12/01/2025

சரவணன் கிருஷ்ணன்

சரவணன் கிருஷ்ணன்

தகவல் தொடர்புக்குழுவால் என்ன செய்திட முடியுமென்பதைக் காண்பித்தோம். ஒரு அமைப்பின் தகவல் தொடர்பாளர், நிறுவனத்தின் வெளிப்புற, உள்புறத் தொடர்புகளை நிர்வகிப்பதற்கும், அதன் நற்பெயரைப் பேணுவதற்கும், அதன் குறிக்கோள்களை, செயற்பாடுகளைப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும் பொறுப்பானவர் ஆவார். அவரின் முக்கிய பணிகள் கீழ் வருமாறு:

அமைப்பின் இலக்குகள், செய்தியை,  பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையில் தொடர்புத் திட்டங்களையும் உத்திகளையும் உருவாக்குதல், செயல்படுத்துதல்.

பத்திரிகை வெளியீடுகள், செய்திமடல்கள், இணையதள உள்ளடக்கங்கள், அறிக்கைகள், உரைகள், சமூக ஊடகப் பதிவுகள் போன்ற பல்வேறு வகையான உள்ளடக்கங்களை எழுதுதல், திருத்துதல், பரப்புதல் முதலானவற்றைச் செய்ய வேண்டும். அதற்கு, அமைப்பின் செயல்பாடுகள், திட்டங்கள், மதிப்புகள் குறித்து ஈர்க்கக்கூடியதும் உண்மையானதும் துல்லியதுமான தகவலை உருவாக்கிட வேண்டும்.

 ஊடகவியலாளர்களுடலும் உறுப்பினர்கள் தோழமை அமைப்புகளுடன் உறவுகளை ஏற்படுத்திப் பேணுதல் மிக அவசியம். வினாக்களுக்கும் விசாரிப்புகளுக்கும் முறையாகப் பதிலளித்து அக்கறை கொண்டாக வேண்டும்.

குறிப்பாக ஊடங்களிலும் பொதுவெளியிலும் வெளிவரும் செய்திகளைக் கண்காணித்தல், அதற்கொப்பச் செயற்பாடுகளை, எதிர்வினைகளை உடக்குடன் அமைத்துக் கொண்டாக வேண்டும். 

எண்ணிம, சமூக ஊடக மேலாண்மை, அமைப்பின் சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகித்தல், உள்ளடக்கத்தைப் பதிவிடுதல் மற்றும் கருத்துகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் பார்வையாளர்களுடன் ஈடுபடுதல். இணையதளத்தை புதுப்பித்தல்,உள்ளடக்கத்தை ஈர்க்கக்கூடியதாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்தல்.

உள் செய்திமடல்கள், அக இணையப் புதுப்பிப்புகள் மூலம் அமைப்புக்குள் தகவல் பரிமாற்றத்தை அமைத்துக் கொண்டு, அமைப்பினரின் செயல்பாடுகளும் அதற்கொப்ப இருக்குமாறு அறிவுறுத்திடல் வேண்டும். மாநாடுகள், நிகழ்வுகள்,  பிற விளம்பர நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தலும் ஒருங்கிணைத்தலும்.

ஏதேனும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், எதிர்மறையான நிகழ்வின்போது, அமைப்பின் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும் சரியான நேரத்திலும், உறுப்பு அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்தல்.

தகவல் தொடர்புக்குழுவினர் எப்போதும் ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொண்டும் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டும் இருந்தனர். வட அமெரிக்காவெங்கும், ஏன் உலகமெங்கும் பேரவைக்கான ஆர்வலர்கள் உள்ளனர். பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் நடக்கும். அப்படியானவற்றைக் கண்காணித்து, அமைப்பின் தகவலை அதற்கொப்ப அமைத்துக் கொள்தலுக்கும், திருவிழா குறித்த பொதுமக்களின் எதிர்பார்ப்பினை அறிந்து உடனுக்குடன் நமக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குமான சிறந்த தொடர்பாளராக விளங்கியவர்தாம் உய்த்துணர்வில் சிறக்கும் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள். 

தமிழ், மக்கள், பண்பாடு முதலானவற்றின்பால் அக்கறை கொண்டவர். விழாவின் பயணக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். குறைவான கட்டணத்தில் விடுதி, குழுவாகப் பயணம் செய்வதன் மூலம் செலவுக்குறைப்பு உள்ளிட்ட பல ஏற்பாடுகளை தொடர்பு கொண்ட ஆர்வலர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நம்மோடு துணை நின்றவர் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள்.

’ஏப்பா, மெய்யாலுமே இத்தனையும் செய்யப்பட்டதா?’ என்றால், ஆமாம், செய்யப்பட்டதுதான்!

𝐖𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐜𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫, 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐏𝐑 𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐚 𝐬𝐭𝐨𝐫𝐲 𝐰𝐨𝐫𝐭𝐡 𝐭𝐞𝐥𝐥𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐰𝐞 𝐣𝐮𝐬𝐭 𝐰𝐫𝐨𝐭𝐞 𝐨𝐮𝐫𝐬!🎉🎉

-பழமைபேசி.
தகவல் தொடர்புக்குழு, FeTNA 2025.

11/29/2025

வட அமெரிக்க வாகை சூடி - 2

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மீது தேவையற்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு மக்களின் ஒவ்வாமைக்கு இட்டுச் சென்றிருந்த காலமென ஒன்றிருந்தது. ஆனால் அப்போதேவும் மாணவர்களுக்கான போட்டிகள் எழுச்சியோடும் சீரோடும் இடம் பெற்று வந்தன. இணையவசதிகள் பிறநாடுகளில் தலையெடுக்கத் துவங்கி இருந்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, பேரவையை உலகெங்கும் கொண்டு செல்லக் கூடிய பணிகள் செம்மையாக இடம் பெற்றன. 
  • நாடளாவிய அளவில், பல்வேறு கல்விக்கான முன்னெடுப்புகள், அமைப்புகள் வாயிலாக, அறிவியல், கணிதம், தானியங்கியல், இசை முதலான போட்டிகளில் நம் பிள்ளைகளும் பெருமளவில் பங்கு பெறுகின்றனர். எங்கும் பணமாகப் பரிசுகள் வழங்குவதில்லை. 
  • உளவியலாளர்களும் கல்வியாளர்களும் சொல்வது யாதெனில், பணம் போன்ற பெரிய வெளிப்படையான வெகுமதிகள், உண்மையில் ஒரு மாணவரின் உள்ளுணர்வுத் தூண்டுதலை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். பரிசுப் பணமாக அல்லாமல் (எ.கா., கோப்பை, பதக்கம், அல்லது சிறப்புச்செய்தல்) இருக்கும்போது, ​​கவனம் முழுவதும் கற்கும் செயல்முறை, திறன் மேம்பாடு, வெற்றிக்குரிய மரியாதை ஆகியவற்றில் இருக்கும். பணத்தின் மீதிருக்காது. பெற்றோர்களின் இடையூடுகளையும் மட்டுப்படுத்தும்.
  • பணம் கொடுப்பது கல்வியின் இலக்கிற்கு முரணாக, கல்வியின் சீரிய தன்மையிலிருந்து, பொருளாசையை நோக்கிக் கவனத்தை மாற்றும். பரிசுகள், ஒரு நினைவுச் சின்னமாக (plaque, custom medal, or unique book set) இருக்கும்போது, ​​அது செயற்பாட்டின் மறக்கமுடியாத சின்னமாக அமைகின்றது.
  • அமெரிக்காவில், ஒரு ரொக்கத் தொகையானது, சட்டப்படி "பரிசு" என்று கணக்கிடப்பட்டால், அது வெற்றி பெறும் மாணவரின் வரி செலுத்த வேண்டிய வருமானமாக மாறும். இதனால்,  வரிப் படிவங்களை (1099-MISC) மாணவருக்கு வழங்க வேண்டும், சில இடங்களில் வரியையும் பிடித்தம் செய்ய வேண்டிய நிலை வரும்.
மேற்கூறப்பட்ட காரணங்களின் நிமித்தம், 2010 காலகட்டத்திலேயே பணமுடிப்புக்கு எதிராக நாம் கிளர்ச்சிகள் செய்தது உண்டு. ஆமாம், நாம் செய்த கிளர்ச்சிகளுக்கு அளவேயில்லை. இஃகிஃகி. கவனம், போட்டியின் தரத்திலும் நயத்திலும் இருக்க வேண்டுமேவொழிய, பணம், பணம் தொடர்பான விளம்பரங்களென இருக்கக் கூடாது. நம் கருத்தினைப் பொருளாளரிடம் சொல்ல, எஞ்சியதை அவர் பார்த்துக் கொண்டார். அன்னாருக்கு நன்றி.

நண்பர் செளந்தர் அவ்வப்போது யோசனைகள் சொல்லிக் கொண்டிருப்பார். தேர்தலிலும் போட்டிகள் குறித்த கருத்தாடல்கள் இடம் பெற்றிருந்தன. பொறுப்புகள் கிட்டியவுடன் மளமளவென குழுக்களை அமைக்கும் பணிகள். வட அமெரிக்க வாகை சூடி, அதற்கான ஆவணங்கள் கட்டமைக்கப்பட்டன. விழாவுக்கான பணிகளும் துவக்கப்பட்டன. வழிகாட்டுதல்க்குழு உறுப்பினரின் யோசனைக்கொப்ப நீங்கள் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியும்தானேயெனக் கேட்டார் பேரவைத் தலைவர். ஒருவிநாடி கூட யோசிக்காமல், மறுத்துவிட்டோம். ஏன்? விழா நடத்துகின்ற ஊரிலிருந்தேவும் எதிர்ப்பு வரும், ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்குள் அடைபடுவதையும் நாம் விரும்பவில்லை, ஒருங்கிணைப்பாளர்களுக்கெல்லாம் ஒருங்கிணைப்பாளராக அடைமொழியேதுமற்று இருத்தல் சுகமென நினைத்தது உள்ளிட்டவைதான் காரணங்கள். வட அமெரிக்க வாகை சூடிக்கான ஒருங்கிணைப்பாளர்? அவசியம் உள்ளூரில் இருக்கும் ஒருவர்தாம் அந்தப் பொறுப்பில் இருந்தாக வேண்டுமென்பதையும் தெரிவித்து விட்டோம்.

நாம் பணியாற்றாத குழுவேயில்லையெனச் சொல்லுமளவுக்கு அன்போடும் அக்கறையோடும் எல்லாக் குழுவினரும் நம்முடன் தொடர்பில் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டோம். திருமிகு பரணி அவர்கள், தொடர்ந்து, நம்மிடம் இடம் பெறும் பணிகள் குறித்து அளவளாவியபடி இருந்தார். பதற்றம், பரபரப்பு என்பதெல்லாம் வெகுகுறைவு. வாசிங்டன் டிசி பகுதியிலிருந்து ஒருவர், உள்ளூரிலிருந்து ஒருவர், மிச்சிகன் மாகாணத்திலிருந்து ஒன்று, இவைதாம் நமக்கு நினைவுக்கு வருகின்றன.  பொருட்படுத்தக் கூடிய அளவில் பெரிதாக ஒன்றுமிருந்திருக்கவில்லை. விழாநாளும் வந்துவிட்டது. 

முதல்நாள், நண்பகல் உணவுநேரத்தில் நெருக்கடி. நண்பர்களின் உதவியால் சமாளித்தோம். இரண்டாம் நாள் கோப்பைகள்,பதக்கங்கள் வைக்க இடம் வேண்டும். அறை இல்லை. அரங்க மேலாளரை அவரது அறையில் சென்று பார்த்துப் பேசி, அழைத்து வந்து போட்டிகள் நடந்து கொண்டிருப்பதைக் காண்பித்தோம். புரிந்து கொண்டார். கூடுதல் பணம் கொடுப்பதற்கில்லை. பார்த்து உதவுங்களென்றோம்; குறிப்பாக பூட்டித் திறக்கும்படியான அறை கேட்டோம். நாம் மன்றாடியதைக் கண்ட அவர், கொடுத்து விட்டார். இஃகிஃகி. 

பதக்கங்கள், கோப்பைகள், உறைகள், இதரப்பரிசுப் பொருட்களென, அரங்கத்து அறைக்குள் வைப்பதற்கு உதவ வேண்டுமென மருத்துவர் திரு. செந்தில் சேரன் அவர்கள் வேண்டினார். அதேநேரத்தில் எனக்குப் பல வேலைகள். நம்மிடம் இருந்த கூடுதல் பாஸ்களை, நண்பர்கள் கான்சாஸ் இராஜேஷ் ஜேசுராஜ், வெங்கட் உள்ளிட்டோரிடம் கொடுத்து, அவருக்கு உதவும்படிச் சொல்லவே, அவர்களும் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்கு நன்றி.

முதல்நாள்(ஜூலை 4) விருது வழங்கலுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 60 நிமிடங்கள். எடுத்துக் கொண்ட நேரம் 40 நிமிடங்கள். இரண்டாம் நாள்(ஜூலை 5) விருது வழங்கலுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 90 நிமிடங்கள். எடுத்துக் கொண்ட நேரம் 50 நிமிடங்கள். வழங்கப்பட்ட பதக்கங்கள் 840. கோப்பைகள் 247. சான்றிதழ்கள் 1600+.  பயன்படுத்திக் கொண்ட அறைகள், ஜூலை 3ஆம் நாள் 9, ஜூலை 4ஆம் நாள் 4, ஜூலை 5ஆம் நாள் 2. மேடை நேரத்திலும் சரி, அறைகள் பயன்பாட்டிலும் சரி, எவ்வளவு சிக்கனத்தைக் கடைபிடிக்க முடியுமோ அவ்வளவு சிக்கனத்தைக் கடைபிடித்திருக்கின்றோம். 

அன்போடும் அக்கறையோடும் பிள்ளைகள் ஒவ்வொருவரையும், ஒருமுறைக்குப் பலமுறை(ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக) மேடையேற்றி, பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கியென எல்லா முறைமைகளையும் செய்து கொடுத்தவர்களுக்குப் பாராட்டுகள். எல்லாமும் சிறப்பாக முடிந்தநிலையில், ஒருங்கிணைப்பாளர் திருமிகு பாரதி முருகேசன் வந்து சொன்னார். “அண்ணா, உங்களுக்கானதை நீங்கள் இப்போதே பெற்றுக்கொள்ளுங்கள்”. சுற்றிலும் பார்த்தேன். யாரையுமே, எந்த செயற்குழு, வழிகாட்டுதல்க் குழுவினரையும் காணோம். ஒருங்கிணைப்பாளர்கள், திருமிகு பரணி, நான் என எல்லாருமே கேரொலைனா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்தவர்கள். நமக்கு நாமே திட்டத்தின் கீழ், எங்களை நாங்களே புகழ்ந்து, பாராட்டி படமெடுத்துக் கொண்டோம். https://www.youtube.com/live/nAB7JvPt2pQ?si=WLhVqDm8sM3ieGEK&t=8802 இஃகிஃகி. பெற்றோர்கள், மாணவர்கள், நடுவர்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் வெற்றி.

மேடையை விட்டிறங்கி நமக்குக்கிடைத்த பதக்கம், பொன்னாடையை வீட்டாரிடம் தரலாமென நினைத்துச் சென்று கொண்டிருந்தேன். எதிரில் ஒருவர் ’தபதப’வென பிள்ளையை இழுத்துக் கொண்டபடி வந்தவர், ’எல்லாம் முடிஞ்ச்சுங்ளா, நாங்க லேட்டு, எங்க பிள்ளைக்குப் பதக்கம்?’. ’இந்தாங்க இது எனக்குக் கொடுத்தது’, நானே பிள்ளையின் கழுத்தில் போட்டு, அந்தச் சிறு பெட்டியையும் கொடுத்து அனுப்பி வைத்தேன். நான்கு தப்படி எடுத்து வைத்தேன். மற்றுமொரு தம்பி வந்தார். “பழமபேசி அண்ணை, பொட்டிகளை எடுத்தாரச் சொன்னவைக...” என இழுத்தார். இவர்தாம், இந்த மூன்று நாட்களாகப் பெட்டிகளை அங்குமிங்கும் நகர்த்தும் பணியைச் செய்து கொடுத்தவர்; செக்யூரிட்டி ஆட்களின் இம்சைகளுக்கு இடையேவும். கையிலிருந்த பொன்னாடையை தம்பிக்குப் போர்த்தி எல்லாம் ஆச்சுது, எடுத்துச் செல்ல ஒன்றுமில்லையெனச் சொல்லியபின் வீட்டாரை நோக்கிச் சென்றேன். பாரமெல்லாம் இறங்கி, சூன்யமாகி, நீர்ப்பரப்பின் மேலே அசைந்து அசைந்து ஆடிச்செல்லும் அன்னம் போலிருந்தது மனம்!

𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬𝐧’𝐭 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐰𝐢𝐧𝐧𝐢𝐧𝐠. 𝐈𝐭’𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐬𝐡𝐚𝐤𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐠𝐫𝐨𝐮𝐧𝐝.

[முற்றும்]

-பழமைபேசி.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

11/28/2025

வட அமெரிக்க வாகை சூடி


அமெரிக்காவின் தலையாய செவ்வியல்த் திரைப்படம் ஒன்று உள்ளது. ஒவ்வோர் ஆண்டு நத்தார்நாள் (Christmas) விடுமுறைக்காலத்தின் போதும், உலகெங்கும் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்படுகின்ற படம். குடும்பம் குடும்பமாக உட்கார்ந்து, ஆண்டுதோறும், திரும்பத் திரும்பப் பார்க்கப்படுகின்ற படம். அதுதான் It's a Wonderful Life (1946). ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அது நமக்குள் ஒரு பாடத்தை விதைத்துச் செல்லும் வன்மை கொண்டது.

ஜார்ஜ் பெய்லி என்ற ஒரு நல்லெண்ணம் கொண்ட, தன்னலமற்ற மனிதனின் கதையைச் சொல்கிறது இந்தப்படம். அவர் பெட்ஃபோர்ட் ஃபால்ஸ் என்ற சிறிய நகரத்தில் வாழ்கிறார். தன் வாழ்நாள் முழுவதும், ஜார்ஜ் தன் பெரிய கனவுகளான உலகைச் சுற்றுவது, கல்லூரிக்குச் செல்வது போன்றவற்றைத் தியாகம் செய்து, குடும்பத் தொழிலான பெய்லி பிரதர்ஸ் பில்டிங் அன்ட் லோன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் அவர் மலிவு விலையில் வீடுகளை வழங்குகின்றார். அதேநேரம், பேராசை கொண்டவரும் கொள்ளை கொள்பவருமான வங்கியாளர் மிஸ்டர். பாட்டருக்கு எதிரான தன் கிளர்ச்சியையும் மேற்கொள்கின்றார்.

கதை 1945 ஆம் ஆண்டு நத்தார்நாள் முன்மாலையில் தொடங்குகிறது. ஜார்ஜ் தற்கொலை பற்றி யோசிக்கிறார். ஏனெனில், அவரது மறதி பிடித்த மாமா பில்லி, நிறுவனத்தின் $8,000 பணத்தைக் கோட்டை விட்டுவிட, அந்தப் பணத்தை மிஸ்டர். பாட்டர் எடுத்து வைத்துக்கொள்கிறார். நிதி அழிவு, குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் ஜார்ஜ், தன் வாழ்க்கை தோல்வி அடைந்துவிட்டதாக நம்பி ஒரு பாலத்தில் இருந்து குதிக்கத் தயாராகிறார். குடும்பத்தினர்,  நண்பர்களின் வேண்டுதல்கள் விண்ணை அடைந்தவுடன், அவரைக் காப்பாற்ற பூமிக்கு தேவலோகதேவதை ஒருவர் அனுப்பப்படுகிறார்.

ஜார்ஜ் பிறந்திருக்காவிட்டால் பெட்ஃபோர்ட் ஃபால்ஸில் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை தேவலோகதேவதை ஜார்ஜுக்குக் காட்டுகிறார். இந்த மாற்று யதார்த்தத்தில், ஜார்ஜின் தம்பி ஹாரி குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிடுகிறான், ஏனெனில் அவனைக் காப்பாற்ற ஜார்ஜ் அங்கு இல்லை. இதன் விளைவாக, போரில் ஒரு கப்பலைக் காப்பாற்றுவதற்காக ஹாரி அங்கில்லை. இப்படியாக அடுத்தடுத்துக் காட்சிகள் விரிகின்றன.

பெயர்கள் பெரும்பாலும் அடையாளம், வரலாறு, பண்பாடு முதலானவற்றைத் தாங்கி நிற்கின்றன. பெயரிடும் செயல் ஒரு படைப்புச் செயல் ஆகும். கொடுக்கப்படும் பெயரானது, அதன் வளர்ச்சி, மதிப்பு, எதிர்கால வெற்றியைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். ’மேன்மை அணி’, ‘வட அமெரிக்க வாகை சூடி’, ‘கலைத்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியற்தேனீ’ எனப் பெயர்கள் சூட்டியதிலிருந்து, இயக்கமாக மாறியது வரையிலும் நாம் மனமார்ந்து கொள்ள நிறைய இருக்கின்றன.

பாராட்டுகளுக்காகவும் அங்கீகாரத்துக்காகவும் தன்னார்வத் தொண்டர்கள் சோர்வடையத் தேவையில்லை. ஒவ்வொருவருக்கும், பிறந்திருப்பதற்கான காரணங்கள் ஆயிரமாயிரம் உண்டு. நீங்கள் இதைச் செய்திராவிட்டால், அதன் விளைவுகள் வேறுமாதிரியாக ஆகியிருந்திருக்கக் கூடும். தங்கள் பிறப்புக்குப் பயன் உண்டு, விழுமியம் உண்டு, நோக்கம் உண்டு. தன்னார்வலரைப் பற்றி எழுதுகின்றோம். யாரோ ஒருவர் அதனை அவரின் ஊரில் இருக்கும் அம்மாவுக்கு, அப்பாவுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அந்த உள்ளம் மகிழ்ந்து ஆற்றுப்படுகின்றது. அந்த உவப்பினூடாக அவர் நல்லதாக இன்னொன்றைச் செய்வார். உலகு இயங்குவது இப்படித்தான்!

மேற்கூறப்பட்ட திரைப்படமேவும் ஓர் எடுத்துக்காட்டு. 1946ஆம் ஆண்டு வெளியாகி, தயாரிப்புத் தொகையான 6 மில்லியன் டாலர்களில் பாதி அளவுக்குக்கூட வருவாய் பெறவில்லை. தோல்விப்படமாக அமைந்தது. நிறுவனம் அடுத்தடுத்துப் படங்களைத் தயாரிக்க முடியவில்லை. 1974ஆம் ஆண்டு காப்பீட்டு உரிமை காலாவதி ஆகிவிடுகின்றது. மனித அறிவு நாளுக்கு நாள் மேம்பட்டுக் கொண்டே வருகின்றது. படைப்பின் விழுமியமும் நாளுக்கு நாள் உலகுக்குப் புலப்படத் துவங்குகின்றது. அந்த நேரத்தில் அது தோல்விப்படம். இன்றைக்கு அது அமெரிக்காவின் தலையாய செவ்வியல்ப்படம். செய்வது நன்றெனின் வென்றேதீரும் என்றாவது!

(தொடரும்)

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.


-பழமைபேசி.
 

11/27/2025

காயத்ரி சண்முகசுந்தரம்

காயத்ரி சண்முகசுந்தரம்

பிள்ளைகள் இடைநிலைப் பள்ளியில் இருந்தபோது, அவர்கள் இத்தனை மணிநேரம் தன்னார்வத் தொண்டு புரிய வேண்டுமென இருந்தது. அவர்கள் பல பணிகளும் செய்பவர்கள்தாம். இருந்தாலும், ஏனோ அருகிலுள்ள உணவு வழங்கல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் (secondharvestmetrolina) பணிபுரிய ஆசைப்பட்டனர். குழந்தைகளுடன் பெரியவர் எவரேனும் ஒருவர் இருக்க வேண்டுமென்பது நிபந்தனை. நாங்கள் குடும்பமாகவே சென்றிருந்தோம். பின்னர், கிட்டத்தட்ட அது ஒரு வாடிக்கையாகவே ஆகிவிட்டது. உள்ளே சென்று விட்டால் வேலை முசுவாக இருக்கும். இரண்டரை மணி நேரம்தான். ஆனால் எல்லாரும் இணைந்து செய்யும் போது, வேறெந்த சிந்தனைக்கும் இடமிராது. வீடு திரும்புகையில், யாதொரு தொடுப்புகளுமற்றுப் பணிகளின் நிமித்தம் ஆழ்ந்து கிடந்தபின் கிடைக்கப் பெற்ற மனவிடுதலையானது நம்மைக் களிப்புணர்வுக்கு(Euphoria) இட்டுச் சென்றிருக்கும். அத்துடன், பலவிதமான மக்களைக் காண்பதும் அவர்களுடன் பேசுவதும் புதிய அகத்திறப்பைக் கொடுப்பதாக இருந்தது,

இன்றைய பரபரப்பான உலகில், குடும்பங்கள் ஒன்றாக பொருண்மை மிக்கதாய் நேரத்தைச் செலவிடுவது சவாலானது.தொலைக்காட்சிகள், மொபைல் சாதனங்கள் இல்லாமல், அனைவரும் ஒரே நோக்கத்துடன் கலந்துகொள்ளும் தரமான நேரத்தை, கூட்டுத்தன்னார்வத் தொண்டு ஏற்படுத்திக் கொடுக்கின்றது. 

தன்னார்வத் தொண்டு செயல்பாடுகள் மூலம், பெரியவர்களும் குழந்தைகளும் புதிய சவால்களைச் சந்தித்து, குழுப்பணி, தலைமைப் பண்பு, இடர்தீர்க்கும் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் கிடைக்கும் மகிழ்ச்சி தனித்துவமானது. குடும்பமாகச் சேர்ந்து ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கும்போது, அது அனைவருக்கும் ஓர் ஆழமான மனநிறைவையும் பெருமையையும் அளிக்கிறது. குடும்பத்தை அவர்களின் சுற்றுப்புறம், உள்ளூர் சமூகத்துடன் இணைக்க உதவுகிறது. புதிய நபர்களைச் சந்திப்பதன் மூலம் சமுதாயத்தின் மீதான ஈடுபாடு அதிகரிக்கிறது.

பண்பாட்டு ரீதியாக முதல்தலைமுறைக் குடிவரவாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க, இத்தகு பணிகள் உதவுகின்றன. இவற்றையெல்லாம் நன்கு அறிந்து கொண்டு உதவியவர்களென இவர்களைச் சொல்லலாம்.  விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்தின் ஆர்வலர்களாக இருந்து விட்டுத் தற்போது, சார்லட் தமிழ்ச்சங்க ஆர்வலர்களாக இருக்கின்றனர் திருமிகு. காயத்ரி சண்முகசுந்தரம் குடும்பத்தினர். திருமிகு காயத்ரி அவர்கள், நாடகப் போட்டிகளின் நிர்வாகி. நாடகங்களுக்கான ஒலிக்கோப்புகளைப் பெற்று, தொகுத்து, அந்தந்த வரிசைப்படி வைத்து அரங்கேற்றுவது, போட்டியாளர்களின் தேவைகளைக் கேட்டறிந்து ஏற்பாடுகளைச் செய்வதென தொடர்முழுதும் ஈடுபாட்டுடன் இருந்தவர். அவர்தம் இணையவர் அவர்கள் பாட்டுப் போட்டிகளின் நிர்வாகிகளுள் ஒருவர். புதல்வரோ இசைக்கருவிப் போட்டிகளின் நிர்வாகிகளுள் ஒருவர். வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்கென குடும்பமே உழைத்தமையென்பதெலாம், விழாவின் பன்மைத்துவம், இணக்கம், கூட்டுறவு போன்றவற்றையே எடுத்தியம்புகின்றன.

It’s the choice to see someone else’s need and decide that your time, your hands, and your heart can help lighten their load. Every act, no matter how small, creates a ripple of hope. And when many people choose compassion at once, those ripples become waves of real change.

கலைகள் பல, ஒரே களம்: வட அமெரிக்க வாகை சூடி

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.

 

றிச்சேட் இருதயநாதன்

றிச்சேட் இருதயநாதன்

கட்டுரை எழுதுவது என்பது வெறும் தேர்வுக்காக மட்டும் அல்லாமல், சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி, மற்றவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க உதவும் ஒரு முக்கியமான கலை ஆகும். தமிழ்க் கட்டுரைகள், மூன்று பகுப்புகளைக் கொண்ட ஒரு நிலையான அமைப்பைப் பின்பற்றுகின்றன.  முன்னுரை, இது வாசகரின் கவனத்தை ஈர்க்கும் திறவுகோல். கருப்பொருள், இங்கேதான் காரண ஏரணங்களும், தகவல்களும் எடுத்துக்காட்டுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் அடுக்கடுக்காகவும் வைக்கப்படுகின்றன. முடிவுரை, இது கட்டுரையின் சுருக்கத்தினை தொகுத்துச் சொல்கின்றது அல்லது சொல்லப்பட்ட அனைத்தையும் சுருக்கமாக, வலுவாக முடிக்கும் பகுதி. தமிழ் மொழியில் கட்டுரைகள் எழுதுவதற்கான மரபு, இலக்கண நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களின் அமைப்பிலிருந்தே தோன்றியிருக்கலாம். அதாவது, ஒரு கருத்தைத் துவக்கி, விளக்கி, முடிக்கும்முறை, தொன்றுதொட்டு வருகிறது.

கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, கவனம் ஈர்க்கும் கட்டம், தேவைகளைக் கண்டறியும் கட்டம் , காட்சிப்படுத்தும் கட்டம், செயல் கட்டம்  போன்ற சிறப்பு நுட்பங்களானது ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது மாணவர்களுக்குக் குழப்பமின்றி தெளிவாக எழுத உதவுகின்றது. 

கட்டுரை எழுதுவது என்பது ஒரு பொருள் பொதிந்த தலைப்பை எடுத்து, எளிமையாகவும், ஒழுங்காகவும், தெளிவாகவும் மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி வெளிப்படுத்தும் ஒரு கலை. மின்னசோட்டா தமிழ்ச்சங்கமானது தமிழ்மொழிக்கும் கலைக்கும் முக்கியத்துவம் அளித்து அதன் ஆழத்துக்கே சென்று பேணிவருகின்றது. கட்டுரைப் போட்டிகளுக்கு நடுவராக இருக்கச் சொல்லி சில பல கட்டுரைகளைக் கொடுத்தார்கள். தட்டச்சில் இருந்தன கட்டுரைகள் சிலவற்றைத் தவிர. செய்யறிவு மேலோங்கி இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் தகவல்களைத் திரட்டுவதென்பது அவ்வளவு பெரிய செயலன்று. ஆகவே கையால் எழுதித் தரப்பட்ட கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரலானேன். ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் கொண்ட படைப்புகள், ஒரு சிறு அடித்தல் திருத்தலின்றி எழுதுகோலால் எழுதப்பட்டிருந்தன அவை. வியப்புற்றேன். புலம்பெயர் மண்ணில் தமிழைப் போற்றுகின்றவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்பது நற்செய்தி.

வட அமெரிக்க வாகை சூடியின் படைப்புத்தேனீ பிரிவில், கட்டுரைப் போட்டிகளின் செயல்தலைவர்தாம் திரு. றிச்சேட் இருதயநாதன் அவர்கள். போட்டிக்கான பதிவுகளை ஆய்ந்து முறைப்படுத்துதல், ஒவ்வொரு பகுப்புக்குமான தலைப்புகளைத் தெரிவு செய்து வடிவமைத்தல், முதற்கட்டக் கட்டுரைகளை நடுவர்களிடம் அளித்துத் தரவரிசைப்படுத்துதல், பெற்றோர்களுடன் கலந்தாய்வு நடத்தி கடைசிகட்டப் போட்டிக்கு மாணவர்களைப் பயிற்றுவித்தல், கடைசிகட்டப் போட்டிகளுக்கான வளமிக்க தலைப்புகளைக் கண்டறிதல், விழாவில் இறுதிகட்டப் பணிகளென ஈடுபாட்டுடன் செயற்பட்டவர்.  சோர்வுறாமல், ஊக்கமொழியுடனும் உடல்மொழியுடனும் பேசுவதன் மூலம் பங்கேற்பாளர்களை நிகழ்வோடு பிணைக்க வேண்டும். தமிழின்பாலும் அக்கறையுடன் இருத்தல் வேண்டும். சிற்சிறு பற்றியங்களிலும் கவனத்தைச் செலுத்துவதன் வாயிலாக முழுமையடைகின்றது எடுத்துக்கொண்ட செயல்.  திரு. றிச்சேட் இருதயநாதன் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

Focusing on the next generation means planting seeds of possibility in soil we may never walk upon ourselves. It calls us to lead with vision, compassion, and courage, knowing our choices today shape the world they inherit. When we invest in their growth, 𝐰𝐞 𝐢𝐧𝐯𝐞𝐬𝐭 𝐢𝐧 𝐚 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐝𝐞𝐟𝐢𝐧𝐞𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐲 𝐨𝐮𝐫 𝐥𝐢𝐦𝐢𝐭𝐬 𝐛𝐮𝐭 𝐛𝐲 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐩𝐨𝐭𝐞𝐧𝐭𝐢𝐚𝐥. Let us rise to the responsibility of empowering them to dream boldly and build wisely.

நீரார்ந்த உலகமிதில் நிலைத்திருக்கும் மொழிகளுள்ளே
சீரார்ந்த முதல்மொழியாம் சிறப்புநல் தமிழ்மொழியே!

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.


 

11/26/2025

வித்யா சுரகண்டர்

 

வித்யா சுரகண்டர்

அமெரிக்காவில் தன்னார்வத் தொண்டு (Volunteering) ஒரு பிரிக்க முடியாத பண்பாட்டுப் பகுதியாக மாறியதற்கு, வரலாற்று, சமூக அரசியல் காரணங்கள் உள்ளன. துவக்ககால அமெரிக்காவில்,  ஊர்களும் குடியேற்றங்களும் வளர்ந்தபோது, மக்கள் நெருக்கமான சமூகங்களாக வாழத்தலைப்பட்டனர். அரசாங்கத்தின் உதவிகள் குறைவாக இருந்ததால், அண்டை வீட்டாரைச் சார்ந்து வாழ்வது அத்தியாவசியமாக இருந்தது. ஒருவருக்கொருவர் உதவ, மக்கள் குழுக்களாக இணைந்தனர். 1736-ஆம் ஆண்டில், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பிலடெல்பியாவில் முதல் தன்னார்வத் தீயணைப்பு நிலையத்தைத் தொடங்கினார். இது, "பொது நன்மைக்காக" தனிநபர்கள் இணைந்து, ஒரு அமைப்பை உருவாக்குவதன் முதல் பெரிய எடுத்துக்காட்டாகும்.

1830-களில் அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரெஞ்சு தத்துவஞானியான ’அலெக்சிஸ் டி டாக்வில்லே’ என்பவர் அமெரிக்கச் சமூகத்தை உற்று நோக்கினார். அவர், அமெரிக்கர்கள் எல்லாத் தேவைகளுக்காகவும்,  தேவாலயங்கள் கட்டுவது முதல் மருத்துவமனைகள் உருவாக்குவது வரை, தாங்களாகவே பல தன்னார்வ அமைப்புகளை அமைக்கும் அரிதான பழக்கத்தைக் கண்டு வியப்புற்றார். ”அமெரிக்கர்கள் தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் வாயிலாகத் திருவிழாக்களை நடத்துகிறார்கள், கருத்தரங்குகளைத் தோற்றுவிக்கிறார்கள், புத்தகங்களைப் பரப்புகின்றனர்" என்று குறிப்பிட்டார். இதுதான் அமெரிக்காவில் இரண்டறக் கலந்த, ஒரு பண்பாடாகவே தன்னார்வத் தொண்டு ஆனதற்கான அடிப்படை.

உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பட்டப்படிப்பை நிறைவு செய்ய மாணவர்களுக்குக் குறிப்பிட்ட மணிநேரம் சமூகத் தொண்டு செய்வதை கட்டாயமாக்குகின்றன. இத்தகு பண்பாடானது, தலைமைப்பண்பு, தகவல் தொடர்பு, ஒரு குழுவில் பணிபுரியும் திறன் போன்றவற்றை வளர்க்கிறது. ஒரு நோக்கத்தில் ஈடுபடுவது மனம் முழுமை கொள்வதையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது; மன அழுத்தத்தைக் குறைத்து நமக்காகப் பலர் இருக்கின்றனர் எனும் பாதுகாப்புணர்வையும் ஈட்டித் தருகின்றது.

எங்கள் வளவில் ஒரு பரபரப்பு. பலவாறான வினாக்கள். நிறைய பாதுகாப்பு அலுவலர்கள் அந்த வீட்டின் முன் குவிந்திருக்கின்றனர் என்பது செய்தி. ஒருவர், ’குடியேற்ற அலுவலர்களாக இருக்கக் கூடும்’. அடுத்தவர், ’துப்பாக்கிச்சூடு’ என நினைக்கின்றேன். அடுத்தவர், ‘உடல் சுகவீனம், ஏனென்றால் மருத்துவ வண்டி நிற்கின்றது’. இப்படிப் பலவும். ஒரு மணி நேரம் கடந்து, ஒருவர், ‘எங்கள் வீட்டுக்கு அடுத்த வீடுதான். தற்கொலை’. அடுத்த விநாடியேவும் ஒருவர் பதிந்தார், Whatever the situation, we should respect their privacy. Still, we’re always ready to help in any way we can". அவ்வளவுதான், ஒட்டுமொத்த வாட்சாப் குரூப்பும் அதனை வழிமொழிந்தும், இன்னின்ன உதவிகள் செய்யலாம், யாராவது ஒருவர் மட்டும் ஒருங்கிணைப்புச் செய்யட்டுமெனச் சொல்ல, பக்கத்து வீட்டுக்காரரேவும் பொறுப்பேற்றுக் கொண்டு, உதவிப்பணிகளும் இடம் பெற்றன. இதே அந்த முதல்நபரின் கருத்து வேறாக இருந்திருந்தால்? என்ன, ஏது, எப்படி, எதற்காக என்றெல்லாம் திசைமாறிப் போயிருக்கக் கூடும்தானே? அப்படி மாறாமல் இருக்க, சட்டென அவர் உரைத்த கருத்துத்தான் அமெரிக்கப் பண்பாடு.

திருமிகு. வித்யா சுரகண்டர் அவர்கள் சிகாகோ தமிழ்ச்சங்கத்தில் தன்னார்வலராக இருந்தவர். மருத்துவப் பின்னணியைக் கொண்டவர். எப்போதும் மக்களோடு மக்களாக இருந்து தன்னார்வத் தொண்டு புரிவதில் ஆவல்கொண்டவர். தற்போது கேரொலைனா தமிழ்ச்சங்கப் பகுதியில் வசிப்பவர். பல்வேறு குழுக்களின் வாயிலாகப் பணிபுரிபவர். வட அமெரிக்க வாகை சூடியின் கலைத்தேனீ பிரிவில், இசை சார்ந்த போட்டிகளின் செயல்தலைவர். ஒவ்வொரு கூட்டங்களிலும் தவறாது கலந்து கொண்டு, விழாவிலும் போட்டிகளை நடத்திக் கொடுத்ததோடு மட்டுமன்றி இதரப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். இசை, நாட்டியம், மருத்துவம் முதலான துறைகளில் தாம் பெற்றிருக்கும் அனுபவத்தைச் சமூகத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆவல் மிக்கவர்.

𝐕𝐢𝐝𝐲𝐚 𝐒𝐮𝐫𝐚𝐤𝐚𝐧𝐝𝐚 𝐍𝐚𝐭𝐚𝐫𝐚𝐣 𝐌𝐨𝐡𝐚𝐧𝐚𝐦 𝐫𝐞𝐦𝐢𝐧𝐝𝐬 𝐮𝐬 𝐭𝐡𝐚𝐭 𝐭𝐫𝐮𝐞 𝐬𝐞𝐫𝐯𝐢𝐜𝐞 𝐛𝐞𝐠𝐢𝐧𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐞𝐦𝐩𝐚𝐭𝐡𝐲, 𝐫𝐞𝐚𝐜𝐡𝐢𝐧𝐠 𝐨𝐮𝐭 𝐰𝐢𝐭𝐡 𝐤𝐢𝐧𝐝𝐧𝐞𝐬𝐬, 𝐮𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐡𝐨𝐩𝐞.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி. 


லசாங்கிகா சுகுமாறன்

லசாங்கிகா சுகுமாறன்

இளம்தலைவர்கள் புதுமையான, துணிச்சலான சிந்தனைகளைக் கொண்டு வருவார்கள். சமுதாயத்தின் சிக்கல்களுக்கு, பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய தீர்வுகளைக் காண்பார்கள்.

மாற்றத்தை உருவாக்குபவர்கள்: அவர்கள் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். தங்கள் சமூகத்தில் உள்ள அநீதிகள், குறைகள் அல்லது சவால்களைக் கண்டு, உடனடியாகச் செயல்பட்டு நேர்மறையான மாற்றத்தை உருவாக்கத் துணிகிறார்கள்.

தொழில்நுட்பப் பயன்பாடு: சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மக்களை ஒன்றிணைப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்கள் சமூக ஊடகங்கள், நவீன தொழில்நுட்பங்களை திறமையாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஊக்கமளிப்பவர்கள்: இவர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு, வெற்றியின் மூலம், சக இளைஞர்களுக்கும், முதியோர்களுக்கும் கூட முன்மாதிரியாக அமைந்து, சமூகப் பணியில் ஈடுபட அவர்களைத் தூண்டுகிறார்கள்.

பாரபட்சமற்ற அணுகுமுறை: இவர்கள் பெரும்பாலும், பாலினம், மதம், சாதி, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு அப்பால் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படுகிறார்கள்.

இணைப்புப்பாலம்: முதல்தலைமுறைக் குடிவரவாளர்களுக்கும் அமெரிக்காவில் பிறந்த, வளர்ந்துவரும் இரண்டாம் , மூன்றாம் தலைமுறையினருக்கும் இடையே பண்பாட்டு ரீதியாக, அணுகும் விதத்தில் பெருத்த இடைவெளி உள்ளது. அதனைச் சரிக்கட்டும் ஆற்றலாய் இளம்தலைவர்கள் விளங்குகின்றார்கள்.

குறிஞ்சி முத்தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர்களுள் ஒருவர், முன்னோடிகள் வார்த்தெடுப்புத் திட்டத்தின் தலைவர், தமிழ்ப்பள்ளி ஆசிரியர், நிர்வாகி, நாட்டியம், இசையில் தேர்ந்த கலைஞர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்தாம் திருமிகு லசாங்கிகா சுகுமாறன் அவர்கள். கொலராடோ மாகாணத்திலிருந்து, மூன்று நாள்களும் தன்னார்வப்பணி செய்வதற்கென்றே வந்தவர். பகலெல்லாம் வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் இளையோரை ஆற்றுப்படுத்துகின்ற, நெறியூட்டுகின்ற, நிகழ்ச்சிகளின் நிர்வாகியாகப் பணியாற்றி, முன்னோடியாகச் செயலாற்றியவர். மாலையில் உணவுக்குழுவின் விருந்தோம்புநராகப் பணி. இளம்செயல்த் தலைவர் லசாங்கிகா அவர்களின் பங்களிப்பு அமெரிக்கத் தமிழ்ச்சமூகத்துக்குத் தொடர்ந்து இடம் பெற்றிட வாழ்த்துகள்.

𝐌𝐬 𝐋𝐚𝐬𝐚𝐧𝐠𝐢𝐤𝐚 𝐒𝐮𝐤𝐮𝐦𝐚𝐫𝐚𝐧 is a shining example of youth leadership fueled by passion, vision, and purpose. She inspires others through her dedication to uplifting her community and her courage to lead with integrity. Her journey reminds young people everywhere that 𝐭𝐡𝐞𝐲 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐭𝐨 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞 𝐦𝐞𝐚𝐧𝐢𝐧𝐠𝐟𝐮𝐥 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.