7/28/2008

வீடு வழிக்லீங்களா?

மக்கிரி, மொறம், கூடைனு எல்லாத்தையும் சாணீல மொழுகி விடுவாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் வெயில்ல வெச்சி எடுப்பாங்க. அப்ப அதுல இருக்குற சின்ன சின்ன ஓட்டை எல்லாம் அடைபட்டுப் போகும். அரிசி ராகி கம்புனு எந்த தானியமும், கூடை மொறத்துல இருந்து சிந்தாது. எங்க பாட்டி வீட்டை நெனச்சி பாக்குறன். ம்ம்... இன்னும் அப்படியே என் கண்ணுல நிழல் ஆடுது.

எங்கம்மா கூட பொறந்தது மொத்தம் எட்டு பேரு. பெரிய வீடு. இந்த தெருவுக்கும் அந்த தெருவுக்கும் இருக்கும். வீட்டுக்குள்ளயே சின்ன கெணறு. பத்து அடிலயே தண்ணி இருக்கும். சமயக்கட்டுல இருந்து ரெண்டு எட்டு வெச்சா கெணறு. பெரிய கொட்டம் பூரா சிமிட்டித்தரை. அப்புறம், வீடு முச்சூடும் சாணித்தரைதான். தண்ணி கொட்டிப் போனாலும் கவலை இல்லை. உடனே அந்த தண்ணி தரையில இறங்கி, காஞ்சி போயிரும். பத்து நாளைக்கு ஒருவாட்டி, வீடு பூரா சாணி போட்டு வழிப்பாங்க. அடுப்படி மட்டும் தினமும். எங்க சின்ன சித்திதான் வீடு வழிச்சு கோலம் போட்டு உடும். மொதல்ல வீட்டை நல்லா விளக்குமாரு வச்சுப் பெருக்கணும். அப்புறம் சாணிக்கரைச்சல்ல ஒரு துணியை முக்கி மெழுகிகிட்டே பின்னால வரணும். உக்காந்தவாக்குல கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து நகர்ந்து வரணும். மெழுகி முடிச்ச உடனெ இன்னும் ஒருக்கா வீட்டைப் பெருக்கணும். இப்ப கூடுதலா இருக்கற சாணித்தூள் மெத்துமெத்துன்னு சீமாருலே சுலபமாப் பெருக்க வரும். ஆனா தரையிலே இன்னும் ஈரம் கொஞ்சம் இருக்கும். அந்த சமயம் கோலமாவு எடுத்து நல்லதா அழகாக் கோலம் போட்டுருவாங்க எங்க சித்தி. அந்த ஈரத்துலெ அது ஒட்டிப் பிடிச்சு அழியாம மூணு நாள் அப்படியே இருக்கும். நாங்க ஒரு பத்து பதினஞ்சு வாண்டுக, குறுக்க போவோம்.... அங்க போவோம்... இங்க போவோம்.... சினிமா கொட்டாய்காரன், புது படத்துக்கு கூட்‌டு வண்டில நோட்டீசு குடுக்க வந்தா வாங்குறதுக்கு ஓடுவோம். ஒரே குதூகலமா இருக்கும்.

ம்ம்... இப்ப அந்த வீடும் இல்ல, சாணியும் இல்ல, மாடு கன்னுகளும் இல்ல, எங்க பாட்டியும் இல்ல, அந்த கூட்‌டு குடும்பமும் இல்ல, எங்கம்மா ஒரு பக்கம்... எங்க சித்தி ஒரு பக்கம்.... நாங்க அண்ணன் தம்பிக ஒரு பக்கம்.... என்னத்த சொல்ல?! அட, "ஆத்தோட விழுந்த எலை ஆத்தோட போகும். நீ பட்ட இன்ப துன்பம் உன்னோட வரும்"னு சொல்லுறது இதானோ?? கண்ணக் கட்டுதுடா சாமீ.... நீங்க போயி உங்க வேலைகள பாருங்க! எதோ உங்ககிட்ட சொல்லி, மனச ஆத்திக்கலாம்னு நெனச்சேன். நீங்க போயி, உங்க வேலைகள பாருங்க!!

No comments: