10/08/2024

கடைசிக்காலாண்டுச் செயற்பட்டியல்

ஐந்தறைப் பெட்டி என்பதைத்தான் அஞ்சறைப்பெட்டி, அஞ்சலப்பெட்டி என்கின்றோம். அது போலத்தான் நான்கறைப் பெட்டியில் நான்காவது அறைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். அதாவது, ஆண்டின் நான்காவது காலாண்டுக்குள் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். ஆண்டின் கடைசி மாதங்கள் எனவும் கொள்ளலாம். ஆகவே அதற்கேவுரிய செயற்பட்டியலை நோட்டமிட்டுக் கொள்வதும் தேவையானதாக உள்ளது.

Use Up Your Flexible Spending Account Funds

வருமானவரிக்கழிவு இல்லாப் பற்று(flexible spending account) என்பது use it or lose it. அந்தக் கணக்கு இருந்தால், $640 மட்டுமே(check with your provider) அடுத்த ஆண்டுக்குக் கடத்த முடியும். ஆகவே எஞ்சிய தொகையைப் பாவித்துக் கொள்ள வேண்டும்.

Dental Insurance

பல்மராமத்து. ஆண்டுக்கு இவ்வளவென வரம்பு இருக்கும். எடுத்துக்காட்டாக $2500 என வைத்துக் கொள்ளுங்கள். சில பல வேலைகள் $3500 கூட ஆகும். ஆகவே இந்த காலகட்டம் உசிதமானது. நவம்பர், டிசம்பரில் $2500, மீண்டும் புத்தாண்டில் அடுத்த $2500 வரம்புக்கு வந்துவிடுவோம். ஆக, $5000 வரையிலான மராமத்து கைக்காசு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

Health Insurance

மருத்துவக்காப்பீட்டில் எஞ்சி இருக்கும் சலுகையைப் பயன்படுத்திக் கொள்வது. ஆண்டுக்கொரு பிசிக்கல்செக்கப் கட்டணமில்லாப் பயன்பாடு. மேலும் சில பல சோதனைகள் இப்ப செய்தா, அவுட் ஆஃப் பாக்கெட் வரம்பு கடந்த நிலையில் கட்டணமில்லை. ஆகவே அது குறித்து நாட்டம் கொள்ளலாம்.

Vision Insurance

எஞ்சிய பயனீடுகளைப் பயன்படுத்திக் கொள்வது. ஒரு சில காப்பீடுகளில் ஈராண்டுக்கொருமுறை கட்டணமில்லாக் கண்ணாடி கொடுப்பர். அதனைப் பெற்றுக் கொள்ளலாம். வரம்புக்குள் ஆகும் கண்பரிசோதனைக்கான செலவீனங்களைச் செய்து கொள்ளலாம். பேசிக்கலி, காற்றில் வெண்ணெய் எடுப்பது. உங்க விஷன் காப்பீட்டினை எப்படிப் பாவிப்பது? பில்லிங்ல கவனம் செலுத்தணும். இஃகிஃகி

Benefit used on contacts:
Glasses $318 - 30% discount = $222.60
Contacts $135 - $150 benefit = free
Total $222.60

Benefit used on glasses:
Glasses $318 - $150 benefit = $168
Contacts $135 out of pocket
Total $303

Look for Ways to Maximize Your Tax Refund

வருமானவரிச் சலுகை பெற சிலபல வேலைகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, வீட்டில் பயன்பாடற்ற பொருட்களைக் கொடையளித்துச் சான்று பெற்றுக் கொள்தல் போன்றவை. வருமானவரியில் கழிவு கொடுக்கும் முதலீட்டுத் திட்டங்களைப் பயன்படுத்துதல் முதலானவை. May want to review Roth IRA, ‘Employee' Retirement Plan Contributions, Max Out 529s, ESAs, ABLEs, and UTMAs, Get Free Annual, Credit Reports, Accelerate Expenses, Delay Income, Change Withholdings, Tax-Loss Harvest etc

Get Insurance in Place

உற்றார் உறவினர்கள் தங்கள் வருமானத்தை நம்பி இருப்பின், If a child, a spouse, a life partner, or a parent depends on you and your income, you need life insurance. அதற்கான கூட்டலும் பெருக்கலும் மீளாய்வு செய்து கொள்ளலாம்.

Review Your Will

உசுலு, உயிலு. “By failing to prepare, you are preparing to fail.” — Benjamin Franklin. யாருக்கும் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நமக்குப் பிறகு, நம் சுவடுகள் எப்படி இருக்கப் போகின்றன? நம் லெகசி என்ன?? எல்லாம் நாம் எழுதி வைக்கும் உயிலைப் பொறுத்தே அமைகின்றது. தடங்கல், தடுமாற்றங்களின்றிக் குடும்பம் பயணிப்பதே நம் சுவடாக இருக்க வேண்டும். அதுதான் நம் வாழ்வின் பயன். கல்லூரி செல்லும் குழந்தைகளிடம் மருத்துவ பவர் ஆஃப் அட்டர்னி முதற்கொண்டு எல்லாமும் வாங்கி வைக்க வேண்டும். அல்லாவிடில், நம்மால் அவரது மருத்துவரிடம் எதுவும் கேட்டுப் பெற இயலாது.

Passports, Visa, Driving License

குறிப்பாக, குழந்தைகளுடையவை காலாவதி ஆகக் கூடும். பத்தாம் வகுப்பில் இருக்கும் போதேவும் ஓட்டுநர் உரிமத்துக்கான செயற்பாடுகள் துவக்கப்பட்டால், பின்னாளில் அவர்களுக்கான காப்பீட்டில் பெரிய அளவு பயன் அமையும். அவர்கள் 21 வயதினை அடையும் போது, பெற்றோர்களின் காப்பீட்டுவழி 3 ஆண்டுகளைக் கடந்திருப்பர். அவர்களுக்காகத் தனி வண்டி வாங்கும் போது, அது பெரியதொரு சேமிப்புக்கு வழிவகுக்கும்.

Switch ceiling fan direction, clockwise direction

வெப்பக் காற்றினை கீழே தள்ளும். குளிர்காலத்திற்கு ஏதுவாய் இருக்கும்.

Protect Backflow valves

உறைந்து விரிசல் விட்டுவிடாதபடிக்கு உறை போட்டு விட வேண்டும்.

ஊசி ஏறாமல் சரடு ஏறாது. இந்தவாக்கில் சிந்தியுங்கள், கலந்துரையாடுங்கள், மேன்மை பிறக்கும். இஃகிஃகி. திருப்பிப் போடாத வறட்டி லேசில் காயுமா?

-பழமைபேசி.

9/15/2024

ஃபெட்னா - பொருளாளர் பொறுப்பு

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேர்தல் இடம் பெற்றது. தேர்தலில் ஓர் அணிக்கு ஆதரவாக பரப்புரைக்கான உள்ளீடுகள் எழுதுவதில் நானும் பங்கு கொண்டேன் என்பது யாவரும் அறிந்ததும் வெளிப்படையானதுமான ஒன்று. எழுதுவதற்கும், வெளிக்கொணர்வதற்குமான பற்றியங்கள் நிறைய இருந்தன. அப்போதே சொல்லியிருந்தேன், கனடியர் பொருளாளர் பொறுப்பு வகிப்பதில் எவ்விதச் சிக்கலுமில்லையென. குறுகிய நேரத்தில் எத்தனை பற்றியங்களைத்தான் வெளிக்கொணர்வது? அதுகுறித்து விரிவாக எழுதக் கால அவகாசம் வாய்த்திருக்கவில்லை.

பரப்புரையின் போது, பொருளாளர் பொறுப்புக்குப் போட்டியிட்ட கனடிய வேட்பாளர் குறித்து உண்மைக்குப் புறம்பான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கனடியவாசி ஒருவரால் அமெரிக்காவில் இருக்கும் அமைப்பின் பொருளாளராகத் தொடர்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதென. இப்படிச் சொல்வதில் இருவேறு அநியாயங்கள் உள்ளன.

முதலாவது, அமைப்பின் சட்டக்கோப்பில் போட்டியிடுவதற்கான உரிமைகள் கொடுக்கப்பட்டும், போட்டியிடும் வேட்பாளரின் இருப்பிடம் கொண்டு ஒதுக்கிப் பார்த்து பாரபட்சம் காண்பிப்பது. அடுத்தது, உண்மைக்குப் புறம்பாக இட்டுக்கட்டி ஊழலுக்குத் துணை போவது. எப்படியெனப் பார்க்கலாம்.

இலாபநோக்கற்ற, வரிவிலக்குப் பெற்ற நிறுவனத்துக்கென சில ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும் வங்கிக் கணக்குத் துவக்கப்பட. நிறுவனத்தின் ஒன்றிய அரசுக்குறியீட்டு எண், முகவரி, சட்டக்கோப்பு, இயக்குநர்களால் அலுவலருக்கு அங்கீகாரமளிக்கப்பட்ட சான்று, அலுவலரின் அடையாளத்தை மெய்ப்பிக்கும் பொருட்டு இருவேறு அடையாளச்சான்றுகள், அவ்வளவுதான். https://donorbox.org/nonprofit-blog/nonprofit-banking. இதன் அடிப்படையில் உசபெக்கிஸ்தான், உகாண்டா என எங்கிருந்தும் அந்நாட்டுக்குடிமகரால் ஒரு நிறுவனத்தின் வங்கிக்கணக்குப் பராமரிப்பாளராகச் செயற்பட முடியும்.

தற்போதெல்லாம் இணையவழியில் பணப்பரிவர்த்தனை நிகழ்வதால், இணையவழிக் கணக்கு, அதற்கான காப்புஎண் பெறல் என்பதும் தேவையாக இருக்கின்றது. அதன்படிக்கு அவரவர் அலைபேசிக்கு கடவுச்சொல் அனுப்பப் பெற்று, உள்புகல் என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. வெளிநாட்டு எண்ணாக இருந்தால், அமெரிக்க வங்கிகளுக்கு அலைபேசிக் கட்டணம் செலுத்த நேரிடும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல் அனுப்பி வைக்கப்படும்போது. ஆகவே வங்கிகள் உள்ளூர் அலைபேசி எண்ணைக் கேட்கின்றன. இது இணையகாலம், உலகமயமான உலகம். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கான கால்சென்ட்டர்கள் அமெரிக்க எண்களினூடாக என்பதெல்லாம் அறதப்பழைய விசியம். ஆமாம், உகாண்டா முகவரி கொடுத்து, உகாண்டாவிலிருந்து கொண்டேவும் அமெரிக்க அலைபேசி எண் பெறமுடியும். https://justcall.io/blog/how-to-get-us-phone-number.html

தேர்தல் முடிந்து விட்டது. வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று(~60%) ஒட்டுமொத்த அணியும் வெற்றி பெற்று, பொறுப்புமாற்றுப் பணிகள் முடுக்கிவிடப்படுகின்றன.

அதிகாரவர்க்கத்தின், ஆதிக்கசக்திகளின் தீண்டல்கள் ஓய்ந்தபாடில்லை. உண்மைக்குப் புறம்பான தகவல்களுக்கு மேல் தகவல்களாக ஏதாவது ஒன்றினை அரைகுறையாக முன்வைத்து, பொறுப்புமாற்றுப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வருகின்றன சில சக்திகள்.

முன்னெப்போதும் இல்லாதபடிக்கு 40 நாட்களுக்குள், பொருளாளருக்கான வங்கிக்கணக்குகள் முறையாக, புதிதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற கனடியக்குடிமகரும் பொருளாளர் பொறுப்பு வகிக்கின்றவருமான அலுவலர்வசம் வந்து சேர்ந்திருக்கின்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருந்தும், மக்களால் மக்களாட்சிக் கொள்கைப்படிக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களை இயங்கவிடாமற்செய்யும் இச்சக்திகளின் அடிப்படை என்ன? அதிகாரவெறி, புகழ்வெளிச்ச அடிமைத்தனம், கடந்தகாலத்தில் செய்யப்பட்ட ஊழல்கள் ஏதேனுமிருப்பின் அவை வெளிப்பட்டுவிடுமோயென்கின்ற அச்சவுணர்வு போன்றவையாகத்தான் இருக்க முடியும். எளியமக்கள் பொதுப்பணியாற்றக் கூடாதாயென்ன? அறத்துக்கு உறுதுணையாய் இருங்கள். அல்லாவிடில், நாளையோ, நாளைமறுநாளோ, பாதிக்கப்படப்போவது நீங்களாகவும் இருக்கலாம்.

-பழமைபேசி, செப் 15, 2024.

8/29/2024

கலை இலக்கியக் கூட்டம்

பிள்ளைகளுக்கு மாலை 7 - 9, வயலின் வகுப்பு. சார்லட்டில் கடுமையான, இலையுதிர்கால மாசுப்பொழிவு, அதன் காரணம் தும்மல் என நெருக்கடியில் இருந்தேன். இருப்பினும், இந்நிகழ்வைக் கண்டே ஆகவேண்டுமென்பதில் உறுதியாக இருந்து, பங்கெடுக்கும் வாய்ப்பும் அமைந்தது.

மரபிசையில் இளங்கலை, நிகழ்த்துகலையில் முதுகலை, மக்களிசையில் ஆய்வு செய்து முனைவர், இருநூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியவர் எனப் பன்முகம் கொண்ட கலைமாமணி ஜெயமூர்த்தி அவர்களின் உரை கேட்பதில் ஆவல். நண்பர், தோழர், எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் ‘நவீன இலக்கியம்’ குறித்து என்னதான் சொல்லப் போகின்றாரெனும் எதிர்பார்ப்பு ஆகியன வீண் போகவில்லைதான்.

இருப்பினும் சற்று ஏமாற்றம். மக்களிசைப் பாடகரின் பேச்சு சட்டென முடிந்து விட்டது. ஆழ்ந்த உரைக்குள் அவர் சென்றிருக்கவேயில்லை. ஆனாலும் அவரின் குறுகிய நேரப் பேச்சு, பாடல், தென்றல் வருடிச் சென்றது போல இருந்தது.

எழுத்தாளர் அருள்மொழி அவர்கள் சொன்ன சந்தோஷ் ஏச்சிக்கானம் அவர்களின் பிரியாணி எனும் கதை, தொடர்ந்து இடம் பெற்ற உரையாடல் நன்றாக இருந்தது. எல்லாரும் எல்லாருடைய கருத்துகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதில்லை. ஆனால் உரையாடல் இடம் பெற வேண்டும். அப்போதுதான் யோசிக்கத் தலைப்படுவோம். 

‘நவீன இலக்கியம்’ என்பதே ஆற்று நீரைப் போன்றதொரு சொல்லாடல்தாம். அதற்கென, நிலையான, ஓர் உரு, வண்ணம் போன்றவை கிடையாது. வரையறுத்துச் சொல்லிவிட முடியாது. ஒப்பீடாகக் கருதிக் கொள்ள வேண்டியதுதான். தற்கால இலக்கியம் எனப் புரிந்து கொள்ளலாம். 2010இல் இருந்த தற்காலம் வேறு, 2024இல் இருக்கும் தற்காலம் வேறு. காலத்துக்கொப்ப, அந்தந்தக்காலத்தின் மதிப்பீடுகளை, கூறுகளை, பயனீடுகளை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள, அவ்வப்போதைய, சமகாலத்தியப் படைப்புகள் தேவையாக இருக்கின்றன என்பதான புரிதலை, மீண்டுமொருமுறை ஏற்படுத்திக் கொண்டாயிற்று.

தொகுத்தளித்த முனைவர் அருள்ஜோதி அவர்களுக்கும் பேரவைச் செயற்குழுவுக்கும் நன்றி. செயற்குழுவினர் கடுமையாக உழைக்க வேண்டும். மக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும். நன்றி.

https://www.youtube.com/live/TbGzMsw0smk?si=tDN5d-hqjrVSKa47

பழமைபேசி.

7/14/2024

கசடுகள் கழியும் கதைகளாலே!


சேன் ஆண்ட்டேனியோ பயணச்சீட்டுப் பெற்றதுமே நண்பர்களுக்குத் தெரியப்படுத்தியதும், நாமெல்லாம் சேர்ந்து ஒரு கூட்டம் போட வேண்டுமெனக் கூறினர். உடனே ஒருவர் சொன்னார், பொழுது சாய்ந்தவுடன் விடிய விடியக் கூட்டம்தானே என்றார். இஃகிஃகி. “அதில்லப்பா, ஒரு பேரலல் செஷன் போட்ணுமப்பா” என்றார் மற்றவர்.

சற்றுநேரத்துக்கெல்லாம் செய்தியோடு வந்தார் நண்பர், “எல்லாம் புக் ஆகிருச்சுப்பா, இருந்தாலும் பார்க்கிறம்னு சொல்லி இருக்காங்க”. மறந்து விட்டிருந்தோம். மீண்டும் பேச்சு. மீண்டும் கைவிடப்பட்ட நிலை.
ஊர் போய்ச் சேர்ந்ததும், நண்பர் விட்டாரில்லை. மேரியாட் வளாகத்திலயாவது போடலாமென்றார். மற்றொரு நண்பர், அங்கிருந்து இங்குவர வெகுதொலைவு நடந்து வர வேண்டும், அங்கேயே கேட்டுப் பார்க்கின்றேனென்றார். 

மாலை வேளையில் சொன்னார், இதுதான் அறை எண், பிற்பகல் 1 மணியிலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாமென்றார்.

நண்பர் செளந்தர் மிகவும் ஆவலாய் இருந்தார். நானோ நடந்து நடந்து களைப்புற்றிருந்தேன். தலைப்பு கேட்டார். பலதும் நினைவுக்கு வந்தன. ஆனால், அதற்காக ஆயப்படுத்துவதற்கான கால அவகாசம் இருந்திருக்கவில்லை. ஆகவே, மூன்று ஆண்டுகட்கு முன்னம், கனெக்டிக்கெட் தமிழ்ச்சங்கத்தில் பேசிய அதே தலைப்பைக் கொடுத்து விட்டேன். அதுதான், “கசடுகள் கழியும் கதைகளாலே!”. நல்ல வரவேற்புக் கிடைத்தது.




7/11/2024

பெருங்கூடம்

 

2024 பேரவை விழாவின் முதன்மை அரங்கம் கிட்டத்தட்ட 2660 பேர் அமரக்கூடியதென மாநாட்டு அரங்கு ஆவணம் சொல்கின்றது. நான் தனிப்பட்ட முறையில் கவனித்த வரையிலும், முதல்நாள் மரபுக்கலை நிகழ்ச்சிகளின் போது, இரவு 9 மணியளவில் தோராயமாக 1200 பேரும், இரண்டாம் நாள் மெல்லிசையின் போது தோராயமாக 2200 பேரும் இருந்திருக்கலாமென்பது கணிப்பு. இவையிரண்டு தவிர, பகற்பொழுதில் இடையில் எதற்கோ அந்தப்பக்கம் சென்றிருந்த போது, மேடையில் ஏதோ இடம் பெற்றுக் கொண்டிருந்தது. அது என்னவென்றே கருதாமல் ஒரு 25, 25 பேர் உள்ளே இருந்தனர்.

தமிழ்ச்சங்கத் தலைவர்களுக்கான வாட்சாப் குரூப்பில் இடம்பெற்ற உரையாடலின்படிக்கு, தமிழிசை நிகழ்ச்சியின் போது 60-80, கவியரங்கத்தின் போது 80-100, பட்டிமன்றத்தின் போது 300 பேரும் பார்வையாளர்களாக இருந்திருக்கலாம்.

நம்மிடம் பேசிய தமிழ்நாட்டு விருந்திநர் சொன்னது, எனக்கு தொழில்முனைவோர் மாநாட்டின் போது வாய்ப்புக் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து, வெறும் பத்தே பேர் இருக்க முதன்மை அரங்கில் பேசவைத்துவிட்டனரென அகங்கலாய்த்துக் கொண்டார். சரி, ஏன் இந்த நிலை. நம் கருத்துகள் கீழே வருமாறு:

1. விமானநிலைய முனையம் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அதையொத்த வளாகம்தான் இது. அதை நினைக்கும் போதேவும் பிரமாண்டமாக இருக்கின்றது. ஒருகோடியிலிருந்து மறுகோடிக்குச் செல்லவேண்டுமென நினைத்தாலே அலுப்புத் தோன்றும்.  உளநிலை முதற்காரணம்.

2. சாப்பாட்டுக்கு பேருந்தில் பிறிதொரு இடத்துக்குச் செல்ல வேண்டும். மூன்றாம் தளத்திலிருந்து வெளிவாயிலுக்கு சும்மா வந்தாலே சற்று தொலைவு நடந்துதான் வந்தாக வேண்டும். வந்ததும் வரிசையில் நிற்க வேண்டும். வாய்ப்புக் கிட்டியதும் பேருந்தில் ஏற வேண்டும். இடம் சென்று சேர்ந்ததும் இறங்கி வரிசையில் நிற்க வேண்டும். வெயில். உணவுக்கூடம், சிற்சிறு கூடங்கள். கதவுக்கு வெளியில் வரிசையாக நிற்பதற்கு மாறாக உள்ளேயே நிற்க வேண்டும். இப்படி ஒருவேளைச் சாப்பாட்டுக்கே சராசரி 2 மணி நேரம் செலவிட வேண்டும்.

3. நிறைய இணையமர்வுகள். அவற்றுக்கும், ஆள்பிடிப்பு வேலைகளெல்லாம் கூட நடந்தன. ஆனால் சிலவற்றுக்கு இயல்பாகவே நல்ல கூட்டம். அதாவது ஓரிரு கூட்டங்களுக்கு 200 பேர் வரையிலும். இஃகிஃகி, அதிகாரமையத்தின் ஆசிபெற்ற விருந்திநர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கூட்டம் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளப்பட்டதும் நடந்தது.

4. எந்த அரங்கிலும் நெடுநேரம் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியாது. உடல் சோர்ந்துவிடும். காரணம், இருக்கைகள் அப்படி. கைதாங்குச்சட்டங்கள் இல்லாத குறுகிய இருக்கைகள். சமதள இருக்கைகள். இப்படிப் பலகாரணங்கள்.

5. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறாதது. முதன்மை அரங்கின் நிகழ்ச்சிகளை வணிகவாளாகத்தில், இரண்டாவது, முதற்தளத்தில் நேரலை ஒளிபரப்புச் செய்திருக்கலாம். நான் அவ்வப்போது பேசுபுக்கில் பார்த்துக் கொண்டேன். அதுவும் சில நேரம் இருக்கும். பலநேரங்களில் இருக்காது.

2018 துவக்கம், பிரமாண்டம், மில்லியன் டாலர் விழாக்கள், அது, இதுவென ஊதி ஊதிப் பெருக்கி ஓய்த்துவிட்டதாகத்தான் நான் கருதுகின்றேன். 12 ஆண்டுகட்குப் பிறகு கலந்துகொண்டவன் நான். சாமான்யவர்க்கத்துக்கும் அதிகார மேல்தட்டு வர்க்கத்துக்குமான வேறுபாடாகத்தான் இதைக் கருதுகின்றேன். சாமான்யன் என்ன நினைப்பான்? வந்தவர்கள் சாப்பிட்டார்களா? நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள் மகிழ்வா? கவியரங்கத்துக்குக் கூட்டமா?? இப்படியான சாமான்யத்தனம்தான் மேலோங்கும். தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளிலே கூட ஆயிரம், ரெண்டாயிரம் பேர் நிகழ்ச்சிகளைக் காணும் காலமிது.  தமிழ்மணத்தில் நேரலை செய்து உலகுக்கே காட்டினோம்! அது ஒருகாலம்!!

#FeTNA2024


7/10/2024

ஆவணப்படுத்தல்





ஆவணம் என்பதை அதன் பரந்த பொருளில் கொண்டால், அது ஒரு சமூகத்தில் வாழ்கின்ற தனி மனிதர்கள், குழுக்கள், அரசு போன்றவர்கள் உருவாக்கும் கடிதங்கள், குறிப்பேடுகள், கையேட்டுக் குறிப்புகள், சான்றிதழ்கள், உரிமைப்பத்திரங்கள் போன்றவற்றை உள்ளடக்கும். இன்றைய தேவையை முன்னிட்டுப் பாதுகாக்கப்படும் ஏடுகள், நாளைய தலைமுறைக்கு ஆவணமாக மாறும். எனவே, ஒவ்வொரு தனிமனிதரும் சமூகங்களும் இணைந்து ஆவணப்படுத்தலில் ஈடுபடுவது அவசியமென வலியுறுத்தப்படுகின்றது.

இயன்றவரை, எம்மால், ஆவணப்படுத்தலுக்குத் தொடர்ந்து பங்காற்றி வருகின்றேன். தமிழ்மொழியின் சொற்கள், வட்டாரவழக்கு, சொல்லாடல்கள், சொலவடைகள், தகவல் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். எடுத்துக்காட்டாக, சேவலின் வகைகளைப் படங்களோடு ஆவணப்படுத்தி இருக்கின்றேன். அதற்காக நான் கொண்ட உழைப்பு மிகப் பெரியது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நிகழ்வுகள் குறித்து என்னைக் காட்டிலும் அதிகமாக நானறிந்து எவரும் எழுதியிருக்கவில்லை. பண்பாட்டின் ஒரு கூறு. அதைப்பற்றி எவராவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

பேரவையின் துவக்ககாலத்திலிருந்து விழாக்களுக்கு வந்திருந்த விருந்திநர்கள், சிவாஜி, எம்.எஸ்.விஷ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி, பி.சுசீலா உள்ளிட்டோர் பட்டியல் இணையதளத்தில் ஓடுபடமாக ஓடிக் கொண்டே இருந்தன. அதேபோல முந்தைய விழாக்களின் போதான படங்களும். இவையெல்லாம் வரலாற்று ஆவணங்கள்.

அண்மையில் சேன் ஆண்டோனியோவில் நண்பர் ஒருவர் வினவினார், “எப்படி, 2010இலேயே, பின்னாளில் விஜய் மணிவேல் தலைவராக வருவாரெனத் தெரிந்து பேட்டி எடுத்தீர்களா?”. இல்லையென மறுமொழிந்தேன். சொன்னேன், ”நான் விஜய் அவர்களை மட்டும் பேட்டி எடுக்கவில்லை. பேரவைக்காக உழைத்துக் கொண்டிருந்த பலரையும் நேர்காணல் கொண்டு பதிந்தேன். அதில் விஜயும் ஒருவர்”. ஆவணப்படுத்தல் என்பது ஒரு தொடரியக்கம். அவ்வப்போது, அவ்வப்போதையவற்றைப் பதிந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாவிடில், வரலாறு, அடையாளங்கள் முதலானவற்றுக்கு ஊறு நேரும். எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு கல்வெட்டு, பத்துவரிகள் கிடைக்கின்றதென வைத்துக் கொள்வோம். ஒட்டுமொத்த வரலாற்றையே அது மாற்றியமைக்க வல்லது.

திருக்குறள், உச்சிமுகர்ந்து கொண்டாடுகின்றோம். எப்படி? தன்னலம் பாராத ஆயிரமாயிரம் பேர் கொடுத்துச் சென்றிருக்கும் கொடையது. எப்படி? ஓலைச்சுவடிகளில் இருக்கின்றன. அவை நாட்பட நாட்பட நைந்து போகும். ஆகவே ஆங்காங்கே தன்னார்வலர்கள், புரவலர்கள் படியெடுப்பு விழா நடத்துவார்கள். அதாவது ஓர் ஓலையைப் பார்த்து மற்றோர் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு பதிப்பிக்க வேண்டும். அப்படியானவர்களுக்கு மொழியறிவும் எழுத்தறிவும் இருந்தாக வேண்டும். இப்படித் தலைமுறை தலைமுறையாக்த் தரவுகளைக் கடத்தி வந்ததினால்தான் நமக்கு வாய்த்திருக்கின்றது அது.

பழமை, இதை ஏன் இப்போது எழுதுகின்றாய் என்கின்றார்கள். ஏன் எழுதக்கூடாதெனத் திரும்பக் கேட்டேன். ’இல்லை, தேவையற்ற சஞ்சலங்கள்’, அப்படியிப்படியென இழுத்தனர். உண்மைக்குப் புறம்பாக இருந்தால் சுட்டலாம். மாற்றியமைக்கக் கடமைப்பட்டவன். ஆனால் எழுதக்கூடாதென எதிர்பார்ப்பது சரியன்று. எடுத்துக்காட்டாக, ‘அருவி’ எனும் பெயர் சூட்டியவர், பனிமலர், கோடைமலர், இளவேனில்மலர், இலையுதிமலர் என்றெல்லாம் பெயர் கொடுத்து, அச்சுக்குக் கொண்டு போவதெப்படியென்றெல்லாம் செதுக்கியசிற்பி நண்பர் சிவானந்தம். மைக்ரோசாஃப்ட் ப்ராஜக்டில் அதற்கென ஒரு டெம்ப்ளேட் வடிவமைத்து இப்படியிப்படியெல்லாமெனச் செயலாக்கம் செய்தவர் நண்பர் ப்ரிதிவ்ராஜ் சிவராஜ். நண்பர் எழில்வேந்தனும் நானும் வடிவமைத்து அச்சுக்கு அனுப்புவோம். இலக்கியம், சமூகம் சார்ந்த படைப்புகளே அதில் இடம் பிடித்தன. இந்தத் தகவலை நான் பதியாவிட்டால், எவரும் பதியப்போவதில்லை.

”பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!”
-பாரதி

”We're living in an era of unprecedented change, and I want to be a part of documenting it”. -Ron Fournier பதிவதென்பது ஒரு தொடரியக்கம்., பொதுத்தொண்டு. பிழைகள் இருந்தால் சுட்டுங்கள். முடக்க நினைப்பது பத்தாம்பசலித்தனம்.

படம்: பேரவை விழாவில், திரு செந்தில் துரைசாமி அவர்கள் நம்மோடு பகிர்ந்து கொண்டது. தம் பெற்றோர் மறைந்து விட்டனர். ஆனால் இந்தப் படம் இருக்கின்றதெனச் சொன்னார். நானும் சொல்லி இருந்திருக்க வேண்டும்; நான் பதிந்ததும் இருக்கின்றதென. https://maniyinpakkam.blogspot.com/2009/09/blog-post_28.html அதிலும், ஆவணப்படுத்துதலே வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

-பழமைபேசி, 07/10/2024.



7/02/2024

நூற்றாண்டு விழாக்காணும் கலைஞர் மு.கருணாநிதி

இந்தியாவில் 1956ஆம் ஆண்டு இந்துவாரிசுச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, தந்தையும் தாயும் ஈட்டிய சொத்துகளில் அவர்களுக்குப் பிறகு பாலின வேறுபாடின்றி எல்லாக் குழந்தைகளுக்கும் உரிமையுண்டு எனப்பட்டது. எனினும், பூர்வீகச் சொத்தில் ஆண் வம்சாவளிக்கு மட்டுமே உரிமை உண்டு. பெண்களுக்கு உரிமை கிடையாது. தமிழ்நாடு மாநிலச் சட்டத்தின் வழியாக அம்மாநில அளவில் பூர்வீகச் சொத்திலும் பெண்களுக்கு உரிமை கிடைக்கும் வகையில், 1989ஆம் ஆண்டில் அம்மாநில முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி சட்டத்திருத்தம் கொணர்ந்தார். அதையொட்டி, 2005ஆம் ஆண்டு, இந்தியநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அதேபோல பெண்களுக்கான சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிப்புக்கலைஞர், இதழியலாளர், பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை எனும் ஊரில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார் ஆகியோருக்கு 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் பிறந்தவர். மாணவப் பருவத்திலேயே செயலாற்றல் மிகுந்து திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் எனும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் தலைவராகவும் விளங்கினார். அதுவே பின்னாளில் மாநில அளவிலான அமைப்பாகவும் உருப்பெற்றது. இவ்வமைப்புக்கான இதழாக மாணவநேசன் எனும் இதழையும் தோற்றுவித்து நடத்தினார் அதன் தலைவர் கருணாநிதி அவர்கள். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், 1942ஆம் ஆண்டில் முரசொலி இதழையும் தோற்றுவித்து ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.

இளம் வயதிலேயே தமிழ்த் திரைப்படங்களுக்கும் நாடகங்களுக்கும் கதை வசனம் எழுதுவதையும் மேற்கொண்டார். இராஜகுமாரி எனும் திரைப்படம்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் கதை வசனம் எழுதிய முதற்திரைப்படம், வெளியான ஆண்டு 1947. அவர் கதை வசனம் எழுதி வெளியான முதல்நாடகம் ’பழநியப்பன்’ என்பதாகும்; வெளியான ஆண்டு 1944. இதற்குமுன்னர் உள்ளூரளவில் பல நாடகங்களில் நடித்தும், கதை வசனம் எழுதியும் இருக்கின்றார். ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’ என 21 நாடகங்களை எழுதியுள்ளார். அவர் கதை எழுதிய திரைப்படங்களுள், ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘பூம்புகார்’, ‘பாலைவன ரோஜாக்கள்’ முதலானவை வெற்றிப் படங்களாக அமைந்ததோடு, தமிழ்ச்சமூகத்தின் சீர்திருத்தப் பாதையில் பெரும் தாக்கத்தை உண்டு செய்தபடங்களாகவும் அமைந்தன.

’தூக்குமேடை’ நாடக விளம்பரத்தில் இடம்பெற்ற கருணாநிதி அவர்களை ‘அறிஞர் கருணாநிதி’ எனக் குறிப்பிட்டிருந்தார் சகநடிகரும் நாடகத் தயாரிப்பாளருமான எம்.ஆர்.இராதா அவர்கள். அறிஞர் என்றால், அது தலைவர் அண்ணாத்துரை ஒருவரேயென கருணாநிதி அவர்கள் மறுப்புரைத்துவிடவே, ‘கலைஞர்’ எனக் குறிப்பிட்டு அழைக்கப்படலானார். அன்றுமுதல் ‘கலைஞர்’ என்பதும் ‘கருணாநிதி’ என்பதும் ஒருசொல்போலவே நிலைத்துவிட்டன.

திரைப்படப்பாடல்கள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என அவரால் எழுதப்படாத இலக்கிய வடிவங்களே இல்லையெனும் அளவிற்குப் படைப்புகளை, 178 நூல்களைக் கொடுத்திருக்கின்றார். அவற்றுள், ‘குறளோவியம்’, ‘நெஞ்சுக்கு நீதி’ ஆகியன முதன்மையானதும் படைப்புலகில் எவரும் உடனே சொல்லக்கூடிய வகையிலும் புகழ்பெற்றனவாகும்.

தமிழர்கள், தமிழ்நாடு ஆகியவற்றுக்கான அடையாளங்களைக் கட்டமைத்ததில் தனியிடத்தைப் பெற்றவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள். நாட்டுப்பண்ணுக்கு இணையாக தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டின் உணவுவழங்கல் நிறுவனத்துக்கு இணையாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சமயச்சார்பற்ற அறநெறி நூலான திருக்குறளுக்கு முக்கியமளித்து வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை என நிறையப் பணிகள் இடம் பிடிக்கின்றன.

தம் பதினேழாவது வயதில் முறையாகத் தம் அரசியல் பணியைத் துவக்கியவர் இந்தியாவின் முக்கிய அரசியல்தலைவராக பரிணமித்தார். தனிப்பட்ட முறையில் தாம் போட்டியிட்ட எல்லாத் தேர்தல்களிலும் வெற்றியைக் கண்டவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக, எதிர்க்கட்சித் தலைவராக, கட்சித் தலைவராகயென நெடியதொரு அரசியல் பயணத்துக்குச் சொந்தக்காரர்; சமூகச்சீர்திருத்தக் கொள்கைகளுக்கு முன்னுரிமையளித்தவரென கருதப்படுபவர்.

பொருளாதாரச் சமுத்துவம், பாலினச்சமுத்துவம் முதலானவற்றுக்கான பல திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயற்படுத்தியவர். தமிழ்நாட்டில், மூன்றாம்பாலின நல வாரியத்தை நிறுவியவர். சமத்துவபுரம் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். 'உடல் ஊனமுற்றோர்' எனும் சொல்லுக்கு மாற்றாக, 'மாற்றுத்திறனாளிகள்' எனும் சொல்லை அறிமுகப்படுத்தி, அவர்களையும் மற்றவருக்கு இணையாகவும் ஈடாகவும் உள்ளடக்கிய பொருளாதார மண்டலங்களை உருவாக்கத் தலைப்பட்டவர்.

உலகளாவிய அளவில் ஏற்படும் சமூகச் சீர்திருத்தங்களைக்கற்று உடனுக்குடனே அவற்றைத் தமிழர்களுக்கிடையேயும் அறிமுகப்படுத்துவதில் துடிப்புமிக்கவராகத் திகழ்ந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், தம் 94ஆவது வயதில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம் ஏழாம் நாள் விடை பெற்றுக் கொண்டவரானார்.

'உடன்பிறப்பே' என விளிக்கும்பாங்கினைத் தனித்துவமாய் அறிமுகப்படுத்திக் கடைபிடித்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், சொற்களினூடாகவும் நல்லபல திட்டங்களின் வழியாகவும் தமிழின் அடையாளங்களைக் கட்டமைத்துத் தமிழின் அடையாளமாகவே ஆகிவிட்டிருக்கின்றார்! உலகெங்கும் அவரது நூற்றாண்டு விழாக்கள் கடைபிடிக்கப்படுகின்றன; அமெரிக்காவிலும்!!

[நூற்றாண்டு விழா, சமத்துவம் முதலானவற்றை முன்னிறுத்திக் கடைபிடிக்கப்படும் விழாவின் மலரில், காய்தல் உவத்தல் புகழ்ந்தோதலற்ற ஆவணத்தன்மை கொண்டதொரு கட்டுரையாக, முதற்கட்டுரையாக இடம் பெற வேண்டிய அறிமுகக்கட்டுரை இஃது. இஃகிஃகி]

-பழமைபேசி.