7/03/2010

வட அமெரிக்கத் தமிழ்த் திருவிழா முதல்நாள்!

உவகை உவகை வட அமெரிக்கத் தமிழரின் கூட்டம்; வந்து குவியுதடா நெஞ்சில் உவகை உவகை! எவையும் தன்னுள் ஆக்கிய அமெரிக்கப் பெருவெளி எங்கும், அடடே தமிழனின் கூடுமொழி! உவகை உவகை!!

எவ்வருடமும் இல்லாதபடி, விழா துவங்குதற்கு முந்தைய நாளே ஒரு விழா நாள் போல்க் காட்சி அளித்தது என்றுச் சொல்வது மிகையானது அல்ல. அப்பப்பா, என்ன கூட்டம்? என்ன கூட்டம்?? பேரவை விழாவுக்குத்தான் என்ன கூட்டம்??

முக்கிய விருந்தினர்களை அறிமுகப்படுத்திய மாலை விருந்து நிகழ்ச்சி. வந்திருந்த விருந்தினர் எல்லாம், கூடிக் குலாவியதில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. மாநகர மேயர் விருந்தில் இருந்தவர்களை வெகு சுவாரசியமாக உசுப்பி விட்டமை இன்னுஞ் சிறப்பு.

கிட்டத்தட்ட 450 பேர் கலந்து கொண்ட அந்த மாலை விருந்து நிகழ்ச்சிகண்ட பேரவை நிர்வாகிகளே வியப்புற்றுத்தான் போனார்கள். இன்றைய முதல் நாள் கூட்டத்திற்கான வருகையும், இடம் பெறும் நிகழ்ச்சிகளும் இன்னும் எழுச்சியைக் கூட்டுமென்பதில் ஐயமில்லை.

மக்களொடு மக்களாக, சீயான் விக்ரம், சந்தானம், இயக்குனர் பாரதிராஜா, முனைவர் பர்வீன் சுல்தானா, நடிகைகள் ப்ரியாமணி, லட்சுமிராய் முதலானோர் வெகுவாக இயல்பாகப் பழகிப் பேசியமை கண்டு எல்லோரும் வியப்புற்றனர்.

நான் இன்னமும் விழா அரங்கத்திற்குச் செல்லவில்லை. விழா அரங்கத்தில் இருந்து, கல்லெறி தூரத்தில்தான் இருக்கிறேன். பின்னிரவு வரை, கவிஞர் தாமரையுடன் இருந்து, கவியரங்கிற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வந்தேன். எனது ஒருங்கிணைப்பில் நிகழ்விருக்கும், கவியரங்கிற்கு உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாடுகிறேன்.

மீண்டும் விழா அரங்கத்தில் இருந்து தொடர்பு கொள்கிறேன். மதில் மேல் பூனையென இருக்கும் வட அமெரிக்கத் தமிழர்காள், புறப்படுகாண்; வந்திடுகாண்; எழுச்சியுறும் தமிழர்காண்!!


வந்து செல்லுங்கள்! விழா நிகழ்ச்சிகளைக் கண்டு செல்லுங்கள்!!
--- இன்றைய நிகழ்ச்சிகளை உடனுக்குடன் உங்களுக்கு அளிக்க இருப்பவர், உங்கள் பழமைபேசி!