5/30/2026

பேரவையும், மில்லியன் டாலர் நிதியும்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைக்கென்று உடன்பயணிக்கும் தன்னார்வலர்கள் நிறைய உண்டு. கூட்டங்களுக்கு வராமல் இருக்கலாம், விழாக்களுக்கு வராமல் இருக்கலாம், ஆனால் பேரவையில் நடக்கும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பர்; பேரவை ஆர்வலர்களுடன் தொடர்பில் இருப்பர். பேரவையின் மீதான பற்று என்றால் பற்று. போதை என்றால் போதை. அது விவாதத்துக்கு உட்பட்டது.

பேரவையிடம் இருக்கும் தரவுகளைக் காட்டிலும், தன்னார்வலர்கள் சிலரிடம் இருக்கும் தரவுகள் நிரம்ப. பேரவையின் செயற்குழுவுக்கு வருவர் போவர். ஆனால் இந்தத் தன்னார்வலர்கள் எப்போதும் போல இருந்து கொண்டே இருப்பர். வரும் செயற்குழு, ஆவணங்களைப் பேணுவதில் அவ்வளவு நாட்டம் கொண்டிருக்க மாட்டார்கள்; காரணம், அவர்கள் தற்காலிகர்கள். மேற்கூறப்பட்ட தன்னார்வலர்கள் நிலையானவர்கள்.

மில்லியன் டாலருக்கான அத்தனை நிகழ்தேதிகள், அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உண்டு. அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான், 2024 தேர்தலில் மில்லியன் டாலர் காலவரிசைப்படம் உருவாக்கப்பட்டு, பரப்புரைக்காகப் பயன்படுத்தப்பட்டது. முந்தைய செயற்குழுக்களின் நோக்கம் நல்லதாக இருந்திருக்கலாம். ஆனால், வெளிப்படைத்தன்மையில், ஆவணப்படுத்துதலில் பெரும் ஓட்டை. அதை இலாகவமாகப் பயன்படுத்திக் கொண்டோம். தேர்தலில் ஒட்டுமொத்த அணியும் வெற்றி பெற்றது வரலாறு.

பேரவையின் தன்னார்வலர் ஒருவர் பேரவைக்குப் பெயர் கிடைக்க வேண்டுமெனச் செய்த செயற்பாடுதான் அது. எவரும் மாற்றுக்கருத்துக் கொள்ளவே முடியாது. இல்லையானால், அப்பணத்தைப் பெற்று அப்படியே தமிழ்நாட்டு அரசிடம் கொடுத்து விளம்பரங்களைப் பெற்றிருந்திருக்கலாம் வெகுசுலபமாக. ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. காரணம் பேரவையின் மீதான அக்கறை.

கொடைப்பணம், ”கோவிட் தொற்றுநிதி” எனும் சிட்டைப்பெயருடன் கையளிக்கப்பட்ட பணம். அப்படியான சிட்டைப் பெயர் கொண்டிருப்பதால், அதற்கு மட்டுமேதான் செலவிடப்பட்டாக வேண்டுமாயென்றால் இல்லை. அதற்காகச் செலவிடப்பட்டு, எஞ்சியதை எந்தவொரு இலாபநோக்கற்ற நிறுவனமும் பிறிதொரு அறச்செயலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். சட்டம் அதனை அனுமதிக்கின்றது. இவர்களின் நோக்கம், கொஞ்சத்தைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிட்டு எஞ்சியதைப் பேரவைப் பணிகளுக்கு என்பதாக இருந்திருக்கின்றது. அதற்கான ஒப்புதல்மடலும் பெறப்பட்டிருக்கின்றது.

தமிழ்நாட்டுப் பணத்தை நீங்கள் எப்படிக் கைக்கொள்ளலாமென்பதான விமர்சனம். தவறில்லை. அதிலும் ஒரு தர்க்கம் இருக்கின்றது. முறைப்படி மறுமொழியலாம். அல்லது, தமிழ்நாட்டுக்குக் கொடுத்துவிடலாம். அதற்கு யார் பொறுப்பு? அடுத்து வந்த செயற்குழுதான் பொறுப்பு. விடுத்து, பணத்தைப் பெற்றுக் கொடுத்தவரைத் தொடர்ந்து கிண்டிக்கொண்டிருப்பது அநீதி.

பெற்றுக்கொடுத்தவர் குறித்து நாங்கள் செய்யாத கிண்டலில்லை. கேலியில்லை. பேசாத பேச்சில்லை. காரணம், அமைந்த செயற்பாடுகள். “எங்களுக்கு ஒரு ஃபோன் செய்திருந்தால் போதும், கொண்டாடப்பட்டு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சென்றிருப்போம். சேர்க்கை சரியில்லை போல. தவறாக வழிநடத்தப்படுகின்றார்” என, கேலி கிண்டல் விமர்சனம் செய்த அளவுக்கு நிகராக, அக்கறையின்பாற்பட்டும் பேசியிருக்கின்றோம். பரிவும் கொண்டிருந்திருக்கின்றோம்.

காய்ச்சலும் தலைவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும். ஒரு பெரும்பணத்தை ஈட்டியும் கொடுத்துவிட்டு, சமூகத்திடம் நொம்பலமும் பெற்றுக் கொள்வதெல்லாம் முதிர்ந்த சமூகத்தின் அழகாக இருக்க முடியாது. எனக்கு அவருக்குமான உறவென்பது இதுதான். இதை நான் தமிழின்மீது ஆணையிட்டு என் பிள்ளைகளின்மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன். 15 விநாடிகள். 2025 விழாவில் பேசியதுதான் முதன்முறை. தொழில்முனைவோர் மாநாட்டு நாள் அது. “என்ன கோட் சூட் போடலையா?” “வணக்கங்க. வர்ற அவசரத்துல ஒரு சூட்கேசையே தவறவிட்டுட்டு வந்துட்டன்”. சிரித்துக் கொண்டார். அவ்வளவுதான், இந்த மணித்துளி வரையிலும் எங்களுக்குள்ளான உறவென்பது தொடர்பென்பது இவ்வளவுதான்!

பேரவையின் வசம் இருக்கும் அந்த வைப்புநிதிக்கு, அவர் பெயரை வைக்க வேண்டும். அல்லது அவர் பரிந்துரைக்கும் பெயரைச் சூட்டிக் கொள்ள வேண்டும். தற்போது அவர் செயற்குழுவிலும் இருக்கின்றார். விரைவில் பொறுப்புக்காலம் முடிவுக்கு வரவிருக்கின்றது. சிறப்புகள் செய்யப்பட்ட விடைபெறலாக அது அமைந்தால் அது நமக்குப் பெருமை!

𝐀 𝐬𝐢𝐧𝐠𝐥𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐫𝐚𝐢𝐬𝐞𝐝 𝐟𝐨𝐫 𝐣𝐮𝐬𝐭𝐢𝐜𝐞 𝐜𝐚𝐧 𝐞𝐜𝐡𝐨 𝐟𝐚𝐫𝐭𝐡𝐞𝐫 𝐭𝐡𝐚𝐧 𝐚 𝐭𝐡𝐨𝐮𝐬𝐚𝐧𝐝 𝐰𝐡𝐢𝐬𝐩𝐞𝐫𝐬 𝐨𝐟 𝐚𝐠𝐫𝐞𝐞𝐦𝐞𝐧𝐭.

-பழமைபேசி.

No comments: