாம் சொல்லி வகுப்பெடுத்த பின்னர்தாம் அடங்கினார். அந்த அளவுக்கு நுண்ணுணர்வும் கடமையுணர்வும் மிக்கவர். தகவல்தொடர்பு என்பது மட்டுமேயன்று, பல குழுக்களின் வாயிலாகவும் பங்களித்தவர் திரு. செந்தில் கலியபெருமாள் அவர்கள்.

𝐁𝐞𝐜𝐚𝐮𝐬𝐞 𝐜𝐚𝐫𝐢𝐧𝐠 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐭𝐡𝐞 𝐬𝐮𝐛𝐭𝐥𝐞 𝐭𝐡𝐢𝐧𝐠𝐬 𝐦𝐚𝐤𝐞𝐬 𝐥𝐢𝐟𝐞 𝐦𝐨𝐫𝐞 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥.

-பழமைபேசி.

#PROTeam #FeTNA2025


 

12/01/2025

சரவணன் கிருஷ்ணன்

சரவணன் கிருஷ்ணன்

தகவல் தொடர்புக்குழுவால் என்ன செய்திட முடியுமென்பதைக் காண்பித்தோம். ஒரு அமைப்பின் தகவல் தொடர்பாளர், நிறுவனத்தின் வெளிப்புற, உள்புறத் தொடர்புகளை நிர்வகிப்பதற்கும், அதன் நற்பெயரைப் பேணுவதற்கும், அதன் குறிக்கோள்களை, செயற்பாடுகளைப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும் பொறுப்பானவர் ஆவார். அவரின் முக்கிய பணிகள் கீழ் வருமாறு:

அமைப்பின் இலக்குகள், செய்தியை,  பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையில் தொடர்புத் திட்டங்களையும் உத்திகளையும் உருவாக்குதல், செயல்படுத்துதல்.

பத்திரிகை வெளியீடுகள், செய்திமடல்கள், இணையதள உள்ளடக்கங்கள், அறிக்கைகள், உரைகள், சமூக ஊடகப் பதிவுகள் போன்ற பல்வேறு வகையான உள்ளடக்கங்களை எழுதுதல், திருத்துதல், பரப்புதல் முதலானவற்றைச் செய்ய வேண்டும். அதற்கு, அமைப்பின் செயல்பாடுகள், திட்டங்கள், மதிப்புகள் குறித்து ஈர்க்கக்கூடியதும் உண்மையானதும் துல்லியதுமான தகவலை உருவாக்கிட வேண்டும்.

 ஊடகவியலாளர்களுடலும் உறுப்பினர்கள் தோழமை அமைப்புகளுடன் உறவுகளை ஏற்படுத்திப் பேணுதல் மிக அவசியம். வினாக்களுக்கும் விசாரிப்புகளுக்கும் முறையாகப் பதிலளித்து அக்கறை கொண்டாக வேண்டும்.

குறிப்பாக ஊடங்களிலும் பொதுவெளியிலும் வெளிவரும் செய்திகளைக் கண்காணித்தல், அதற்கொப்பச் செயற்பாடுகளை, எதிர்வினைகளை உடக்குடன் அமைத்துக் கொண்டாக வேண்டும். 

எண்ணிம, சமூக ஊடக மேலாண்மை, அமைப்பின் சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகித்தல், உள்ளடக்கத்தைப் பதிவிடுதல் மற்றும் கருத்துகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் பார்வையாளர்களுடன் ஈடுபடுதல். இணையதளத்தை புதுப்பித்தல்,உள்ளடக்கத்தை ஈர்க்கக்கூடியதாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்தல்.

உள் செய்திமடல்கள், அக இணையப் புதுப்பிப்புகள் மூலம் அமைப்புக்குள் தகவல் பரிமாற்றத்தை அமைத்துக் கொண்டு, அமைப்பினரின் செயல்பாடுகளும் அதற்கொப்ப இருக்குமாறு அறிவுறுத்திடல் வேண்டும். மாநாடுகள், நிகழ்வுகள்,  பிற விளம்பர நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தலும் ஒருங்கிணைத்தலும்.

ஏதேனும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், எதிர்மறையான நிகழ்வின்போது, அமைப்பின் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும் சரியான நேரத்திலும், உறுப்பு அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்தல்.

தகவல் தொடர்புக்குழுவினர் எப்போதும் ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொண்டும் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டும் இருந்தனர். வட அமெரிக்காவெங்கும், ஏன் உலகமெங்கும் பேரவைக்கான ஆர்வலர்கள் உள்ளனர். பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் நடக்கும். அப்படியானவற்றைக் கண்காணித்து, அமைப்பின் தகவலை அதற்கொப்ப அமைத்துக் கொள்தலுக்கும், திருவிழா குறித்த பொதுமக்களின் எதிர்பார்ப்பினை அறிந்து உடனுக்குடன் நமக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குமான சிறந்த தொடர்பாளராக விளங்கியவர்தாம் உய்த்துணர்வில் சிறக்கும் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள். 

தமிழ், மக்கள், பண்பாடு முதலானவற்றின்பால் அக்கறை கொண்டவர். விழாவின் பயணக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். குறைவான கட்டணத்தில் விடுதி, குழுவாகப் பயணம் செய்வதன் மூலம் செலவுக்குறைப்பு உள்ளிட்ட பல ஏற்பாடுகளை தொடர்பு கொண்ட ஆர்வலர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நம்மோடு துணை நின்றவர் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள்.

’ஏப்பா, மெய்யாலுமே இத்தனையும் செய்யப்பட்டதா?’ என்றால், ஆமாம், செய்யப்பட்டதுதான்!

𝐖𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐜𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫, 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐏𝐑 𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐚 𝐬𝐭𝐨𝐫𝐲 𝐰𝐨𝐫𝐭𝐡 𝐭𝐞𝐥𝐥𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐰𝐞 𝐣𝐮𝐬𝐭 𝐰𝐫𝐨𝐭𝐞 𝐨𝐮𝐫𝐬!🎉🎉

-பழமைபேசி.
தகவல் தொடர்புக்குழு, FeTNA 2025.