2/19/2023

மயிலே மயிலே

இந்திரன் எழுதிய பதிவைப் படிக்கையில் பொன் விஜயன் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று புரிகிறது. இந்நாட்டில் பணமில்லாமல் அரூபமான லட்சியங்களுக்காக வாழவே கூடாது. லௌகீகமே நிஜம். அதற்காகவே வாழ வேண்டும். அதற்கும் அப்பால் நேரமிருந்தால் எழுதலாம், படிக்கலாம். ஏனென்றால் நம்மைச் சுற்றி உள்ள கணிசமானவர்கள் பண்பில்லாதவர்கள், அறிவை விட சாப்பாடும் பொழுதுபோக்குமே பிரதானம் என நம்புகிறவர்கள். இந்தியர்கள் அடிப்படையில் நாகரிகமடையாத பாதி-மிருகங்கள். படித்தவர்கள்தான் அதிக மிருமாக வாழ்கிறார்கள். இந்திய ஜனத்தொகையில் 1% மக்களே புத்தகம் படிப்பவர்கள். பளபளப்பாக ஆடையணிந்த, காரிலும் பைக்கிலும் பயணிக்கிற காட்டுமிராண்டிகள் இந்திய மக்கள். இவர்கள் மத்தியிலே நாம் வாழ்கிறோம்.

அவர்கள் பணமில்லாதவர்களை கரப்பான்பூச்சியைப் போன்றே பார்ப்பார்கள். சாரு சொல்வதைப் போல இது ஒரு சீரழிந்த சமூகம். இங்கு சுயநலமாக வாழ்ந்தால் உங்களை பெரிய ஆளாக நினைத்து அன்பு பாராட்டுவார்கள். பணமும் இருந்து தியாகமும் செய்தால் உங்களைக் கடவுளாகப் பார்ப்பார்கள். எல்லாவற்றுக்கும் - அன்பு, கருணை, சமூக மரியாதை - அடிப்படை இங்கு பணம் தான். இவர்கள் நடுவில் நாமும் நம்மை காளகேயர்களாகவே காட்டிக்கொள்ள வேண்டும். பொன் விஜயனைப் போல் எல்லாம் வாழவே கூடாது. வேலூர் இப்ராஹிமே சரணம்!

- ஆர். அபிலாஷ்

இதழியலாளர் பொன் விஜயன் அவர்கள் சமூக மேம்பாட்டுக்காக உழைத்து தன்னையே அதற்காக இழந்தவர். அது குறித்து எழுத்தாளர் ஆர்.அபிலாஷ் அவர்கள் எழுதியதுதான் மேற்கொடுக்கப்பட்டிருக்கும் பதிவு. இக்குழுமத்தில் பல நிகழ்வுகளின் விளம்பரப் பதாகைகள் இடம் பெறுகின்றன. அப்படியானதில், ஒன்றில் கலந்து கொள்ள விரும்பி அலைபேசியில் அறிவுறுத்துக்குறிப்பு பதியப்பட்டு குறித்த நேரத்துக்கு உள்நுழைய முற்பட்டேன். கிட்டத்தட்ட 40 மணித்துளிகள் இருந்தும் என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

1. சக கலைஞரின் மறைவினால் விருந்திநர் வருகையும் நிகழ்வும் தள்ளிப்போடப்பட்டிருக்கலாம். அல்லது

2. எனக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம், கடந்த கூட்டமொன்றுக்கு மறுக்கப்பட்டதைப் போலவே!

முதலாவது காரணமாக இருப்பின், தள்ளிவைப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவது காரணமாயின், அதுவும் பொது அமைப்பில் இடம் பெறக்கூடாத புறம்பானவொன்று. இப்படியான ஒழுங்கீனமான செயல்களுக்குக் காரணமானவர்கள்தாம், “ஒழுங்கு” என்பதற்கான இலக்கண வகுப்பெடுக்கின்றனர். மீண்டும் எழுத்தாளர் அபிலாஷ் அவர்களின் பதிவைப் படிக்க வேண்டுகின்றேன்.

No comments: