1/31/2009

அமெரிக்காவில் இது சாத்தியம்




குடிசையில்!




உலகாளும் மாளிகையில்!



கல்வி, நல்லொழுக்கம் மற்றும் உழைப்பினால் ஆன ஒன்று!

அரசியல் சட்டப்படி இலங்கையில் இது சாத்தியமற்றது, புத்தமத அரசியல்வாதி மட்டுமே ஆக முடியும் என்கிறார்கள்?!

1/30/2009

நியாயம் என்னா விலை?

தமிழருங்க ரெண்டு பேர், ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிற மாதிரியான பழம் பாடல் நினைவுக்கு வந்துச்சுங்க....

மூளை நெறஞ்சவங்க
காலம் தெரிஞ்சவங்க
மூத்தவங்க படிச்சவங்க
வாழ்கின்ற நாடு இது!

மூச்சுத் திணறுதுங்க
முளியும் பிதுங்குதுங்க
பாத்துக்குங்க கேட்டுக்குங்க
சனங்கள் படும்பாடு இது!

நெலமை இப்படி இருக்குது
நீதி கெடந்து தவிக்குது
கொடுமை மேலே கொடுமை
வளர்ந்து நெருக்குது! அது
அருமையான பொறுமையைத்
தான கெடுக்குது!!

பாதை மாறி நடக்குது,
பாஞ்சுபாஞ்சு மொறைக்குது
பழமையான பெருமைகளைக்
கொறைக்குது-நல்ல பழக்கமெல்லாம்
பஞ்சு பஞ்சாப் பறக்குது!


என்ன இருந்தாலும் மனுசன்
இப்படி ஆடக் கூடாது!

எதுக்கும் ஒரு முடிவிருக்குது
அதிகநாளு ஆடாது!


ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
எண்ணம் உடம்புக் காகாது!

காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது!

அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே
அகந்தை புகுந்து கலைக்குது!

வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது!


விருப்பம் போல நரிகள் சேர்ந்து
வேட்டையாடிக் குவிக்குது!

நாய்க்கு உரிமை வந்து
வீட்டுக்காரனையே கடிக்குது!
--பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

1/27/2009

அமெரிக்காவில் வேலை இழப்பு!


வேலை இழப்பு பற்றின செய்திகள்தாங்க எங்க பார்த்தாலும்! நானும் படிக்க வந்த காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும், இதோ அங்க வேலைக் குறைப்பு, இதோ இங்க பணியாள்க் குறைப்புங்ற புலம்பலை அப்பப்ப கேக்குறது வழமையான ஒன்னுதான். அதே நேரத்துல, அங்கங்க வேலையும் கிடைச்சுட்டு இருந்தது.

இப்ப நம்ம பொழப்பு, பொட்டி தட்ட, பொட்டிய எடுத்துட்டு, பொட்டி கட்டி பிரயாணஞ் செய்யுற பொழப்பு பாருங்க, நிறைய பேரை பார்த்துப் பேசுற வாய்ப்பு. நிறைய தகவல்களைத் தெரிஞ்சுக்க முடியுது. இப்பத்த நிலைமை ஒன்னும் சரியில்லைங்க! பொதுவா, நாட்டுக்கு வெளில இருந்து பார்க்குற நிறைய பேருக்கு அமெரிக்கர்கள்ன்னா ஆகாமலோ, அல்லது அவிங்க எல்லாம் பெரிய ஆளுகங்ற நினைப்பு இருக்கும். ஆனாப் பாருங்க, அவிங்க அப்பிடிக் கிடையாதுங்க. ரொம்ப நல்லவிங்க! இன்னுஞ் சொல்ல‌ப் போனா, வெகுளிங்க‌.

எதையும் நேர்ம‌றையாவே சிந்திக்கிற‌ ஆட்க‌ள். துய‌ர‌ம் வ‌ரும், துன்ப‌ம் வ‌ரும்ன்னெல்லாம் நினைச்சிப் பாக்கிற‌து கிடையாது. கிராம‌ச் சூழ்நிலையில‌, மிச்சிக‌ன் மாகாண‌ம், மார்ச‌ல்ங்ற‌ ஒரு கிராம‌த்துல ஒரு ரெண்டு வ‌ருச‌ம் இருந்த‌னுங்க‌. ரொம்ப‌ ந‌ல்ல‌ ஊர். பெரும்பாலான‌ வீடுக‌ள் பூட்ட‌வே மாட்டாங்க‌. க‌டைக‌ள் திற‌ந்தே இருக்கும், வேண்டிய‌ பொருட்க‌ளை எடுத்திட்டு காசைப் போட்டுட்டு, அல்ல‌து க‌ட‌ன‌ட்டைய‌ இழுத்திட்டு வ‌ர‌ வேண்டிய‌துதான். அப்பிடி இருந்த‌ ஊர்ல‌, இப்ப‌ ஒரு வீடு சொற்ப விலையில!!

அதை விடுங்க, நான் இப்ப தங்கி இருக்குற விடுதியில மொத்தம் 265அறைகள், பிலடெல்பியா நகரத்தின் மையப் பகுதியில இருக்குற நட்சத்திர‌ விடுதி. வெறும் 35 அறைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர் வந்திருக்காங்களாம். வேலை செய்யுற ஊழியர் பரிதாபமா சொல்லிட்டுப் போறாரு. பத்திரிகைகள்ல பார்த்து இருப்பீங்க, ஆட்குறைப்பு பற்றின செய்திகளை. உண்மையில சொல்லப் போனா, அது பெரிய நிறுவனங்களால முறையா அறிவிப்புச் செய்தது மட்டுந்தான். அது தவிர நிறைய வேலை இழப்பு இருக்கும் போல இருக்கு.

பொருளாதாரம் சரி இல்லைன்னா, குற்ற நடவடிக்கைகள் எங்கயும் பெருகத்தான் செய்யும். அதேபோல இங்கயும் அதிகரிச்சுட்டுதான் வருது. கூடவே, சமூகச் சிக்கல்கள், தற்கொலைகள் அப்பிடி இப்பிடின்னு செய்திகள். சரி, நாம அதுக்கு என்ன செய்யுறது? நம்மால ஒன்னும் செய்திட முடியாதுதான், ஆனா, நாம நம்ம பொழப்பைக் காப்பாத்தி ஆகணுமே?!

ஆமுங்க, அதிக ஊதியத்துக்கு வேற வேலைங்றது இந்தத் தருணத்துல கடுமையா யோசிக்க வேண்டிய விசயம். இருக்குற இடத்துலயே, மகிழ்வா இருந்து காலத்தை ஓட்டலாம். வீட்டுக் கடன்களை, குறைந்த வட்டிக்கு மாற்றலாம். பாதுகாப்புப் பெட்டகத்துல விலை மதிப்புள்ள பொருட்களை வெச்சிட்டு, வீட்ல நிம்மதியா இருக்கலாம். கையில எப்பவும், இருபது வெள்ளி வெச்சிருக்குறது உசிதம்.

விளம்பரங்களைப் பார்க்காமலே தவிர்க்கலாம். இஃகிஃகி! வெளிநாட்டுல இருந்து, இங்க படிக்க வர்றவிங்க அதை மறுபரிசீலனை செய்யலாம். நெடிய விடுமுறைல போக நினைக்குறவிங்க அதைத் தவிர்க்கலாம். இப்படி எத்தனையோ முன்யோசனை நடவடிக்கைகள் எடுத்து சிக்கனமா இருக்குறது உசிதம்.

வேலைப் பளு நிச்சயம் கூடும். ஆகவே, வீட்ல இருக்குறவிங்ககிட்ட கலந்து பேசி அதுக்கு தகுந்தமாதிரி வாழ்க்கைமுறைய சமச்சீராக்கலாம். இப்பவே, செய்ய வேண்டிய வருடாந்திர, வழமையான மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகளை செய்து முடிச்சிடலாம். ஆமா, இதென்ன? அறிவுரை அழகர்சாமிங்ற‌ நினைப்பான்னு கேட்டுடாதீங்க. எனக்கு நானே சொல்லிப் பார்த்ததோட நகல்தான் இது. என்னோட புலம்பலை உங்க காதுலயும் போட்டு வெக்கிறேன், அம்புடுதேன்!!

மந்திரம் கால்; மதி முக்கால்!

எது எப்படியானா என்ன? எதிர்காலம் இருக்கு,
ஒவ்வொரு நாளும் இனிமை கொள்ளவே!
எழு, விழி, செல்!!

1/26/2009

பழமைபேசி பேசுறாரு


உங்க பேரு: 'பழமைபேசி'ங்ற வெட்டு வேத்து

ஊரு: குசும்பனூர் பக்கத்துல மொக்கைப்பாளையம்

வயசு: நான் என்னைக்கும் எங்க அம்மாவுக்கு குழந்தைதான்

தொழில்: இதெல்லாம் ஒரு கேள்வியா? குழுமத்தாரை மொக்கை போடுறது தான். கடந்த காலத்துல பட்சியும் சேந்து பாப்போம். இப்ப குடும்பம் குட்டினு ஆயிடிச்சு இல்ல?!

துணைத் தொழில்: வெட்டிப் பேச்சு, கிறுக்கறது, அதிகப் பிரசங்கம்

சோத்துக்கு: மென்பொருள் வடிவமைப்பு, மென்பொருள் கட்டுமான மேற்ப்பார்வை(கட்டுமானம்? அது, தெரிஞ்சாத்தானே செய்யறதுக்கு?!)

நண்பர்கள்: நாமல்லாந்தான். என்னோட மொக்கையை சகிச்சுகிட்டா நீங்கதான் ஆருயிர்த்தோழர்.

எதிரிகள்: மொக்கையைக் கேட்டு சகிக்காம, எகுறரவங்கதான்

பிடிச்சது: கொங்கு நாட்டுப்பழமை, கோயம்பத்தூர் எள்ளல், நகைப்பு, சிலேடை, பொரளி.சுருக்கமா சொன்னா விவகாரமான எல்லாமும்.

பிடிக்காதது: பாத்திரம் கழுவறது, குளியலறை கழுவறது, மனையாள்கிட்ட வாங்கிக்கட்டுறது.

பிடித்த நபர்: நீங்களும், உங்க கூட்டாளியும்!

பொழுதுபோக்கு: ஃகையோ! ஃகையோ!! இன்னும் நீங்க என்னை புரிஞ்சுக்கலயா? சரியாப்போச்சு போங்க!

1/24/2009

சிங்கம் - புலி - அமாவாசை

சீதாதேவி மாய மானோட‌ அழகுல மயங்கின வனமுங்க அது. பெரிய வனம், எங்க பாத்தாலும் காடும், பசுமையும், சோலையும், பசுங்கிளிகளும்ன்னு, சொல்லவொண்ணா எழில் பொதிஞ்ச வனாந்தரம். அதுல நாலே நாலு புலிக, இங்க ஒன்னும் அங்க ஒன்னுமா இருந்துச்சாம். மூலைக்கொன்னா உலாத்திகிட்டு, அதுபாட்டுல அதனோட எல்லைக்குள்ள ஓடியாடித் திரிஞ்சுட்டு இருந்ததாம்.

அதே மாதிரி, ப‌க்க‌த்து வ‌ன‌த்துல‌ நிறைய‌ சிங்க‌ங்க‌ளும் இருந்துச்சாம். ந‌ல்ல‌ நாள் பாத்து, சிங்க‌ங்க‌ எல்லாம் ஒன்னு கூடுச்சாம். கூடி ஒரு முடிவெடுத்தாங்க‌ளாம். கூட்ட‌த்துல‌ எடுத்த‌ முடிவின்ப‌டி, புலிக‌ளோட‌ வ‌ன‌த்துக்கு ரெண்டு மூனு சிங்க‌ங்க‌ போச்சாம். போயி எப்ப‌டியும் புலிக‌ள‌ விர‌ட்டிட்டு, அந்த‌ வ‌ன‌த்தைப் பிடிச்சிட‌ணும்ங்ற‌து சிங்க‌ங்க‌ளோட‌ எண்ண‌ம்.

வ‌ன‌த்தோட‌ எல்லையில‌ இருந்த‌ அந்த‌ ஒத்தைப் புலி, சிங்க‌ங்க‌ வ‌ர்ற‌தை தூர‌த்துல‌ வ‌ரும் போதே க‌வ‌னிச்சிடுச்சாம். கூப்பிட்டா காது கேக்குற‌ தூர‌ம் வ‌ந்த‌துமே, புலி கீழ‌ கிட‌ந்த‌ எலும்புத் துண்டுக‌ளை ந‌க்கிகிட்டே உர‌த்த‌ குர‌ல்ல‌ பேச‌ ஆர‌ம்பிச்ச‌தாம், "இன்னும் எனக்கு ப‌சி ஆற‌லை, இனியும் ஒரு ரெண்டு சிங்க‌ம் இருந்தா, வ‌யித்துப் ப‌சி ஆறிடும்!"ன்னு சொல்லுச்சாம். அதைக் கேட்டு, வ‌ந்த‌ சிங்க‌ங்க‌ எல்லாம் ஒரே ஓட்ட‌மா திரும்பி ஓட‌ ஆர‌ம்பிச்ச‌து.

அந்த சிங்கங்கள் எல்லாம் ஓடுறதப் பாத்த குரங்கு, மரத்து மேல இருந்து பலமா சிரிச்சுட்டே பேச ஆரம்பிச்சது, சிங்கங்களே, புலியோட நடிப்பையும் சாமர்த்தியமான பேச்சையும் நம்பி இப்பிடி ஓடி வர்றீங்களே? வெக்கமா இல்லையா, உங்களுக்கு??ன்னு கேட்டுச்சாம்.

அதைக் கேட்ட சிங்கம், நீயும் எங்ககூட வா, எல்லாருமாப் போயி, அந்த குறும்புக்காரப் புலிய வேட்டையாடுவம்ன்னு சொல்லி, அந்தக் குரங்கையும் முதுகில ஏத்திட்டு வந்ததுகளாம் சிங்கங்க. புலி அந்த இடத்தை விட்டு உள்வாங்கி, உள்ள கொஞ்ச தூரமாப் போயி நின்னுகிட்டு இருந்துச்சாம். சிங்கங்களும் குரங்கோட குதூகலமா முன்னேறிப் போச்சுதுகளாம்.

போனதடவை செய்த மாதிரியே, இந்தத்தடவையும் புலி உரத்த குரல்ல பேச ஆரம்பிச்சுதாம், 'இன்னும் எனக்குப் பசி ஆறவே இல்லை. இந்தக் குரங்குகிட்ட சொல்லி, ரெண்டு மூனு சிங்கங்களை அனுப்பச் சொல்லியும், இனியும் எதுவும் மாட்ட மாட்டனுங்குதுகளே?!'ன்னு சொல்லி உறுமுச்சாம். அதுக்கப்புறமும் அதுக அந்தக் காட்டுல இருக்குமா என்ன?

வந்த சிங்ககெங்கல்லாம் ஒரே ஓட்டமா, திரும்பிப் போயிருச்சாம். மறுபடியும், ஏமாந்த கதைய அலசி ஆராஞ்சி, கூடி பேசுச்சுகளாம் சிங்கங்க. போதாக்குறைக்கு ஏழு விற்பன்னர்களும் ஆலோசனைக்கு. இந்தத் தடவை எப்பிடியும் ஏமாந்திடக் கூடாதுன்னு, ஒரு ந்ல்ல நாள் பாத்து மறுபடியும், சிங்ககெல்லாம் சேந்து புலிகளோட வனத்துக்குப் போச்சுதுகளாம். புலி அந்த இடத்துல இல்லையாமுங்க!

மறுபடியும் கொஞ்ச தூரம் உள்வாங்கிப் போயிடுச்சாம். சிங்கங்களுக்கா வனத்தைக் கொண்டுட்டமே, இனி புலிகளை வேட்டை ஆடுறதுதான் மிச்சம்ங்ற நெனப்பு. உள்ள, இன்னும் கொஞ்சம் உள்ளன்னு போய்ட்டே இருந்ததுகளாம். ஆனாப் பாருங்க இந்த்த் தடவை, புலி உள் வாங்கி, உள் வாங்கி உள்ள போனதால, நாலும் ஒன்னு கூடிடுச்சாம். அது மட்டுமா, இந்த சிங்கக் கூட்டம் அமாவசை அன்னைக்கு, வனத்துல கண் தெரியாதுங்ற நேக்க‌த் தெரிஞ்சு வெச்சிருக்கலையாம்.


அது மட்டுமா? அமாவாசை அன்னைக்குத்தான் புலிகளுக்கு சிறப்புக் கண் பார்வையும், கூடுதல் பலமும் இருக்குங்ற விசயத்தையும் சிங்கங்க மட்டுமில்ல, மத்த மத்த வனத்தாரும் அறிஞ்சு வெச்சிருக்கலையாம்!! வேறென்ன? நாலு புலிகளும் சேந்து கண் அவிஞ்சு போன சிங்கங்களை சுலுவுல போட்டுத் தள்ளிருச்சாம்!!!

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

1/23/2009

நான் கடவுள்: ஒரு மாறுபட்ட பார்வையில்!

வணக்கம்! இந்த வாரம் அமெரிக்காவுக்கு புது அதிபர் கிடைச்சிருக்காரு. நிறைய சவால்களோட, துணிவா இருக்காரு! அவருக்கு வாழ்த்துகள்!! இன்னைக்கு நம்ம வலைஞர் தளபதி அவிங்க, நான் கடவுள் விமர்சனம்ங்ற தலைப்புல ஒரு பதிவு, வெகு அழகா எழுதிப் பதிவிட்டிருக்காரு. அவருக்கும் வாழ்த்துகள்!

எனக்கு இந்த தலைப்பைப் பாத்தவுடனே தூக்கிவாரிப் போட்டுச்சு. எப்படி ஒருத்தர், நான் கடவுள்னு சொல்ல முடியும்? இந்த தலைப்புல இருக்குற இரண்டு சொல்லுமே, முரணான சொற்கள். 'நான்', அப்பிடின்னு சொன்னா, ஒருவர் தன்னையும், தன் மனதையும் குறிப்பிட்டுச் சொல்லுறது. அதப் பத்தி, நாம பெருசா பேசத் தேவை இல்லை.

அடுத்த சொல்லான கடவுள், இதுக்கு என்ன பொருள்? தன்னையும், இல்லஇல்ல, எதையும் கடந்த ஒரு உள்தான் (கட + உள்) சுருங்கிக் கடவுள்ன்னு ஆச்சு.


கடவுள் (p. 177) [ kaṭavuḷ ] , s. (கட, surpassing + உள்) God, the Supreme Being;

அப்ப, யாராலும், நான் கடவுள்ன்னு சொல்றதுக்கு வாய்ப்பு இல்லை. அப்படி ஒருத்தர் சொன்னா, உண்மையிலேயே, அவரு இன்னும் தன்னைவிட்டு கடக்கலைன்னுதானே அர்த்தம்?! அவுரு சொல்லுறது ஒரு உடான்சு!!

சரியுற அரசாட்சி மாதிரி, வீழ்ச்சி அடையுற, எதிர்மறையா நடக்குற‌ எதையும் ஐரோப்பிய ஆங்கிலேயர்கள் சொல்லுறது, going westன்னு. அதாவது, கதிரவன் மேற்கால போயி மறையுற மாதிரி, இதுவும் மறையுதுன்னு சொல்லுறது.

இதையே, அமெரிக்க ஆங்கிலேயர்கள் சொல்லுறது heading southன்னு. அதாவது, பங்குச் சந்தையில நிலவரம் காண்பிக்குற வரைபடத்துல இருக்குற வீழ்ச்சி, கீழ்நோக்கிப் போறது, தென்புறத்தைத்தான காண்பிக்குது, அதனால இந்த வழக்கு வந்துச்சாம்.

அந்த மாதிரி நம்ம ஊர்ல சொல்லுறது, கீழ்வரம் போகுதுன்னு. அதாவது, கீழ்ப்புறம்ங்றது, கீழ்ப்பொறமாயி, அப்புறமா அது கீழ்வரமாவும் ஆயிடுச்சி. கூடவே, வடக்குமின்னா போகுதுன்னும் சொல்வாங்க. வடக்கு நோக்கி உண்ணாநிலை இருந்து சாகுறதுல இருந்து வந்த சொல்லாம் இது. ஆக, இருக்குற திசையில நல்ல திசை, கிழக்கு! ஆமுங்க, நாமும் விடியலை நோக்கி கிழக்குப் பாத்து இருப்போம். நல்லதே நடக்கட்டும்!

ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?

1/22/2009

இராச வண்டே, சென்று ஊதாய்!

நல்லா சத்தத்தைக் கூட்டி வெச்சிட்டு, இந்த இடுகாணொளியக் கேளுங்க... உங்களை மறுபடி மறுப்டி கேக்கச் சொல்லும்.... மணிவாசகமான திருவாசகத்தோட ஒரு பகுதி இது. வருங்காலங்கள்ல விளக்கமும் பதிய‌லாமுன்னு இருக்கேன்!

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தானறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ...

நானார் என்உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ...

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
நினைத்தொறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும்
அணைத்தெழும் பும்புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ...

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ...

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ...

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாத செய்பணிகள் கொண்டருளந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ...

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ...

உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப்படாத களிவந்த வான்கருணை
வெள்ளப்பிரான் என்பிரான் என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ...

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தானறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ...