12/27/2010

ஈரோடு பதிவர் சங்கமமும் நானும்!

”டே மணி, நீ அங்கண்ணந்தண்ணன் வண்டீல போயி, அனுப்பர்பாளையத்துல இருந்து பெரிய சர்வம் ரெண்டுமு, வாணா சட்டி நாலும் வாங்கியாந்துரு!”

“செரீங்ணா; இப்ப எதுக்குங் காசு பணம்; நான் மெதுவா கணக்கச் சொல்லீட்டு வாங்கிக்கிறேன்!”

“இல்றா, இந்தா வாங்கிக்கோ...”

அனுப்பர்பாளையம் என்ன? அனுமார் மலையேயானாலும், சாதி மதம் பார்க்காது ஓடிச் செல்வோம். ஊரார் திருமணங்கள், இன்னும் பிற நல்லவை கெட்டவைகளுக்கு, பிரதிபலன் ஏதும் பாராது ஓடிச் செல்லும் பூமி, கொங்கு பூமி. காலச் சற்கரம் சுழல, சுழல, சூழலும் மாறுகிறது. மனிதர்களும் மாறிவிடுகிறார்கள். இத்தனை நியதிகளையும் வென்று, அதே பண்பாடு கூடிய நிகழ்வை மீட்டெடுப்பது என்பது எவ்வளவு பெரிய காரியம்?

தனித்தன்மைப் பேறுகள் எல்லாம், உலகமயமாக்கலில் சின்னாபின்னமாகி, சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், அவற்றை வென்று, நின்று காட்டியிருப்பது இந்நிகழ்வு என்று சொன்னால் அது மிகையாகாது.

மாலையில், அருமை நண்பர், தளபதி நசரேயன் கூறிய சொற்கள் இந்த நடுநிசியிலும் எம்மை குதூகலப்படுத்துகிறது. “மணியண்ணே, உங்கூர்க்காரவுக பெட்னா விழாவையெல்லாம் தோறகடிச்சிட்டாங்கண்ணே; தலைவாழை இலை, இலக்கியச் சொற்பொழிவு, தொழில்நுட்பப் பாசறைன்னு நாலுங்கலந்து அமர்க்களப் படுத்திட்டாய்ங்கண்ணே....”

மெய் மறந்தேன்... மெய் சிலிர்த்தேன்... அவையிரண்டுமே, நான் ஆத்மார்த்தமாக நேசிக்கும் இரண்டு விழாக்கள். அவைகள் ஒப்பிடப்படும் போது, மகிழ்ச்சிப் பிரவாகம் ஊற்றெடுப்பது யதார்த்தமாகத்தானே இருக்கும்?

ஈரோடு பதிவர் சங்கமம், இன்னும் இன்னும் மெருகு கூடித் தமிழர் பண்பாடு போற்றும் பெருநிகழ்வாக உருவெடுக்க வேண்டும். ஈரோடு, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம், காரைக்குடி எனப் பண்பாடு கொட்டிக் கிடக்கும் பல ஊர்களிலும் முறை வைத்து ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்.

சாளரத்தின் ஊடாய் வெளியே பார்க்கிறேன். கொட்டிக்கிடக்கும் பனியில், ச்சட்டனூகா மலைத்தொடர்கள் வெண்பனிப் போர்வையால் போர்த்தப்பட்டு இருக்கிறது. வளைந்து நெளிந்து ஓடும் டென்னசி நதியானவள் என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள். நானும் புன்னகைக்கிறேன், என் ஊர் மக்கள் எனும் பெருமிதத்தோடு! அவர்களை நினைத்துப் பெருமிதம் கலந்த மமதையோடு சிரிக்கிறேன்!!

நண்பர்களே, உங்களின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கிறீர்கள்; பொறுப்புக் கூடி இருக்கிறது. உங்களிடம் வல்லமையும் இருக்கிறது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைத் திருவிழா போல நீங்களும் இன்னும் பல விழாக்களை நடத்துவீர்கள்! இது திண்ணம்!! வாழ்க நீவிர்!!!

18 comments:

sathishsangkavi.blogspot.com said...

முதல் பந்தி எனக்குத்தான்...

VELU.G said...

உங்கள் புத்தகம் உபயோகமாக உள்ளது

மிக அருமை

Mahi_Granny said...

உங்கள் புத்தகம் கிடைத்தது. வாசித்தும் முடித்தேன். ஆஹா. நன்றாக பழமை பேசியுள்ளீர்கள். வருடந்தோறும் வேறுவேறு ஊர்களில் நடத்தினால் நல்லது . எனக்கும் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.சங்கவிக்கும் என் அன்பு நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

வணக்கங்க. உங்க அன்பு எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. தொடர்ந்து செயல்படுவோம்.

நண்பர் அமரபரதி, மற்றும் இளா ஆகியோரும் எங்களை உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியைத் தருகிறது. அவர்களுக்கும் நன்றி.

Unknown said...

அன்பின் பழமைபேசி இந்த 10 நாட்களில் ஈரோடு குழும நண்பர்களுடன் மிகவும் இணந்து விட்டேன். எனது வயது கருதாமல் என்னையும் அவர்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டு மிகப் பிரியமாகப் பழகினார்கள். நீங்கள், இளா, அமரபாரதியும் கூட இருந்திருந்தால் மிக மகிழ்சி அடைந்திருப்போம்.

சின்னப் பையன் said...

ஆமாண்ணே. என் சார்புலே இந்த சங்கமத்தை நடத்தியவங்களுக்கு வாழ்த்துகளை தெரிவிச்சிக்கறேன்.
அடுத்த தடவையிலிருந்து நானும் ஒரு அணிலாய் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு உதவறேன்.
சினிமா, அரசியல், ஆன்மிகம் - இவை மூன்றும் இல்லாத இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நாம் கண்டிப்பாக ஊக்குவிக்க வேணும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பழமை , உங்களைச் சந்திக்க முடியாமல் போய் விட்டதே!

Unknown said...

ஏனுங்க! நீங்களும் அந்தப் பந்தி போட்டோவப் போட்டு ...
ம்ம்ம்ம்

ஆறுதலடைஞ்சிக்கிறீங்க.இருக்கட்டு இருக்கட்டு.

போகாத விழாக்கு தனது புத்தகம் கொடுத்து அங்கு கூடவே இருந்து காட்டிய பழமையாருக்கு....

ம்ம்ம்ம்
....
கண்டனம்.

என்னாங்க சொல்றீங்க ஈரோடு மாப்பு.

ஈரோடு கதிர் said...

என்னங்க மாப்பு...
இடுகை போட்ட நேரத்தைப் பார்த்தா, தூங்கலை போல இருக்கு!

இந்த நேசமும், அன்பும், நம்பிக்கையும்தான் எங்களை இயங்க வைத்தது.

நான் சொல்ல நினைத்ததை ஆருரனும், தமோதர் சந்துரு அண்ணனும் கூறிவிட்டனர்

நன்றிங்க மாப்பு

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//தலைவாழை இலை, இலக்கியச் சொற்பொழிவு, தொழில்நுட்பப் பாசறைன்னு நாலுங்கலந்து அமர்க்களப் படுத்திட்டாய்ங்கண்ணே....//

மூணு தானே இருக்கு? :))

ரவி said...

போட்டோவ பார்த்தவுடனே சாப்பிடமாதிரி நிறைவா இருக்கு !

Unknown said...

முதல் பந்தி எனக்குத்தான்...

erodemani

http://usetamil.net

க.பாலாசி said...

உங்களோட ஆலோசனையும், அன்பும் ஆதரவும்கூட எங்களின் வெற்றிக்கு காரணம்.. நன்றிங்க..

vasan said...

மாவ‌ட்ட‌ங்க‌ள் தோறும் கூட்ட‌ங்க‌ள். அருமையான யோச‌னை. த‌மிழ‌க வ‌லைப் ப‌திவ‌ர்க‌ள் வ‌ட்ட‌த்தில், ஈரோடு முண்ண‌னியில். மண்ணின் பெருமையா? ம‌க்க‌ளா?

குறும்பன் said...

என்னங்க பழமை, பாசுடனுல செம பனி பொழிவாச்சே! எப்படி விடுமுறைக்கு அடுத்த நாள கழிச்சிங்க.

உங்க ஊர் பகுதியிலும் பனி பொழிவுன்னு கேள்விப்பட்டேன். உண்மையா இல்ல தப்பிச்சுட்டீங்களா?

அமர பாரதி said...

பதிவிற்கும் புத்தகத்திற்கும் நன்றி பழமை.

தாராபுரத்தான் said...

நீங்க வரமாட்டிங்க அப்படின்னு தெரிந்தாலும்..மனசு உங்களை தேடிச்சுங்கோ.

V.N.Thangamani said...

அன்பு பழமை
நீங்கள் வராததுதான் குறை .
உங்கள் நூல் "ஊர் பழமை" அதை நிவர்த்தி செய்து விட்டது
நன்றி
வாழ்க வளமுடன்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்