மக்களே, வணக்கம்! வேலை, வேலை.... இன்னைக்குதான் அப்படியே ஒரு இடுகை ஒன்னை இடலாமுன்னு, இஃகி! நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் உள்வாங்கின கிராமங்கள். நகர வாடையே கிடையாது. மிஞ்சி மிஞ்சிப் போனா தெக்கமின்னா பெதப்பம்பட்டி, மேற்கமின்னா நெகமம், வடக்கமின்னா செஞ்சேரிமலை, அவ்வளவுதான்!
எப்படியும் ஆறுமாசத்துக்கு ஒரு வாட்டி, காதுவலியோ தொண்டை வலியோ வரும். அப்பவெல்லாம் உடுமலைப் பேட்டை பழனிரோடு/தளிரோடு மொக்குல வைத்தியநாதன் மருத்துவர்கிட்டப் போவேன். அம்புட்டுதேன்! இப்பிடியே மொதல் பதினஞ்சி வருசமும் போச்சுது. அப்பறம் பொள்ளாச்சி, கோயமுத்தூர்னு சில வருடங்கள்... அதுக்கப்றம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, சைப்ரசு, இசுரேல் மறுபடியும் அமெரிக்கா.
முதலாம் வகுப்பு படிக்கும் போதே திராவிட மேடைகள் பரிச்யமாச்சுது. அதுக்கு என்னோட குடும்பப் பின்னணியானது பொதுவாழ்வு, வழக்குகள்ன்னு இருந்ததும் ஒரு காரணம். வா.வேலூர்ல ஒரே ஒரு குடும்பம். அவங்க வீட்டுப் பெரியவர்கள் இரட்டையர்கள், இராம் ஐயர், இலட்சுமண ஐயர்னு கூப்பிடுவாங்க. அவங்கள்ல ஒருத்தருக்குதான் கல்யாணம் ஆகி, ஒரு பெண் பிள்ளை. இலட்சுமண ஐயருக்கு கல்யாணம் ஆச்சா, ஆகலையான்னு எல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஒன்னாம் வகுப்பு ரெண்டாம் வகுப்பு படிக்கும் போதே அவங்களுக்கு 60 வயசு இருக்கும்னு நினைக்கிறேன். கூட்டுக் குடும்பமாத்தான் இருந்தாங்க.
அவங்க பெண் பெயர் ஞானசெளந்தரி. அவங்க கணவர் எனக்கும் என் சகோதரர்களுக்கும் தமிழாசிரியர், இலட்சுமண வாத்தியார்னு அன்பா அழைப்போம். கிராமத்துல வாழ்க்கை எப்படி இருக்கும்? எல்லாரும் ஒன்னும் ஒன்னுமா அணுக்கமா இருந்தோம். எங்களுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் அவங்க வீடு. பொருட்கள் ஓசி வாங்குறது, கைமாத்து வாங்குறதுன்னு எந்த வித்தியாசமும் இல்லாமத்தான் இருந்தது. அவங்க, சிலர் விமர்சிக்கிற பார்ப்பனர்ங்ற விசயமே எனக்கு என்னோட இருபதுகள்லதான் தெரிய வந்தது. அடுத்தபடியா, நான் கோயமுத்தூர்ல சில காலம் வேலை செய்திட்டு இருக்கும் போது வாய்த்த நண்பன், இராஜேசு. இப்ப, ஆசுதிரேலியாவுல இருக்கான். கோயமுத்தூர்ல இருக்குற வரைக்கும், நானும் அவனும் வருசா வருசம் சபரிமலைக்கு ஒன்னாப் போவோம். நண்பர்கள் எல்லாரும் அவனோட வீட்டுக்கு எந்தத் தயக்கமும் இல்லாம சராங்கமாப் போவோம். ஏன்னா, அவங்க அப்பா எங்களை எல்லாம் அன்பா உபசரிச்சி அனுப்புவாரு.
இப்பவும் அவங்க திருச்சி சாலையில, சென்ட்ரல் ஸ்டுடியோ சமீபம் கிருஷ்ணா குடியிருப்புல இருக்குற வீட்லதான் இருக்காங்க. நான், சிங்கப்பூர் வந்ததுக்கு அப்புறம் இராஜேசு எங்க அலுவலகத்துல பணி புரிஞ்சிட்டு இருந்த ஒரு கிறித்துவப் பெண்ணைக் கல்யாணம் கட்டிகிட்டான். ரொம்ப நல்லவன், வெளிப்படையானவனும் கூட.
இந்த இரு குடும்பங்கள்தாங்க, எனக்கு தாயகத்தில இருக்கும் போது என் வாழ்க்கையில அமைந்த, எதிர்கொண்ட பார்ப்பனர்கள். இப்படிச் சொல்லவே எனக்கு வெட்கமாவும், அருவறுப்பாவும் இருக்கு. ஏன்னா, அவங்க பழகின விதம் தாய் புள்ளையாவல்ல இருந்துச்சு? இந்த இடுகைக்காக அவங்களை இப்படிக் குறிப்பிடுறேன், அதுக்காக அவங்க இதைப் பொறுத்துக்குவாங்கங்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.
மத்தபடி நிறைய இதழ்கள், மேடைப் பேச்சுகள், இப்ப இடுகைகள்னு நிறைய படிச்சாச்சு. வேதனையா இருக்கு! கலைஞர் அடிக்கடி சொல்ற ஒரு மேற்கோள் ஒன்னுதான் ஞாவகத்துக்கு வருது. தூங்குறவனை எழுப்பிடலாம்; தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாதுதான். இந்தப் பின்னணியைக் கொண்டவன் மனதில் சில கேள்விகள். என்னோட பின்னணிய, நேர்மையா உள்ளது உள்ளப்டி சொல்லிட்டேன். ஆகவே, ஆரோக்கியமான பின்னூட்டம் போடுறவங்க மட்டும் போடலாம்.
- சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன்னு பிரித்துப் போட்டுப் பலன் அடைவது யார்?
- ஒரு காலத்துல ஆதிக்கம் இருந்திருக்கலாம். அதை எதிர்த்துத் தலைவர்கள் போராடி இருக்கலாம். ஆனா, இன்றைய சூழலும் அதே போலத்தானா?
- மொழியைப் பார்ப்பனர்கள் சிதைக்கிறார்கள்னு ஒரு விமர்சனம். அப்படியானால், மொழியைக் கொண்டவர்கள் காப்பாற்றுகிறார்களா?
- பகுத்தறிவுப் பகலவன், சூத்திர ஆன்மிகவாதிங்றதால அவர் காலில் விழுந்தாராம். அப்படியானால், பகுத்தறிவு என்பதும் சுயமரியாதை என்பதும் வெறும் பேச்சுத்தானா?
- பார்ப்பனீய எதிர்ப்பைக் கொண்டு, மற்றவரைத் தன்னகத்தே இழுக்க முயலும் இயக்கத்தோர் பார்ப்பனர் அல்லாதோரிடத்து இருக்கும் பேதங்களை விமர்சித்து எழும் காலம் எப்போது?
- தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் அனைவரும் தமிழர்கள். தமிழர்களுக்குள் சாதிகள் இல்லை என்று வெறும் வாய்ப் பேச்சாகவாவது சொல்லக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்களா நாட்டில்?
- புதுமை படைக்கிறோம், கட்டுடைக்கிறோம் என்று சொல்லி தம்மை முன்னிறுத்திக் கொள்கிற இவர்கள், பார்ப்பனர், பார்ப்பனீயம் எனும் சொல்லில் வீழ்ந்து அந்தக் கட்டுக்குள்ளாகவே முடங்கிப் போய்விடுகிறார்கள் என்பதுதானே ய்தார்த்தம்?
மனிதனை மனிதனாகப் பார்த்து, தமிழை தமிழாகப் பாவிக்காத இவர்கள் போடும் கூச்சல், நகரங்களிலும் இணையத்திலும் மட்டுமே ஓரளவுக்கு செல்லுபடியாகும். அன்பும் அடக்கமும் மட்டுமே வாழ்கிற தமிழகத்துக் கிராமங்களின் பிரச்சினைகள் இதுவல்ல! இது இவர்கள் போடும் வெற்றுக் கூச்சல் மட்டுமே என்பது இந்தக் கிராமத்தானின் தாழ்மையான எண்ணம்!!
ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது!