9/12/2011

மிசிசிப்பி(பெரியாறு)

அமெரிக்காவை இரண்டாகப் பிளந்து வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறாள் மிசிசிபி. எண்ணற்ற பல கதைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறாள் அவள். அமெரிக்காவுக்கு, அல்ல, இந்த உலகுக்கே தொண்டாற்றுபவளாய்த் திகழ்ந்து வருபவள் அவள். நாளெல்லாம் அடக்கமே உருவாய் இருந்தாலும், அவ்வப்போது சீறிப் பாய்வதும் உண்டு. அவளது சீற்றத்துக்கு முன்னால் எவரும் நிற்க இயலாதபடிக்கு வீரியத்தை உமிழக் கூடியவள் மிசிசிபி.

மெம்பிசு மாநகரம். டென்னசி மாகாணத்தின் ஓரத்தில், மிசிசிபி மற்றும் ஆர்கன்சாசு மாகாணங்களின் எல்லைகளைத் தொட்டாற்போல் இருக்கும் மாநகரம். மாநகர முற்றத்தின் விளிம்பைத் தொட்டு நளினமாய்ப் பாய்ந்தோடுகிறாள் மிசிசிபி.

மாநகர முற்றத்திற்கும் மிசிசிபிக்கும் இடையே மட் தீவு(mud island). தண்டவாட இலகு ஊர்தியில் ஏறித் தீவுக்குச் செல்லலாம். தீவில், மிசிசிபி ஆற்றை விவரிக்குமுகமாக மாதிரி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அது, ஆற்றின் பிறப்பிடம் மற்றும் வழித்தடம் முதலானவற்றை விளக்கும் பொருட்டு அமையப் பெற்றிருக்கிறது.

ஆற்றங்கரையில் அமர்ந்திருக்க, மிசிசிபியைத் தழுவிய காற்று நம்மீதும் படர்ந்து வருட, மெய் சிலிர்த்துப் போகிறது. அமைதியைத் தன்னகத்தே கொண்டவள் அவள். காண்போர் கண்களுக்கு மட்டுமல்ல, அண்டி வாழும் இலட்சோப இலட்சம் மக்களின் வாழ்க்கையிலும் பரவசத்தை ஊட்டுகிறாள் அவள்.

அமெரிக்காவின் வட கோடியில், மின்னசோட்டா மாகாணத்தின் மேற்கில் தன் பயணத்தைத் துவங்குகிறாள் மிசிசிபி. இவள் அங்கே ஓடி வந்ததாலேயே, மினியாபோலிசு - செயின்ட் பால் இரட்டை நகரங்கள் உயிர்த்து ஓங்கி வளர்ந்து வருகிறது. இரண்டும் இரு கரைகளில் அமைந்திருக்கின்றன.

அவ்விரு நகரங்களைக் கடந்து, விசுகான்சின் மாகாண எல்லையை இடித்துச் சரசமாடிக் கொண்டே வந்தவள், அயோவா மற்றும் இல்லினாய் மாகாணங்களின் எல்லையாய்ப் பரிணமிக்கிறாள். அயோவாவைக் கடந்து வந்து, மிசெளரி மாகாணத்தின் செயின்ட் லூயிசு மாநகரத்திற்குப் பொலிவூட்டுகிறாள் மிசிசிபி. கடக்கும் தூரமெங்கும் பல அருமை பெருமைகளைத் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டுதான் வருகிறாள்.

அப்படியாக செயின்ட் லூயிசு மாநகரத்தில் இருந்து கீழே தெற்குப்புறமாக வந்தவளை, ஆர்கன்சாசு - டென்னசி மாகாண எல்லையிலே மெம்பிசு மாநகர முற்றத்திலே கண்டு மகிழ்கிறோம். அவளுள் ஆயிரமாயிரம் கதைகள்.

கடல் மட்டத்தினின்று 1475 அடிகள் உயரத்தில் பிறந்த அவள், மின்னசோட்டா மாகாணத்திலேயே 675 அடிகள் தாழ்வாகப் பாயத் துவங்குகிறாள். பிறகு படிப்படியாகக் குறைந்து 430 அடிகளுக்குத் தாழப் பாய்கிறாள் மெம்பிசு மாநகரில். இப்படிப் படிப்படியாகத் தாழ்ந்து, நியூ மெக்சிகோ கடலில் கலக்கும் போது அமைதியுறுகிறாள்.

மணிக்கு மூன்று மைல் வேகத்தில் பாயும் அவள், தான் உயிர்க்கும் இடாசுகா குளத்தில் பெய்யும் மழை நீரைத் தொன்னூறாவது நாளில்த் தான் சங்கமிக்கும் நியூ மெக்சிகோ கடலுக்குக் கொண்டு சேர்க்கிறாள் மிசிசிபி.

உயிர்க்கும் இடத்தில் முப்பது அடி அகலத்தைக் கொண்டவள், மெம்பிசு மாநகரில் முக்கால் மைல் தூர அகலத்தைக் கொண்டிருக்கிறாள். சீற்றத்தின் போது மூன்று முதல் ஆறு மைல்களாகவும் உருவெடுப்பாளாம் மிசிசிபி.

அமெரிக்காவுக்கு இவள் ஆற்றும் தொண்டு அளப்பரியது. கிட்டத்தட்ட 41 விழுக்காட்டு வட அமெரிக்கக் கண்டத்தின் பரப்பளவு கொண்ட, 31 அமெரிக்க மாகாணங்கள் மற்றும் கனடாவின் இரு மாநிலங்களின் நிலப்பரப்பான ஒரு இலட்சத்து என்பதினாயிரம் சதுர மைல்களில் வடியும் நீரை கடலுக்குக் கொண்டு சேர்ப்பவளும் இவளே.

மின்னியாபோலிசு நகரில் விநாடிக்கு 12000 கன அடி நீரைச் சுமந்து வரும் இவள், நியூ ஆர்லியன்சு நகரிலோ ஆறு இலட்சம் கன அடி நீரைக் கொண்டு வருகிறாள். இது போக, இடையில் நிறைய நீர்த் தேக்கங்களையும் நிரப்பிவிட்டுச் செல்கிறாள் மிசிசிபி.

260 வகையான நீர்வாழ் மீன்கள், எண்ணற்ற இதர நீர்வாழ்ப் பிராணிகள், வட அமெரிக்காவில் வாழும் பறவைகளில் 60% பறவைகள் என நிறைய உயிரினங்களுக்கு ஆதாரமாக இருப்பவளும் இவளே.

படகுகள், கப்பல்கள், கட்டுமரங்கள் எனப் பலவிதமான ஓடங்களையும் தன்னகத்தே ஓடவைத்துக் கொண்டிருக்கிறாள் மிசிசிபி.


வட அமெரிக்காவின் மிக நீண்ட, உலகில் நான்காவது நீண்ட ஆறாக இருக்கும் மிசிசிபியின் நீளம் தோராயமாக 3730 கிலோ மீட்டர்களாகும்.

விநோதமானது என்ன தெரியுமா? இவள் நீரை மட்டும் கடலுக்குக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. நாளொன்றுக்கு 436 டன் எடையுள்ள வண்டலையும் கொண்டு செல்கிறாள். ஆண்டு ஒன்றுக்கு 159 மில்லியன் டன் எடை கொண்ட வண்டலைக் கொண்டு போய்க் கடலில் விடுகிறாள். இதனால் சுற்றுப்புறச் சூழலுக்கு ஊறு நேர்வதாயும், கடல் மட்டம் உயர்ந்து வருவதாயும் தெரிவிக்கிறார்கள் சுற்றுப்புறச் சூழல் ஆய்வாளர்கள்.

மிசிசிபியைப் பேணுவது நம் கடமை எனப் பலர் களம் இறங்கி உள்ளனர். இயற்கை ஆர்வலர்களான நாமனைவருமே, நம் ஆறுகளைப் பேணுவது நம் கடமையாகக் கருத வேண்டும்.

மிசிசிபி என்றால். பிரெஞ்சு மொழியில் ’பெரிய ஆறு’ என்பதாம். மெம்பிசு நகருக்கு வியாபார நிமித்தம் பலரைக் கொண்டு வந்து சேர்த்ததில் மிசிசிபி பெரும் பங்கு வகித்தாளாம். அவளுக்கான பெருமைகள் அது மட்டுந்தானா? எம்மைக் குளித்துக் குளிர வைத்த பெருமையும்தான்!!

9/06/2011

மாணாக்கரின் பக்குவாபக்குவ நிலைகள்

உயர்தர மாணாக்கன் - அன்னப் பறவையும் பசுமாடும் போன்றவன்.

உயர்தர மாணாக்கனின் அறிவானது, அன்னப் பறவையின் ஆற்றல் கொண்டதாய், நீர் கலந்த பாலில் நீரைப் பிரித்துப் பாலை மட்டுமே உட்கொள்ளும் அன்னப் பறவை போல், நல்லனவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றனவற்றைப் புறந்தள்ளுவதாய் அமைந்திருக்கும்.

வயிறாறப் புசித்த உணவைத் தனிமையில் படுத்து அசை போட்டு செறிமானம் செய்து கொள்வதோடு, அற்பமான புல்லைத் தின்று அருமையான பாலைத் தரும் பசுவைப் போல், ஆசிரியனிடம் கற்றதை மனதால் ஆய்ந்து பயின்று, பயின்றது பிறருக்கும் உதவும் வகையில் கற்றுக் கொடுக்கும் வல்லமை கொண்டவனே உயர்தர மாணவர் ஆவார்.

நடுத்தர மாணாக்கன் - மண்ணும் கிளியும் போன்றவன்

உழவன் இட்ட உரத்திற்குத் தக்கபடி பயனளிக்கும் நிலம் போலவும், சொல்லிக் கொடுத்ததைத் திருப்பிச் சொல்லும் கிளி போலவும் ஆசிரியன் கற்பித்த அளவில் தன்னறிவை விளக்கிக் கொள்பவன் நடுத்தர மாணாக்கன்.

அடித்தர மாணாக்கன் - ஓட்டைக் குடமும் வெள்ளாடும் போன்றவன்

நீரால் நிரப்பப்பட்ட ஓட்டைக் குடமானது ஒரு வினாடியில் நீர் யாவையும் ஒழுகவிட்டு வெற்றுக் குடமாவது போலவும், ஓரிடத்தில் நின்று மேயத் தெரியாமால் பற்பல செடிகளிலுக்கும் சென்று வாய் வைத்துத் திரியும் வெள்ளாடு போலவும், ஆசிரியனிடம் இருந்து கற்றதை எல்லாம் உடனுக்குடன் மறந்து விட்டு, ஆசிரியனைக் குறை கூறி விட்டுப் பல ஆசிரியர்களிடம் சென்று பலதையும் கேட்டு விதண்டாவாதம் செய்து காலத்தை வீண் செய்யும் பழக்கமுள்ள மாணவனே அடித்தர மாணவன் ஆவான்.

கீழ்த்தர மாணாக்கன் - எருமையும் பன்னாடையும் போன்றவன்

தெளிநீர் நிறைந்த குளத்தில் நீராடச் சென்ற எருமையானது, நீரைக் கலக்கிச் சேற்றினைப் பூசிக் கொள்வதோடு நில்லாமல் அந்நீரை மற்றவ்ருக்கும் பயன்பட விடாது செய்தல் போலவும், தான் உயிர்த்த இடத்தில் உற்பத்தியாகும் சுவையுறு மதுவைத் தேக்காது, அதிற்கிடக்கும் செத்தை குப்பைகளையே தன்னிடத்தில் இருத்திக் கொள்ளும் ப்ன்னாடை போலவும், ஆசிரியனின் அறிவையும் குழப்பி, சூழ்நிலைக் காரணங்களால் அவர் கூறியதில் இருந்த அல்லாதனவற்றை மட்டும் மனதில் ஏற்றிக் கொள்பவனே கீழ்த்தர மாணவன் ஆவான்.

மூலம்: http://pollachinasan.com/ebook3/3300/pdf/TM3276.pdf

கோயமுத்தூர்க்காரன்....

யார்கிட்ட? கோயமுத்தூர்காரங்கிட்டயேவா?? நாங்க நோட்டே அடிச்சு வித்தவங்க... இஃகிஃகி... குறும்படம்னா, இது படம்!!



ஆருகிட்ட உங்ககிட்ட வேலையக் காமிக்கிறீங்க?!

8/31/2011

பற்றாளியும், மருளாளியும்!!

பழைமைவாதி(Fundamentalist), பற்றாளி(Enthusiastic), மருளாளி(Fanatic), தீவிரவாதி(Extremist), பயங்கரவாதி(Terrorist) ஆகியோருக்குள் நிகழும் மாற்றங்கள், நூலிழையில் ஒரு நிலையிலிருந்து தன்னை மற்றொரு நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியன.

அதனால்தானோ என்னவோ, மெத்தப் படித்த அறிவாளிகளும் சரி, அறிவாளிகளால் நடத்தப்படும் ஊட்கங்களும் சரி, சாமான்யர்களை வெகுவாக தன் விருப்பு வெறுப்புக்கு ஏற்றபடி ஆட்டுவித்து, உலகெங்கும் தத்தம் கைவரிசையைக் காண்பித்துக் கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு சாமான்யனும் இவற்றைத் தெரிந்து கொள்வது காலத்தின் கட்டாயம். குறிப்பாக எமக்கு அவசியமாகப்படுகிறது. அதனால் விழைந்ததே இன்றைய நமது ஆக்கம்.

பழைமைவாதிகள், இருக்கும் நிலையே பெரிது எனக் கருதுவோர். அவர்களை மிகுந்து சொல்வதானால் அடிப்படைவாதிகள் என்றும் குறிப்பிடலாம். புதுமையையோ, மாற்றத்தையோ இவர்களிடம் கொண்டு செல்வது அவ்வளவு எளிதாக இராது. அடிப்படையை மறந்து செயல்படுவதும், சில பல நேரங்களில் உசிதமாக இராது. பிற்போக்காகவும் இருக்கும். எனவே, ஆய்ந்து செயல்படுதல் அவசியமாகப்படுகிறது.

எமக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தையே இதற்குச் சான்றாக எடுத்துக் கூற விரும்புகிறேன். ஒரு பதிவர். பெரும்பாலும் வக்கிரங்களையே முதலீடாகக் கொண்டு எழுதி வருபவர். எனது அண்ணன் பதிவர் ஒருவரோடு அளவளாவிக் கொண்டு இருக்கும் போது, ”அவன் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. அவன் ஒரு நல்லவன் அன்று” எனக் கடுமையாக அந்த வக்கிரப் பதிவர் குறித்துச் சொல்கிறேன். “பழமை, நீங்களே இப்படிப் பிற்போக்காகப் பேசலாமா? அப்படியான முகம் கொண்டவர்கள் எல்லாமே தீயவர்களா?” என இயல்பாக வினவினார். ஆயிரம் சம்மட்டிகள் ஒரு சேரத் தாக்கியது போல் உணர்ந்தேன். அது ஒரு பிற்போக்கான செயல்தான்!

நாம் எழுதும் பழந்தமிழ்ச் சொற்களைக் கண்டு மிகவும் கீழாக எண்ணுவோரும் உண்டு. அச்சொற்கள்தானே அடிப்படை? எனது தாய்வழி உறவினர் ஒருவர் அமெரிக்கா வந்திருக்கிறார். அவரைச் சந்திக்கும் வேளையில் , “என்ன பழமை? உங்கள் தாய்வழிப் பாட்டன் குடும்பம் எல்லாம் பெரிய பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள். நீ இப்படித் தமிழ், தமிழ்ச்சங்கம் என இருக்கிறாயே?” என வினவினார். இன்றைக்கு, தமிழொடு ஒன்றி இருப்பவர்கள் கீழானவர் எனும் எண்ணம் மேட்டுக்குடியில் இருந்து வருவதைத்தான் இது குறிப்பிடுகிறது! நான் பழைமைவாதியா அல்லது அவர்கள் பழைமைவாதியா எனத் தெரியவில்லை?!

பற்றாளி(Enthusiastic)? இயற்கையில் ஒவ்வொரு மானுடமும், யாதோ ஒன்றின் மீது பற்றுக் கொண்டுதான் இருந்தாக வேண்டும். இல்லாவிடில், இந்தத் தரணியில் எதுவுமியங்காது. அப்படியாக, ஒருவனுக்கு பழந்தமிழ் விளையாட்டில் பற்றிருந்தால், பழந்தமிழ்க் கலையில் பற்றிருந்தால், அவன் விருப்பப்படி செய்யட்டுமே? ஏதோ புதுமையில் தாமொரு சக்ரவர்த்தி என நினைத்துக் கொண்டு அப் பற்றாளனை ஏகடியம் பேசுவதும் எள்ளி நகையாடுவதும் தம்மைப் பிற்போக்குக்குள் தள்ளிவிடுகிறது என உணர்வதில்லை எவரும்.

பற்றாளர்கள், தான் கொண்ட பற்றுக்கு பெருமை சேர்ப்பவராக இருத்தல் மிக முக்கியமானது.. அதீத பற்று என்பது ஒருவிதமான அறிவுமயக்கத்தில் ஆழ்த்தக் கூடியது. அதைத்தான் தமிழ், மருட்சி என்ச் சொல்கிறது.

நண்பர் பொற்செழியன் மிக அருமையாகச் சொல்வார். “பழமை, தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டியது நம் கடமையும் பொறுப்பும் கூட. ஆனால், அதுவே கதியெனக் கிடந்தால் மற்றன மறைந்து நம் ஆற்றலானது ஒரு குறுக்கில் சுருங்கிவிடும். எனவே, உடற்பயிற்சி, பிடித்த தமிழ்க்கலைகள், பிறநாட்டு அம்சங்கள் எனப் பலதையும் கற்றுத் தேர்ச்சி கொள்ள வேண்டும் நாம்!” என்பார்.

பற்றாளன் தன்னைப் பேணுவது இன்றியமையாதது. அல்லாவிடில், மருளனாகிப் போய் தான் பற்றுக் கொண்ட அதற்கே சிறுமையளிக்கக் கூடிய நிலை வரக்கூடும்.

மருளாளி(Fanatic)? அதீதப் பற்றானது அறிவுக்கு மயக்கமளித்து, சிந்தனையைச் சீர் குலைக்கும். மாற்றுக் கருத்துகளை செவிமடுக்கவே மனம் அனுமதிக்காது. தான் கொண்டதே கொள்கை, சொல்வதே வேதம், தனக்குச் சரியென்று தோன்றுவதே மெய் என்றெல்லாம் பல எதிர்மறையான விளைவுகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.

இங்கேதான் பற்றாளர்கள் மிக மிக அவதானமாக இருத்தல் வேண்டும். உங்கள் கொள்கை மற்றும் பற்றுக்கு மாறானவர் உம்மை, “நீர் ஒரு மருளாளி, மருளாளி!!” எனச் சொல்லியே மருளாட்சிக்குள் தள்ள முற்படுவர். அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், உடனடியாக அங்கிருந்து அகலுவது நலம் பயக்கும்.

எமக்கு மிகவும் வேண்டிய அன்பர் ஒருவர் இருக்கிறார். அவர் சீமான் அவர்கள் மீது பற்றுக் கொண்டிருந்தால் நாம் அதைக் குறை கூறலாகாது. ஆனால், அவரோ, சீமானின் கூட்டங்கள் மற்றும் சொல்வீச்சுகளைக் கேட்பதே வேலை என இருப்பதாக அவர்தம் குடும்பத்தார் கூறுகிறார்கள். அவரது செயலானது, அவர் மருளாட்சியில் இருக்கிறாரோ என நினைக்கவே தோன்றுகிறது.

குறிப்பாக, இன்னொன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சென்ற வார ஈறின் போது, ஒரு சில காணொலிகளைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. உரைவீச்சு என்கிற முறையில், அவர்கள் ஆற்றிய உரையில் மருளாட்சி கொடி கட்டிப் பறந்தது. ”வெட்டுவோம்; அதைச் செய்வோம்’ இதைச் செய்வோம்” என ஏகத்துக்குமாக. கிட்டத்தட்ட தீவிரவாதமாகவே தெரிந்தது.

தீவிரவாதி(Extremist)?? மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு, மனதளவில் செயல்படுவதுதான் தீவிரவாதம் என்பது. தமிங்கிலம் பாவிப்பவன் எவனானலும் மடையன் என நான் சொல்ல முற்பட்டால், நானும் ஒரு தீவிரவாதியே.

”நான் வாழ்ந்த ஊரில் தேசாய்களும், குப்தாக்களுமாக இருக்கிறார்கள். மண்ணை விற்று நிலமற்றவர்களாக நாம் இருக்கலாமா? இங்கே அமெரிக்காவில் இருக்கும் நாமாவது நம் தாயகத்து நிலங்களை விற்காது இருக்க வேண்டும்!” என ஒரு கூட்டத்தில் பேசி இருந்தேன். என்னை ஒரு தீவிரவாதி என்று விளித்துப் பெருமை தேடிக்கொண்டோர் சிலர். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?? தமிழ்ப் பற்றினை வசைபாடுவதில் அதீதப் பற்றுள்ளவர்கள். இன்னும் மேலே போய், கீழ்த்தரமான செயல்களைச் செய்து கொண்டிருப்பவர்தாம் அவர்கள்.

தமிங்கிலத்தில் பேசுவோர் எவரையும் நான் குறை கூறுவது கிடையாது. கிரந்தம் பாவிப்போரை நான் கிஞ்சித்தும் இடித்துரைப்பது கிடையாது. இயன்ற அளவு தமிழ் பாவிக்க முயலும் என்னை, அடுத்தவர் பெயரை எழுதும் போது மட்டும் கிரந்தம் பாவிக்கும் என்னை, தனித்தமிழ்த் தீவிரவாதி எனச் சொல்லி தீவிரவாதச் செயலுக்கு ஆட்படும் அவர்களை நாம் என்ன சொல்வது?!

மூன்று பேரையும் பார்ப்பனர்கள் தூக்கிலிடத் தவிக்கிறார்கள் என வசைபாட முயன்றார் நண்பர் ஒருவர். ”அப்படியானால் இராம்ஜெத்மலானி?” எனக் கேட்டதுமே, தீவிரத்தில் இருந்து விடுபடலானார் அவர்.

எப்படியாவது மூன்று பேரும் காப்பாற்றப்பட வேண்டும் என உருகிக் கண்ணீர் வடிக்கும் தொனியில் குழுமமொன்றில் எழுதுகிறார் ஒருவர். மாற்றுக் கருத்துக் கொண்டவராயினும், அவரது உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டியது இவரது கடமை. ஆனால் இவரோ, நாகரிக மொழியில் மனதைக் கசக்கி மகிழ்கிறார். என்ன சொல்வது?! தீவிரவாதமும் பயங்கரவாதமும்  உயிர்ப்பிக்கப்படுவது இவர்களால்தானே?!

பயங்கரவாதி(Terrorist)?? இதற்கு இலக்கணம் காணுவது மிகவும் கடினம். சமூக விரோதச் செயல்கள மூலம் தீவிரவாதத்தைத் திணிப்பது எனப் பொதுவாகச் சொல்லலாம். அதே வேளையில், பறிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்படாத மனித உரிமைகளுக்காக இடம் பெறும் போராட்டத்தைப் பயங்கரவாதம் எனச் சொல்ல ஐக்கிய நாடுகள் சபையானது அனுமதிப்பது இல்லை. எனக்குத் தெரிந்து பல பயங்கரவாதச் செயல்கள் உலகில் நடந்திருக்கிறது. தர்மபுரி பேருந்து எரிப்பு, நாளிதழ் அலுவலகம் எரிப்பு என்பதெலாம் பயங்கரவாதமே.

ஆக,பழைமைவாதி(Fundamentalist), பற்றாளி(Enthusiastic), மருளாளி(Fanatic), தீவிரவாதி(Extremist), பயங்கரவாதி(Terrorist) ஆகியோருக்குள் நிகழும் மாற்றங்கள், நூலிழையில் ஒரு நிலையிலிருந்து தன்னை மற்றொரு நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியன. அவற்றுள் நமக்கான தெரிவைத் தேர்ந்து எடுப்பது நாமே. சில இடங்களில் நாம் நம்மைக் கட்டுப்படுத்துவது அவசியம். சில இடங்களில் சிலவற்றைப் புற்ந்தள்ளுவது உசிதம். சில இடங்களில் சிலவற்றை நிராகரிப்பது கட்டாயம்.

உம்மை நீயே தீர்மானிக்கிறாய்! உமக்குள் எவரையும் கிஞ்சித்தேனும் அனுமதியாதே!!

8/07/2011

எழிலாட்டமிடும் ஊசல்கள்

ஆர்வர்டு இயற்பியல் ஆய்வுக்கூடத்தினரின் படைப்புகளில் ஒன்றான ஒத்திசை அலைகளினூடாய்க் கிடைக்கப் பெறும் எழிலார்ந்த காட்சியின் விவரணக் கட்டுரைதான் நமது இன்றைய இடுகையாகும். நல்லதொரு தகவலை நம்மோடு பகர்ந்து கொண்டு சக பதிவர் சித்ரா அவர்களுக்கு நன்றி!

பதினைந்து தனி ஊசல்கள், தனித்தனியாக தன் நீளம் அதிகரிக்கப்பட்ட நிலையில் ஒத்திசைவோடு இயங்கி, எவ்வாறெல்லாம் நிலையலை, இயங்கு அலை, வளையலை, நெகிழடி, கண்டபதம் ஆகியனவற்றைத் தருகிறது என்பதைக் காண்பிக்கும் வகையில் இப்படைப்பானது படைக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு முழு சுழற்சியின் காலம் அறுபது விநாடிகள் கொண்டதாக இருக்கிறது. இந்த அற்பது விநாடிகளில் ஐம்பத்து ஒரு முறை தனி அலைவுகள் தரக்கூடிய வகையில், அதிக நீளம் கொண்ட தனி ஊசலின் நீளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படியாக அடுத்த நீளம் குறைந்த தனி ஊசலில் தனி அலைவுகள் ஐம்பத்து இரண்டாக இருக்கும். இப்படி, நீளத்தில் குறைந்த அடுத்தடுத்த தனி ஊசல்களின் தனி அலைவுகள் ஒவ்வொன்றாக அதிகரிக்கப்பட்டு, கடை ஊசலான பதினைந்தாவது ஊசலின் தனி அலைவுகள் அறுபத்து ஐந்தாக இருக்கும்.

ஆட்டத்தின் துவக்கத்தில் ஒத்திசைவுடன் ஆடத்துவங்கிய தனி ஊசல்கள், மேற்கூறிய தன்னமைப்பினால் தன் அசைவில் தனித்தனியாக இயங்கத் துவங்கும். இடையில் ஒருங்கிணைந்த நிலையலை, இயங்கு அலை, வளையலை, நெகிழடி, கண்டபதம் எனச் சகலதையும் அளித்துவிட்டு, மீண்டும் அறுபதாவது விநாடியில் ஒத்திசைவுக்கு வந்து சேரும்.