ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் -ஆபிதீன்
வணக்கம். கதையின் இருவேறு பிடிமானங்களாக, வாப்பாவின் மோதிரமும், மனம் கொள்கின்ற பயங்களும் உணர்வுகளும், அடுத்தடுத்து, மாறி மாறி, வந்து வந்து போய், கடைசியில் மோதிரம் தன் கைக்கே வந்து, இருப்புக் கொள்வதாக அமைந்திருக்கின்றது.
கதையில் நேரடியாகச் சொல்லப்படுகின்ற அடுத்தடுத்த தகவல்களையும் கடந்து, இந்த இரு பிடிமானங்களும் நமக்குள் ஏதோவொன்றைச் சொல்கின்றதாக நமக்குள் புலப்படுகின்றது.
பெளத்த சமயத்தின் அடிப்படையாகச் சொல்லப்படுவது, தத்துவார்த்த ரீதியாகச் சொல்லப்படுவது, என்னவென்றால், Do not dwell in the past, do not dream of the future, concentrate the mind on the present moment. Mindfulness மனமார்ந்திருத்தல் என்பதற்கும் இதுதான் அடிப்படை. அதாவது, நம் மனம் அலைபாயக் கூடியவொன்று. ஒன்று, கடந்தகால நினைவுகளின்பால் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் அது ஏக்கத்தையும் வருத்தத்தையும் கொடுக்கக் கூடியது.
அடுத்தது, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள். எண்ணி எண்ணியே கலக்கம் கொண்டு, அச்சம் கொள்வது. இவை இரண்டும்தான் நம்மில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன, கடந்தகால எச்சத்தின் குறியீடாக வாப்பாவின் மோதிரமும், எதிர்கால எண்ணப் பதற்றங்களின் விளைவாகப் பயமும், மாறி மாறி வந்து போகின்றது கதை நெடுகிலும்.
தற்காலத்தில் ஒன்றியிருக்கும் போது, செயற்பாடுகளால், நான் ஆற்றிக் கொண்டிருக்கும் வினையின்பால் மனம் நிறைந்து இருக்கும். கடந்தகாலத்தின் பொருட்டு, கவலை அல்லது வருத்தம் என்பது இல்லை. வருங்காலத்தின் பொருட்டு, அது நடந்து விடுமோ அப்படியாகி விடுமோ இப்படியாகி விடுமோ எனும் பயம் என்பதும் இல்லை.
கதையின் முடிவாக நாயகன் வசம் வாப்பாவின் மோதிரம் வந்து விடுகின்றது. கடந்தகால எச்சத்தின் சுவடுகள், இன்னும் இன்னுமிருந்து தொடரக்கூடுமெனும் புரிதலைத்தான் இதனூடாக நான் பார்க்கின்றேன்.
ஆபீதீன் அவர்களது, ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் எனும் இந்தக் கதை, புலம்பெயர் வாழ்வு, நாயகனின் வாழ்க்கைப் பின்னணி எனப் பலவற்றையும் நமக்குக் கொடுத்தாலும் கூட, ”கதையை படித்துப் படித்து எடிட் செய்வது ஏன் முக்கியம்” என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது. Dwelling on the past or obsessing about the future leads to suffering இயன்றவரை, நாம் தற்காலத்தில் திளைத்திருப்போம். நன்றி, வணக்கம்.
[கதைப்போமா குழுமத்தில், கதை குறித்துப் பேசியது]
No comments:
Post a Comment