10/20/2011

அமெரிக்கப் பெரியாற்றுடன் ஐந்து நாட்கள் - 1

அமெரிக்கப் பெரியாற்றைக் கண்ட நாள் முதற் கணமே எம்மைப் பற்றிக் கொண்டது என்றுந்தீராத காதல். அதன் சுவை மிகுந்த வரலாறு, எத்தகையவரையும் கட்டிப் போட்டு சிந்திக்க வைக்கும். அதன் உச்சிதொட்டு அடி வரை சென்று காட்சியுற்று வாழ்வுதனை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற தணியாத ஆசை எனக்கு உண்டு.

அமெரிக்கப் பெரியாறு(மிசிசிப்பி) மெம்பிசு நகரில் எம்மை ஈர்த்து அரவணைத்தது. அவ்வரவணைப்பின் நீட்சியாகத்தான் குடும்பத்தோடு செயின் லூயிசு மாநகருக்கு எம்மை இவ்வாரம் வரவைத்தாள் அவள். எம் ஒட்டு மொத்த குடும்பமே மிசிசிப்பியுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது.

நேற்று மதிய நண்பகல் உணவுக் கிரிகைகளை முடித்துக் கொண்டு, காளியர்வில் நகரை விட்டுக் கிளம்பினோம். முதல் நிறுத்தமாக, மெம்பிசி நகர முற்றத்தில் நிறுத்தி மிசிசிப்யின் ஓட்டத்தைக் கண்டுகளித்தோம். எங்களைப் பார்த்து வெகுவாய்ச் சிரித்து வைத்தாள் அவள்.

“அப்பா, நம்ம ஆத்துக்குள்ள படகுலயே செயின்ட் லூயிசு போனா என்னப்பா?” என்றாள் மூத்தமகள். “இல்லடா கண்ணூ, படகுல எதிரோட்டமா போறதுக்கு நெம்ப நேரமாகும் இல்லையா?” எனச் சொன்னாள் தாய்க்காரி.

டென்னசி மாகாணத்தின் மாநகரான மெம்பிசு, அமெரிக்காவின் தென்பகுதியில் ஆற்றின் கிழப்புறம் இருக்கிறது. மிசெளரி மாகாணத்தின் செயின்ட் லூயிசு மாநகரம் என்பது, அமெரிக்காவின் வடபகுதியில் ஆற்றின் மறுகரையில் அமைந்திருக்கிறது.

ஆற்றை மறுகரைக்கு எங்கு வைத்துக் கடப்பது என ஆய்ந்த போது, மெம்பிசு நகரில் வைத்தே மறுகரையைக் கடப்பது என்றும், அங்கிருந்து ஆற்றை ஒட்டியே மேல் நோக்கிச் செல்வது என்றும் முடிவாகியது. ஆங்காங்கே நிறுத்தி, பெரியாற்றைக் கண்டு கொண்டே செல்ல ஏதுவாக இருக்கும் என்பதே காரணமாகும்.

I-40 தேசியப் பெருஞ்சாலையினூடாக ஆற்றைக் கடந்து, ஆர்கன்சாசு மாகாணத்தில் இருக்கும் மறுகரையை அடைந்தோம். சில மைல்தூரம் சென்றவுடன், ஆற்றின் ஓரமாகவே அமெரிக்காவின் வடபகுதிக்குச் செல்லும் I-55 பெருஞ்சாலையும், I-40 ஆகியவற்றின் சந்திப்பை அடைந்தோம்.

சந்திப்பில் வடக்கு திசை நோக்கிப் பயணித்ததை அவதானித்த மகள், வினவத் துவங்கினாள். “அப்பா, இரட்டை இலக்க பெருஞ்சாலைக்கும், ஒற்றைப்பட இலக்க பெருஞ்சாலைக்கும் என்ன வேறுபாடு??” என்றாள். “ஒற்றை இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், அமெரிக்காவில் தென்வடலாக இருப்பவை. இரட்டை இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், அமெரிக்காவில் கிழமேற்காக அமைந்திருப்பவை. மூன்று இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், ஒரு நகரைச் சுற்றிலும் வட்ட வடிவத்தில் அமைந்திருப்பவை”, என விளக்கமளித்தாள் தாய்க்காரி.

அடுத்து எங்கே வைத்து பெரியாற்றுக் கரையில் இறங்குவது என யோசித்த போது, மறுகரையில் எங்கு கெண்டகி மாகாண எல்லை துவங்குகிறதோ, அந்த இடத்தில் வைத்து இறங்குவது என முடிவாகியது. அதன்படி, ஃகோவார்டுவில் எனும் சிறுநகரத்தில் இருக்கும் ’புது மேட்ரிட்” பாலத்தின் வழியாக ஆற்றின் நடுவே இருக்கும் ”வேண்டோவர்” ஆற்றுவீயரங்கம் சென்றடைந்தோம்.

பச்சைப் பசேல் எனக் கண்களுக்கு விருந்தாக இருந்தது நிலப்பரப்பு. “வேண்டோவர்” இடைக்குறையின் இருபுறமும் சென்று மிசிசிப்பியானவள் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டோம். நிதானத்தோடும், பொறுப்போடும் ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.

அங்கே நாங்கள் பேச்சுக் கொடுத்த, செவ்விந்தியரான மேக்சிம் கேம்பல் என்பார் ஆற்றுவியரங்கம், அதன்மீதான தன்னுடைய அவதானம் முதலானவற்றை எங்களுக்கு உணர்ச்சி பொங்க விவரித்தார். தனக்குத் தெரிந்து மிகச்சிறிய வணடல் திட்டுதான் இங்கே இருந்தது. வண்டற்ப் பெருக்கம் அதிகரிக்க, அதிகரிக்க ஆற்றிடைக்குறுக்கின் பரப்பும் உயரமும் பெருத்துக் கொண்டே போவதாகவும் கூறினார்.

”ஆற்றுவீயரங்கம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது??”, என்றெல்லாம் மூத்தம்கள் இடையறாது கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டே இருந்தாள். அதற்கெல்லாம் விடையளித்துக் கொண்டிருந்த தாய்க்காரி, ஓய்ந்து போய் கைவிரித்துவிடவே அவள் எம்மை நாடியவளானாள்.

ஆற்றுவீயரங்கம் அல்லது ஆற்றிடைக்குறுக்கம் என்பது, ஆற்றில் வரும் பெருந்தொகையான வண்டல் நிலைத்து நிற்பதனால் ஏற்படுவது என்று சொல்லி ஆற்றுப்படுத்தினோம். ‘மெசபடோமியா” குறித்தும் சொல்லிப் புரியவைத்தோம்.

தொடர்ந்து, அடுத்து எங்கே நிறுத்தி மிசிசிப்பியை அவதானிப்பது எனவும் கேட்டறிந்து கொண்டாள் மகள். மிசிசிப்பியும், ஒஃகாயோ ஆறும் புணர்ந்து கொள்ளும் இடமான இல்லினாய் மாகாணத்தில் இருக்கும் ”கெய்ரோ” எனும் இடத்தைத் தெரிவு செய்தோம். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களது பரப்பில் வடியும் நீரைப் பெருமளவில் கொண்டு வருபவள்தான் ஒகாயோ ஆறு. மொத்த நீரின் கொள்ளளவில், மிசிசிப்பியை விடவும் ஒகாயோதான் அதிக அளவில் நீரைக் கோண்டு வருபவளாவாள்.

இலினோய் மாகாணத்தின் கெய்ரோ நகரில் ஒஃகாயோவும், மிசிசிப்பியும் ஒருமித்துக் கொள்ளும் அழகே அழகுதான். ஆனால் நாங்கள் அங்கு வெகுநேரம் நிலைத்திருக்கவில்லை. அங்கே இருந்து புறப்படும் தருணத்தில், ’ஆறு’ என்பதற்கும், ‘நதி’ என்பதற்கும் உண்டான மாறுபாட்டை வினவினாள் இல்லாள்.

”ஆறு” என்பது ஓடோடி மற்றொரு ஆற்றோடோ அல்லது கடலோடோ கலப்பவள். ”நதி” என்பது, தானாக உயிர்த்தோ அல்லது, இயற்கையாகவே ஆற்றிலிருந்து கிளைத்து நிலத்தில் ஓடிச் செல்பவள். ஆனால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்றும் கூறி வைத்தோம்.

பிறகு புறப்பட்டு, ஒரு சில மணி நேரத்திற்குள்ளாக செயின்ட் லூயிசு நகரத்தில் இருக்கும் மேரியாட் விடுதியை வந்தடைந்தோம். மிசெளரி தமிழ்ச்சங்கத் தலைவரும், ‘அருவி’ இதழின் துணை ஆசிரியருமான திரு.ராஜ் மற்றும் திரு.பழனி அவர்களும் விடுதிக்கே வந்திருந்து வரவேற்பு நல்கி, பின்னர் திரு.பழனி அவர்களது இல்லத்தில் உண்டி புசித்துத் திரும்பினோம்.

குடும்பத்து ஆட்கள், ஒரு சிறு அறையில், ஒற்றைப் படுக்கையில் உறங்கியது இப்போதுதான். குடும்பத்திற்குள் என்றுமில்லாத ஒரு அணுக்கம் இருந்ததை உணர்ந்தோம். இரண்டு வயது கொண்ட மகளின் மழலையும் குறுஞ்செயல்களும் எங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. பெரிய வீடுகளில் தனித்திருப்பதன் கொடுமை, கூட்டுக்குடும்பங்கள் அருகிப் போனது என எளிமையின் அருமை, பெருமைகளை நினைவு கூர்ந்து கொண்டோம். கூட்டுக்குடும்பத்தில் நான் வாழ்ந்த நாடிகளின் நினைவினூடே உறக்கமும் எம்மை ஆரத்தழுவிக் கொண்டது.

--மிசிசிப்பியின் அரவணைப்பு தொடரும்

7 comments:

Srikar said...

பகிர்வுக்கு நன்றி நண்பா, அமெரிக்கப் பெரியாற்றுடன் என்னையும் இணைதுவிடீர்கள் போங்கள்...

Naanjil Peter said...

தம்பி மணி
அருமையான பயணக்கட்டுரை. சுவையாக எழுதியுள்ளீர்கள். மகளின் கேள்விகள் படிப்பவரின் மனதில் தோன்றுவதாகவே தெரிகிறது. உங்கள் பயணம் நல்ல பயன் உள்ளதாக அமைய வாழ்த்துக்கள் அங்குள்ள நமது நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களைச் தெரிவியுங்கள்.

அன்புடன் நாஞ்சில் இ.பீற்றர்.

Mahi_Granny said...

டெல்டா என்று தான் தமிழில் படித்ததாக நினைவு. புதிய வார்த்தைகள் நிறைய கற்றுக் கொள்கிறேன். பெரியாறு பயணம் இனிதே தொடரட்டும்.

கொங்கு நாடோடி said...

அண்ணா,
அப்படியே தெற்கே வந்து எங்களையும் சந்திக்கும்படி வேண்டுகிறேன்.

ராஜ நடராஜன் said...

நயாகராவை காட்டூவீங்கன்னு வந்தா பழைய அமராவதியைப் படம் போடுறீங்களே!

ராஜ நடராஜன் said...

நயாகராவை காட்டூவீங்கன்னு வந்தா பழைய அமராவதியைப் படம் போடுறீங்களே!

ஓலை said...

Nice to read, pazhami. Great.