10/19/2017

நாய்க்கரச்சை

நாய்க்கரச்சை

இந்தகதையப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் நீங்கள் சீனிவெடி, இலட்சுமிவெடிகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மருந்துப் பொருட்களை சரியான விகிதத்தில் கலக்கி, அதற்கு நடுவே ஒரு திரியையும் வைத்து தாள்களால் நன்கு இறுகச்சுற்றப்பட வேண்டும். தென்னாட்டு மக்கள் நிரம்பிய இணையத்தில், இது குறித்து சகலதையும் அறிந்தவர்கள் இருப்பர். சுருக்கமாகச் சொல்லின், கன்பவுடரெனும் பொட்டாசியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் திரியின் மூலம் பற்ற வைக்கப்படும் நெருப்பு, காற்றோடு சேர்ந்து வினையாற்றி நைட்ரசன் வாயுவை உண்டு செய்ய, அதன் மூலக்கூறுகள் பெருக்க, உயர் அழுத்தம் ஏற்பட்டு இறுகச்சுற்றப்பட்டிருக்கும் காகிதச்சுற்றினைப் பிளந்தடிக்க காதைக்கிழிக்கும் வண்ணம் பேரோசை உருவெடுக்கும்.

நிற்க. மேலே குறிப்பிட்டபடி சரியான விகிதத்தில் நைட்ரேட் கலக்கப்படாவிட்டாலோ அல்லது இதர வேதிப்பொருட்களின் சமன்பாடு மாறிவிட்டாலோ, பற்றவைக்கப்படும் நெருப்புத் தீண்டும் போது இடம்பெறும் வினையின் செயல் மாறுபடும். வெடிக்காமால், புசுபுசுவென்று குற்றோசையை எழுப்பிக் கொண்டே சற்றுதொலைவு போய் கடைசியில் ஓய்ந்து படுத்துவிடும். இதை நாங்கள், பட்டாசு குசுவுட்ருச்சுடாவென்போம். வெடிக்காது.. மேலும், நாய் தன்வாலை வவ்வவ்வெனக் கடித்துக் கொண்டே நாலு சுற்றுச்சுற்றிவிட்டு ‘ங்க்கவ்’வெனச் சொல்லிப் படுத்துக் கொள்வதைப் போல, சிலவேளைகளில் ஓரிரு வெடிகள் கரகரவெனச் சுற்றிச்சுற்றி வந்து பின்னர் ‘பொடுக்’கென்று சன்னமான சத்தத்தோடு படுத்துவிடும் இதை நாய்க்கரச்சு நமுத்துபோச்சுறாவென்போம்.

இப்படியான வெடிகளை, சரமாக அல்லாமல் தனிவெடியாக விடுவது உண்டு. இலட்சுமிவெடி, சரசுவதி வெடியெல்லாம் கனமாக நிறைய இறுக்கத்துடன் கெட்டியான தாள்களால் சுற்றப்பட்டு பார்ப்பதற்கே திகிலூட்டக்கூடியதாக இருக்கும். இவற்றை நுவாக்ரான், டெமாக்ரான் தகரடப்பாவில் நுழைத்து திரிமட்டும் வெளியே தெரியும்படி பற்ற வைக்க வேண்டும். அப்படிப் பற்றவைக்கும் போது பெருஞ்சத்தத்தோடு டப்பாவையும் வானத்தில் தூக்கியடித்து கூடுதலான ஓசையை உண்டு செய்யும். சீனிவெடி எனப்படுகிற வெடிகள்,, லேசான சிவப்புவண்ணத்தாளில் சுற்றப்பட்டிருக்கும் இவற்றை நுவாக்ரான் தகரத்தில் வைத்தால் தூக்கியடிக்காது. கனத்தின் காரணம், வெடிச்சத்தமும் குறைந்து போகும். ஆகவே, இவற்றை கொட்டாங்குச்சியின் கண்களில் ஒன்றை நோண்டிவிட்டு, அதன் துளையில் திரியை வெளியே தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

மழை ஈரம் இருக்குமென்பதால், கற்கள், ஆட்டாங்கல், அம்மி, உரல் போன்றவற்றின் மீது பட்டாசுநுழைக்கப்பட்ட கொட்டாங்குச்சியை வைத்துப் பற்ற வைக்க வேண்டும்.

இப்படித்தான், காலை ஏழுமணி இருக்கும். வாணா கோபால்சாமி நாய்க்கர் தூக்குப் போசியில் பால் வாங்கிக் கொண்டு அந்த வீதி வழியாகப் போய்க்கொண்டிருந்தார். நாய்க்கர், பெரும் கோபக்காரர். பையன்களுக்கு அவரென்றால் பெரும்பயம். அவர் வருவாரென்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் எல்லாரும், பசனை கோயிலுக்கும் குருநாத வாத்தியார் வீட்டு மதிற்சுவருக்கும் நடுவே கும்பலாக நின்று கொண்டிருந்தோம். பாண்டியனின் தம்பி செளந்தரன்தான், சீனிவெடியைப் பற்ற வைக்கப் போனான். ’ஆராவது வர்றாங்களா பாருங்டா’ என்றான்.

சாமிநாதன் சாப்பாட்டுக்கடை தங்கவேலன் சுற்றிலும் முற்றிலும் பார்த்துவிட்டுச் சொன்னான், ‘ஆரும் வர்ல. நீ பத்த வெக்கிலாம்’.

செளந்தரனும் கையில் வைத்திருந்த ஊதுபத்தியால், கொட்டாங்குச்சியை குருநாத வாத்தியார் வீட்டு மதிலுக்கு வெளியே இருக்கும், மதிற்சுவர் மீது மாட்டுவண்டிகள் இடிக்கா வண்ணம் நடப்பட்டிருக்கும் அந்த முட்டாங்கல் மீது வைத்து திரியில் நெருப்பினை வைத்தான்.

வழக்கத்துக்கு மாறாக அது உடனே வெடிக்கவில்லை. ஒரு சில விநாடிகள் சற்றுக்கூடுதலான நேரத்தை, எடுத்துக் கொண்டிருந்தது. எங்களுக்கு அதன் பக்கத்தில் போகவும் அச்சம். அந்த இடைப்பட்ட வேளையில், பசனைகோயிலுக்கு மறுபக்க வீதியிலிருந்து வெளிப்பட்டு, பால்ப்போசியோடு வந்து கொண்டிருக்கிறார் வாணாகோபால்சாமி நாய்க்கர். எங்களுக்கா குலை நடுக்கம். எப்பவுமே ஊர்ப்பையன்களைப் பார்த்து மிரட்டலாக எதையாவது சொல்லிவிட்டுப் போவார். அன்று தீவாளி அல்லவா? நாய்க்கருக்கு வேறென்னவோ யோசனை. விறுவிறுவென வேட்டியை மடித்துக்கொண்ட நிலையில் பால்ப்போசியை தூக்கிக் கொண்டு பாண்டியனின் மளிகைக்கடை முன்பாக எட்டி நடையைப் போட்டார். முட்டாங்கல் மேலிருந்த கொட்டாங்குச்சிக்குள்ளிருந்த சீனிவெடி நாய்க்கரச்சை இடத் துவங்கியது.  கண்ணிமைக்கும் நேரத்தில், அவரின் கால்களுக்கிடையே ஆட்டம் போட்ட கொட்டாங்குச்சி உசுபுசுவென மேலெழுந்த வாக்கில் சரசரவென்றது.

அங்கிருப்பவர்களிலேயே நான்தான்  மிகவும் இளையவன். முதலில் இராசகோபால்தான் கத்தினான். ”தேங்காத்தொட்டி நாய்க்கர் வேட்டிக்குள்ள  பூந்த்துருச்சாட் இருக்கூ? டேய் ஓடுங்டா”.

இவன் போட்ட சத்தமும் கொட்டாங்குச்சியின் உரசலும் நாய்க்கருக்கு பதட்டத்தை உண்டுபண்ண, தூக்குப்போசியைப் போட்டு விட்டு வேட்டியை உதறத் தலைப்பட்டார் நாய்க்கர்.

வீதிமணலில் பால்ப்போசி கவிழ்ந்து மணல் ஈரத்தில் கலந்து கொண்டிருக்கிறது வாங்கி வந்த பால் முழுதும். அரக்கப்பரக்க வேட்டியை அவிழ்த்தவருக்கோ, தான் உள்ளாடை எதுவும் அணியாததைப் பற்றின கவலை இருக்கவில்லை. உதறலோடு உதறலாக உதறிக் கொண்டிருந்தார். கனம் கண்ட பையன்கள்,எல்லாரும் வெலவெலத்துப் பயந்து போய், சந்தைப்பேட்டைக்குள் நுழைந்து உப்பிலிமாரப்பன் பட்டிக்குள் ஓடிப் போய் கற்களின் மறைவில் ஒடுங்கிக் கொண்டனர்..

‘கண்டாரோலி பசங்க, எங்கிட்டியே வேலையக் காமிச்சிட்டாங்டா பாண்டியா!”, பசனை கோயல் தாண்டி கரியூடு, டீச்சரம்மா வீடு, ஆலாமரத்தூர் இராசகோபல் வீட்டு வரையிலும் ஓங்கி ஒலித்தது நாய்க்கரின் பேரலறல்.



No comments: