1/26/2010

வெல்லந் தின்ற பாவம் தேடு!

ஒரு முரடன் தேன் வாங்குவதற்காக கடைக்குப் போனான். அவன் வளர்த்து வந்த பூனையும் அவனைத் தொடர்ந்து சென்றது. கடையில் தேன் வாங்கும் போது ஒரு துளி தேன் கீழே சிந்திற்று.

அந்தத் தேன் துளியின் மீது ஒரு ஈ வந்து மொய்த்தது. அந்த சமயம் சுவரில் இருந்த பல்லி ஒன்று, ஈயைப் பிடித்தது. அருகிலிருந்த பூனையானது அந்தப் பல்லியைப் பிடித்துக் குதறியது.

வியாபாரத்திற்கு இடையூறாக நடுவில் விழுந்து கிடக்கும் பூனையின் மேல் அந்த கடைக்காரன் படிக்கல்லை வீசியெறிந்தான். அந்த இடத்திலேயே பூனை உயிரை விட்டது. பூனையின் எசமானனான அந்த முரடன் கோபங்கொண்டு கடைக்காரனை அதே இடத்தில் வெட்டிச் சாய்த்தான்.

கடைக்காரன் சாகவும், பக்கத்தில் இருந்த கடை வீதியில் இருந்த அனைவரும் கோபங்கொண்டு அந்த முரடனை அடித்துக் கொன்றனர். முரடன் இறந்த செய்தி கேட்ட அவனது நண்பர்கள் ஓடோடி வந்து, கடைத் தெருவையே சூறையாடினார்கள். அதுமட்டுமன்றி அந்தக் கடைக்காரர்கள் அனைவரையும் கொன்றார்கள்.

இந்தக் கைகலந்த சண்டையினால் அநேக உயிர்கள் பலி ஆயிற்று. இதைத்தான் கட்டு வாக்கியத்தில், மது சிந்து கலகம் என்று சொல்வது வாடிக்கை ஆயிற்று. இன்றும் உலகில் ஏதோ ஒரு மூலையில் இத்தகைய மது சிந்து கலகங்கள் நடந்த வண்ணமே உள்ளது என அமைதி விரும்பிகள் வருத்தப்படுகிறார்கள்.

மேலும் வெல்லம் தின்று பாவத்தைத் தேடுபவர்களைப் பற்றியும் நாட்டில் உள்ள கிராமத்துப் பெரியவர்கள் பெரிதும் கவலைப்படுகிறார்கள். அது என்ன வெல்லம் தின்று பாவம் தேடுவது?

ஒரு வியாபாரி தன்னிடம் இருந்த பூனையைக் கொன்று விட்டான். பின்னர், இந்தப் பாவத்தைப் போக்க ஏதாகிலும் பிராயச் சித்தம் உண்டா என சாத்திரங்களைப் புரட்டலானான். அப்போது, தங்கத்தில் பூனை செய்து தானம் தர வேண்டும்; குறைந்த பட்சம் வெள்ளியிலாவது தர வேண்டும் என இருக்கக் கண்டான்.

இவனுக்கு அந்த அளவு செய்ய மனம் இல்லை. சரி, வெல்லத்தில் பூனை செய்து யாராவது ஒருவருக்கு தானம் செய்வது என முடிவு செய்தான். அதன்படியே தனது வெல்ல மண்டியில் உள்ள வெல்லத்தை எடுத்து, முசித்து, அதில் ஒரு பூனையைச் செய்தான்.

பின்னர் அந்தப் பூனையை, வெற்றிலை பாக்கு தட்சிணையோடு ஒரு தட்டில் வைத்துத் தானம் அளிக்க விழைந்தான். தட்டு கை மாறும் சமயத்தில், வெல்லப் பூனையைக் கண்டதும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது. இவனும் ருசி தாளாது, அதை எடுத்து ‘லபக்’ என வாயில் போட்டுக் கொண்டான்.

தானம் வாங்க வந்தவனோ, “என்ன ஐயா இப்படிச் செய்கிறீர்களே?” என வினவவும் இவன் சொன்னான்,

“சரி போ, உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்!! வெல்லந் தின்ற பாவம் எனக்கு, பூனையைக் கொன்ற பாவம் உனக்கு!!” என்று சொல்லிவிட்டு வேகமாகக் கடை வியாபாரத்தைப் பார்க்கச் சென்று விட்டான். சிவனே என்று வீதியில் சென்று கொண்டிருந்தவன், பூனையைக் கொன்ற பாவத்தைச் சுமக்கிறான் இன்னமும்.

இதைப் போலத்தான், நாட்டிலே பெருமளவு மோசடிகளைச் செய்துவிட்டு சின்னஞ்சிறு அளவிலான ஒன்றைத் தாமே காண்பித்துப் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள் என்று கிராமத்தில் உள்ள பெரியவர்கள் கவலைப்படுகிறார்கள். கூடவே, வெல்லம் தின்ற பாவம் தேடுபவர்களை, திறமைசாலிகள், street smartness people என்று சொல்லி பெருமைப் படுத்துவது கண்டும் மனம் புழுங்குகிறார்கள்.

18 comments:

Anonymous said...

கொன்னாப்பாவம் தின்னாப்போச்சு பழமொழி இதிலிருந்துதான் வந்ததா!!!

Mahesh said...

பின்னூட்டம் போட்ட புண்ணியம் எனக்கு... இடுகை போட்ட புண்ணியம் உனக்கு... . சரியா? :)))))))

Unknown said...

நான் இந்த பழமொழிகளையே கேட்டதில்லை. அதற்கு விளக்கமும் கொடுத்து அசத்துகிறீர்கள்..

குடுகுடுப்பை said...

முகிலன் said...
நான் இந்த பழமொழிகளையே கேட்டதில்லை. அதற்கு விளக்கமும் கொடுத்து அசத்துகிறீர்கள்.//

பெரியவர்கிட்ட சீமாச்சுவே நிக்க முடியலை.

vasu balaji said...

வெல்லந் தின்ற பாவத்துல இவ்வளவு வில்லங்கமிருக்கா:)

ஆரூரன் விசுவநாதன் said...

அழகான விளக்கங்கள். அருமை

க.பாலாசி said...

இந்த மொத கத இருக்கே...இதுமாதிரிதாங்க எங்கப்பாத்தாலும்... பெரிய அடிதடிகள பாக்குறப்போ உள்ளப்போயி ஆராஞ்சி பாத்தா ஒரு மண்ணுமே இருக்காது.

இன்னொரு வௌக்கம் வேணுங்க... கொன்னாப்பாவம் திண்ணாப்போச்சுன்னு சொல்றாங்களே அதுக்கென்னாங்க.??

துபாய் ராஜா said...

ஆஹா..ஆஹா. அருமை.அருமை. அக்மார்க் பழமையார் பதிவு அருமை.

ஒரே பதிவில் மது சிந்து கலகம், வெல்லம் தின்ற பாவம் இரண்டு விளக்கங்கள் இனிமை.

அண்ணாமலையான் said...

நல்ல சுவாரஸ்யமான பதிவு..

Unknown said...

ரண்டு விளக்கமும் இனிப்போட இருக்குங்க..

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பதிவு..

வில்லன் said...

//ஒரு வியாபாரி தன்னிடம் இருந்த பூனையைக் கொன்று விட்டான். பின்னர், இந்தப் பாவத்தைப் போக்க ஏதாகிலும் பிராயச் சித்தம் உண்டா என சாத்திரங்களைப் புரட்டலானான். //
இதுக்கு போட்டு ஏன் சாத்திரங்களைப் புரட்டனும்.... சமச்சி சாப்பிட்டா போதும்.... கொன்னா பாவம் தின்னா போச்சு...... பாவமும் போனதாச்சு..... பூனை கரி உடம்புக்கு நல்லது... எங்க ஊருல சாராயம் குடிக்குறவன் வீட்டுல வளக்குற பூனைய ஆடைய போட்டுட்டு போயி கொன்னு சாப்பிட்டுருவான்.....

அது சரி(18185106603874041862) said...

பதிவு புண்ணியம் உங்களுக்கு...பின்னூட்ட பாவம் எனக்கு :0)))

(நாங்க பாவத்துக்கெல்லாம் அஞ்ச மாட்டோமாக்கும்!)

அது சரி(18185106603874041862) said...

ரொம்ப நாளா கறுப்பு சிவப்பிலயே இருக்கீங்களே, மாத்தற மாதிரி இல்லியா??

(நான் தொப்பியயையும் டீஷர்ட்டையும் சொன்னேன்)

பழமைபேசி said...

@@சின்ன அம்மிணி

ஆமாங்கோ!


@@Mahesh
இஃகிஃகி!


@@முகிலன்
நன்றிங்கோ!


@@குடுகுடுப்பை
நடக்கட்டும் நடக்கட்டும்.... இன்னைக்கு உங்களுக்கு ஒன்னு போடுறேன் இருங்க... இஃகி!


//வானம்பாடிகள் said...
வெல்லந் தின்ற பாவத்துல இவ்வளவு வில்லங்கமிருக்கா:)
//

ஆமாங்க பாலாண்ணே!


//ஆரூரன் விசுவநாதன் said...
அழகான விளக்கங்கள். அருமை
//

நன்றிங்க ஆரூரன்!

// க.பாலாசி said//

ஆமாங்க பாலாசி!


@@துபாய் ராஜா
@@அண்ணாமலையான்
@@ Sangkavi

நன்றிங்க!

@@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)

கண்டுபுடிச்சிட்டீங்களே?!


@@வில்லன்

ஆகா, அண்ணாச்சி!


@@அது சரி

அண்ணாச்சி வாங்க, நல்லா இருக்கீயளா?

தாராபுரத்தான் said...

உருவக கதையா தெரியுதுங்களே,,,

பழமைபேசி said...

//தாராபுரத்தான் said...
உருவக கதையா தெரியுதுங்களே,,,
//

அப்படியும் வெச்சிக்கலாம்...இஃகிஃகி!

ராஜ நடராஜன் said...

அப்பாடா!பின்னூட்டம் போட இடம் கிடைச்சிருச்சு.நானும் ஒவ்வொரு இடுகையா மேஞ்சா புற,அகப் பாடல்கள்....இல்லை படம் காட்டுதல்ன்னு போறீங்க.இந்த இடம்தான் வசமா மாட்டுச்சு.