11/21/2025

ஜெயசாரதி முனுசாமி

ஜெயசாரதி முனுசாமி

கலைத்தேனீ பிரிவில் பேச்சுப்போட்டிகள் உள்பட சிலவற்றுக்குத் தலைமையேற்றிருந்தார். அவராகவே அழைத்து, எல்லாவற்றையும் அவ்வப்போது தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். “தம்பி, சிறப்பா செய்யுங்க. உங்க மேல நம்பிக்கை இருக்கு. நீங்க இவ்வளவுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை”. “இல்லங்ணா, உங்க கருத்தும் கேட்கணும் போல இருந்திச்சி”.

விழா நெருங்குகின்ற நேரத்தில் பல வேலைகள். உறவினரின் மறைவு. தம்பி, ஊருக்குச் செல்லும்படியாகி விட்டது. எனினும், அழைப்புகளுக்குச் செவிமடுத்து வந்து, பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார். விழாவும் வந்து விட்டது. தம்பி, செய்த உதவியை மறக்க இயலாது.

நெருக்கடி(இடுக்கண்) ஏற்பட்டுவிடுகின்றது. சமாளித்தானபிறகு என்ன செய்ய வேண்டும்? நெருக்கடி தொடங்கிய நேரம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்யவேண்டும்.

மன்னிப்புக் கோருதல்: நிலைமை சீரடைந்த பிறகு, விழா அமைப்பாளர் சார்பாக மக்களின் அசௌகரியத்திற்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோரவேண்டும்.

மறு ஆய்வு: எதிர்கால நிகழ்வுகளில் இது போன்ற தட்டுப்பாடுகளைத் தவிர்க்க, கூட்டத்தை மதிப்பிடுதல், உணவு வழங்குநர்களுடன் ஒப்பந்தம், அவசர உணவுத் தொகுப்பு (Emergency Food Buffer) ஆகியவற்றைச் சேமித்து வைப்பது குறித்துத் திட்டமிட வேண்டும்.

எல்லாமும் பேசப்பட்டதுதான். தீர்மானிக்கப்பட்டதுதான். எங்கு, தகவற்பரிமாற்றத்தில் ஓட்டை விழுந்ததெனத் தெரியவில்லை. ஆனால், நாங்கள் ஒருமுறைக்குப் பலமுறை கூட்டங்களில் பேசினோம். வாட்சாப் குரூப்பில் பேசினோம். தகவலையும் முறையாகப் பதிந்திருந்தோம்.

ஜூலை 3. போட்டிகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. தன்னலம் பாராத நடுவர்கள், ஒருவரல்ல இருவரல்ல. 45+ பேர். பசியென்றும் பாராது தொடர்ந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பெற்றோர்கள் அகலமாட்டேன் என்கின்றார்கள். பிற்பகல் மணி 1. அந்த 1 மணி நேரத்தில், திருமிகு பரணி, திருமிகு மீனா என நாங்கள் பட்ட நெருக்கடி உணர்வுகள் ஆழமானவை. கொதிநிலை வலுவாகத் துவங்கிய நேரம். தம்பி, களத்தில் இறங்கி, இருப்போருக்கு உணவு வழங்க ஏற்பாடுகள் செய்தார். தாமதத்துக்கு மானசீகமாக மன்னிப்புக் கோரினோம். நம் முறையீடுகளின் வலி தெரியாமல், கொடுக்கப்பட்ட பதில்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகின்றது.

3 ஆண்டுகளுக்கு முன்னம் ஒரு தேர்தல் கூட்டம். தம்பியின் குறுக்குக் கேள்விகளைக் கண்டு, “யார்றா இவன்?” என்ற நாம், இஃகிஃகி,  தற்போது நன்றி சொல்லிக் கொண்டிருக்கின்றோம். காலம் மகத்தானது. காலமே மாபெரும் மருந்து. மனிதம் போற்றுவோம்!

𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐠𝐡𝐭 𝐚 𝐥𝐚𝐦𝐩 𝐟𝐨𝐫 𝐬𝐨𝐦𝐞𝐨𝐧𝐞 𝐞𝐥𝐬𝐞, 𝐢𝐭 𝐰𝐢𝐥𝐥 𝐚𝐥𝐬𝐨 𝐛𝐫𝐢𝐠𝐡𝐭𝐞𝐧 𝐲𝐨𝐮𝐫 𝐩𝐚𝐭𝐡.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி. 

11/20/2025

சங்கர் தங்கவேலு


சங்கர் தங்கவேலு

கதை, கவிதை, கட்டுரை, ஓவியம் முதலான படைப்பாக்கத் திறன்களுக்கான போட்டிகளை நடத்த, தமிழ்மொழி சார்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். சிந்தனைக்களத்தில் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படியானவர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதுதான் படைப்புத்தேனீ குழுமம். அதற்கான தலைவர், தமிழுணர்வாளர் திரு சங்கர் தங்கவேலு அவர்கள்.

ஓரிருமுறை அழைத்திருப்போம். அவர் ஓரிருமுறை தொடர்பு கொண்டார். அவ்வளவுதான். குழுக்கள் தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும். அப்போதுதான் பணிகள் சிறக்குமென்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.  சில இடங்களில் வலுவான ஒற்றைத்தலைமை இருக்க வேண்டும். சில இடங்களில் தன்னாட்சியுள்ள கூட்டுத் தலைமைகள் இருக்க வேண்டும். வட அமெரிக்க வாகை சூடி, இயல், இசை, நாடகம், அறிவியல், நுட்பம், இவற்றுக்குள் பல பகுப்புகள், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான கலையுணர்வு அடிப்படை. அந்தந்த நுண்பிரிவுக்கொப்ப தலைவர் இருக்க வேண்டும். ஒருவருக்கே எல்லாமும் வாய்த்திருப்பதென்பது அரிது. எனவேதான் தன்னாட்சியுள்ள பலதலைவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

படைப்பின் நிமித்தம் விமர்சனங்களை முன்வைக்கலாம். 'எனக்கு அது பிடிக்கவில்லை. அதில் இன்னின்ன குறைபாடுகள் இருக்கின்றன. அதில் பிழை இருக்கின்றது', இப்படியாக. அது தனிமனித உரிமை. விமர்சனங்களை வரவேற்காத சமூகம் ஒரு வறட்டுச்சமூகம். காட்டமாகவும் சாடியும் எழுதி இருக்கின்றேன். என்னைச் சாடுவதையும் வரவேற்கின்றேன். ஆனால், ’இப்படி எழுது, அப்படி எழுது, அதை அப்படி செய்ய வேண்டும், இப்படி செய்ய வேண்டும்’ என்றெல்லாம் சொல்வது, அத்துமீறல்; மேட்டிமைத்தனத்தை நிறுவும் செயலாகவே கருதப்படும். ஆகவே, எந்தக் குழுவிலும் திருமிகு பரணி அவர்களோ, நானோ சென்று, எதிலும் குறுக்கிடவில்லை. திரு சங்கர்தான் தொடர்பு கொண்டு, கூடுதலாக புத்தாக்கம் எனும் தலைப்பில் ஒரு போட்டியைச் சேர்க்கின்றோம், சரியாயென வினவினார். ’அடித்து விளையாடுங்கள், உங்கள் களம், உங்கள் உரிமை’ என்பதுதான் நம் மறுமொழியாக இருந்தது.

புத்தாக்கம் (Innovation) – தமிழ்மொழியை மையமாகக் கொண்டு:

மொட்டு (வயது: 4-8)
குறிப்பு: தமிழ் எழுத்துகளை அடையாளம் காணவும், அவற்றை அழகாக வடிவமைக்கவும் சிறிய கைவினைகள் உருவாக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: "உயிர் எழுத்துகள் வடிவில் காகித அலங்காரம்."

முகை (வயது: 9-12)
குறிப்பு: தமிழ் பாடல்களில் வரும் சொற்களைப் பயன்படுத்தி புதுமையான         சிறு விளக்கத் தொடர் (word collage) உருவாக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: "தமிழ் ஆத்திசூடி சொற்களால் சுவர் அலங்காரம்."

மலர் (வயது: 13-17)
குறிப்பு: தமிழில் உள்ள பழமொழிகளை தனித்துவமான ஆவண வடிவில்             (mini poster or infographic) காட்சிப்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு: "தமிழ்ப் பழமொழிகளைச் சித்திர வடிவத்தில் அறிமுகப்படுத்துதல்."

அலர் (வயது: 18 - 23)
குறிப்பு: தமிழ் எழுத்துக்கள் அல்லது இலக்கியங்களை மையமாகக்                         கொண்டு, தகுந்த தொழில்நுட்ப (mobile app, website, etc.) வடிவமைப்புகளை             உருவாக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: "தமிழ் எழுத்துக்களை பயிற்சிக்க உதவும் கற்றல் செயலி."

இதற்குமேல் நாம் அவரையோ, அவர்தம் குழுவினைப் பற்றியோ சொல்வதற்கு என்ன இருக்கின்றது? அவர்கள் வகுத்திருந்த போட்டித்திட்ட விழுமியங்களே சான்று.

Commitment, dedication, and an innovative mindset form the foundation of meaningful and sustained success. Together, they drive individuals to take ownership, persevere through challenges, and continuously seek better ways of doing things.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி. 

11/19/2025

இராஜேஷ் இராமசாமி

இராஜேஷ் இராமசாமி

அகவெழுச்சி (positive, uplifting) மிக்க இளம்வயதுக்காரர். அவரைச் சந்திக்கும் போது அவர் வெளிப்படுத்தும் துள்ளுமனம் சூழ்நிலையை இலகுவாக்கும் தன்மை கொண்டது. அவரின் இருப்பு, பதற்றத்தை அகற்றித் தணிவு மனத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

எத்தகைய சூழலிலும் தன் வசீகரச்சிரிப்பை வெளிப்படுத்தி நேர்மறையான கோணத்தில் பார்க்கும் தன்மை; பலருக்கும் தொற்றுபோல அதே ஊக்கத்தையும் இலகுதன்மையையும் ஊட்டக்கூடிய ஒரு பார்வை. பேசும் விதம், நடத்தை அனைத்தும் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இருந்தது.

அந்தந்தப் போட்டிகளுக்குத் தேவையான கலைநயம் மிக்கவர்கள் அல்லது நாட்டமும் ஈடுபாடும் கொண்டவர்கள், குழுக்களுக்குத் தலைவர்களாக அமைந்தது ஏதோ தன்னிச்சையாக நடந்தவொன்று அன்று. பேரவைக்கான குழுக்கள் அமைக்கும் போதேவும், பலரின் கருத்துகளையும் பெற்று, உகந்தவர்களாகவும் இருக்க வேண்டும், உழைப்பவர்களாகவும் இருக்க வேண்டுமின்கின்ற அடிப்படையில் ஆய்ந்து தெரிவு செய்ததே காரணம். அந்தவகையில் நாட்டிய நாடகக்கலையில் ஆவல்கொண்ட இராஜேஷ் அவர்கள் கலைத்தேனீக்கு அமைந்தது சாலப்பொருத்தமாக இருந்தது.

”எல்லாம் சூப்பராப் போய்ட்டு இருக்குங்ணா, நீங்க மத்த வேலையப் பாருங்க”

“என்னங்க பரணி, இராஜேஷ் நடத்தீருவார்தானே? எப்பக் கேட்டாலும், சூப்பர் சூப்பருன்னே சொல்றாரே?”

“ஆமாங்க பழமபேசி, எனுக்கும் அதே டவுட்டாத்தான் கெடக்கூ...”

“தம்பி, மூனாந்தேதி கேன்சல் செய்திட்டீங்க ஏன்?”

“அதுங்ணா, எல்லாரும் மூனாந்தேதி வரமாட்டாங், அதான் எல்லாத்தையும் நாலாம் தேதிக்கே மாத்தி வுட்டுட்டேன்”

“அய்யோ தம்பி, சிலருக்கு மத்த மத்த போட்டிகள்ல கான்ஃபிளிக்ட் வரும்னு சொன்னமே?”

“ஒன்னும் பிரச்சினை இல்லங்ணா, நான் பாத்துக்குறன்... மூனாந்தேதியும் வெச்சிக்கிலாம், நீங்க மத்த வேலைகளப் பாருங்க, இதப்பத்தி...”

ஒரே சிரிப்புதான். எதைச் சொன்னாலும் சிரிப்பு. போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சும்மா எட்டிப் பார்க்கலாமெனச் சொன்றோம். “வாங்க பரணி அக்கா, வாங்க பழமை அண்ணா. இவங்கதா ஹரிணி. எனுக்கு ஹெல்ப் செய்துட்டு இருக்காங்க. ஹரிணி, இவங்கெல்லா நம்மளச் செக் செய்ய வந்திருக்காங்க”

”அடப்பாவி, வேடிக்கை பார்க்க வந்தது ஒரு குத்தமா?” (நம்ம உள்மனம்)

அடுத்த நாள். “அண்ணா, குரூப் டேன்செல்லாம் லஞ்ச் நேரத்துக்குப் போட்டு வுட்டாச்சி. சாப்ட வர்றவுகளையும் சேர்த்துக் குத்தி எடுத்துறலாம் வுடுங்க”. அங்கு என்ன நடந்ததென்பதை நாம் அனைவருமே அறிவோம். இஃகிஃகி.

𝑻𝒐𝒖𝒄𝒉𝒆𝒅 𝒎𝒂𝒏𝒚 𝒉𝒆𝒂𝒓𝒕𝒔, 𝒉𝒂𝒏𝒅𝒍𝒊𝒏𝒈 𝒆𝒗𝒆𝒓𝒚𝒕𝒉𝒊𝒏𝒈 𝒘𝒊𝒕𝒉 𝒂 𝒎𝒂𝒔𝒕𝒆𝒓𝒚 𝒕𝒉𝒂𝒕 𝒆𝒙𝒄𝒆𝒆𝒅𝒆𝒅 𝒂𝒍𝒍 𝒆𝒙𝒑𝒆𝒄𝒕𝒂𝒕𝒊𝒐𝒏𝒔.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.

11/18/2025

ஆய்வறிஞர் சுவாமிநாதன் சுப்பிரமணியன்

ஆய்வறிஞர் முனைவர் சுவாமிநாதன் சுப்பிரமணியன்

ஆராய்ச்சிப் பணிகளுக்கு மாணவர்களை ஆயத்தப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதும் எப்படி?

  • மாணவர்களின் தனிப்பட்ட ஆர்வம் (Interest), பாடத்திட்டத்திற்குள் இருக்கும் ஒரு ஆராய்ச்சி இடைவெளியை (Research Gap) கண்டறிய உதவ வேண்டும்.
  • ஆராய்ச்சியின் நோக்கத்தை (Objective) வரையறுக்கும் ஒரு தெளிவான, சோதிக்கக்கூடிய ஆராய்ச்சிக் கேள்வியையோ (Research Question) அல்லது கருதுகோளையோ (Hypothesis) எப்படி உருவாக்குவது என்று கற்பிக்க வேண்டும்.
  • பரிசோதனை (Experimental), கண்காணிப்பு (Observational), சர்வே (Survey) போன்ற பல்வேறு ஆராய்ச்சி முறைகள் (Research Methods) பற்றி விளக்க வேண்டும்.
  • எந்த முறை தங்கள் ஆராய்ச்சி கேள்விக்குப் பொருத்தமானது என்பதைத் தீர்மானிக்க மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
  • தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் சரியான கருவிகள் மற்றும் நுட்பங்களைப் (எ.கா., கேள்வித்தாள்கள், நேர்காணல்கள், ஆய்வகப் பரிசோதனைகள்) பற்றிப் பயிற்றுவிக்க வேண்டும்.
  • ஆராய்ச்சி அறிக்கையை அறிவியல் பாணியில் (Scientific Style) எழுதுவது (அறிமுகம், முறைகள், முடிவுகள், விவாதம், முடிவுரை) எப்படி என்று கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • மாநாடுகள் (Conferences) அல்லது வகுப்பறைகளில் தங்கள் ஆய்வை மற்றவர்களுக்கு சமர்ப்பிப்பது (Presenting) மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்க வேண்டும்.

இவையெல்லாம் பொட்டிதட்டிகளுக்கும்(IT Professionals), இதரப்பணிகளில் இருப்போருக்கும் கைகூடுமாயென்றால் இல்லை. 2010 காலகட்டத்தில் எமக்குப் பேரவையின் வாயிலாக ஆராய்ச்சிப் பணிகளில் தேர்ந்த நண்பர்கள், முனைவர் கண்ணன் குஞ்சிதபாதம், முனைவர் உதயசூரியன் போன்றோரின் அறிமுகம் கிடைக்கவே, எங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொண்டோம். இதைப்பற்றியெல்லாம் அவ்வப்போது அளவளாவுவது உண்டு. அப்போதுதான் நண்பர் செளந்தர் ஜெயபால் அவர்கள், நாம் ஏன் அறிவியல்த்தேனீயைக் கட்டமைக்கக் கூடாதெனச் சொல்லி, முனைவர் சுவாமிநாதன் சுப்பிரமணியன் அவர்களையும், அவர்தம் பணிகள், பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகள் குறித்தெல்லாம் சொல்லி, பேரவைச் செயற்குழுவுக்கு அறிமுகப்படுத்தினார்.

டாக்டர் சுவாமிநாதன் அவர்களின் தமிழார்வம், பெற்றோர்களை அணுகும்பாங்கு, மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் திறம் எல்லாம் பார்த்துப்பலரும் வியந்து பாராட்டியதை நாம் கண்டோம். அறிவியல், கணிதம், தமிழ், இசை எனப் பல தளங்களிலும் மிளிர்ந்து காணப்படுபவர். டாக்டர் சுவாமிநாதன் அவர்களுடன், பேரவையின் நெடுநாள் ஆர்வலர் முனைவர் மனோகரன் இராமசாமி அவர்களும் இணைந்து அறிவியற்தேனீக்குழுவைக் கட்டமைத்தது, அறிவியற்தேனீப் பாசறைகள், போட்டிகள் இடம் பெற்றதெல்லாம் பேரவை விழா 2025, வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்குப் பெருமை சேர்த்தனவாகும்.

பேரவை விழாவில், டாக்டர் சுவாமி அவர்களது முன்னெடுப்பில், கீழடி குறித்த தோற்ற மெய்ம்மை(Virtual Reality – VR) அரங்குகள் அமைத்து, பார்த்தோரைப் பரவசப்படுத்தியமை எல்லோராலும் பாராட்டப் பெற்றது. டாக்டர் சுவாமிநாதன் அவர்கள், சிலம்பு நிறுவனத்தின் https://silambu.us/ பெருந்தலைவராகவும் விளங்குகின்றார்.

Swaminathan “Swami” Subramanian, Ph.D.
Sr. Director of Innovation & Business Development
sswami@msu.edu

Swaminathan Subramanian, Ph.D., is the Sr. Director of Innovation & Business Development at the Axia Institute, where he is responsible for cultivating corporate partnerships and supporting research efforts, innovation and growth of the institute’s research portfolio. Dr Swami has over 16 years of experience in both research and industry roles. He is experienced in securing research funding, having been awarded over $15 million by the U.S. government for white space explorations. Prior to Eaton, Swami worked for Argonne National Laboratory and supported Department of Energy (DOE) funded programs.

பேரவையின் அறிவியற்தேனீக்குழுவினையும் முனைவர் அவர்களையும் பயன்படுத்திப் பயன்கொள்வது நமக்கான நல்வாய்ப்பு!

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.



-பழமைபேசி.

கருப்பையா கணேசன்


 கருப்பையா கணேசன்

வட அமெரிக்க வாகை சூடிப் போட்டிகளில் நேரடியாக வந்திருந்து கலந்து கொண்டோர் 655 பேர் எனில், பதிந்தோர் தோராயமாக 2000+ பேர் இருக்கும். 22 விதமான போட்டிகள், ஒவ்வொன்றிலும் 5 பிரிவுகள், ஆக மொத்தம் 110 தனிப்போட்டிகள். 85+ நடுவர்கள். இவை போக, தமிழ்த்தேனீ, குறள்தேனீக்கான தனிப்பதிவுகள்.

“build for change, nothing is harder" என்பதில் நமக்கு எப்போதும் தீராத காதல் உண்டு. எந்தவொன்றும் எளிதில் மாற்றம் செய்யக்கூடியதாக, புதுமையைப் புகுத்துவதாக இருத்தல் வேண்டும். கூடவே எளிமையாகவும் இருக்க வேண்டும். யாராவது, நான் மணிக்கணக்கில் உழைக்கிறேனெனும் பல்லவியையெடுத்தால், அங்கு கூர்திறன் வறட்சி என்று பொருள். கிடைக்கப் பெற்ற தரவுகளைச் சல்லி சல்லியாகப் பிரித்து, சீர்படுத்தி, முறைப்படுத்தி வரிசைப்படுத்திக் கொடுத்தவர்தாம் திரு. கருப்பையா கணேசன்(KG) அவர்கள்.

முதற்கட்டமாக, மின்னஞ்சல் அறுவடை செய்யப்பட்டது. கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல்களைக் கொண்டு, vavs@fetna.org துவக்கப்பட்டது. காரணம், எளிய தகவற்பரிமாற்றம் என்பதோடு, அடுத்த ஆண்டு போட்டிகளுக்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த 2000+ பேரிலிருந்து கூடுதலான மாணவர்களை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும். ஒவ்வோரு ஆண்டும், கணக்கினைச் சுழியத்திலிருந்து துவக்க வேண்டியதில்லைதானே? 2010ஆம் ஆண்டு, ஆண்டுதோறும் விழாவுக்கு வரக்கூடியவர்கள் 400 பேர் எனில், அது இன்று 1500 பேராக உயர்ந்திருக்க வேண்டும் அறுவடைகள் செவ்வனே நிகழ்ந்திருந்தால். இன்று அவரேவும், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதால் அந்த 2000+ பேரிலிருந்து கணக்கினைத் துவக்கி 4000 பேராக்கிக் காட்டுவாரென நம்பலாம். இஃகிஃகி.

போட்டிகளுக்கான கூட்டங்கள் நிகழும். சூம் லைசென்சுகள், கூட்ட ஏற்பாடுகளென எதற்கும் அழைத்த நேரத்துக்கு வருவார். திருவள்ளுவர் சிலை 25ஆவது ஆண்டுவிழா நிகழ்வு என நினைக்கின்றேன். நாங்களாகவே ஒரு விளம்பரக் காணொலியை உருவாக்கினோம். அது, பல மறுவேலைகளை(revisions) வாங்கியபடி இருந்தது. ஒரு கட்டத்தில், இது நல்லா இருக்குங்க கேஜி, நாம வெளியிட்டுவிடலாமெனச் சொல்ல, ’இல்லங்க, தரப்பரிசோதகர், ஊட்டு அம்மா இன்னும் எடிட் செய்யணும்னு சொல்லிட்டாங்க’. ‘அடங்கொன்னியா, இப்படித்தா எல்லாமும் நடந்துட்டு இருக்குதா இவ்ளோ நாளுமு?’ [கவுண்டமணி ஒயிலில் வாசிக்கவும்].

விழாவில் இன்னின்னவற்றைக் கவனிக்க வேண்டுமென அலைபேசியில் குறிப்புகள் கோக்கப்பட்டிருந்தது. அதன்படிக்கு இதுவுமொன்று. விழாவுக்காகக் களமாடியவர்களில் சிலர் விழாவுக்கு வரமுடியவில்லை. நம் கவனத்துக்கெட்டியதில் சில பேரைக் குறித்து வைத்திருந்தோம். திருமிகு அல்லி தாஸ் அவர்களும் திரு இராஜா வேணுகோபால் அவர்களும்தான் 2011ஆம் ஆண்டு போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். அப்படியாக நல்ல அறிமுகம் உண்டு. திருமிகு அல்லி அவர்களிடம் சென்று, இப்படியாகச் சிலருக்குப் பரிசில்பொதி வேண்டுமென்றேன். ஒருங்கிணைப்பாளர்களுக்குக் கணக்குத் தர வேண்டும், ஆகவே, பெயர், அவர்களின் பொறுப்பு முதலானவற்றைக் கொடுத்து பெற்றுச் செல்லுங்களெனச் சொன்னார். அவருக்குப் பெரிதும் நன்றியுடையவனாகின்றேன்.

கேள்விப்பட்ட தம்பி ஒருவர், அண்ணா நீங்க எனக்குத் தரலையென வருத்தப்பட்டார். “தம்பி, நீங்க விழாவுக்கு வந்திருந்தீங்க, குழுக்களின் சங்கமம், தன்னார்வலர் சிறப்பு நேரம்னு ஃப்ளையர் அடிச்சி, கூகுள் ஃபார்ம் போட்டு, அறை ஒதுக்கி, விளம்பரமெல்லாம் கூட நடந்திச்சி. கூட்டம் நடந்ததா, இல்லையா, கூட்டம் நடந்து நீங்க அதில கலந்துக்காம வுட்டடிச்சிட்டீங்ளான்னு தெரியலை” என அவர் மீதே திருப்பிவிட்டோம். ஆள், கப்சிப். எப்பூடி? அதைவிடுங்க, அப்படியான பரிசில்பொதி அனுப்பி வைக்கப்பட்டவர்களுள் KGயும் ஒருவர். ஏன்னா, Quality Controller, Content Approver Mrs.KG முக்கியம்லா பேரவைக்கூ?! 😍

𝐖𝐨𝐫𝐤𝐢𝐧𝐠 𝐬𝐦𝐚𝐫𝐭 𝐦𝐞𝐚𝐧𝐬 𝐮𝐬𝐢𝐧𝐠 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲, 𝐧𝐨𝐭 𝐣𝐮𝐬𝐭 𝐬𝐭𝐫𝐞𝐧𝐠𝐭𝐡, 𝐭𝐨 𝐦𝐨𝐯𝐞 𝐟𝐨𝐫𝐰𝐚𝐫𝐝.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.


11/17/2025

வள்ளிக்கண்ணன் மருதப்பன்

 


வள்ளிக்கண்ணன் மருதப்பன்


அறியாத பல பற்றியங்களைத் தொடர்ந்து உள்வாங்க நேரிடும் போது ஒரு கட்டத்தில் அயர்ச்சிதான் தோன்றும். அப்படித்தான் எனக்கும் தோன்றியது. நான், நேரிடையாகவே சொல்லியும் விட்டேன், ஆக்கப்பூர்வமாக, இது வரையிலும் இல்லாத அளவுக்குப் பொருளாளர் பணிகளில் செயலாற்றுகின்றீர்கள். கூடவே, மென்திறன்களையும் பார்த்துக் கொள்ளுங்களென. அவர் செய்த பணிகளின் விழுமியங்களைக் காணும் போதுதான், சொல்லியது கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் துவங்கியது.

2018 துவக்கம் பேரவைப் பரிவர்த்தனைகளின் வீச்சு பெருமளவுக்குப் பெருகிவிட்டது. நடப்புச் செயற்குழு பொறுப்பேற்றுக் கொண்டபின் இடம் பெற்றிருக்கும் ஆவணமயமாக்கத்தின் (Bookkeeping) வீச்சு மெச்சத்தக்கது.

வெளியிலிருந்து பார்க்கும் பொதுப்பார்வையாளன் என்ற முறையில் நமக்குக் காணக்கிடைப்பவை கொஞ்சமே கொஞ்சம். அதன் அடிப்படையிலேயேகூட நாம் சொல்லிவிட முடியும், Generally Accepted Accounting Principles( GAAP ) தழுவிய செயற்பாடுகளில் மேம்பாட்டினை.

அமைப்பின் நிதிநிலை அறிக்கை (Statement of Financial Position), செயல்பாட்டு அறிக்கை (Statement of Activities), பணப்புழக்க (Cash Flow Statement) அறிக்கையெனப் பிரித்தாளுதல்; மின்னஞ்சல்/வாட்சாப் முதலானவற்றினை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிராமல், மென்பொருளைப் பாவித்து உள்கட்டுப்பாடுகளை நிறுவி, அதற்காய்க் குரல் கொடுப்பது போன்றவற்றையெல்லாம் நாம் காண நேர்ந்தது.

பொறுப்பேற்றுக் கொண்ட சில மாதங்களிலேயே, பொதுவெளியிலேயே சொன்னார், “குறைவான விலையில், மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். மிச்சமாகிவிட்டால், தொடர்ந்து அடுத்த வருசத்துக்கு யூஸ் செய்துக்கலாம், ப்ளா, பளா...”. பொறுப்புக்கிடைத்த குதூகலத்தில் சொல்கின்றார் போல இருக்கின்றதெனக் கடந்து போய்விட்டாயிற்று. 

பேரவையின் மதுரை மாநாடு முடிந்த ஓரிருநாள்களில், பல வடிவமைப்புகளையும் பலருக்கும் அனுப்பிக் கருத்துக் கோரி, இன்னின்னதுக்கு இவ்வளவு விலையெனச் சொன்னாரே பார்க்கலாம். திகைப்பாக இருந்தது. “நீங்க இறக்குங்க நண்பரே மொத்தமா” என மறுமொழியிட்டோம் மற்றவர்களுடன் சேர்ந்து நாமும். இஃகிஃகி. அப்படியாக, எல்லாரது ஒப்புதலையும் பெற்றுச் சேர்ந்ததுதான் பதக்கங்கள், கோப்பைகள், உறைகள், மற்ற மற்றவை. 

பல பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வந்துவிட்டார் பொருளாளர். வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கென சிறப்புப்பதிவு முன்வரைவு.

  • கட்டணம் கூடுதல் என்பதால் மாணவர்கள் பாதிப்படையக் கூடாது.
  • சலுகைகள் அளிப்பதால் விழாவுக்குப் பொருளாதாரப் பின்னடைவு வந்து விடக் கூடாது.
  • கூடுதல் கூட்டம் கூட்டிவிடுவதால், வளாகத்தின் கூடுதல் கட்டணச்சிக்கல் (buy-out) நேர்ந்து விடக் கூடாது.
  • திருவிழாவின் பணப்புழக்கத்துக்கொப்ப சரியான நேரத்தில் செயற்படுத்த வேண்டும்.

இப்படியான கொக்கிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிலைமையை வீழ்த்தக் கூடியவை. அப்படியான நிலை நேராதபடிக்கு, ஒரு விழுமிய நிலையிலான(sweet spot)  முன்வரைவினை எல்லாருக்கும் முன்வைத்து விவரித்தவிதம் ஏற்புடையதாக இருந்தது. 

செயற்குழு, வழிகாட்டுதல்க்குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, பதிவுக்குழுத் தலைவர் முரளி , வட அமெரிக்க வாகை சூடி ஒருங்கிணைப்பாளர் பரணி ஆகியோருடன் சேர்ந்து பணியாற்றி, போட்டிகளில் இடம் பெற்றிருக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு, தனிப்பட்ட மின்னஞ்சல்(personal package delivery mail), இரவோடு இரவாக அனுப்பி வைத்தார். இப்படியாக, பொருளாளர் வள்ளிக்கண்ணன் அவர்களது உதவிகளும் வட அமெரிக்க வாகை சூடியின் வெற்றியில் தனியிடம் பிடிக்கின்றன.

𝐒𝐭𝐫𝐨𝐧𝐠 𝐟𝐢𝐧𝐚𝐧𝐜𝐢𝐚𝐥 𝐜𝐨𝐧𝐭𝐫𝐨𝐥𝐬 𝐭𝐮𝐫𝐧 𝐬𝐭𝐫𝐚𝐭𝐞𝐠𝐲 𝐢𝐧𝐭𝐨 𝐬𝐮𝐬𝐭𝐚𝐢𝐧𝐚𝐛𝐥𝐞 𝐩𝐞𝐫𝐟𝐨𝐫𝐦𝐚𝐧𝐜𝐞.

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.


[என்னிடம் பலரும் சொன்னது போக, வாரா வாரம் மனைவியார் சொல்வதும் இதுதான். ’ஃபெட்னாக்காரங்க உருப்படியா ஒரு வேலை பார்த்திருக்காங்க, இந்த bagஉ’.

பிள்ளைகள் மூவரும் உறைவிடப்பள்ளிகளில் தங்கிப் படிக்கின்றனர். வாராவாரம் அவர்களுக்கு உணவுக்கிண்ணங்கள் செல்கின்றன; உறைத்திட்டுகள் இதற்குள் புதைக்கப்பட்டு. அவர்கள் பாராட்டும் போது, நாம் மனத்திற்குள் சொல்லிக் கொள்வது, “வள்ளிக்கண்ணனாரே நல்ல வேலை பார்த்து வுட்டீரப்பூ!”. இஃகிஃகி.]

11/16/2025

செளந்தர் ஜெயபால்

செளந்தர் ஜெயபால்

பொதுவாக ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்ப வழிகாட்டி என்பவர் என்னவெல்லாம் அறிந்திருக்க வேண்டும்?  பல்வேறு தொழில் நுட்பங்கள், தளங்கள் , கருவிகள் பற்றிய பரந்த புரிதல் அவசியம். இதில் கிளவுட் கம்ப்யூட்டிங், தரவுத்தளங்கள், மின்வெளிப்பாதுகாப்பு (Cybersecurity) ஆகியவையும் அடங்கும். புதிய தொழில் நுட்பங்களின் வரவினை அப்போதைக்கப்போது அறிந்து பயன்பாடுகளின் சூழல்களை இனம் காணக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். எல்லாருக்கும் ஒரு மனக்கண் இருக்குமாயின் இவருக்கோ பத்து மனக்கண்கள்.

தமிழ்க்கல்வி, இலக்கியம், ஊடகம், தொழில்நுட்பப்புலத்தில் தமிழ்மொழி வளர்ச்சி, தமிழிசை முதலான தளங்களில் சமகாலப்பயணியாக இருந்து கொண்டு, தமிழ்ப்பள்ளி நிர்வாகி, தமிழ்நாட்டு இணையக்கல்விக் கழக ஆலோசனைக்குழு உறுப்பினர், படைப்பாளிகளின் தொழில்நுட்பப் புரவலர் எனப் பங்காற்றி வருபவர்.

புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துவது, சீர்திருத்தங்களை வலியுறுத்துவது போன்றவற்றில் முன்னோடி. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையில் காசோலைகள் பெறுதல், பணமாகக் கொடுத்தல் போன்ற பரிவர்த்தனைகள் இடம் பெற்றிருந்த காலத்தில், எவ்வளவு நிர்வாகப் பணிகளின் சுமை இருந்திருக்குமென நினைக்குங்கால் மலைப்பாக இருக்கின்றது. அந்தச்சூழலில்தான் நம்மவர் இணையத்தினூடாகப் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்துகின்றார்.  அதிலிருந்து பல பணிகள்.

”மாப்ள அவரு; ஆனா சட்டை என்னுது” எனும் சொல்லாடல் நாமனைவரும் அறிந்ததே. அதையே மாற்றிச் சொல்ல வேண்டியிருக்கின்றது, “சட்டை அவருது, ஆனா மாப்ள நாங்க”. இஃகிஃகி. தொடர்ந்து புதுப்புது யோசனைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார். எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு, வாய்ப்பமைகின்ற தருணத்தில் செயல்படுத்துவது மற்றவர்கள். 

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இருக்கும். அப்போதேவும், “போட்டிகளை அப்படி நடத்த வேண்டும். இப்படி நடத்த வேண்டும். கேன்வா உள்ளார கொண்டு வரவேண்டும். இப்படியாகப் பலப்பல”. செய்யறிவு நுட்பங்கள் துவக்ககாலத்தில் சிற்சிறு வழங்கிகளாக(service) இடம்பெற்றன. அப்போதேவும் தமிழ்ப்பணிகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதை நமக்கெலாம் அறிமுகப்படுத்தியவர். தற்போது இயக்கிகளாக(agent) பரிணாமம் கொண்டுள்ளன அவை. அதுகுறித்தெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போதுதான், தொழில்நுட்பத் தளத்தில் மாணவர்கள், போட்டிகளெனச் சொல்லி, அறிவியற்தேனீ எனும் புதுப்பிரிவின் தேவையை உணர்த்தினார். உணர்த்தியதோடு மட்டுமல்லாமல், அதற்கான ஓர் அறிஞர் இருக்கின்றாரெனவும் அறிமுகப்படுத்தினார். அப்படி அமைந்ததுதான் அறிவியற்தேனீக்குழு. யோசனை அவருடையது, பெயர் சூட்டிக் கொண்டது நாங்கள், “சட்ட அவ்ருது, மாப்ள நாங்க”.

அதிரடிப் பேர்வழி. புதிய செயற்குழு அமைந்து, தன்னார்வலர்களைத் திரட்ட வேண்டும். அடையாளம் காணப்பட்ட 31 குழுக்களுக்கு, தலா பத்துப் பேர் என்றாலும், 310 பேர் போதுமானது. இவரின் செய்திறன், 450 பேருக்கும் மேலாக விண்ணப்பித்திருந்தனர். இஃகிஃகி. “விழான்னா, டீ, காப்பி, எப்ப வேணும்னாலும் புடிச்சிக் குடிக்கிறமாரி இருந்துட்டாப் போதும். பாதிப் பிரச்சினை இருக்காது”, இப்படியெல்லாம் அடுத்தடுத்து எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார். அவற்றைக் கவ்விக் கொண்டால் நமக்கு நல்லது. 

அறப்பணிகளில் ஈடுபடும்போது, நம் எண்ணங்கள் தன்நலத்தைத் தாண்டிப் பொதுநலத்தை நோக்கிச் செல்கின்றன. இது மனத்திலுள்ள பதற்றம், பேராசை, குறைபாடுகள் பற்றிய கவலைகளைக் குறைக்கின்றன. மாறாக, அறப்பணிகளுக்குச் சென்ற இடத்தில் தன்னலங்களை முன்னிறுத்துகின்றபோது, ஏதோவொரு வடிவில் அது நம்மையே பதம்பார்க்குமென்பார் செளந்தர் ஜெயபால் அவர்கள். அறப்பணிகள் மூலம் ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணைவது, நம் சமூகப் பிணைப்புகளை வலுப்படுத்துகிறது. ஒரு நல்ல சமூகத்தின் அங்கமாக இருப்பதன் மூலம் வாழ்வியல் சுகம் கிடைக்கிறது.

Soundar’s dedication to Tamil-related charity work shows how passion can transform communities. His constructive contributions remind us that 𝐞𝐯𝐞𝐧 𝐨𝐧𝐞 𝐩𝐞𝐫𝐬𝐨𝐧’𝐬 𝐜𝐨𝐦𝐦𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 𝐜𝐚𝐧 𝐬𝐩𝐚𝐫𝐤 𝐚 𝐰𝐚𝐯𝐞 𝐨𝐟 𝐩𝐨𝐬𝐢𝐭𝐢𝐯𝐞 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞. 

வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.

-பழமைபேசி.