10/27/2017

அலப்பறை



"அதான, கெடக்கறது கெடக்குது கெழவனத்தூக்கி மணைல வையுங்கற கணக்கா நம்ம பொழப்ப பாத்தாத்தானே வாழ்க்க ஒழுங்கா வோடும்..!! சரிதானுங்கோ?! "

"பின்ன? ஒதிய மரந்தான் தூணாகுமா? இல்ல, ஓட்டாங் கிழிசலுத்தான் காசாகுமா??"

"அதச்சொல்லுங்க, கூள குடியைக் கெடுக்குமாம், குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்குமாம்..!! அப்படியில்ல இருக்கு இங்க பொழப்பு."

"சங்குல வார்த்தா தீர்த்தம், சட்டியில வார்த்தா தண்ணீங்றதெல்லாம் செரி வராதல்லொ? புள்ளீக பள்ளிக்கோடத்துல இருந்து வண்ட்டாங்கொ... போயி அவுகளுக்குத் திங்றதுக்கு எதுனா பொரி கல்ல குடுத்துப்போட்டு வாறன்... குஞ்சுகுளுவானுக அம்மணி, பொக்குன்னு போயிருமல்லொ??"

"அய்ய ஆமாங்கோ, பொடுசுவுளுக்கு திங்கறதுக்கு குடுத்துப்புட்டு, பொறவு சாவுகாசமா வந்து நம்ம பாட்டபூட்டங்காலத்து பழமொழிய நருவுசா எழுதிப்போடுங்கோ..!! காலத்துக்கு அழியாம காத்துப்புடலாமுங்க."

இடையில மூனாவது ஆளு வந்து:, "சபாஷ், சரியான போட்டி. ரெண்டு பேரும் இதோட விட்றாதீங்க. பழ மொழி பேசறதுல யாரு நம்பர் ஒண்ணுன்னு எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகனும். சும்மா பார்த்துக்குனு இருக்கறத விட, நாலு கத்துக்கின மாதிரியும் ஆச்சு. வயல்ல வேல பாக்க பொம்பள ஆளுங்கள கூப்பிட்டா, "கம்புக்கு களை வெட்டினமாதிரியும் ஆச்சு! அப்பிடியே தம்பிக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு!”

”அடுத்தூட்டுக்காரங்கிட்ட வாங்குன கடனும் அடிப்பக்கத்துச் சிரங்கும் அடிக்கடி அரிக்கும்ங்ற கதையா, இந்த ஊர் நெனப்பு அப்பப்ப சொறிஞ்சுட்ருக்குதுங்க... என்னவன்னச் சொல்றீங்க?”

”க்கும், கண்டா ஒரு பேச்சு, காணாட்டி ஒரு பேச்சு”

“கள்ளிக்கு வேலியும் களவுக்குக் கூலியுமெதுக்குன்னு கேட்டா இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவீக அப்புனு”

”இரும்பும் கரும்பாகும், இட்டாலியும் பாழகுங்கற கணக்கா..... இது இனி எங்க போயி முட்டிக்கிட்டு முடியுமோ தெரியலையே...!! ”

“பொன்னே பொன்னேன்னு தாங்கி பொடக்காலீல விட்டு வெளுக்காம இருந்தாச் செரி.”

“கெரக, நம்ம பாட்டுக்கு கண்ட பழமொழிய எழுதிப்புட்டா - “சங்கிலிபுங்லிங் காட்டுக்குள்ள சனிய புடுச்சுக்கிட்டு ஆடுதா, ஏன்னு கேட்க போன என்னையும் புடிச்சுக்கிட்டு ஆட்டுத்தான்னு ஆகிப்போயிடாத எம்பொழப்பு?! இந்த ரெண்டாஜாமா ரவைல என்ன புள்ள வெட்டிப்பேச்சுன்னு எம்மச்சா பேசுவாருங்கோ...அக்காங்..!! போயி சித்த தூங்கிப்போட்டு வாரானுங்க.”

“நமக்கெல்லா வாயிமட்டு இல்லைனா, நாயி கால என்னைக்கோ கவ்விக்கிட்டு போயிருக்குமுங்க...”

“அப்படி என்னாத்த சொன்னாங்க, பட்டும் பவுசும் பொட்டில இருந்துச்சாமா, காக்காசு சந்தையில துள்ளுச்சாமா!”

“கந்தன்னா காவடியாடத்தான செய்வான்?”

“சொல்றவனுக்கு வாய், செய்யறவனுக்குத்தான் சொமை”

“கடலுன்னா உப்பு கரிக்கும்... காடுன்னா தட்டான் ரீரீன்னு ரீங்கத்தான் செய்யும்.... சும்மா புதுப்பொண்ணாட்டம் சிணுங்கல் எதுக்குன்னேன்??”

”எச்ச எலைய எடுன்னு சொன்னதுக்கு எலைய எண்ணிகிட்டு இருந்தானாம்! ஆரப்பா அது? இங்க வந்து எத்தினி லைக்கு, எத்தினி பின்னூட்டமுன்னு எண்ணிகிட்டு இருக்கறதூ??”

உடன் களமாடியவர்கள்: Mythili Thyag Krishna Raj Thirumurthi Ranganathan

No comments: