10/10/2017

Terrapin Point (ஆமைமுனை)

நயாகரா ஆற்றின் மேல்நுனிக்கு அருகில் நின்று, பெருங்கொள்ளளவு கொண்ட ஆற்றுப்பாய்ச்சல் அருவியாய் வீழ்வதைக் காணலாம். காண வருபவர்களுள் எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக ஆசியர்கள். ஊர்தித் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போதே குதூகலத்துடனும் அலைபேசியுடனுமாக ஆர்ப்பட்டமாய்ப் புறப்பட்டு வருகிறார்கள். எங்கும் பேச்சொலிதான். உள்ளம் பொங்கத் தற்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். புறப்பட்டு அடுத்த இடத்துக்குச் செல்ல விரைகிறார்கள். இருக்கும் எல்லா இடங்களையும் பார்த்துவிட வேண்டுமென்கிற வேட்கை.

 ஏற்கனவே பலமுறை சென்று வந்த இடம். எனினும் அமெரிக்கக் கரையில் இருந்து காண்பது இதுவே முதன்முறை. ஆனால், நம்மவர்களின் ஆர்ப்பாட்டம் என்னில் குறுக்கிட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு வெள்ளைக்காரக் குடும்பம்; இரு பிள்ளைகளோடு. மறுகோடியில், கூட்டத்தினின்று விலகி நின்று கொண்டனர். வானத்தைப் பார்க்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் இயற்கைக் காட்சிகளில் தொலைந்து போகிறார்கள். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. எப்போதாவது ஒருவரின் கண்கள் மற்றவரின் கண்களைப் பார்க்கின்றன. கைகளைப் பிடித்துக் கொள்கின்றனர். கணவன் மனைவியும் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நெடுநேரம் தியான மனநிலையில் இருந்து காலத்தை நையப்புசிக்கின்றனர். ஒரு பொழுதின் போது, அவர்களுக்கே தெரியாமல், எட்டுக் கண்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருகின்றன. காலத்தின் சாட்சியாய், இடத்தின் சாட்சியாய் ஒரு படம் எடுத்துக்கொண்டு புறப்படுகின்றனர். நிதானத்தை அளவிடும் பொருட்டுத்தான், குறுக்கே செல்கிறேன். நயாகராச்சாரலின் மென்மையைத் தோற்கடிக்கின்றன அவர்களின் புன்முறுச்சிந்தல்! அல்ல, பண்பாட்டுப் புன்னகை!!

No comments: