8/07/2013

ஆப்பு

அம்மா பயித்தம் பருப்பு(பாசிப் பயறு) காயப் போட்டுக் கொண்டிருந்தார். ”அம்மா, பயறுக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருக்கு? பூச்சிகள் அண்டி உளுத்துப் போனதாட்டம் தெரியலையே??” என்றேன். “பூச்சி அண்டினாத்தான் காயப் போடணும்ங்றது இல்ல. நல்லா வெயில் அடிக்குது. சும்மா இருக்குற நேரங்கள்ல இதுகளைக் காயப் போட்டு வெச்சிகிட்டா நெம்ப நாளைக்கு நின்னு புடிக்கும்” என்று சொல்லிக் கொண்டே மொட்டை மாடியிலிருந்து கர்ம சிரத்தையாய் அடுத்த வேலைக்காக இறங்கிப் போய்க் கொண்டிருந்தார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்குப் பலியாகாத அம்மா என் அம்மா என்கிற திமிர் எனக்கு. அந்த நேரம் பார்த்து ஒரே ஒரு குருவி மாத்திரம் தரையிலிருந்து வெடித்து வெடித்து குந்திக் கொண்டிருந்தது. அது வெடிக்கும் போது இறக்கைகள் சிதறுவது போல இருந்தன. இது ஏன் சும்மா சும்மா வெடித்துக் கொண்டிருக்கிறது என நினைத்த நான், அந்த பயித்தம் பயிறிலிருந்து சில மணிகளைக் கையிலெடுத்து அதை நோக்கி வீசினேன். இரண்டு மூன்று முறை தரைகுத்திப் பொறுக்கிய அது விருட்டெனப் பறந்து போனது.

என்னை அங்கு நிலைநிறுத்திய அதுவும் போய் விட்ட சூழ்நிலையில் அம்மாவிடமே போகலாம் எனக் கீழிறங்க நினைத்த மாத்திரத்தில் நான்கைந்து குருவிகள் வந்து குந்தின. அந்த ஒற்றைக்குருவி போய் மற்றனவற்றைக் கொண்டு கூட்டியாந்திருக்கிறது என நினைத்த நான், இன்னும் சில பயறுமணிகளை எடுத்து வீசினேன். குதித்துக் குந்திய அவை தரை குத்தத் துவங்கின. அவற்றுள் ஒரு குருவி மாத்திரம் எழும்பிப் போனது. போயிக் கொஞ்ச நேரத்தில் இன்னும் மூன்று குருவிகள் வந்து சேர்ந்து கொண்டன. மணிகள் வீசப்பட வீசப்பட குருவிகளின் சேகரம் பெருக்கிறதே என்று நினைத்த நான் இன்னும் கொஞ்சம் மணிகளை அள்ளி வீசினேன். விருட்டென எல்லாமும் ஒரு சேரப் பறந்து போய்விட்டன. நின்று பார்த்தேன். நின்று பார்த்தேன். அவை வரவேயில்லை. குரல் மட்டுந்தான் கேட்டது. “பாட்டி, இங்க வந்து பாருங்க. சித்தப்பா எல்லாத்தையும் எடுத்து கீழ வீசிட்டு இருக்காங்க பாட்டி!!”.

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

வெங்கட் நாகராஜ் said...

:)

மொட்டை மாடியில் உட்கார்ந்து காக்காய் விரட்டிய நினைவுகள்!

இராஜராஜேஸ்வரி said...

தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்குப் பலியாகாத அம்மா என் அம்மா என்கிற திமிர் எனக்கு.

வாழ்த்துகள்..!