8/12/2025

குரங்குமத்தேவைகள்

 


ஏன் வகுப்புத் தோழர்களின் தொடர்பும் நட்பும் இன்றியமையாதது?

சமகால நண்பர்கள்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இளையோர், மூத்தோரும் இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அனுபவமும் புதியனவும் நமக்குக் கிடைக்கும். ஆனாலும், சமகால வகுப்புத் தோழர்களின் நட்பும் தொடர்பும் முதன்மையானதும் அத்தியாவசியமானதுமாகும். ஏன்?

சமகால நண்பர்கள், சமகால வாழ்க்கைப் பயணித்தில் உடன் பயணிக்கும் பயணிகள். ஒரே காலகட்டத்தில் மேடு பள்ளங்கள், புறவுலக மாற்றங்கள், அனுபவங்கள், நிகழ்ச்சிகளைக் கண்டவர்களாக இருப்பர். பள்ளி முதல், வேலை, உறவுகள், விழாக்கள், வரலாற்று நிகழ்வுகள், பரிணாமங்கள் முதலானவற்றை எதிர்கொண்டிருப்பதால், எளிதில் புரிந்து கொள்ளவும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆளுக்காள் தேற்றுதல்களைப் பகிர்ந்து கொள்ளவும் எளிதாகவும் இயல்பாகவும் இருக்கும்.

உடல்நலம், மனநலம் ஆகியவற்றிலும் ஒத்த வயதுடன், ஒரே போன்ற சூழலைக் கொண்டிருப்பதால், அளவளாவலில் ஈடுபட உதவியாக இருக்கும். தத்தம் நிலைப்பாடுகள், அதற்கான தீர்வுகள், ஆதரவு முதலானவற்றை ஈந்து, மனவூக்கம் பெறுவது இயல்பாகவே நடக்கும். 

இறந்தகாலத்தைப் பற்றி விரித்துரைக்கத் தேவையில்லை. உடன்பயணித்தவர்களென்பதால், அவர்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும். சமூகத்தில் நாமும் ஒரு ஆள், நாமும் பங்கு வகிக்கின்றோம், தொடர்வதிலும் நல்லதொரு வாய்ப்பு அமையவிருக்கின்றது போன்ற உளநல மேம்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டே இருக்கும்.

வயது கூடக் கூட, வயதில் மூத்தோர் மறைந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நமக்கு யாருமே இல்லாதது போலத் தோன்றும். வயதில் குறைந்தோர் அந்நியமாகத் தோற்றமளிப்பர். அத்தகு நிலையில், சமகால நண்பர்கள் நிறையப் பேர் நம்முடன் இருப்பது அத்தகு வெறுமையை அப்புறப்படுத்தவல்லது.

நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பார்கள் சமகாலத்தவர்கள். நம் அடையாளத்தின் சாட்சிகளாக விளங்குவார்கள். மரணித்துக் காடேகும் வரையிலும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய, பகடி செய்ய என எதற்குமானவர்களாக இருக்க ஒரு வாய்ப்புத்துணையாக இருப்பர்.

Not just classmates, but partners in crime through every chapter of life. Jumunakhan is pacca four twenty, beware of him, stay away!

-பழமைபேசி.

No comments: