8/24/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 2

கொஞ்ச நாளைக்கு முன்னாடி "கவி காளமேகத்தின் தாக்கம்"ங்ற தலைப்புல இடையினம், மெல்லினம், வல்லினம் தனித்தனியா அமைஞ்ச மாதிரி பாடல் எழுதி பதிய வெச்சு இருந்தேன். நல்ல வரவேற்பு! அதன் தொடர்ச்சியா இப்ப இந்தப் பதிவு. கவிதைகள்ல ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவின்னு நாலு வகை இருக்குங்க. புத்தம் புதுசா, யாருமே இது வரைக்கும் பாடாத ஒரு பொருள்ல, பாடச் சொன்ன உடனே பாடினா அது ஆசுகவி. இசை, இனிமை, உவமை, உவமேயம்னு பலதும் கொண்டு பாடினா அது மதுரகவி. ஒரு சித்திரத்துல எப்படி ஒன்னு ஒன்னையும், பாத்து பாத்து, எது எது, எங்க வருமோ அது மாதிரி ஒரு ஒழுங்குல சொற்களை வெச்சுப் பாடினா அது சித்திர கவி. பலதும் கொண்டு பல வடிவங்கள்ல சொற்களை அமைச்சுப் பாடினா அது வித்தார கவி. இதுல உட்பிரிவுகளும் இருக்கு. சித்திரக் கவி வகைல இருபதுக்கு மேல இருக்கு. அதுல உதடு ஒட்டாமப் பாடினா, அது நீரோட்டகம். அதாவது ஓடைல நீர் ஓடுற மாதிரி ஒரு சீராப் போய்ட்டு இருக்கும். உதடு ஒட்டியும் குவிஞ்சும் பாடினா அது ஒட்டியம்.

இப்ப நீரோட்டகத்துல நான் பெத்த மகளை மையப்படுத்தி ஒரு கவிதை! அதாவது ப, ம, உ, ஊ, ஒ, ஓ, ஒள, வ இந்த எழுத்துக சொல்லுல வராமப் பாடினா மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாது, குவியாது பாருங்க:

அழகே, கனியே, கணையே, எந்தன் நிலாளே,
கணணழகே, நெஞ்சே, தயாளினியே, தென்றல்நீ!
நாசிநிறை காற்றே, சீரே, எந்தன்ஆசை அறிநீ!!
நின்நகை காணல் சால்நிறை ஆகின்றேன்;
கலையரசி நீ ஆக, இறை ஆசி நினைச்சேர,
யான் ஈசனின் தயா இறைஞ்சி!!!


பொருளுரை: அழகே, கனியே, கணையாழி போன்றதொரு சிறப்பே, எந்தன் நிலா மகளே, விழியழகே, நெஞ்சில் எப்போதும் நினைவாய் இருப்பவளே, கருணையுள்ளம் கொண்டவளே, என்வாழ்வில் தென்றலாய்ப் பிறந்தவள் நீ. என் சுவாசமே, செல்வச்சீரே, என் ஆசை அறிவானவளே, உன் சிரிப்பைக் கண்டால் எனக்கு நெஞ்சம் நிறையும். நீ கலைகளில் சிறப்பு பெற, இறைவன் ஆசி உமக்குக் கிடைக்க, நான் எல்லாம் வல்ல இறைவன் அந்த சிவபெருமானின் அருள் வேண்டி இறைஞ்சுகிறேன்.


மேலதிகத் தகவல்: பொருள், அடி, பா, அணி முதலிய கொடுத்த பின், மற்றவர் "பாடும்" என்று சொன்னவுடன், பாடுவோன் ஆசுகவியாம். சொல்லினிமை, பொருளினிமை, தொடை, தொடை விகற்பம், செறிய உருவகம் முதலிய அலங்காரத்துடன் இன்னோசையுடைதாய் அமுதமுறப் பாடுபவன் மதுரகவியாம். மாலைமாற்று, சக்கரம், சுழிகுளம், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, காதைக்கரப்பு, கரந்துரைப்பாட்டு, தூசங்கொளல், வாவனாற்று கூடசதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்துப்பா, வல்லினப்பா, மெல்லினப்பா, இடையினப்பா, சித்திரக்கா, விசித்திரக்கா, வித்தாரக்கா, விகற்பநடை, வினா உத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்துவருத்தனை, நாகபந்தம், முரசபந்தம், நீரோட்டகம், சித்து, ஒருபொருட்பாட்டு, பல பொருட்பாட்டு, மாத்திரைப் பெருக்கம், மாத்திரைச் சுருக்கம், எழுத்துப் பெருக்கம், எழுத்துச்சுருக்கம் இவை முதலிய தெரிந்து பாடுவோன் சித்திரக்கவியாம். மும்மணிக்கோவை, பன்மணிமாலை, மறம், கலிவெண்பா, தசாங்கம், மடல் ஊர்தல், கிரீடை, இயல், இசை, கூத்து, பாசண்டத்துறை இவை முதலிய விரித்துப்பாடுவோன் வித்தாரக்கவியாம்.

(இனியும் வரும்....)

9 comments:

Indian said...

Wow!!!...

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மணி,

உண்மையில உங்கள் பதிவுகளைப் பார்கக பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தமிழ் வலை நுகர்வோர் என்னவோ தெரியவில்லை உங்கள் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டமிடுவது குறைவாக இருக்கிறது.

உங்கள் கவிதைகள் மிக மிக அழகாக இருக்கின்றன்.

தமிழ் said...

/அழகே, கனியே, கணையே, எந்தன் நிலாளே,
கணணழகே, நெஞ்சே, தயாளினியே, தென்றல்நீ!
நாசிநிறை காற்றே, சீரே, எந்தன்ஆசை அறிநீ!!
நின்நகை காணல் சால்நெஞ்சு நிறைகின்றேன்;
கலையரசி நீ ஆக, இறை ஆசி நின்சேர,
யான் ஈசனின் தயா இறைஞ்சி!!!/

அருமையான வரிகள்

பழமைபேசி said...

//
மதுவதனன் மௌ. said...
மணி,

உண்மையில உங்கள் பதிவுகளைப் பார்கக பெருமையாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். தமிழ் வலை நுகர்வோர் என்னவோ தெரியவில்லை உங்கள் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டமிடுவது குறைவாக இருக்கிறது.

உங்கள் கவிதைகள் மிக மிக அழகாக இருக்கின்றன்.

//
நண்பா,

நன்றி! உங்களைப் போன்று தமிழின் மீது அக்கறையுள்ளவர் பயணடைந்தால் போதுமானதே!!
நீங்கள் தவறாமல் என் பதிப்புகள் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!

பழமைபேசி said...

//திகழ்மிளிர் said...
/அழகே, கனியே, கணையே, எந்தன் நிலாளே,
கணணழகே, நெஞ்சே, தயாளினியே, தென்றல்நீ!
நாசிநிறை காற்றே, சீரே, எந்தன்ஆசை அறிநீ!!
நின்நகை காணல் சால்நெஞ்சு நிறைகின்றேன்;
கலையரசி நீ ஆக, இறை ஆசி நின்சேர,
யான் ஈசனின் தயா இறைஞ்சி!!!/

அருமையான வரிகள்
//
பாராட்டுக்கு மிக்க நன்றி!!

Mahesh said...

அருமைங்க....அருமைங்க.... இந்த மாதிரி முயற்சி பண்றவங்க ரொம்ப சொற்பம்.... உங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள்...

// கலையரசி நீ ஆக, இறை ஆசி நின்சேர//

இந்த இடத்துல 'நினை சேர'ன்னு வரணுமோ?

// யான் ஈசனின் தயா இறைஞ்சி //

இங்க சந்தம் கொஞம் இடிக்கிற மாதிரி தெரியுதே... 'தயை இரைஞ்சி 'ன்னு வந்தா சரியா இருக்குமோன்னு தோணுது.. அதோட 'இரைஞ்சி'க்கு சின்ன 'ர' தானே? கெஞ்சுதல்ங்கற அர்த்தத்துல...

நான் சொன்னது தப்பாவும் இருக்கலாம்... தப்ப இருந்தா விட்ருங்க... பொழச்சு போறேன்...

பழமைபேசி said...

//@@Mahesh said...
அருமைங்க....அருமைங்க.... இந்த மாதிரி முயற்சி பண்றவங்க ரொம்ப சொற்பம்.... உங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள்...

// கலையரசி நீ ஆக, இறை ஆசி நின்சேர//

இந்த இடத்துல 'நினை சேர'ன்னு வரணுமோ?

// யான் ஈசனின் தயா இறைஞ்சி //

இங்க சந்தம் கொஞம் இடிக்கிற மாதிரி தெரியுதே... 'தயை இரைஞ்சி 'ன்னு வந்தா சரியா இருக்குமோன்னு தோணுது.. அதோட 'இரைஞ்சி'க்கு சின்ன 'ர' தானே? கெஞ்சுதல்ங்கற அர்த்தத்துல...

நான் சொன்னது தப்பாவும் இருக்கலாம்... தப்ப இருந்தா விட்ருங்க... பொழச்சு போறேன்...

//
நல்ல பின்னூட்டம், ஆக்கப் பூர்வமானதும் கூட..... மிக்க நன்றி! முதலாவது நீங்க சொன்னது சரி.
அடுத்தது 'இறைஞ்சி' தான். ரொம்ப நன்றிங்க மகேசு!

Mahesh said...

மிக்க நன்றி.... 'இறைஞ்சுதல்' உரத்து சொல்லுவது... அல்லவா? சரியாக புரிந்து கொண்டேனா?

பழமைபேசி said...

மகேசு, உடுமலைங்றதை மறுபடியும் மறுபடியும் நிரூபணம் செய்யுறீங்களே? மொக்கை போடுவார் மத்தியில் ஆக்கப்பூர்வமா இருக்கீங்க...

இரைந்து, இரைஞ்சி ---- சிதறிக்கிடப்பது, இரைந்து (மூச்சு வாங்கி)
இறைந்து --- மனமார வேண்டுதல்