2/03/2019

அழுக்காறு களையுமாம் பீயும் பீநலமும்


மயில்களைப் பார்க்கும் போது மட்டுமின்றி
போய்ப் பார்க்கும் போதும்
சொல்லியாக வேண்டியிருக்கிறது,
மயிலே, மயிலே, நீ
எந்த மயிரானுக்கும்
இறகு போடாதே!!
(கவிஞர் ஜெயபாஸ்கரன்)

இலக்கியக் கூட்டமொன்றில் இக்கவிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது, மயிரான் போன்ற சொற்களுக்கு மாற்றாக இலைமறைகாயாக உணர்த்துகின்ற இடக்கரடக்கல் கையாளப்பட வேண்டுமெனவும், ’பகா ஈகாரம், பவ்வீ’ என்றெல்லாம் ஓரெழுத்துச் சொல்லைச் சொல்வது போன்று இலைமறை காயாகச் சொல்ல வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகின்றது. தொன்றுதொட்டு வழக்கில் இருந்து வருகின்றது என்பதற்காகவே நாம் ஒன்றை காலாகாலத்துக்கும் கடைபிடித்துத்தான் ஆக வேண்டுமா? காலத்துக்கொப்ப மாற்றம் கண்டாக வேண்டியிருக்கின்றது. ’பகா ஈகாரம்’ ’பவ்வீ’ என்று சொன்னதும் நம்மில் எத்தனை பேருக்கு இது புரிந்து விடப் போகின்றது? ’பீ’ எனக் குறிப்பிட்ட மாத்திரத்தில் என்னதான் பின்னடைவு வந்து விடும்? இன்னும் சொல்லப் போனால், மயிர், பீ, முலை போன்ற சொற்களைத் துணிந்து சொல்லாமல் விட்டுவிடுவதுதான், அவற்றின்மீதான உரையாடலுக்கான இடத்தைச் சமூகத்தில் இல்லாமற் செய்கின்றது. இதன்நீட்சிதான், வீட்டுப் புறக்கொல்லைக்குச் சென்று துண்டு போட்டு மறைத்துக் கொண்டு திருட்டுத்தனமாகக் கள்ளோ சாராயமோ குடித்து விட்டு வருவது போன்றதாகும். மது அருந்துவது உடல்நலத்தை எப்படியாகப் பாதிக்கின்றது? மதுச்செரிமான அறிவியல் என்ன?, பயன்பாடு, உட்கொள்ளும் நாகரிகம் எப்படியானது?, முதலானவற்றைப் பேசியாக வேண்டியதன் தேவை நமக்கிருக்கின்றது. அதைப்போலவே, பீயும் பீநலமும் கூட உரையாடலுக்கு உட்படுத்த வேண்டியவொன்றாகும்.

பீ தணக்கன், பீக்கருவேலன், பீ நாறி, பீநாறிச் சங்கு, எருமுட்டைப் பீநாறி, பீய்யமரம், பீமரம் முதலானவையெல்லாம் தாவரங்களின் பெயர்கள். விட்டை, பிட்டை, பிழுக்கை, இலத்தி, இலண்டம், சாணம், எச்சம், எருவை முதலானவையெல்லாம் உயிரினக்கழிவான பீயின் வடிவு, உருவுக்கான வெவ்வேறு மரபுப்பெயர்கள்.

பீ என்பது தமிழின் ஒரு வேர்ச்சொல். தூம்பு(hollow tube)வினின்று வெளிப்படுதல் என்பதுதான் அதன் பொருள். அப்படிச் சினையாகு பெயராக ஆகிவந்திருப்பது பீ. பீச்சுதல், பீரங்கி, பீடி, பீடு, பீரிடுதல், பீத்தல் முதலானவையெல்லாம் இந்த பீ எனும் வேர்ச்சொல்லின் நீட்சி. ஆகவே, பீ என்றதுமே முகம், மனம் கோணுவது, நாணுவதெல்லாம் தேவையற்றது. தற்போது எதற்கு இந்தப் பீடிகை? பீ குறித்து விரிவாகப் பேச வேண்டியிருக்கின்றது. பீ குறித்த தெளிவு இருப்பின், வாழ்வு சுகப்படும்.

பீயினை இழிவுக்கு ஒப்பானதாகக் கருதப்பட்டதாலேயே அச்சொல்லுக்கு இடக்கரடக்கல் தேடுவதும், அச்சொல்லைச் சொன்னதும் மருள்வதும் வெகுள்வதும் ஏற்படுகின்றது. ஆனால் மாந்தவாழ்வின் வரலாற்றுப் போக்கில், சுகாதாரம் கருதி மிகக்கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்ததோடு, தேவையின் முக்கியத்துவம் கருதி அணுக்கமாகவும் கையாளப்பட்டு வந்திருக்கின்றது. நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னர், பண்டைய மருத்துவத்தில் பீயைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. கண்களுக்குத் திரை விழுந்து விட்டால், மாந்தனின் பீயைக் காய வைத்துப் பொடியாக்கி, பொடியைக் கண்களில் ஊதிவிடும் பழக்கம் இருந்திருக்கின்றது. இரண்டாம் உலகப் போரின் போது வட ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றிக் கொண்ட இட்லரது படைகள் கொத்துக் கொத்தாக வயிற்றுப் போக்குக்கு ஆளாகினர். உள்ளூர் ஆட்கள் எப்படியோ அத்தகைய பாதிப்பிலிருந்து மீண்டு வருவதைக் கண்டவர்கள், காடுகளுக்குள் செல்லும் உள்ளூர் ஆட்களைப் பின்தொடர்ந்து சென்று போய்ப் பார்த்தனர். ஒட்டகச் சாணத்தினை நிலத்தில் விழுவதற்கு முன்னாகக் கையிலேந்தித் தின்பதைக் கண்டனர். முகம் சுளித்தனர். உயிரா, சாணமாவென யோசித்த ஜெர்மன் படைகள் சாணத்தைத் தின்று உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். சாணத்தில் இருந்து நோயெதிர்ப்பு பாக்டீரியாக்கள் மாந்த உயிர்களைக் காப்பாற்றியது வரலாறு.

மாந்தன் பீயை அழிவு சக்தியாகவும் பாவித்தான். கிமு ஆறாம் நூற்றாண்டுகளில் இடம் பெற்ற போர்களின் போது சித்தியப் படைகள், மனிதக்கழிவினைத் தோய்த்த அம்புகளை ஊரெங்கும் தொடுத்தனர். கிருமிகள் ஊரெங்கும் பரவி மக்கள் நோய்வாய்ப்பட்டு மடிந்தனர். பனிரெண்டாம் நூற்றாண்டுகளில், சீனப்படைகள் மனிதக்கழிவினால் ஆன குண்டுகளை வீசி எதிரிகளை நிலைகுலையச் செய்தனர். தொற்றுநோய்கள் வேகமாகப் பரவுவதில் மனிதக்கழிவுக்குப் பெரும் பங்குண்டு.

மனிதக்கழிவில் பொதுவாகக் கிட்டத்தட்ட 75 விழுக்காடு நீராகும். எஞ்சியிருக்கும் 25 விழுக்காட்டுத் திடமான உள்ளீட்டில், முப்பது விழுக்காடு நம் உடலில் இருந்து கழிக்கப்படும் செத்தையாகிப் போன செல்களும் கழிவுமாகும். அடுத்த முப்பது விழுக்காட்டுத் திண்மமானது செரிக்கமுடியாத நார், செல்லுலோசு உணவுப் பொருட்களாகும். எஞ்சிய நாற்பது விழுக்காட்டில் கனிமங்கள், கொழுப்பு, புரதம் ஆகியவற்றோடு வெளியேற்றப்படும் நுண்ணுயிரிகளும் அடங்கியிருக்கும். இந்த நுண்ணுயிரிகளில், மாந்தனுக்கு ஏதுவான நுண்ணுயிரிகளோடு தீங்கு விளைவிப்பனவும் இடம் பெற்றிருக்கும். இத்தகைய தீங்கானவையே தொற்று நோய்களுக்கு வழி வகுக்கின்றன.

பீ என்றவுடனே, அதுவோர் கழிவுப் பொருள், தீங்கை விளைவிக்கக் கூடியது, நாற்றமானது என்றெல்லாம் கருதி ஒட்டுமொத்தமாகப் பாராமுகம் கொள்வது தவிர்க்கப்பட வேண்டியதாகும். சுகாதாரத் தூய்மை கருதி கவனமாகக் கையாளப்பட வேண்டியது எவ்வளவு முக்கியமானதோ, அதேயளவு முக்கியமானது நாம் அதன் பின்னணி, அறிவியல், தன்மை முதலானவற்றை அறிந்து வைத்துக் கொண்டு கவனத்துக்கு உட்படுத்திக் கொள்வதுமாகும். எத்தனையோ வகையான வடிவில், பீ என்பது மாந்தனின் வாழ்வில் இடம் பெற்றே வந்திருக்கின்றது.

பழங்காலத்தில், குழந்தைகளுக்கு ஏட்டுகுணம், உடல்நலிவு ஏற்பட்டு விட்டால், கழுதை விட்டைகளை சாம்பிராணியுடன் கலந்து நெருப்பிலிட்டுப் புகை பிடிக்கச் செய்தனர். அதற்கும் சரியாக விட்டால், குழந்தையின் பீயையே காயவைத்துப் புகைபிடிக்கச் செய்தனர். கால்நோய் கண்டவர்கள், யானையின் இலண்டத்தில் கால்களைப் புதைத்து வைக்கும் பழக்கம் இருந்தது. சிறுமூக்கு உடைந்து இரத்தம் ஒழுகினால், மாட்டுச்சாணம் அல்லது ஆட்டுப் பிழுக்கையை வைத்து அடைப்பர். கண்கட்டிக்குக் குருவிப் பீயினைக் குழைத்துப் போடுவதும் வழக்கமாயிருந்தது. வைத்து புனுகு, சவ்வாது போன்ற வாசனைத் திரவியங்கள், குறிப்பிட்ட பூனையினத்தின் கழிவுப் பொருளேயாகும். மனிதனின் தோல்நலத்துக்குப் பாவிக்கும் பூச்சானது, நத்தையின் பீயில் இருந்து எடுக்கப்படுவதேயாகும். குடிக்கு அடிமையானவர்களுக்கு, புலியின் பீயானது மருந்தாகப் பாவிக்கப்படுகின்றது. தெரிவு செய்த மனிதப் பீயினை அதிமதுரத்துடன் கலந்து நாட்டு மருந்துகளைத் தயாரிக்கின்றனர் சீனப்பழங்குடிகள். ஊர் மொத்தத்திலிருந்தும் கிடைக்கப்பெறும் மனிதக்கழிவில் இருந்து தங்கம் உள்ளிட்ட இதர உலோகக்கனிமங்கள் இனம்காணப்பட்டுப் பிரித்தெடுக்கின்றனர் ஜப்பானியர்கள்.

கருப்பு ஐவரி காஃபியானது யானைக்குத் தின்னக் கொடுத்து அதன் இலண்டத்தில் இருந்து பெறப்படும் காப்பிக் கொட்டைகளில் இருந்து வடிக்கப்படுகின்றது. அமெரிக்காவில் சாதாரணக் காப்பித்தூள் விலை ஒரு கிலோ 12 டாலர்கள். ஆனால் இந்த Black Ivory coffee, காஃபியின் விலை கிலோ 1100 டாலர்கள் ஆகும். ஒருவிதமான காட்டுப்பூனைகளுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டு, அதன் விட்டைகளில் இருந்து எடுக்கப்பட்ட காப்பிக் கொட்டையின் விலை கிலோ 500 டாலர்கள். இப்படியான உயிரினங்களின் செரிமான மண்டலத்துக்குள் சென்று வரும் காப்பிக் கொட்டைகள் நுண்ணுயிரிகளினூடாக நொதித்தலுக்கு ஆட்பட்டு வருவதால் இத்தகைய பொருட்கள் சிறப்பைப் பெறுகின்றன. வானியற்பயணம் மேற்கொள்பவர்கள் கழிக்கும் சிறுநீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் குடிநீராகப் பயன்படுத்தப்படுகின்றது. அதைப் போலவே, பீயையும் உணவாகப் பாவிக்க முடியுமாவென்பதற்கான ஆய்வுகளும் நடந்து வருகின்றன.

உடல்நலிவுக்கு, தெரிவு செய்யப்பட்ட மற்றவருடைய பீயினை உடல்நலிவுற்றவரின் செரிமான மண்டலத்தில் மாற்றுப்பீயாக வைக்கும் மருத்துவ சிகிச்சைகளும் நடப்புப் பயன்பாட்டில் இருக்கின்றன. அதன் அடிப்படையை அறிந்து கொள்ள, நம் உடலின் செரிமானத்தை அறிந்து கொள்வது முதற்படியாகும்.

மெல்லப்படுவதனால் இயங்குதிறனுக்கும், உமிழ்நீருடன் கலப்பதன் வாயிலாக வேதித்திறனுக்கும் ஆட்பட்டுக் களிமமாக வாயிலிருந்து துவங்குகின்றது உணவின் செரிமானப் பயணம். செரிமானப் பயணத்தின் தொலைவு கிட்டத்தட்ட 30 அடிகள் நீளமாகும். வாயிலிருந்து உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், பீப்பை, பீப்புளை(ஆசனவாய்) வரையிலான தொலைவு என்பது ஒருவரது உயரத்தின் ஐந்து மடங்காக இருக்கும். வாயில் அரைக்கப்பட்ட உணவுக்கவளமானது உணவுக்குழாயின் தசைகளால் கடத்தப்பட்டு இரைப்பைக்கு வந்து சேர்ந்தவுடன், இரைப்பை வெளித்தசைகள் இங்குமங்குமாக தள்ளிவிட்டுத் தசைச்சுவரில் மோதவிடும். இத்தகைய இயங்குதிறன் மோதுதலுக்கு ஆட்பட்டுச் சிதைவடையும் அதே வேளையில், அமிலம் சுரந்து வேதிவினைச் சிதைத்தலுக்கும் உணவுக்கரைசல் ஆட்படும். நார், மாவுச்சத்துள்ள உணவுக்களிம்புகள் இரைப்பையிலிருந்து குறைவான நேரத்தில் சிறுகுடலுக்குச் சென்று சேரும். புரதம், கொழுப்பு மிகையாக உள்ள களிம்புகள் கூடுதலான நேரத்தை இரைப்பைச்சுவர் மோதுதலுக்கும் அமிலச் சிதைத்தலுக்கும் எடுத்துக் கொள்ளுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிறுகுடலுக்குள் நுழைந்ததும், கணைய நீர், பித்தப்பையின் பித்தநீர் போன்ற சுரப்புநீர்கள் வந்து சேர்ந்து கொள்ள, டிரில்லியன் கணக்கில் அங்கே குடிகொண்டிருக்கும் நுண்ணுயிரிகள் அடுத்தகட்ட செரித்தலை மேற்கொள்ளும். சிறுகுடலின் நீளம் மட்டுமே 20 – 25 அடிகள் கொண்டதாய் இருக்கும். ஆக, உண்ட உணவு என்பது 12 மணி நேரத்திலிருந்து ஒருவாரம் வரையிலும் கூட இப்பயணத்துக்கான நேரமாக எடுத்துக் கொள்ளும். செரித்தலின் போது வடித்தெடுக்கப்படுகின்ற புரத, கொழுப்பு, குளுகோசு, கனிமச்சத்துகள் உடனுக்குடனே கல்லீரலுக்குச் சென்று சேரும். எவ்வளவுக்கெவ்வளவு நார்ச்சத்து இருக்கின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு பயணத்தின் வேகம் அதிகமாக இருக்கும். சிறுகுடல் வெளிப்புறச் சுவர்களான வில்லியன்களின் கடத்து ஆற்றல் நார்ப்பொருட்களால் எளிமைப்படும். நார்ப்பொருள் குறைவாகவோ இல்லாமலோ இருப்பின், உணவுப்பொருளானது மாவுபோலக் கிடப்பிலேயே கிடந்து, நுண்ணுயிரிகள் கழிந்த கழிப்பினையே அவை மீண்டும் உண்டு நச்சுப் பொருட்களின் வீச்சு அதிகரிக்கும். நுண்ணுயிரிகளின் சுகாதாரம் பாதிப்படையும்.

பெருங்குடலை வந்தடையும் போது, இனிமேற்கொண்டு கொழுப்பு, புரதச்சத்துச் செரிமானத்துக்கு இடமில்லாத நிலை ஏற்பட்டு விடும். இருக்கும் குளுகோசு, நீர்ச்சத்தினை மட்டுமே பெருங்குடல் ஈர்க்க முடியும். பெருங்குடல் வந்தடைந்த உள்ளீட்டில், கழிக்கப்பட்ட செத்தை செல்கள், நச்சுப் பொருட்கள், தீங்கான நுண்ணுயிரிகளும் இருப்பதால், வெகுநேரம் பெருங்குடல் பயணத்தில் இல்லாமல் இருப்பது நல்லது. அல்லாவிடில், அவை பெருங்குடலுக்குத் தீங்காய் முடியும். நேரம் செல்லச் செல்ல, பீயில் இருக்கும் நீர் உறிஞ்சப்படுவதால் வறண்டு போய் விட்டையாக உருவெடுக்க நேரிடும். வெளியேற்றப்பட்ட நுண்ணுயிரிகள், தமக்குத் தேவையான சத்து கிடைக்காமையால் குடற்சுவர்களைத் தின்னத் தலைப்படலாம். எனவேதான் வேகத்தை உறுதி செய்யும் பொருட்டு, நார்ச்சத்து இன்றியமையாததாய் ஆகின்றது.

பெருங்குடல் பயணத்தை முடித்துக் கொண்ட திருவாளர் பீயார் அவர்கள், பீப்புளை(ஆசனவாய்)யின் இறுகுதசைக் கதவினை அன்போடு லேசாகத் தட்டுவார். சமிக்கையானது மூளைக்குச் சென்று சேரும். அவரது அன்பு வேண்டுகோளை ஏற்று உடனடியாக கழிப்பறைக்குச் செல்வது நல்லது. சில நேரங்களில் செல்ல வசதி இராது. அவருக்கும் அது தெரிந்தே இருக்கின்றது. ஆனால் அவரது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. எல்லை மீறப்படும் வேளையில், அடுத்த பீயாரும் பீப்பையை வந்தடைய, பீப்பை பெருத்துப் போகும். இருக்கும் நீர்ச்சத்தெல்லாம் உறிஞ்சப்பட்டுக் கொண்டே இருக்கும். விட்டை, இலண்டமாகும். கதவு தட்டப்படுவதும் நின்று போகும். கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், முக்கித்தானாக வேண்டும். நுண்ணுயிரிகளின் கழிவுகள் கூடுதல் இரசாயன வாயுவாகிக் காற்றுப் பிரியும். காற்று உடலுக்குள்ளே சென்று தீமைகளுக்கு வித்திடும். மீண்டும் மீண்டும் பீப்பைக்குள் வரவு இருந்ததினால், பீப்பையின் விட்டம் பீப்புளை, ஆசனவாயின் விட்டத்தைக் காட்டிலும் பெருத்துப் போக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். மேலும் நீர்த்தன்மையற்ற வறட்டுத்தனத்தால், உராய்ந்து உராய்ந்து, பெருங்குடற் சுவர்களிலும் பீப்பைச்சுவர்களிலும் புண்கள் ஏற்படும். இதற்கு நாம் சூட்டிக் கொண்ட பெயர் மலச்சிக்கல்.

பீயின் உரு வடிவைக் கொண்டு பிழுக்கை, இலத்தி, இலண்டம், சாணம், விட்டை, பிட்டை, பீ, எச்சம், எருவை எனப் பிரித்தார் தமிழ்ப் பெரியோர். அதைப் போலவே, மேற்கத்திய மருத்துவ ஆய்வுலகமும் ஏழு வகையாகப் பிரித்துக் கையாள்கின்றனர். பீநலம் பேணும் பொருட்டு நாமும் அவற்றை பொருட்படுத்துவது உசிதம்.

நார்ச்சத்து, நீர்ச்சத்து இன்றியோ குறைந்தோ இருந்து, மாவு, புரதம் மேலோங்கி இருக்கும் போது பிழுக்கைகளாகப்(#1) பீ வெளியேறும். அதாவது சிற்சிறு உருட்டுகள் கொண்ட தொகுதியாக வெளியேறும். கடத்துதிறன் இல்லாமையால் குடல்மண்டலத்தில் நெடுநேரம் பயணிக்க வேண்டி இருப்பதால், நச்சுக்கழிவுகளால் தீங்கு நேரிட வாய்ப்புண்டு. நீர்ச்சத்து கொஞ்சமாய் இருந்து, நார்ச்சத்து இல்லாமல் இருந்தால் இலத்திகளாக(#2) உருவெடுக்கும். நார்ச்சத்து போதுமானதாய் இருந்து, நீர்ச்சத்து போதுமானதாக இல்லாமல் இருக்கும் போது பிட்டைகளாய்(#3) வெளியேறும். இதற்கு அடுத்த கட்டமான விட்டைச்சாணம்தான் உகந்ததாகும். ஈரப்பசை மிகுந்த நீண்ட நெடிய சாணமானது மலப்புளை விட்டத்தின் அளவினாலான உருளைக்கோலாக(#4) வளைந்து வளைந்து கழியும். உண்ட உணவில் இருக்கும் ஏதோவொரு பொருள் ஒருவருக்கு ஒவ்வாததாக இருக்கக் கூடும். அப்படியான நேரத்திலோ, அல்லது கணையம், பித்தப்பை முதலான உள்ளுறுப்புகளின் இயலாமை காரணமாகவோ முழுமையாக செரிமானம் ஆகாமல் நீர்த்தன்மையான எருவைப்பிட்டுகளாக(#5) வெளியேறும். கொழுப்புச்சத்து செரிமானக் கோளாறு, ஒவ்வாமை, காரச்சத்து, வயிற்றுப்புண், நுண்ணுயிர்ப்போதாமை, மாவுச்சத்துக் குறைபாடு முதலான காரணங்களுக்காக எச்சமாக(#6), எருவியாக(#7) நீர் போலவும் வெளியேறும். பீப்பைக்கு வந்து சேர்ந்ததன் மீது, ஒன்றின் மீது ஒன்று, ஒன்றின் மீது ஒன்று எனப் பொதிந்து பொதிந்து பெருப்பதால் ஏற்படுவது இலண்டம்.

வெளியேறும் அளவு என்பது பெரிதாகப் பொருட்படுத்தத் தேவையில்லை. அவரவர் உண்ணும் அளவுக்கேற்ப, உண்ணும் முறைகளுக்கேற்ப அது மாறுபடலாம். ஆனால், மேற்கத்தியர்களை விட ஆசியர்கள் கழிக்கும் பீயின் அளவு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்கின்றார் பீ ஆய்வாளர் மருத்துவர் அனீசு சேத். இதற்குக் காரணமாக அவர் சொல்வது, ஆசியர்களின் உணவில் வெகுவாக இடம் பெறும் தாவர உணவுகளேயாகும். மேற்கத்தியர்கள் பெரும்பாலும் புலால் உண்ணுபவர்கள். எனவேதான் அவர்களுக்கிடையே ஒப்பீட்டளவில் குடற்புற்றுநோயும் அதிகமென்கின்றார்.

பீயின் வண்ணத்தைப் பொறுத்தமட்டிலும், மஞ்சள், பழுப்பு வண்ணம் இயல்பானது. உணவுக்கூழ் சிறுகுடலுக்குள் சென்றதும், இளம்பச்சை வண்ணத்தினாலான பித்தநீர் வெளிப்பட்டுச் செரிமானத்தின் அடுத்த கட்டம் துவங்கும். செரிமானம் முழுமை பெறாமல் வெளியேறும் போது, பீயானது இளம்பச்சை வண்ணத்தில் இருக்கும். பச்சைவண்ணமிகு நார்ச்சத்து மிகுதியாக இருக்கும் போதும் பச்சைவண்ணத்தில் வெளியேறுவது இயல்பேயாகும். அல்லது, இயல்பான வேளைகளில் பித்தநீர் செரித்த பின் பழுப்புக் கழிவையே வெளியேற்றும். கருப்பு வண்ணத்தில் இருந்தால், உள்ளுறுப்புகள் கோளாறு அல்லது இரும்புச்சத்து சமமின்மை என்பது காரணமாயிருக்கலாம். சிவப்பு வண்ணமென்பது, உட்கொண்ட உணவு அல்லது இரத்தக்கசிவு, குடல்நோய் முதலானவற்றைக் குறிக்கும். வெளியேறியதும் நீரில் மிதத்தல் அவரவர் உட்கொண்ட உணவைப் பொறுத்தது. ஆனால் தொடர்ந்து மிதக்குமேயாயின், கொழுப்புச் செரிமானக் குறைபாடாகவும் இருக்கலாம்.

பீநலத்துக்கும் செரிமண்டல நுண்ணுயிர்த் தொகுதிகட்கும், நேரிடையானதும் நெருக்கமானதுமான தொடர்பு உண்டு. பீநலம் மேம்பட்டதாக இருந்தால், ஒருவரது மனநலமும் மெய்நலமும் மேம்பட்டதாகவே இருக்கக் கூடும். ஆக, ஒருவர் தம் பீநலத்திலிருந்து பின்னோக்கிச் சென்று அவரவர்க்கான உணவுப்பழக்கத்தைக் கட்டமைத்துக் கொள்ளலாம்.

மாற்றுப்பீ சிகிச்சை முறையின் அடிப்படையை நாம் இப்போது மீளாய்வு செய்யலாம். ஒருவர், ஒரேவிதமான உணவையோ அல்லது அதீதமான ஆண்டி-பயாடிக் (நுண்ணுயிர்க்கொல்லி) பாவிக்கும் போது, தமக்கான உணவு இல்லாமை, கொல்லப்படுதல் போன்ற காரணங்களினால் நுண்ணுயிர் பரவலாக்க அமைப்பினை இழக்க நேரிடுகின்றார். இதனால் செரிமானக் கட்டமைப்புச் சீர்குலைகின்றது. ஒவ்வா நுண்ணுயிர்களை எதிர்த்துத் துரத்தும் ஆற்றல் இல்லாமற் போய்விடுவதால் நோய், முறைகேடுகள் தோன்றுகின்றன. இப்படியான நிலையில், ஒவ்வா நுண்ணுயிர்களைக் கொல்ல கொடுக்கப்படும் மருந்துகளுக்கும் அவை சாவதில்லை. இந்த நேரத்தில்தான், மற்றவரின் பீயைக் கொணர்ந்து குடல்மண்டலத்தில் குடிகொள்ளச் செய்வதாகும். பட்டுப்போன நிலத்தில் என்னதான் உரங்களைக் கொட்டினாலும் பயனளிக்காமற் போகும் நிலையில், உழவர்கள் மற்ற காட்டு மண்ணைக் கொண்டு வந்து கொட்டுவதைப் பார்த்திருப்போம். அதைப் போன்றதுதான் இதுவும். மற்றவரின் நல்ல நுண்ணுயிர்த் தொகுதியுடைய வளமான பீயைத் தெரிவு செய்து, அவற்றில் இருக்கும் செத்தைகளை நீக்கிவிட்டு, அதனை பெருங்குடலில் இருக்கச் செய்வதன் வாயிலாக, இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக சிகிச்சை பெறுபவரின் செரிமண்டலத்தில் நல்ல நுண்ணுயிர் மண்டலம் தழைக்கத் துவங்குகின்றது. அதன் மூலமாக தீராத வயிற்றுப் போக்கு, முறைகேடுகள் நீங்குகின்றன.

சீருடைய பீநலத்துக்கு ஒருவர் என்னதான் செய்ய வேண்டும்? இயன்ற மட்டிலும், உண்ணுகின்ற எல்லா நேரமும் சிறிதளவேனும் நார்ச்சத்து உள்ளதாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒழுங்கு அமைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்ததும் வெளியேறுகின்றதா? மாலையில் வீடு வந்து சேர்ந்ததும் போகின்றதா? இப்படியாக அதில் தொடரமைவு, consistency பேணுதல் அவசியம். இதற்கு அடிப்படை பசித்து உண்ணுதல், அளவாக உண்ணுதல் போன்றவையாகும். நம் உடலானது, 50-60% நீரால் ஆனது. ஆக, தெப்பத்தைப் போல நீர் செலுத்தி நீர் வெளியேற்றுவது அவசியம். போதுமான தண்ணீர் குடிப்பதை கடைபிடிக்க வேண்டும். கொழுப்பும், இறைச்சியும் எவ்வளவு வேண்டுமானாலும் தின்னலாம் போன்றவை, சமச்சீருக்கு ஒழுங்குக்கு ஒவ்வாதன. மாறாக, அது அது, அதனதன் தேவைப்கொப்ப உட்கொள்ள வேண்டும். உகந்த அளவில் இறைச்சி/கொழுப்புடன் மிகுதியாகத் தாவரப்பொருட்கள் உட்கொள்ளப்பட்டு, உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு இயைந்து வரும் போது வெளியேற்று ஒழுங்கு கூடிவரும். இப்படியாக அழுக்காற்றைக் களைய வல்லது பீயும் பீநலமும்!!

-பழமைபேசி, pazamaipesi@gmail.com

(எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களது, ‘அத்தை வீட்டுக் கோடை’ எனும் கதையின் விளைவாக எழுதத் தலைப்பட்டது இப்படைப்பு. மருத்துவ ஆலோசனை அன்று. பொதுப்புரிதலுக்கு மட்டுமே. கோளாறுகள் இருப்பின் நல்ல மருத்துவரை அணுகவும்.)


2/02/2019

தாவரங்களுண்டு வாழ்தலினிது

எல்லா உயிரினங்களிலும் தனிச்சிறப்பாக இப்புவியில் அமைந்திருப்பவை தாவரங்களேயாகும். அவற்றுக்குத்தான் கதிரவனின் ஒளிச்சக்தியை உள்வாங்கி, வேதிச்சத்தாக மாற்றுகின்ற ஆற்றல் உண்டு. மாந்தயினம், விலங்கினமென ஏனைய இனங்களெல்லாம் இத்தகு வேதிச்சத்திற்காக நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தாவரங்களைச் சார்ந்தேயிருக்கின்றன. இத்தகு தாவரங்களைப் பலவாறாகவும் பரவலாகவும் உண்டு வாழ்தலென்பது, மாந்தனின் மெய்நலத்தையும் மனநலத்தையும் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

வேதிச்சத்தைக் கட்டமைக்கும் தாவரங்களுக்கும், தாவரம் சார்ந்து இயங்குகின்ற பிறயினங்களுக்கும் அடிப்படையாக இருந்து செயலாற்றுபவை, இப்புவியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நுண்ணுயிரிகளேயாகும்.

மனிதனின் உடலெங்கும் நுண்ணுயிரிகள் இருந்தாலும், வயிற்றிலும் நம் குடல்மண்டலத்திலும்தான் பெருவாரியாக இடம் பெற்றிருக்கின்றன அவை. தோராயமாக ஒன்றுக்கு மூன்று என்கின்ற விகிதாச்சார அடிப்படையில், 37 டிரில்லியன் உயிரணுக்களோடு 100 டிரில்லியன் நுண்ணுயிரிகளும் நம் உடலில் இடம் பெற்றிருக்கலாமென்பது அண்மைய ஆய்வறிக்கையின் கணிப்பாக இருக்கின்றது. இவற்றின் கொள்ளளவு ஒன்றரை லிட்டராகவும், எடையளவு இரண்டு கிலோகிராம்கள் வரையிலும் இருக்கக் கூடும்.

உடலினுள் அமையப் பெற்றிருக்கின்ற நுண்ணுயிரிகளே நம்மைக் கட்டமைக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு, நமக்கான உணவுப் பழக்கத்தைக் கட்டமைத்துக் கொள்ள வேண்டியது அவசியமென்கின்றார் பேராசிரியர் சிமோன் கார்டிங். வயிற்றின் கீழ்ப் பாகத்திலும் குடல்மண்டலத்திலுமாக இருக்கின்ற இந்த இரண்டு கிலோகிரோம் வரையிலான நுண்ணுயிர்த் தொகுதியை மாந்தனின் இரண்டாவது மூளையென வர்ணிக்கின்றார் மருத்துவப் பேராசிரியர் சிமோன் கார்டிங்.

ஒவ்வொருவருக்குள்ளும் குறைந்தது முந்நூறிலிருந்து ஆயிரம் வரையிலான நுண்ணுயிர்க் குடும்பங்கள் வசிக்கின்றன. பெருவாரியாகப் பார்க்கின் அவற்றை எட்டிலிருந்து பத்து விதமான பெருங்குடும்பங்களாக வகைப்படுத்தலாம். இவை ஏன் மனிதனின் ’இரண்டாவது மூளை’ என வர்ணிக்கப்படுகின்றது? மனிதனின் மகிழ்ச்சி, வருத்தம், சினம் போன்ற உணர்வுகளைக் கட்டமைப்பதிலும், எப்போது என்ன உண்ண வேண்டும், தின்ன வேண்டுமென்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குடலுக்குள் வாழும் இவை, இரத்தத்திலிருக்கும் நியூட்ரான்கள் வாயிலாக மூளைக்குச் சமிக்கை அனுப்புகின்றன. அதற்கேற்றாற்போல மூளையானது செயற்படுகின்றது, ஆகையினால்தான் இவை இரண்டாவது மூளை எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, மாவுச்சத்து உண்டு வாழும் நுண்ணுயிரிகள் நமக்குள் வெகுவாக இருந்து, அவற்றுக்கான உணவுத் தட்டுப்பாடு நேரும் போது அவை மீண்டும் மீண்டும் மாவுப்பொருட்களையே உண்ணச் சமிக்கைகளை அனுப்பும்; மூளையும் திரும்பத் திரும்ப மாவுச்சத்துப் பொருட்கள் உண்ணுவதையே தூண்டிக் கொண்டிருக்கும்.

மனிதனின் செயலாக்கத்துக்கும் உடற்கட்டமைப்புக்கும் தேவையான எல்லாச் சத்துகளையும், அதனதன் தேவைக்கொப்ப உட்கொண்டு வாழ்தலென்பது சமச்சீர்த் தன்மையை(balance) நிலைநிறுத்தும். அப்படியான சமச்சீர்த் தன்மைக்கும் உடலில் குடிகொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. நாம் குறிப்பிட்ட உணவுகளையே மீண்டும் மீண்டும் உண்ணத் தலைப்படும் போது, மற்ற சத்துகளைச் சார்ந்து வாழும் நுண்ணுயிர்க் குடும்பங்கள் அருகிப் போய், எஞ்சியிருக்கும் நுண்ணுயிர்க் குடும்பங்களின் ஆதிக்கம் மேலோங்க, அவற்றுக்குப் பணிந்து அவற்றுக்கு ஏதுவான உணவுகளை உண்ணவே மூளை தூண்டும். இப்படித்தான், மனிதனுக்கு உணவின்பாற்பட்டு விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டு, சமச்சீரின்மையை உண்டாக்கி, நோய்க்கூறுகளாகவும் குறைபாடுகளாகவும் வடிவெடுக்கச் செய்கின்றது நம் உடலின் நுண்ணுயிர்க்குடும்ப அமைப்பு.

பலதரப்பட்ட நுண்ணுயிர்க் குடும்பங்களின் பரவலாக்கமும் நம்முள் குடிகொள்ள, நாம் என்ன செய்யலாம்? இலை, தழை, பூ, காய்கனிகள், விதைகள், கொட்டைகள், தண்டுகள் முதலான தாவரத்தின் நேரடி உள்ளீட்டினை யாதொரு வேதிவினைக்கும் ஆட்படா நிலையில்(unprocessed) வாங்கி, தழைதாம்பு(salad), பொரியல், அவியல் என அதன் சத்தினைச் சிதைக்காத வண்ணம் வெகுவாகச் சமைத்துத் தின்னலாம். அப்படி உட்கொள்ளும் போது, இல்லாத நுண்ணுயிர்க் குடும்பங்களும் நம்முள் குடிகொள்ள ஏதுவாகும். நம் மனத்திண்மையும் செயலாற்று திறனும் வலுப்படும். சத்தின்மை காரணமாக ஏற்பட்டிருக்கின்ற நோய்க்கூறுகளும் குறைபாட்டுக்கூறுகளும் படிப்படியாக இல்லாது போகும். ஒரேவிதமான காய்கனிகள் உட்கொள்ளப்படுவதும் தவிர்த்தல் நன்று. தாவரப் பொருட்களேயானாலும், அவற்றை மாற்றி மாற்றியும், பருவகாலக் காய்கனிகளாகவும், உள்ளூரில் விளைந்தவற்றுக்கு முதலிடமாகவும் அமைத்துக் கொள்தல் மேம்பட்ட பயனைக் கொடுக்கும்.

மாந்தனின் இரண்டாவது மூளையான நுண்ணுயிர்க் கட்டமைப்பு(human microbiota)க்கு ஏதுவாக, தாவரப்பொருட்களைக் கொண்டு விதவிதமாகச் செய்து தின்ன நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் எண்ணற்றவை. ஒருவருக்கு நுண்ணுயிரிகளின் அவசியமும் சமையற்கலை நாட்டமும் இருந்தாலே போதும், படைப்பூக்கம் தானாய் வந்து சேர்ந்து விடும். எடுத்துக்காட்டுக்கு, சோம்புச் செடி, கிளைக்கோசு குழம்பின் செய்முறையானது இங்கே இடம் பிடிக்கின்றது.

ஒரு தூர் சோம்பு (fennel plant), ஆறு அல்லது பத்து வரையிலான கிளைக்கோசு(brussels sprouts) எடுத்துக் கொண்டு, சோம்புத் தூரினை சிறுகச்சிறுகவும், கிளைக்கோசினை குறுக்கு வெட்டாக இரண்டாகவும் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியைச் சூடாக்கி, தேவையான அளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், தேவையான அளவு வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை முதலானவற்றை இட்டு வதக்கிக் கொள்க. பின்னர் நறுக்கி வைத்திருந்த தக்காளியையும், சோம்புத் தூர் நறுக்குகளையும் இட்டு, பச்சை மணத்தை நாசியார்ந்து முகர்ந்து கொண்டே, பச்சைமணம் நீங்கும் வரையிலும் வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு நீர் ஊற்றிக் கொதி வந்தவுடன், மஞ்சத்தூள், கொத்துமல்லித் தூள், மசாலாத் தூள், கடலுப்பு ஆகியவற்றைத் தேவையான அளவு கலந்து கொதி விட வேண்டும். நீர் சற்றுக் கெட்டிப்படுவதற்காக, கொஞ்சம் வறுத்தகடலையை அரைத்து உலர்மாவாக்கிக் கலந்து கொள்ள வேண்டும். கடைசியாக குறுக்கு வெட்டில் வகிர்ந்து வைத்திருக்கும் கிளைக்கோசினையும் போட்டு அவை அரைவேக்காடு மட்டுமே காணுமளவுக்கு வைத்திருந்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். கொத்துமல்லித் தழைகளை மேலாக இட்டுச் சற்று மூடி வைத்திருக்க, சோம்பு கிளைக்கோசு குழம்பு புசிக்க நமக்கும் நேரம் வந்திருக்கும்.

நன்றி: தென்றல்முல்லை

12/15/2018

அப்பா

அப்பா

வீட்டுப் போர்டிகோவில்
அத்துமீறி நீட்டிக்கொண்டிருக்கும்
மாமரத்துக் கிளையிலிருந்து
இலையொன்று உதிர்ந்தால்கூட
தரைசேரோசை காதில் விழும் அமைதி!

கிறீச் சத்தத்துக்கு மறு’கிறீச்’
சின்னமாய் இருந்தால்
திறந்த கதவை மூடிவிட்டு வருபவர்
மூத்தமகனாய்த்தான் இருக்கும்!

கிறீச் சத்தத்துக்கு மறு’கிறீச்’
சின்னமாய் மெலிதார இருந்து
திறந்த கதவும் மூடப்பட்டு
சலசல தண்ணீர் அலம்பும் சத்தமா?
கால் கழுவி நுழைபவர் மனையாள்தான்!

கிறீச் சத்தத்தோடு
மறு’கிறீச்’ சத்தமெதுவுமின்றி
நிலமதிர டக்டக் ஓசையா?
வருவது  பேரப்பயல்தான்!

முன்கதவடியிலிருந்து கொண்டே
டாமி குரைக்கிறானா?
தெருவுக்குப் பரிச்சயமில்லாத ஆளொன்று
தடத்தில் ஊசாட்டம்!

முன்கதவடியிலிருந்து ஓடிப்போய்
கிறீச் கதவின் மேலேறியபடி
குரைக்கிறானா டாமி?
ஒறம்பரை எவரோ நடமாட்டம்!

வீட்டின் உள்ளோங்கிய அறைமூலையில்
படுத்த படுக்கையாய்ப் படுத்திருக்கும்
அவரின் ஊரளக்கும்கண்கள் காதுகளில்!
திடுமெனப் பேசுகிறார்,
போய்ப்பாரு அதென்னன்னு!!
ஐந்துவீடு கடந்து ஆறாவது வீட்டுமுகப்பில்
தண்ணீர்க்குடத்தோடு வீழ்ந்து கிடக்கிறார்
கல்தடுக்கிச் சாய்ந்த பேங்க்கார அம்மா!!

-பழமைபேசி.

10/11/2018

இரைச்சல்

ஆட்டத்தில்
எந்த ஆட்டம்
அலாதியானது?
பார்க்க நேரமுமில்லை
விருப்பப்படவுமில்லை
ஆடுவார்கள் ஆடுவார்கள்
ஓயாத இயக்கத்தில்
சூட்சுமக்கார சுத்தியல்கள்!!


-பழமைபேசி.

7/15/2018

காந்திமுள்



ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மலர் கண்களை பறிக்கக் கண்டேன் எல்லாமும் பார்த்தேன்!! சூரியனையே சுற்றிவரும் அச்சிறுமஞ்சள் மலரைத்தவிர! மனத்தில் இன்னமும் முள்ளாய்த் தைக்கிறது அந்த சிறுநெருஞ்சி!! o0o0o0o0 தும்பைச் செடியைப் பிடுங்கு உன்னிலும் உயரே போகும் விடாதே, துரத்திப் போ பொறுமைகொள் விட்டுப்பிடிக்கலாம் தேனுண்ணத் தாழவந்தே தீரும் வந்தே விட்டது அமர்ந்தும் விட்டது அடித்துப் பிடிக்க மனம்கொள்ளாமல் சிறகடிப்பதை இலயித்துப் பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் வாட்ச்மேன் தாத்தாவின் பேத்தி!! o0o0o0o0 குயிலின் ஓசைக்கு உம்ம்... உம்ம்ம்ம்ம்... இழுத்து இழுத்து விடுகின்றது புங்கமரத்தடித் தொட்டிலில் கிடக்கும் சித்தாள் குழந்தை! o0o0o0o0 தொட்டிச் செடிக்கு உரமாய்ப் போட்ட முட்டை ஓடுகளை மண்புழு தின்கின்றது! பரவசம் அந்த மண்புழுவுக்கா? அடிக்கடி எட்டிப்பார்த்து வியப்புக் கொள்ளும் இந்த கடைக்குட்டிக்கா?? o0o0o0o0 அதிகாலை மூன்றரை மணிக்கு எழும்பிய அந்த முதற்குயிலோசை எந்த மரத்தில் இருந்து வந்தது? இராமர் கோயிலடி புங்கனிலிருந்தா? ஃபிரண்ட்சு கேட்டரிங் வேம்புவிலிருந்தா?? வீட்டடியிலிருக்கும் வாதநாராயணிலிருந்தா?? o0o0o0o0 இந்த குட்டி குட்டி தெருவோரத்து மலரை கண்டும் காணாமற் போகின்ற இவனுக்கு அங்கு அப்படியென்ன வேலை? o0o0o0o0 இன்று எந்தக் குழந்தைக்காவது குட்டி போடுகிறதா நோட்டுப்புத்தகத்து மயிலிறகு? o0o0o0o0 நீ கும்புடுகிற சாமியும் மலைதான்! சாமியிருக்கிற கட்டிடக்கற்களும் மலைதான்!! விட்டுவிடலாம், அந்த மலையே தெய்வம்தான்!! o0o0o0o0 நினைவிருக்கின்றதா? காவிரியாற்று இடைத்தீவில் பொறுக்கித் தின்ற நாவலின் உருசி?!! o0o0o0o0 விருட்டென கிளம்பிப் போனார்! தண்ணீர் விட்டபடி அங்கிருந்த துளசிச் செடியின் இலைகளில் ஒன்றைக் கிள்ளி வாயில் போட்டு மென்று கொண்டே பார்த்துக் கொண்டிருக்கின்றார் செடிகளை செடிகளை செடிகளை!! o0o0o0o0 அம்மா அறியாததல்ல இந்த ஆடிக் காற்று! பிறகு ஏன் இந்த அங்கலாய்ப்பு?? ஒடிந்து விழுந்திருக்கும் இந்த முருங்கைக் கிளையைப் பார்த்து!! o0o0o0o0 காந்தியை யாருக்குத்தான் பிடிக்காது? இந்த ஆட்டுக்கும் பிடித்திருக்கின்றது! குறுநாக்கில் பிடித்துப் பிடித்து தின்கின்றது காந்தி முட்செடியிலைகளை!! -பழமைபேசி.

7/02/2018

அருகிவரும் கதைக்களம்

புவி தோன்றி உயிர்கள் உயிர்த்த அந்த முதற்கணத்திலிருந்து கதைகளும் தோன்றின. மானுடத்தின் அடிச்சுவடுகளாக காலங்காலமாகக் கதைகளே இருந்து வந்துள்ளன. குறிப்பாக மாந்தனின் உயிரணுக்களைக் கொண்ட ஆக்சிசனற்ற ரைபோ கரு அமிலத்தில் (Deoxyribonucleic acid), மரபுசார் விழுமியங்கள் கதைகளாகவே பொதிந்துள்ளன. கதைகளுக்கும் மாந்தனுக்குமான பிணைப்பு என்பது உணர்வார்ந்தவை. எந்தவொரு பற்றியத்தையும் கதையாகச் சொல்லும் போது, மாந்தனின் அகக்கண்கள் அதனைத் தெளிவாக உள்வாங்கி, எளியமுறையில் மாற்றங்களை உருவாக்கித் தன்னகத்தே கொள்ளக் கூடியதாகும்.

பிறந்த குழந்தைகூடக் கதை கேட்கக்கூடிய திறனுடனே விளங்குகிறது. இசையைக் கதையோடு குழைத்துப் பாட்டாகப் பாடினோர் பெரியோர். தாலாட்டுப் பாடல்கள், களியாட்டப் பாடல்களென எங்கும் கதைகள் நீக்கமற நிறைந்திருந்தன. மனிதசமூகத்தில் இடம்பெறும் எல்லாவற்றையும் குறித்துக் குழந்தைகளுக்கு, விலங்குகள், தாவரங்கள், இயற்கைக்கூறுகள் முதலானவற்றின் மீது ஏற்றிச் சொல்லும் போக்கு தமிழ்மரபில் 1990ஆம் ஆண்டு வரையிலும் வெகுவாக இருந்தது. ஊடகம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவை மேலோங்கி இருந்தாலும், கதை சொல்லும் வாழ்வியல்முறை மேலைநாடுகளில் வாழ்வின், கல்வியின் அடிப்படையாகவே இன்னமும் இருந்து வருகிறது. ஆனால், தாய்த்தமிழ் நாட்டிலும், புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களிடையேயும், கதை சொல்லும் போக்கும், இலக்கிய வாசிப்பும் வெகுவாகக் குறைந்து விட்டது. இது தமிழின் நீட்சிக்கே பெரும் சிக்கலை உண்டாக்கக் கூடியவொன்றாகும்.

நிகழ்ச்சி, தகவல், செயல் என எதுவாக இருந்தாலும் அதைச் சொல்வதன் அடிப்படை கதையே ஆகும். கதையினின்று, காட்சிப்படுத்தலை நீக்கித் தகவலை மட்டும் கொடுத்தால் அது கட்டுரையாகிவிடும். சுருக்கமாக உணர்வின் வாயிலாக உள்ளத்தைத் தொடுமாயின், அது கவிதையாகிவிடும். ஆக, எல்லாவற்றுக்கும் கதையே அடிப்படை.

உலகப் பொருளாதாரமயமாக்கலுக்கு முன்னர், சந்தைக்கு வருகின்ற எல்லாப் பொருட்களையும், அதனதன் கதைகளைச் சொல்லியே வணிகப்படுத்தினர். தொழில்நுட்பம், சந்தையில் முந்தித்தரவேண்டிய கட்டாயம், கதைசொல்வதற்குச் செய்யப்படும் செலவைக் குறைப்பதால் கிடைக்கும் கூடுதல் இலாபம் போன்றவற்றின் தேவை கருதி, பொருட்களின் கதைகளைச் சொல்லாமல், அவற்றின் சுருக்கவுரைகளை முன்னிலைப்படுத்தி விற்கத் தலைப்பட்டனர் வணிகர்கள். அத்தகைய போக்கு துவக்கத்தில் பயனளிப்பதாகத் தோற்றமளித்திருந்தாலும், பிற்பாதியில் கூடுதல் செலவுகளுக்கே வித்திட்டது. நுகர்வோர் எல்லாம் கூடுதல் கேள்விகளை பலவாக்கிலிருந்தும் கேட்கத் தலைப்பட்டனர். ஒவ்வொருவரோடும் தனித்தனியாக விளக்கமளித்துச் சொல்ல நேரம் செலவிட வேண்டியிருந்தது. இதன்பொருட்டுத்தான், பன்னாட்டு இணையவழி வணிகத்தளமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், கருத்துமணிக் கோப்புகள்(power point slide) பாவிப்பதைக் குறைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு, கதைசொல்லி விவரிக்கும் முறைமைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டுமெனச் சுற்றறிக்கை அனுப்பினார். அமேசானைத் தொடர்ந்து, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்களும் கதை சொல்லி வணிகம் மேற்கொள்ளும் பழக்கத்திற்கு தத்தம் வணிகங்களை ஆட்படுத்தி வருகின்றன.

கதைகள் சொல்வதும், வாசிப்பதும் பொழுதுபோக்குப் பண்பெனும் நம்பிக்கை, தமிழர்களிடையே வெகுவாக இடம் பெற்றுவருவது கவலையளிக்கக் கூடியதாகும். கதைகளின் வாயிலாக, அடுத்தவரின் வாழ்வில் இடம் பெற்ற அனுபவத்தை நமதாக்கிக் கொண்டு பல படிப்பினைகளைப் பெற முடியும். மனநிறைவை எட்டமுடியும். சமூகத்தில் இடம்பெறும் ஏற்றத்தாழ்வுகள், பொதுப்புத்திக்கு அகப்படாத நுண்ணசைவுகள், வரலாற்றுத் தகவல்கள், அறம், நெறி, கட்டுப்பாடு, கட்டுடைப்பு, அரசியல்சார் விழுமியங்கள் எல்லாவற்றையும் அதனதன் களத்தில் வைத்து அறிந்து புரிந்து கொள்ளமுடியும். உணர்வோடு இயைந்துவந்து நம் மனத்தை ஆர்ந்து மாற்றத்தை உண்டாக்க வல்லதாகும். மொழியின் வளமும், மரபும், வாழையடி வாழையென அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கதைகள் சொல்வதன் வாயிலாகவும் வாசிப்பதன் வாயிலாகவும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். கற்பனைத் திறன், புத்தாக்கத்திறன், புனைவுத்திறன் போன்றவற்றையும் மேன்மையுறச் செய்து, மாந்தனை நல்ல திறமுள்ளவனாய் ஆக்கச்செய்தலுக்கும் கதைகளே கருவாகும்.

ஒரு பன்றியும் கடற்பசுவும் ஓடியாடி விளையாடுகின்றன. பன்றியின் வேகத்துக்குக் கடற்பசுவால் ஓட இயலவில்லை. பன்றிக்கு வருத்தம் மேலிடுகிறது. அழுகிறது. இக்கதையைக் கேட்கிற, படிக்கின்ற அந்தக் குழந்தையும் அழுகிறது. பன்றிக்கு ஓர் யோசனை பிறக்கிறது. கடற்கரையோரம் போய் நின்று கொண்டு, நீ தண்ணீரில் நீந்திவா. நான் கரையில் ஓடிவருகிறேனென்று சொல்கிறது. அது போலவே கடற்பசுவும் தண்ணீரில் நீந்திப் போகிறது. அதற்கிணையாக, கரையிலிருக்கும் பன்றியும் ஓடுகிறது. கடற்பசு நீந்துவதைப் பார்க்கிற பன்றி சிரித்துக் கொண்டே ஓடுகின்றது. அந்தப் பன்றியின் சிரிப்பைப் படிக்கிற குழந்தையின் மனமும் நிறைந்து, அக்குழந்தையும் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்கின்றது. இப்படித்தான் மேலைநாட்டுச் சமூகம், குழந்தைகளின் மனத்தைப் பண்படுத்துகிறது. சமத்துவம், விட்டுக்கொடுத்தல், தோழமை முதலான எல்லாப் பண்புகளும் கதைகளினூடாகவே மெருகேற்றப்படுகின்றது. படிக்கிற, கேட்கிற குழந்தைகளும் பல்வேறு கதைகளைப் புதிது புதிதாய் உருவாக்குகின்றன. புத்தாக்கம் பிறக்கிறது. இத்தகு புத்தாக்கப் பண்பினால், அவர்கள் வளர்ந்து ஆளாகும் போது, அவர்களால் பல புதுப்புது படைப்புகள் தொடர்ந்து படைக்கப்பட்டு, இவ்வையகமே மேன்மையுறுகிறது.

’நேட்ச்சர் கம்யூனிகேசன்’ எனும் நிறுவனம் பிலிப்பைன்சு, தாய்லாந்து, கென்யா, சீனம் உள்ளிட்ட 18 நாடுகளில் வாழும் பல்வேறு தொன்மையான இனக்குழு மக்களிடையே இருவிதமான ஆய்வுகளை மேற்கொண்டது. நவீனமற்ற கிராமப்புறங்களில், மலைப்பாங்கான இடங்களில் வாழும் மக்களிடையே ஒரு பழக்கம் இருந்தது. மருத்துவம், இடர்காலம், குடும்ப நெருக்கடி, பஞ்சம் முதலான துன்பகாலங்களில் உதவி கேட்டுப் போகக் கூடிய இடங்களாக, கதைகளைச் சொல்லக் கூடியவர்களின் வீடுகளே இருந்தன என்பது முதலாம் ஆய்வில் தெரிய வந்தது.

பிறிதொரு ஆய்வில், ஆள் ஒன்றுக்கு தனித்தனியாக பனிரெண்டு ஒவ்வொரு கிலோ அரிசிப் பொட்டலங்கள், 300 பேர் கொண்ட இரு குழுக்களுக்கு வழங்கப்பட்டன. அதை அவர்களும் வைத்துக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடலாமெனச் சொல்லியே கொடுக்கப்பட்டது. கொடுத்து முப்பது நாட்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் முதல் குழுவில் 50% பொட்டலங்கள் மற்றவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்தன. இன்னொரு குழுவில் 20%க்கும் குறைவான பொட்டலங்களே அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்தன. இவர்களுள், 50% பொட்டலங்கள் அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருந்த குழுவில் அதேயளவு, 50% உறுப்பினர்கள் கதை சொல்லிகளாக இருந்ததும் ஆய்வில் உறுதியானது. ஆக, கதைகள் சொல்வதும் கேட்பதும் வாசிப்பதும் எப்படியெல்லாம் மாந்தநேயப் பண்பாட்டில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக் காட்டுகளாகும்.

மொழி, மொழியைச் சார்ந்த நிலப்பரப்பு, நிலப்பரப்பைச் சார்ந்த ஒரு தேசிய இனம், இவையாவும் அதனதன் மரபு, கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைத் தக்கவைத்துக் கொள்ளவும், மொழியை காலத்துக்கொப்ப மெருகேற்றி, அதே வேளையில் அதன் வளமான சொற்களையும், இலக்கணத்தையும் அழகையும் பேணிக்கொள்ளவும் கதைகளே அடிப்படை. கதைகளைச் சொல்லும் கலைஞர்களை, படைப்பாளிகளைப் போற்றுகிற சமூகம், நயமான வாழ்வைக் கதைகளினூடாகச் சென்றடைந்து விழுமியச் சிறப்பெய்தும், அந்த புத்தம்புது மழையைப் போல, செக்கச்சிவந்து விடியலைக் கொடுக்கும் புதுவானத்தைப் போல.

நன்றி: வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா மலர், 2018

5/19/2018

பொசிவு


டொண்ட்டடொய்ங்

கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில்
உங்கள் பழமைபேசி.

முன்பொரு காலம்.
கோயமுத்தூர் சேலம் செல்லும்
விரைவுச் சாலை NH 47.
அச்சாலையில்
இராணிலட்சுமி மில்,
தெக்காலூர்ப் பிரிவு
அரசூர்ப் பிரிவு
ஆகியவை தனித்தன்மை
கொண்ட இடங்களாகும்.
ஓப் காலேச் துவக்கம்
கருமத்தம்பட்டி வரையிலும்
அவ்வப்போது சாலையோரத்தில்
பிணம் இருப்பதைக் காணலாம்.
அப்படித்தான் ஒருநாள்
தெக்காலூர்ப் பிரிவு
(செங்கோட கவுண்டன் புதூர்)
வண்டித்தடத்துக்கும்
இராணிலட்சுமி மில்லுக்கும்
இடையே ஒரு உடல் கிடந்தது.
வருவோர் போவோர் எல்லாம்
நடந்து போவோர் கூட
கண்டு கொள்ளாமல்
சென்று கொண்டிருந்தனர்.
மொய்ப்பதைக் கண்ட ஒருவர்
தென்னங்கீற்றை அந்த உடலின்மேலே
போட்டு விட்டுச் சென்றார்.
பீடி வாங்குவதற்காக
இராணிலட்சுமி மில் கேட்
சென்ற சுந்தரான் மட்டும்
சைக்கிளை விட்டுக் கீழிறங்கி
தென்னங்கீற்றை ஒதுக்கிப் பார்த்து
அரசூரில் இருக்கும்
கம்பவுண்டரை
வரச் சொல்லிச் சோதித்து
நாடி துடிப்பதையறிந்து
கால்கடுக்க நின்று
கைகாட்டிக் கைகாட்டி
எப்படியோ கோயமுத்தூர்
பெரியாசுபத்திரிக்கு
உடல் சென்று சேர
பிழைத்தவர் யாரோ
சிவகங்கைப் பக்கம்
பெரிய தொழிலதிபராம்.
இந்த சுந்தரானுக்கு
ஊரில் பெயர் பொசக்கெட்டவன்.

அமெரிக்காவில்
ஒரு நண்பர் இருக்கிறார்.
தமிழ்ச்சங்க வேலைகள்
எதுவானாலும்
முதல் ஆளாக இருப்பார்.
ஊருக்கு எந்த
புதுத்தமிழ்க் குடும்பமாவது
புதிதாய்க் குடி வந்திருந்தது
தெரிந்தால் போதும்
இவர் வலியச் சென்று
அவர்களை அணுகி
வேண்டியது எல்லாம்
செய்து கொடுப்பார்.
தமிழ்ச்சங்க வட்டாரத்தில்
அன்னாரைக்
கிண்டல் செய்வார்கள்
கேலி செய்வார்கள்
வந்து சேரும்
தமிழ்க்குடும்பங்களும்
ஓரள்வுக்கு ஊரில்
நிலை கொண்டவுடன்
மற்றவர்களோடு சேர்ந்து
அன்னாரைக் கிண்டல்
செய்யும் பட்டியலில்
இணைந்து கொள்வது
வாடிக்கை.
ஆனாலும் அவர்
தன் வழக்கத்தை
மாற்றிக் கொண்டதாய்த்
தெரிய வில்லை.
ஊரில் இருந்திருந்தால்
இவருக்கும் பொசக்கெட்டவன்
சூட்டப்பட்டிருந்திருக்கும்.

பொதுவாக இந்த
பொசுக்கெட்டவர்கள்
பொதுப்புத்தியினின்று
விலகியவர்களாக
வித்தியாசமாக இருப்பர்.
இப்படியான வேலைகளைச்
செய்வதன் மூலம்
தன் வசதி வாய்ப்புகளை
பெருக்கிக் கொள்ளாத
பொந்து கெட்டவன்
என்பது பொதுப்பார்வை.
எனவேதான் பொசக்கெட்டவன்
பட்டமும் சூட்டப்பட்டு
ஏளனத்துக்கு ஆளாகின்றனர்.
அதாவது பொசிவினால் கெட்டவன்.
பொசிவு என்றால்
மனத்தில் ஏற்படும் கசிவு, இரக்கம்.
அதுவே பொசுக்கெட்டவன்.

இவர் எத்தனையோ
உடல்களைச் சென்று
பார்த்திருக்கக் கூடும்.
பார்த்தவையெல்லாமும்
உயிரற்றதாய் இருந்து
இவருக்கு நேரவிரயமாகத்தான்
இருந்திருக்கக் கூடும்.
அதற்காக பொசக்கெட்டவர்கள்
சோர்ந்து விடுவதில்லை!
தோல்விகளென்றும்
பாராமல்
மனக்கசிவு கொண்டு
செயலாற்றும் இவர்கள்
மாமனிதர்கள்!
பொசிவால் கெட்டவர்கள் அல்லர்!!

டடடடாடா...

-பழமைபேசி.