1970களில் தேடிக் கொண்ட வெறுப்புணர்வை வென்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திட 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதுவும் மாற்றுக் கட்சி இல்லாத ஒரு சூழலில் அமைந்த ஒரு வாய்ப்பு எனவும் கருதுவோர் உண்டு.
தமிழக மண்ணில் நடந்தேறிய துன்பியல்ச் சம்பவத்தை ஒட்டி, அவ்வாய்ப்பும் பறிபோக மாற்றுக் கட்சியின் அரசு அமைகிறது. அடாவடி, நாணயமற்ற எதேச்சதிகாரம் முதலானவற்றால் மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு. 1996ஆம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று முரசு கொட்டப்படுகிறது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நல்லதொரு ஆட்சியும் நடத்தப்படுகிறது.
என்றாலும், ஓட்டுக்கணக்குகளும் சிலபல சூழ்ச்சிகளுமாக திமுகவுக்கான அடுத்த வாய்ப்பு நல்கப்படவில்லை. நல்லதொரு ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கப்படாதது வரலாற்றுப் பிழையாகவே நான் கருதுகிறேன். இதில் மாற்றுக் கருத்துக் கொண்டோர் இருக்கக்கூடும். எனினும், என்னால் உறுதிபடக் கூற இயலும், அது வரலாற்றுப் பிழையென!!
2001ஆம் ஆண்டு மாற்றுக் கட்சியின் ஆட்சி மீண்டும் கொண்டு வரப்படுகிறது. பழி வாங்குதலும், வளர்ச்சித் திட்டங்கள் இல்லாமையும் இடம் பெற்று, ஒரு வெறுமையான ஆட்சி இடம் பிடிக்கிறது. அரசியல் கணக்குகளும், புதிய கட்சிகளின் தோற்றமுமாகச் சேர்ந்து கொண்டு, அதிமுக வெற்றி வாய்ப்பை இழக்கிறது. கணக்குகளின் வாயிலாகத்தான் திமுகவுக்கு, தனிப்பெரும்பான்மை இல்லாத ஆட்சி கிடைக்கிறது.
மத்திய ஆட்சியில் பங்கு மற்றும் மாநிலத்தில் ஆட்சி எனும் ஒருவிதமான மமதையோடு, 1970களில் சம்பாதித்துக் கொண்ட அதே வெறுப்புணர்வை தானாகத் தேடிக் கொண்டிருக்கிறது திமுக. தன் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து நழுவியது மாபெரும் பிழை!! கட்சியை ஒரு வணிக நிறுவனம் போல் மாற்றியது, அறமற்ற செயல்!! இவற்றால், நல்ல பல அதிகாரிகளைக் கொண்டு இழைத்துக் கட்டிய வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்படும் அளவுக்கு வெறுப்புணர்வை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது திமுக!!
மாற்றுக் கட்சியானது, தவறிழைத்து வெறுப்புணர்வை வளர்த்துக் கொள்ளாத வரையிலும் திமுகவின் மேல் இருக்கும் வெறுப்புணர்வு குறைய வாய்ப்பு இல்லை. 1970களில் ஏற்பட்ட களங்கத்தை, எம்.ஜி.ஆர் என்னும் கவர்ச்சிமிகு தலைவர் இருக்கும் வரையிலும் துடைத்தெறிய இயலவில்லை.
அகவை அறுபதுகளில் காலடி எடுத்து வைத்திருக்கும், அதிமுக பொதுச்செயலாளர் அவர்களது பக்குவம் பலமடங்கு மெருகு கூடப் பெற்றிருக்கும் என்றே நம்பலாம். அப்படி இருக்கும்பட்சத்தில், திமுகவுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு நீங்க வெகுநாட்கள் பிடிக்கும். இச்சூழலில், விஜயகாந்த அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது, திமுகவுக்கு மேலும் சிக்கலைக் கூட்டுகிறது.
இத்தேர்தலைப் பொறுத்த வரையில், தோராயமாக 60:40 எனும் விகிதாச்சாரத்தில் தமிழகம் பிளவுபட்டு இருக்கிறது. வெறுமனே 22 இடங்கள்தான் திமுக பெற்றிருக்கிறது என ஒருவர் எள்ளி நகையாடுவதும் சரியல்ல. ஒருவர் அப்படிச் செய்வாரேயாயின், அது அவரது முதிர்ச்சியின்மையையே காட்டுவதாகப் பொருள் கொள்ளலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆளுங்கட்சியின் அடாவடி, அநியாயங்களை எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு உண்டு என்பதை நாம் கருத்தில் கொண்டாக வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சி, மாநிலந் தழுவிய போராட்டம் நடத்தியது உண்டா? அநியாயங்களை, அந்தந்த இடத்திலேயே முட்டுப் போட்டு நிறுத்த முயன்றது உண்டா?? கிடையாது என்பதுதானே மெய்??
மக்களுக்கு உகந்த ஆட்சியை நடத்தாத ஒரு கட்சிக்கு அங்கீகாரம் அளிப்பது முறையல்ல. சட்டம் ஒழுங்கைச் சரிவரப் பராமரிக்காத ஒரு ஆட்சி தொடர்வதில் நியாயமில்லை. எனவே மக்கள் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது மட்டுமே இதில் இருக்கும் மகத்தான உண்மை.
ஆளுங்கட்சி ஆக்கப்பூர்வமான திட்டங்களைத் தீட்ட வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுக்காக்க வேண்டும். பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள், தமக்குள்ள கடமைகளைத் தட்டிக்கழிக்காது செயல்பட வேண்டும்.
60% பேருக்கு, திமுகவை எதிர்ப்பதற்கான காரணங்கள் பலவாக இருந்திருக்கிறது. அதே போல, எஞ்சி இருக்கும் 40% பேருக்கு திமுகவை ஆதரிப்பதற்கான காரணம் ஒன்று கூடவா இருந்திருக்காது?? ஆகவே, வெற்றிக் களிப்புகள் நாகரிகத்துக்கு உட்படல் வேண்டும். தோல்விச் சூழல், காழ்ப்புணர்வுகளுக்கு வித்திடாமை வேண்டுதல் வேண்டும். நல்லதொரு சூழல் நாட்டில் தவழ்ந்திட, நாமனைவரும் வேற்றுமைகளைக் கடந்து, மற்றவர்தம் உணர்வை மதித்திடல் வேண்டும்!!
Healing quite honestly makes our life better!!














