10/14/2017

அறம்சார் அமைப்பும் ஓட்டும்

1. சாலையில் பயணிக்கும் போது, போக்குவரத்து மின்விளக்கில் மஞ்சள் வண்ண விளக்கு ஒளிர்கிறது. நாம் என்ன செய்கிறோம்? இயன்றவரையிலும் வேகமாக ஓட்டிக் கடந்து விட முயல்கிறோம். அது தவறு. இயன்றவரை நிற்கப் பார்க்க வேண்டும். இயலாதநிலையில், கடந்து விட வேண்டும். Try to stop, not try to go. அது போல, எந்தவொரு அறம்சார்ந்த மக்களாட்சி அமைப்பிலும் தேர்தல் நடத்த முயலவேண்டும். போட்டியாளர்கள் கிடைக்கவில்லையாயின், தேர்தலின்றி அதன் போக்கில் அது போய்விட்டுப் போகட்டும்.

 2. தேர்தல் இடம்பெற்றால், பிணக்குகள் வரும். பகைமை வளரும். இப்படியெல்லாம் அஞ்சிக் கொண்டிருப்பது அல்லது எண்ணுவது, சமூகம் இன்னமும் மேம்படவில்லை என்பதற்கு ஒப்பானது. பத்தாம்பசலித்தனமானது.

 3. முறைப்படி தேர்தல் இடம்பெற வேண்டும். கண்ணியமாகவும் நேர்மையாகவும் திறந்தமனத்தோடு விமர்சனங்களையும் முன்வைத்தே செயற்பட வேண்டும். அதே நேரத்தில் அநாகரிகம், தனிமனித வசையாடல் தவிர்க்கப்படல் வேண்டும்.

 4. நிர்வாகமுடிவுகளில், சாதி சமயம் இனம் வயது பாலினம் முதனாவற்றின் அடிப்படையில் பாகுபாடு, பேதம் பார்ப்பது அறவே கூடாது. எடுத்துக்காட்டாக, ஒரு விருந்திநரை அழைப்பதில் எப்படி இவற்றை முன்னிறுத்தக் கூடாதோ, அதே பாங்கினை அழைக்காமற்தவிர்ப்பதிலும் கடைபிடிக்க வேண்டும்.

 5. எத்தகைய அமைப்பானாலும், அதனதன் நிர்வாகக்குழுவில் இடம் பெற, கலை, இலக்கியம், விளையாட்டு, நுட்பம், தொழில்சார் நுண்ணறிவு, மக்கள்தொடர்புத் திறம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். வெறுமனே உணர்வாளர்கள், பற்றுக்கொண்டோரென இருந்து அமைப்பின் நோக்கத்திற்கும் மேம்பாட்டுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது. அமெரிக்காவில், கல்லூரியில் இடம்பெற, நிர்வாகத்தில் இடம் பெற இவற்றைத்தான் எடை போடுகிறார்கள்.

 6. குறியீடுகள், கருத்தியல்களால் ஆனது உலகு. ஆகவே பன்முகத்தன்மை இல்லாவிடில் அமைப்போ, வணிகமோ, அரசியலோ, அது எதுவோ, விளங்கவே விளங்காது அல்லது முழுமைப்பயனை எட்டவே முடியாது. தற்காலிகக் கானல்நீராய் இருக்கலாம். ஆனால் மேம்பாட்டை ஒருபோதும் ஈட்டாது. எடுத்துக்காட்டாக, மோகன்தாசு கரம்சந்த் காந்தி, அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, லெனின், ஆபிரகாம் லிங்கன், கென்னடி, பாரதி, ஈ.வே.ரா, வள்ளலார், பாரதிதாசன் முதலானோர் கருத்தியலின் குறியீடுகளேவொழிய, தனிமனிதர்கள் அல்ல. அந்தந்தக் கருத்தியற் கோட்பாடுகளில் இருக்கும் நல்லனவற்றை ஈர்த்துச் செல்லவே அக்குறியீடுகள். மாறாக, அந்தந்த தனிமனிதர்களின் வாழ்வில் இடம்பெற்ற வேண்டாதனவற்றை அமைப்பின் நிர்வாகத்தில் புகுத்திச் செயற்படுவது பன்முகத்தன்மைக்கு எதிரானது.

 7. நிர்வாகக்குழுவில் இடம் பெறுபவர்கள், நாட்டமுள்ளவர்கள், அவரவராகவே குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் பணிகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளவேண்டும். அல்லாவிடில், அவர், அவருடைய தனிமனிதநலன், குடும்பநலனுக்கு எதிரானவராகவே கருதப்பட வேண்டும். அமைப்பின் உறுப்பினர்களும், அத்தகையோரை மட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இது அறம்சார் மக்களாட்சி அமைப்பு அல்லது நிறுவனம். வணிகநிறுவனமோ அல்லது தொழில்நிறுவனமோ அன்று.

 8. அமைப்புகளின் செயற்பாடுகளை திறந்த புத்தகமாக, மக்கள் நிர்வாகச் சபைகளின் ஓட்டெடுப்பு விபரங்களைப் பொதுவில் வைப்பதைப் போல, கூட்ட முடிவுகள், தீர்மான ஓட்டெடுப்பு முடிவுகளை மக்களின் பார்வைக்கு பொதுவில் வைக்கப்பட தேர்தலில் இடம்பெறும் போட்டியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பண்பு, திரைமறைவு ஊழல்களை வெகுவாக ஒழித்துக் குறைவான உழைப்பில் நிறைவான பயனை ஈட்ட வழிவகுக்கும்.

 9. பல்லினமக்கள், பன்முகத்தன்மையென்பது உலகமயமாக்கல், பொருளாதாரமயமக்கல் உலகத்தின் அச்சாணியாக நிலைபெற்றுவிட்டது. Globalization is irreversible. ஆகவே, தனித்துவம் போற்றிக் கொண்டே, அடுத்த வீட்டு, அடுத்த நாட்டு, அடுத்த அமைப்பு, அடுத்த நிறுவனம் போன்றவற்றோடு இயைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படித்தான் பண்டங்களும் பொருட்களும் தொண்டுப்பணிகளும் நடந்தேறிவருகின்றன. ஒரு கூரைக்குக் கீழேயே எல்லாமும் இடம்பெற வேண்டுமென்பது வழக்கொழிந்து போனவொன்றாகும். எனவே, அடுத்த அமைப்பிலிருந்து வல்லுநர்கள் பேசவேண்டும். ஓர் அமைப்பு இன்னோர் அமைப்புடன் இயந்து செயற்பட வேண்டும். Office bearers should be able to work across the aisle. குண்டுச்சட்டியிலிருந்து கொண்டால், இழப்பு குறுக்கில் இருப்பவருக்கே!

 10. அறம்சார் தொண்டு நிறுவனம், மக்கள்சார் கலை இலக்கிய அமைப்பு, மக்களின் உரிமை மேம்பாட்டு இயக்கம் போன்ற அமைப்புகளின் உயிர்நாடியே, அந்தந்த மண்ணின் மையநீரோட்டத்தில் மேம்படுவதுதான். எனவே, மையநீரோட்டத்துடன் ஒன்றிச் செயற்படும் போட்டியாளர்களே தேவை. தனித்துவமும் மரபும் போற்றப்பட வேண்டியவொன்று. அதே வேளையில், தனித்துவவெறியும் தூய்மைவாதமுமென இருந்துவிட்டால் பின்னடைவுதான். ஆகவே, இவ்விரண்டுக்குமான பொருளுணர்ந்து செயற்படும் நிர்வாகிகள் காலத்தின் தேவை.

 இஃகிஃகி, தேர்தல் களம் காணுகிற, காணப்போகிற எல்லா அமைப்பினருக்கும் பாராட்டுகள்! முடிந்து முடிந்து பூமிக்கடியில் புதைத்து வைத்துக் கொள்கிற அமைப்பினரும் விழிப்புணர்வு கொண்டெழ வாழ்த்துகள்!!

 -பழமைபேசி.

No comments: