12/23/2020

ராஜா

எப்படியாவது அந்த ஹம்ப்பாவ் கவரில்(gift envelop) என்ன இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டுத்தான் தன் விடாமுயற்சியை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார் இராஜா. ஆமாம். தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத இராஜா மீண்டும் அந்தக் குடிலுக்குச் சென்று கதவைத் தட்டினார். எதற்காகத் தட்டுகின்றார் எனத் தெரிந்து கொள்ள ஆவலாகத்தான் இருக்கும் உங்களுக்கு. கடைசி வரை வாசித்தால்தான் அது புரிய வரும். தொடர்ந்து வாசியுங்கள்.

நமது சமூகத்தில் ஒருவரை மிகவும் இழிவாக, திட்டுவதற்குக் கழுதையை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆனால் கழுதை பொது மக்களின் தினசரி வாழ்வில் மிகவும் உபயோகமான கால்நடை மிருகம். மிகவும் கேவலமான முறையில் பார்க்கப்படுவது வருத்தத்திற்குரியது. ஆனால் எனக்கு கழுதை மீது எப்போதும் ஒரு அன்பு உண்டு. நம் இளமைக் காலத்தில் பதினாறு வயதினிலே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததென பாடலில் கச்சிதமாக கழுதைக் குரலை பயன்படுத்தியிருப்பார்கள். சிரிப்பை வரவழைக்கும். பஞ்சகல்யாணி படத்தில் கழுதை மிகப் புகழ் பெற்றது. கழுதைக்காகவே படம் ஓடியது.பஞ்ச கல்யாணி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ”அழுதபிள்ளை சிரிச்சதாம், கழுதைப் பாலை குடிச்சதாம்” என்றுகூடச் சொல்வார்கள். அதாவது கழுதைப் பாலைக் குடித்தால் குழந்தைகள் நோய் நீங்கச் சிரிக்கத் துவங்கும். அப்படியாப்பட்ட கழுதைகள் கைவிடப்படலாயின. ஊர்வழிகளில் தடங்களில் கவனிப்பின்றித் திரிந்து கொண்டிருந்தன. அப்படியான கழுதைகளுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்தார் நம் இராஜா.

கோட்டைமேடு சிக்னலில் இருந்த டிராஃபிக்போலீசுகாரர் வேகமாக ஓடிச்சென்று அந்த மெட்டாடர் வேனை இடைமறித்துச் சத்தம் போட்டார். ஆமாம். வேனின் பின்புறம் முழுக்க கழுதைகள் நின்று கொண்டிருந்தன.

“ஏம்ப்பா, என்ன இது? இப்படிக் கழுதைகளை ஏத்திகிட்டுப் போறியே?”

“வீட்ல வெச்சிட்டு என்ன சார் பண்றது? அதான் ஏத்திகிட்டுப் போறன்!”

“வீட்ல வெச்சிட்டு என்ன செய்றதா? இந்தவாட்டி உனக்கு மாப்புக் குடுக்குறன். வேணுமின்னா ஜூ(மிருகக்காட்சிசாலை)வுக்கு கொண்ட்ட்டுப் போயேன்!”

“நல்ல ஐடியா சார், அப்டியே செய்றன்”, சொல்லிவிட்டு அந்த திறந்தவெளி வேனைக்கிளப்பிக் கொண்டு பறந்தார் நம் ராஜா.

அடுத்த நாள். அதேநேரம். அதேசிக்னல். அதே போலீசுகாரர். கோபம் தலைக்கேறியது. பிக்-அப் வேன் முழுக்கக் கழுதைகள், கண்ணுக்கு கண்ணாடிகள் அணிந்திருந்தவண்ணம்.

“யோவ், நீயென்ன லூசா? கழுதைகளுக்குக் கண்ணாடி, மறுக்காவும் ஏத்திகிட்டு, அதுவும் ஓப்பன் வேன்ல?”

“இதுகளை வீட்ல வெச்சிட்டு என்ன சார் பண்றது? அதான், மதுக்கரை, பாலக்காடு வழியா கேரளா பீச்சுக்குப் போலாம்னு போய்கிட்டு இருக்கன்”

போலீசுக்காரருக்கு சினமெல்லாம் வடிந்து ராஜாமீது அளவுகடந்த பாசம் பொங்கியது. இப்படியொரு மனிதனா? அந்த போலீசுகாரரும் பஞ்சகல்யாணி படம் பார்த்துக் கிரங்கியவர். ”பஞ்சகல்யாணி இராசா, உன்னியமாரி ஆளுக இந்த லோகத்துல இருக்கிறதாலத்தான் நாட்டுல ஏதோ நாலுதுளி மழ பெய்யுது”, கையெடுத்துக் கும்பிடு போட்டு அனுப்பிவைத்தார். ”பஞ்சகல்யாணிராசா” என்று கோயமுத்தூர் கொள்ளேகால் கொழிஞ்சாம்பாறை வரையிலும் பிரபலமாகிப் போனார் நம் ராஜா. பின்னாளில் ராசா படிப்பெல்லாம் முடித்து வாழ்க்கையில் செட்டிலாகியிருந்த தருணம். இந்த விசியத்தைக் கேள்விப்பட்ட ராசாவின் மாமனார், சமூகத்தில் அலைக்கழிக்கப்படும் முதியோர்களுக்கான காப்பகம் நடத்துவதற்கு நம் மாப்பிள்ளைதான் சரியான ஆளென நினைத்தார். அதன்படியே முதியோர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகின்றார் இராஜா.

பூப்போன்ற மனசுக்கேற்றார்போல இராஜாவுக்கு நிறைய நண்பர்கள். சரி, இன்றைக்கு நம் வளாகத்துக்கு(கேம்ப்பஸ்) வந்துவிடுங்களெனச் சொல்லவே அன்று மாலை எல்லாரும் இராஜாவின் இடத்தில் கூடிவிட்டனர். இராத்திரி 11 மணிக்கெல்லாம் வந்தோர் கிளம்பிப் போய்விட்டனர், ஒரிருவரைத் தவிர. நித்திரை கொண்டு காலையில் எழுந்ததும், ‘காலை வெயில் கழுதைக்கு நல்லது. மாலை வெயில் மனிதனுக்கு நல்லது. காலைவெயிலில் நடந்து பழகிவிட்டேன். வாக்கிங் போலாம் வாங்க”, எனச் சொல்லி நண்பர்களைக் கிளப்பினார் ராஜா. அந்தநேரம் பார்த்து பணியாளொருவர், ‘அது இல்லை, இது இல்லை’ என அனத்திக் கொண்டு வரவே, ’நீங்கள் போய்க்கொண்டு இருங்கள். நான் வந்து சேர்ந்து கொள்கின்றேன்’ எனச் சொல்லி அனுப்பினார்.

அவர்கள் போய்க்கொண்டிருந்தனர். அந்தக் குடிலின் முன்பாக மூன்று பெண்கள், அம்புஜம், பங்கஜம், சிந்துஜா ஆகியோர் உட்கார்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இவர்களைப் பார்த்ததும் கைகாண்பித்து அழைத்தார் ஒரு பெண்மணி. ‘நானா?’ என்றார் ஆனந்த். ’அல்ல, அடுத்த ஆள்’ என்பதாக இருந்தது அந்தப் பெண்களின் சைகை. ‘அப்ப, நானா?’ என்றார் வேணு. ‘இல்லய்யா, அடுத்து’ என்பதாக இருந்தது அவர்களின் குறிப்புமொழி. ‘அப்ப, நானா?’ என்றார் பீளமேட்டார்.

”ஆமாம், உங்க வயசு என்ன, பிறந்ததேதி என்னங்றதெல்லாம் எங்களாலக் கரக்ட்டா சொல்லமுடியும்”

“அதெப்பிடி? அதெப்பிடி??”, இரைந்தனர் மூவருமே.

“நீங்க உங்க பேண்டை இடுப்புக்குக்கீழ நழுவவிடுங்க, அட, அந்த கோவணத்தையும் கழத்துங்க சொல்றம்”

இடுப்புக்குக்கீழே நழுவவிட்ட நிலையில், அவை கணுக்கால்களில் போய் நின்றுகொண்டன. நிலைமையை உணர்ந்த ஆனந்த்தும் வேணுவும் பத்துத்தப்படிகள் கடந்து போய் நின்றுகொண்டனர்.

“சும்மா நின்னுட்டு இருந்தா எப்டி? ரெண்டு சுத்து சுத்திவாப்பா, பார்த்துச் சொல்றம் உன்ற வயசு என்னான்னு”, அவசரப்படுத்தின பெருசுகள். இரண்டு சுத்துச் சுத்தினார் பீளமேட்டார்.

”மேலகீழ ரெண்டு வாட்டிக் குதிப்பா பார்க்கலாம்”, குதித்தார் பீளமேட்டார்.

”இம்... உம்மோட வயசு நேத்தோட நாப்பத்தி ஆறு”

“எப்டிங்மா கரெக்ட்டா சொல்றீங்க?”, வியந்து போயினர் மூவருமே.

“மூதேவிகளா, தூங்க விட்டீங்ளாடா நீங்க? அதான் உனக்கு ஃபோர்ட்டிசிக்ஸ்த் பர்த்டேன்னு கூத்தும் கும்மாளமுமா இருந்தீங்களே நேத்து இராத்திரி. அதைத்தான் நாங்க அல்லாரும் பார்த்தமே? செரி போச்சாது, இங்க வா நீயி!”

அம்மணகோலத்தைக் கலைத்துக் கொண்டு பேண்ட் பெல்ட்டை இறுக்கியபடியே அருகில் போனார் பீளமேட்டார். உள்ளே சென்று வந்த பங்ஜம்பாட்டி, தன்னுடைய சிங்கப்பூர் பேரன் கொடுத்த சீன ஹம்ப்பாவ்கவர் ஒன்றைக் கொடுத்தார். அதில் எவ்வளவு சிங்கப்பூர் டாலர்கள் இருந்ததென்பதை இன்றளவும் வெளியில் சொல்லிக்கொள்ளவில்லை பீளமேடு.

இவற்றையெல்லாம் அறிய நேர்ந்த ராஜாவுக்கு இன்றளவும் அந்த ஹம்ப்பாவ்கவருக்கு விடை கிடைத்தபாடில்லை. தாமும் பேண்ட் கழட்டப் போகலாமென்றால் அதற்கான தருணமே வாய்க்கப் பெறவில்லை. அந்தக் குடிலையே சுத்திச் சுத்தி வந்து கொண்டிருக்கின்றார். குடிலுக்கு இன்றும் சென்றிருந்தார். அங்கிருந்த பாட்டியொன்று ஓடி வந்து, “கோழி ஒண்ணுக்கு ஊத்துமா? ஊத்தாதா??” என்றது. மலங்க மலங்க விழித்தபடி, “தெரியலையே” என்றார். இந்த பதிலால் திருப்தி கொள்ளாத பாட்டி, கதவைப் படாரெனச் சாத்திக் கொண்டது. பாவம் இராஜா.

-பழமைபேசி.

No comments: