7/04/2009

வட அமெரிக்க தமிழ்த் திருவிழா: வென்றாக வேண்டும் தமிழ்!

வணக்கம்! சனிக்கிழமை காலை 8.30 மணி, வட அமெரிக்க தமிழ்த் திருவிழா அரங்கு, மங்கல இசை முழங்கிக் கொண்டு இருக்கிறது. அரங்கத்துள் தமிழ் மக்கள் வந்த வண்ணம் உள்ளார்கள். காலைச் சிற்றுண்டியும் விழாக் குழுவினர் வழங்கி வருகிறார்கள்.

ஒன்பது மணிக்கெல்லாம் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் துவங்கிவிடும். இடைப்பட்ட இந்த நேரத்தில், ஒரு மணித்துளியில் சிந்தனை வயப்பட்டு, அரங்கில் நான் வாசித்ததை உங்கள் பார்வைக்கு இடுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

இங்கே சகோதரி ஒரு நிமிட நேரத்தில் கவிதை எழுதி வாசிப்பவர்கள் இருந்தால், உடனே மேடைக்கு வந்து கவியரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். பெற்ற அன்னைக்குப் பணிவிடை செய்ய, கால அவகாசம் வாய்த்திடல் வேண்டுமா? இல்லவே இல்லை. அதனால்தான், எம் தமிழன்னைக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு நான் உங்கள் முன்னே நிற்கிறேன்!

அன்னைக்குப் பணிவிடை செய்திட
காலஅவகாசம் வேண்டுதல் வேண்டுமோ?
அன்னைக்குப் பணிவிடை செய்திட
காலஅவகாசம் வேண்டுதல் வேண்டுமோ?

மூத்தகுடி வாய்த்த
மனிதம் செழிக்கச் செய்த
மாமழையாய்க் கனிவு சொரியும்
இம்மாமழைத் தமிழுக்குப் பாதகம்
செய்திடல் ஆகுமோ? அது
இப்புவிக்குப் பெருமையாமோ? அது
இப்புவிக்குப் பெருமையாமோ??

இனம் வாழ, பண்பாடு தளைய
மொழி சுவாசித்திடல் வேண்டும்! தாய்
மொழி சுவாசித்திடல் வேண்டும்!!

தமிழ் என்றால் இனிமை; நம்
தமிழ் என்றால் இனிமை! இனிமைக்கு
ஏதடா உவர்ப்பு? இனிமைக்கு
ஏதடா உவர்ப்பு??

கவிகாளமேகம் சிந்தனை பொழிந்த
தமிழுக்கு இந்தப் பேரன்மார் கூட்டம்
இருக்கும் வரையிலும் இடரேது?இந்தப்
பேரன்மார் கூட்டம் இருக்கும்
வரையிலும் இடரேது??

தன்மகன் அம்பிகாபதிக்கு இடரென்பதால்
கம்பன் கவி நின்றுவிடுமா?
தன்மகன் அம்பிகாபதிக்கு இடரென்பதால்
கம்பன் கவி நின்றுவிடுமா?

ஊடகங்கள் ஊட்டும் ஊட்டுக்கு
ஊடகங்கள் ஊட்டும் ஊட்டுக்கு
எம்மொழி பட்டுவிடுமா?

சவால்கள் தகர்க்கப்படும்!
சிறப்புகள் பல செய்யப்படும்!!
சவால்கள் தகர்க்கப்படும்!
சிறப்புகள் பல செய்யப்படும்!!

வேதநாயகம் மாதவையா
வழிநின்று நாவல்கள்பல
படைத்திடுவோம்! தமிழன்னைக்குப்
படையல்பல படைத்திடுவோம்!!

புதுமைப்பித்தன் சொ.வி
வழியில் சிந்தனைச் சிறுகதைகள்
செதுக்கிடுவோம்; சிந்தனைச் சிறுகதைகள்
பல செதுக்கிடுவோம்!படைத்திடுவோம்!
தமிழன்னைக்குப் படையல்பல படைத்திடுவோம்!!

மணிப்பிரவாளம் தகர்த்தெறிவோம்! திமிங்கிலமாம்
தமிங்கலம் வென்றொழித்திடுவோம்! செம்மொழி
செழிப்புறல் செய்திடுவோம்! செம்மொழி
செழிப்புறல் செய்திடுவோம்!!

Hello என்றல்ல
அகோ எனச் சொல்லிடுவோம்!
மம்மி, டாடி என்றல்ல
அம்மா அப்பா என வணங்கிடுவோம்!!
அம்மா அப்பா என வணங்கிடுவோம்!!

busy என்பது முசுவாகட்டும்!
time இல்லை என்பது அவகாசம்
இல்லை என்றாகட்டும்!! தமிழன்
தமிழனாகட்டும்! ஆம்,
வென்றாக வேண்டும் தமிழ்! தமிழா
வென்றாக வேண்டும் தமிழ்!!

இந்த நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய உங்களனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன், வணக்கம்!! ”

ஒரு மணித்துளியில் சொற்கள் மட்டுமே குறிக்கப்பட்டு, வாசித்ததாகையால் பிழைகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது, இருப்பின் பொறுத்தருள்க!

வட அமெரிக்க தமிழ்த் திருவிழா(Fetna 2009): July 04, காலை ஆறுமணி

குடுகுடுப்பை எனக்கு அறுபதாம் கல்யாணம் என்று வதந்தி பரப்பி வருகிறார். இங்கு சென்று இந்த பாலகனின் புகைப்படத்தைப் பாருங்கள் மக்களே!

13 comments:

ILA (a) இளா said...

/வட அமெரிக்க தமிழ்த் திருவிழா: வென்றாக வேண்டும் தமிழ்!//
தலைப்பில் நாடகத்தன்மை, என் அனுதாபங்கள், கண்டனங்கள்.

பழமைபேசி said...

//ILA said...
/வட அமெரிக்க தமிழ்த் திருவிழா: வென்றாக வேண்டும் தமிழ்!//
தலைப்பில் நாடகத்தன்மை, என் அனுதாபங்கள், கண்டனங்கள்.
//

இடுகையோட தலைப்பா? அல்லது கவியரங்கத்தோட தலைப்பா?? ஒன்னும் புரியலையே??

சிநேகிதன் அக்பர் said...

தமிழ் கண்டிப்பா வெல்லும்.

வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

//ஒன்னும் புரியலையே??/
அதே விழாவில் எத்தனை அமெரிக்கா வாழ் குழந்தைகளுக்குத் தமிழ் எழுத படிக்கத் தெரியும். அத்துனை பேருக்கும் தெரிந்திருந்தால் தமிழ் வெல்லும், இல்லையெனில்?

பழமைபேசி said...

// ILA said...
//ஒன்னும் புரியலையே??/
அதே விழாவில் எத்தனை அமெரிக்கா வாழ் குழந்தைகளுக்குத் தமிழ் எழுத படிக்கத் தெரியும்.
//

ஐயா, இப்பத்தான் காவியான்னு ஒரு சிறுமி பரிசு வாங்கிட்டுப் போய் அமர்ந்திருக்காங்க... இங்கயே பிறந்த குழந்தை, திருக்குறளில் எண் சொன்னவுடன் குறள் உடனே வெளிப்படுகிறது.

நேர்றைக்கு இரவு விழாவில் பேசிய GA அரசுப் பிரதிநிதி தமிழையும் பாட மொழி ஆக்குவதற்கு உறுதி அளித்துள்ளார். மொத்தம் 135 குழந்தைகள் அட்லாண்டாவில் மட்டும் தமிழ் படிக்கிறார்கள். இதுக்கு என்ன சொல்ல?

ILA (a) இளா said...

அட்லாண்டாவில்(மட்டும்) எப்படி முடியுது? அதைச் சொல்லுங்க? காரணம் இப்படிப்பட்ட விழாக்களா? அல்லது பெற்றோரின் பயிற்சியா?

பழமைபேசி said...

//// ILA said...
//

நாம் பயந்து போய்ட்டேன்... என்னோட இடுகைத் தலைப்பைச் சொல்றீங்களோன்னு.....

தமிழருவி மணியன்: தமிழ்நாட்டை விட இங்கே தமிழ் பேசுகிறவர்கள் நிறையப் பார்க்கிறேன்.

ILA (a) இளா said...

சே. சே.. குழந்தைங்கள் தமிழ் படிக்கலைன்னு ரொம்ப வருத்தப்பட்டு இருந்தேன். அட்லாண்டாவுல நடக்கிறதப் பார்த்தா அங்கே வந்துரலாம் போல இருக்கே..

பழமைபேசி said...

இளா,

நான் கொசுறுச் செய்தியா போட்டிருக்கேன், என்னோட முந்தைய இடுகையப் பாருங்க.... இந்த மாதிரி விழாக்கள் நிச்சயம் பெற்றோரை சிந்திக்க வைக்கும்....

குலவுசனப்பிரியன் said...

Fetna நிகழ்வுகளை நன்றாகத் தொகுத்து வழங்கி உள்ளீர்கள். உங்கள் முந்தைய பல அருமையான பதிவுகளுக்கு பின்னூட்டம் இட இயலாமைக்கு வருந்துகிறேன்.

//Hello என்றல்ல
அகோ எனச் சொல்லிடுவோம்.//
இராம.கி ஐயா (http://valavu.blogspot.com) அவர்கள் தென் மாவட்டங்களில் புழங்கும் "ஏலே" (உ.ம் எல்லே இளங்கிளியே) என்பதை helloவுக்கு இணையாக காட்டுவார். அதன்படி 'எலோ' என்றாலே போதும் என்று நினைக்கிறேன்.

பழமைபேசி said...

@குலவுசனப்பிரியன்

Hi Buddy,

First, let me appologise for typing in English. This is word is originated since 2000 years. You might have noticed in dramas and all saying, 'Akho, mathi manthiriyaare....' 'akho, pillaai ingae vaarum...'

also I have placed G.U.Popes expalanation in one of my post.... Please search for 'akho or Hello' in my blog... you should be able to get more info....

Maran said...

ஐயா பழமை பேசி அவர்களே,

கவியரங்கத்தில் நீங்கள் வாசித்த கவிதையை இங்கு படிக்க முடிந்தது(என் மகனை தமிழ் வாசிக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றதால் கவியரங்க முடிவில் தான் வர முடிந்தது). ஒரு நிமிடத்தில் எழுதப்பட்டதா இது? ஆச்சரியம். அற்புதம். நீயா நானா நிகழ்ச்சியின் போது உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.

நன்றி
ஜெயா மாறன்

பழமைபேசி said...

//Maran said...
ஐயா பழமை பேசி அவர்களே,

கவியரங்கத்தில் நீங்கள் வாசித்த கவிதையை இங்கு படிக்க முடிந்தது(என் மகனை தமிழ் வாசிக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றதால் கவியரங்க முடிவில் தான் வர முடிந்தது). ஒரு நிமிடத்தில் எழுதப்பட்டதா இது? ஆச்சரியம். அற்புதம். நீயா நானா நிகழ்ச்சியின் போது உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
//

நன்றிங்க ஐயா, நீங்க எல்லாரும் சேர்ந்து பிரமாதப்படுத்தினதுக்கு முன்னாடி இது எம்மாத்திரம்?