12/12/2010

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கான ஓர் ஒன்று கூடல்!

கண் விழித்துப் பார்த்தேன்;
மாலை நேரத்து இருள் கப்பியிருக்கக் கண்டேன்!
ஒன்றுகூடல் நேரம் நெருங்கி வருதலுணர்ந்தேன்!!

அன்புநிகர் உறவுகளைக் காண ஓடினேன்;
உந்தின் மேலமர்ந்து ஓட்டியபடியே ஓடினேன்!
தெருமுழுக்க உந்துகள் நின்றதைக் கண்டு அகமகிழ்ந்தேன்!!

அங்குமிங்கும் நோக்கிய விழிகள் வாழ்த்துக் கூறின;
வியப்புத்தான், வியந்தபடி குதூகலித்தேன்!
இதோ தமிழர் கூட்டம்..மெய் சிலிர்த்தேன்.. அகமகிழ்ந்தேன்!!!

புதிய முகங்கள் கண்டபடியே நகர்ந்தேன்;
ஒவ்வொருவரும் அதையேதான் உணர்ந்தோம்!
சொல்வதற்கு நிறைய இருக்கிறது...போதுமிது இப்போதைக்கு!!!

கைகள் பற்றிக் கொண்டோம்;
தமிழர் திருநாள் பற்றின நகர்ச்சில்லுகள் பல கண்டோம்!
சார்ல்சுடன் திருவிழா நடத்திடப் பூண்டோம் குதூகலம்!!
தமிழர் திருவிழா நடத்திடப் பூண்டோம் குதூகலம்!!!

வட கரோலைனா மாகாணம், சார்லட் பெருநகரத்தின் தென்பகுதியில் உள்ள பாலண்ட்டைன் பகுதியில் இருக்கும், சார்லட் பெருநகரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி. செந்தாமரை பிரபாகர் அவர்களது இல்லமானது, டிசம்பர் பதினோராம் நாள் மாலை விழாக் கோலம் பூண்டது.

அடுத்த ஆண்டுக்கான வட அமெரிக்கத் தமிழர் திருவிழாவானது, தென் கரோலைனா மாகாணத்தின் சார்ல்சுடன் நகரில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவது நாம் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக, பேரவை மற்றும் திருவிழாவைப் பற்றின விபரங்களை உள்ளூர்த் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த ஒன்று கூடல்.

அதையொட்டி, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவர் மற்றும் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள் சிறப்பு வருகை புரிந்தார். சார்லட் பெருநகர தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அறிமுக அளவளாவலைத் தொடர்ந்து, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி. செந்தாமரை பிரபாகர் அவர்கள் அறிமுகவுரை ஆற்றிப் பேசினார். அவரைத் தொடர்ந்து, முனைவர் தண்டபாணி குப்புசாமி அவர்கள், கிட்டத்தட்ட இரண்டு ம்ணி நேரம் தொடர்ந்து பல தகவல்களை அளித்துப் பேசினார். உள்ளூர்த் தமிழர்களும், வெகு ஆர்வத்துடன் கூடுதல் விபரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

வழமை போலவே, பதிவர் பழமைபேசியும் தன் பங்குக்குப் பொடி வைத்துப் பேசினார். எதிர்வரும் ஆண்டுகளில், சார்லட் நகரில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் விழா நடத்துவதற்கான சாத்தியம் மற்றும் அதற்கான அவசியம் குறித்துப் பேசினார். அப்படியொரு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமாயின், இத்திருவிழாவிற்கு, நாம் நம் பங்களிப்பைச் செய்து முன் அனுபவத்தைப் பெற்றிடுவது வெகு அவசியம் என்பதையும் வலியுறுத்திப் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இறுதியில், தமிழ்ச் சங்கத்தினரின் கூட்டாஞ்சோறு படைக்கப்பட்டது. எண்ணற்ற உணவு வகைகள், படையலில் இடம் பெற்றன. உருசித்துப் புசித்தனர் கூடிக் குலாவிய தமிழர் கூட்டம். அத்தோடு நில்லாமல், எதிர்வரும் பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்திடும்வண்ணம் ஆலோசனைகளும் நிகழ்ந்தேறியது. மீண்டும் கூடுவதெப்போ என்கிற சிந்தனையோடு விடை பெற்றுச் சென்றனர் அன்புத்தமிழர் கூட்டம்!!

தமிழால் இணைந்தோம்!

12 comments:

கபீஷ் said...

//வழமை போலவே, பதிவர் பழமைபேசியும் தன் பங்குக்குப் பொடி வைத்துப் பேசினார். //

ithukkaaga romba varuththa paduvaar avarnu solli vainga

a said...

Training முடிஞ்சி திரும்பிட்டீங்களா???

Unknown said...

Sukkup podi molagaap podi pottu ennangap pesineenga.

சின்னப் பையன் said...

1. அண்ணே. பாஸ்டன் முடிஞ்சிடுச்சா?
2. இந்த சந்திப்பு நடந்தது 11ம் தேதிதானே? 12ன்னு இருக்கே..

அரசூரான் said...

முன்னோட்டம் நடக்கிறதா? வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

@@ச்சின்னப் பையன்

இன்னும் இல்லைங்க... பிழை திருத்தினதுக்கு நன்றி!

vasu balaji said...

உருசித்துப் புசித்தனரா, புசித்து உருசித்தினரா:)) வாழ்த்துகள்.

நசரேயன் said...

ம்ம்ம்

நசரேயன் said...

//ithukkaaga romba varuththa paduvaar avarnu solli vainga//

மூக்குப் பொடின்னு நினைச்சிட்டாங்களோ !!!

தாராபுரத்தான் said...

தமிழால் இணைந்தோம்..வாழ்த்துக்கள்ங்க.

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள்

Karthick Chidambaram said...

தமிழால் இணைந்தோம் - வாழ்த்துக்கள்