7/24/2025

தூங்கற்க தூங்காது செய்யும் வினை

 தூங்கற்க தூங்காது செய்யும் வினை

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை [பொறுமையாக செய்ய வேண்டிய செயல்களை காலம் கடந்தும் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய செயல்களுக்குக் காலத்தாழ்ச்சி கூடாது]

திரைப்பட விழா, நட்சத்திர இரவு முடிந்து தாவளம் திரும்பும் போது மணி இரவு பத்தரை இருக்கும். பிள்ளைகள் எல்லாம் உறங்க வேண்டுமென விரைவுபடுத்திக் கொண்டிருந்தனர். ஒருங்கிணைப்பாளர் ஏதோ சொன்னது போல இருந்தது. சரியாகக் கேட்டுக் கொள்ளவில்லை.

அறைக்குச் சென்றதும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தில் கலியபெருமாள் அண்ணாச்சி அறைக்குத் தாகசாந்திக்காகச் சென்றிருந்தேன். சின்னஞ்சிறு கதைகள் பலவும் பேசிக் கொண்டிருந்தோம். திடுமென நினைவுக்கு வந்தது. ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தியொன்று இருந்தது. அனுப்பி வைத்தேன். நன்றிங்கண்ணா என உடனே மறுமொழி வந்ததும், அழைக்கத் தலைப்பட்டேன். அப்போதுதான் சொன்னார், நினைவுக்கு வந்தது. “உதவி தேவை, தன்னார்வலர்களுடன் வாருங்கள்?” என்றார். மணி, நடுநிசி 12.30. July 4, 2025.

பற்றியம் இதுதான். மணி பத்துக்கு மேல் பணியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். விழா வளாகத்தில், 1000 இருக்கைகள் வெள்ளுறையுடன் இருக்கின்றன. மேசைகளின் மேல் விரிப்பு போர்த்தப்பட்டு இருக்கின்றது. அவை யாவற்றையும் பிரித்தெடுத்து விடவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, மாநாட்டுக்கூடத்தினர் மறுநாள் காலைக்கான அரங்க அமைப்புக்கான நாற்காலிகள் 2850 போடுவர். அதற்கான காலக்கெடு 12 மணி. தற்போது 12.30. அவ்வ்வ்...

செந்தில் அண்ணாச்சி, வெற்றிவேல் பெரியய்யா, ஷான் குத்தாலிங்கம், இன்னும் இருவர்(sorry, forgot), நான் என ஆறு பேர் மாநாட்டு வளாகம் சென்று சேர்ந்தோம். வாயிற்கதவுகள் அடைபட்டுக் கிடக்கின்றன. காத்திருந்து, அரங்கம் சென்று சேரும் போது மணி 1.

இஃகிஃகி. கார்த்திப் பெருமாள், ஒருங்கிணைப்பாளரின் இணையர் முருகேசன், பாரதி பாண்டி முதலானோர் ஏற்கனவே உள்ளுறைகளை உரித்துப் போட்டு உரித்துப் போட்டு ஓய்ந்திருந்தனர். கார்த்திக் அவர்கள் சொன்னது, “குனிஞ்சு குனிஞ்சு இடுப்பே முறிஞ்சு போச்சுப்பா”. இஃகிஃகி.

பிறகு நாங்களெல்லாம் சேர்ந்து முசுப்பாத்தியுடன் கதைத்துக் கதைத்து எஞ்சி இருந்தனவற்றையெல்லாம் உரித்துப் போட்டு, அவற்றையெல்லாம் வளாகத்தின் ஓரத்திற்குக் கடத்தியென ஒருவழியாக வேலை முடிவுக்கு வந்தது. மணி ஒன்றே முக்கால்.

காலை 8 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்குவதெப்படி?? எண்ணிப்பாருங்கள் தோழர்களே, ஒருங்கிணைப்பாளர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கக்கூடும்? 2 மணிக்கும் மேலென்றால் அவர்களும் போய்விடுவர்.

தொப்பலாக நனைந்துவிட்டோம். மீண்டும் அறைக்கு வந்து, குளித்து, காலையில் 6.45க்கு வளாகம் வந்துவிட்டேன்! யாரையும் உள்ளே விட மறுக்கின்றார்கள், ஒப்பந்தப்படி காலை 7.30 மணிக்குத்தானாம். எனக்கு மட்டும் பணியாளர் அட்டை இருந்தபடியால் உள்ளே விட்டுவிட்டனர்!!

இக்கட்டான சூழலில் களமிறங்கிய நண்பர்கள் வாழ்க வாழ்க! ! இஃகிஃகி!!


No comments: