3/08/2023

பெண்கள் நாள்

1909ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் நாள், நியூயார்க் நகரில் பெண்களின் உரிமைகளுக்கான முன்னெடுப்பாக ஒரு நாள் கடைபிடிக்கப்பட்டது. அதனின்று கிளைத்ததுதான் இன்றைய மார்ச் 8, பன்னாட்டுப் பெண்கள் நாள் என்பது. அதற்குப் பிறகு, ஓட்டுரிமை, கல்வி, தொழில் எனப் பல தளங்களிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, இந்த ஆண்டு எண்ணிமத்தளத்தில், அதாவது மின்னணுவியலை அடிப்படையாகக் கொண்ட கணினி, தொழில்நுட்பத்தளத்தில் சமத்துவத்துக்கான வழிமுறைகளைக் கட்டமைக்க அறைகூவல் விடுத்திருக்கின்றது ஐக்கியநாடுகள் சபை.

பொதுவாக, இப்படியான நாட்கள் கொண்டாட்டமாக இடம் பிடிக்கின்றன. கொண்டாட்டத்தின் பொருட்டு வணிகக்கடைகளும் விரிக்கப்படுகின்றன. அது சரியா, தவறா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டிய பற்றியம்.

நம்மைப் பொறுத்த மட்டிலும், 1909ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட அந்த நாளை அடிப்படையாகக் கொண்டு சிறு மாற்றத்தையாவது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதுதான். பொதுவாழ்வில், தொழிலில் பெரும்வெற்றி பெற்ற ஒரு பெண். கொண்டாடடப்படுவது சரியே. இணையர் தன் காலுறையைக் கொணரச் சொல்லிக் குரல் கொடுக்கின்றார். மேற்தளத்தில் இருக்கும் அவர் வந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்கின்றார். இப்படியான ஒரு காட்சியை எண்ணிப் பாருங்கள். இருவருமே தோற்றிருக்கின்றனர். அவரைக் கொண்டாடுவதால் என்ன பயன்?

பண்பாட்டில், வீட்டு அடுக்களையில் இருந்து துவக்கப்பட வேண்டிய பயணம் இது. காய்கறி நறுக்குவது என்பதாகக்கூட வைத்துக் கொள்ளலாம். அப்படி நிகழும் போது, இவருக்கும் தாம் ஏவலாள், குற்றாள் எனும் எண்ணம் அடிபட்டுப் போகின்றது. அவருக்கும் அப்படியான அனுபவம் கிடைக்கப் பெறுவதோடு உடல்நலமும் மேம்படும். அண்மையில் கூட, சக ஆண்களைப் பொதுநிகழ்வில் அண்ணா, அண்ணாயெனக் குழைந்து குழைந்து விளிப்பதைச் சாடி எழுதினோம். காரணம், இது, தொடர்புடைய தனிமனிதர்களின் நட்பு குறித்தானது அன்று. பொதுநிகழ்வு என்பதாலே, இது ஒட்டுமொத்த பெண் இனத்தின் மாண்பு குறித்தானது. ஆகவே, பெண்கள் நாளில், டிஜிட்டல் உலகில் இடம் பெறும் இப்படியான சறுக்கல்கள் குறித்து உரையாடுவோம்.

No one can make you feel inferior without your consent. –Eleanor Roosevelt


No comments: