7/19/2008

கிராமியக் கணக்கு

ஒரு ஊரில் ஒரு மாந்திரிகன் இருந்தான். அந்த மாந்திரிகன் கோயில், கோயிலாகச் சென்று சாமி கும்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவன் ஒரு நாள் ஒரு நந்தவனத்திற்குப் போய் சில பூக்களைப் பறித்துக் கொண்டு வந்தான்.

நந்தவனத்தில் பறித்த பூக்களை எடுத்துக் கொண்டு ஒரு கோயிலுக்குச் சென்றான். அக்கோயிலின் மூலவருக்குச் சில பூக்களைச் சார்த்துவதற்கு முன், அக்கோயிலில் உள்ள குளத்தில், நந்தவனத்தில் பறித்த பூக்களை ஒரு மந்திரத்தைச் சொல்லி முனகினான். எனவே மாந்திரிகன் பறித்துக் கொண்டு வந்த பூக்கள் இரண்டு மடங்கானது.

இப்போது முதலாவது கோயிலில் கொஞ்சம் பூக்களைச் சாத்தினான். அங்கிருந்து அந்த மாந்திரிகன், இன்னொரு கோயிலுக்குச் சென்றான். தற்போது மீதமாக தன் கையில் இருந்த பூக்களை, ரெண்டாவது கோயிலின் அருகில் உள்ள குளத்தில் ஒரு மந்திரத்தைச் சொல்லி அமிழ்த்தினான். இப்போதும் மாந்திரிகன் கையிலிருந்த பூக்கள் ரெட்டித்தது. அப்பூக்களில் சிலவற்றை ரெண்டாவது கோயிலில் உள்ள சாமிக்குச் சாத்தி விட்டு, பிறகு மூன்றாவது ஒரு கோயிலுக்குச் சென்றான், அந்த மாந்திரிகன்.

இப்போதும் தன் கையில் இருந்த பூக்களை மூன்றாவது கோயிலின் அருகில் உள்ள குளத்தில் ஒரு மந்திரத்தைச் சொல்லி முனகினான். இப்போதும் மாந்திரிகன் கையில் இருந்த பூக்கள் இரட்டித்தது. இரட்டித்த பூக்களை எல்லாம் மாந்திரிகன் மூன்றாவது கோயிலில் சாத்தி விட்டு வீசிய கையும், வெறும் கையுமாகத் தன் வீட்டைப் பார்த்து நடந்து சென்றான்.

மாந்திரிகன் மூன்று கோயிலுக்கும் சாத்திய பூக்களின் எண்ணிக்கை சமமானது என்பது சிறப்பு. மாந்திரிகன் முதலில் நந்தவனத்தில் பறித்துக் கொண்டு வந்த பூக்கள் எத்தனை? ஒவ்வொரு கோயிலிலும் சாத்திய பூக்கள் எத்தனை??

கணக்கின் விடை பின்னூட்டத்தில் விரைவில்...

2 comments:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ரொம்ப சிம்பிளுங்க, மந்திரமொன்றும் தேவையில்லை,

இதற்கு ஏராளமான விடைகள் உள்ளன. முதலாவது பறித்தபூக்கள், இரண்டாவது சாத்திய பூக்கள் எனக்கொண்டால் விடைகள் கீழே தரப்படுகின்றன,

7, 8 அல்லது
14, 16 அல்லது
21, 24 அல்லது
28, 32 அல்லது
.......
......
......

பறித்தது 7 இன் மடங்காகவும் சாத்தியது 8 இன் மடங்காகவும் செல்லும்.

மதுவதனன் மௌ.

Anonymous said...

Addiyean in vidai sareeya ???
7 & 8