5/18/2011

கொசு!!

கொசு என்கிற நுளம்புவைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக, ஆசிய நாடுகளில் வாழ்பவர்களுக்கு நுளம்புகளுடனான நெருக்கம் மிக அதிகம். இவற்றால் பெருந்தொல்லைக்கு ஆட்பட்டு, எரிச்சல் உறாதவர்களே இல்லை எனும் அளவுக்கு அதனால் பாதிக்கப்பட்டோர் ஏராளம்.

இவர்களுக்கு இடையே சற்று மாறுபட்டவர் இவர். பரிகோஷ் எனும் பெயரை, நுளம்புநாதன் என மாற்றி வைத்துக் கொண்டவர். நுளம்பண்ணா, நுளம்பண்ணா என, அப்பகுதி மக்களால் அன்பாக விளிக்கப்படுபவர்.

இதோ, நுளம்பண்ணன் பழமை பேச வருகிறார் நம் வாசகர்களுக்காக!

“அண்ணா, வணக்கங்ணா!”

“வணக்கங் தம்பி! நலந்தானே?”

“எங்கீங்ணா... ஒரே கொசுத் தொல்லை!”

“தொல்லைன்னா தொல்லை. இல்லைன்னா இல்லை. எல்லாம், மனசுதான் காரணம்!”

“சரி, அதைவுடுங்க. உங்களுக்கும் கொசுக்கும் என்ன தொடர்பு? உங்க பெயரை மாத்தி வெச்சிகிட்டதுக்கு என்ன காரணம்? அதைக் கொஞ்சம், எங்க எழிலாய்ப் பழமை பேசும் வாசகர்களுக்கு எடுத்துச் சொல்லுங்களேன்!”

”தூயதமிழ்ல இருக்குற பெயர்களைக் கேள்விப்படும் போதெல்லாம், என்னைய யாரோ கிள்ளுற மாதிரியே இருக்கும். இதை நான் எங்க தமிழ்ப் புலவர் கோணகிரி ஐயாகிட்டச் சொன்னப்ப, அவர்தான் இந்தப் பெயரை எனக்குத் தெரிவு செய்து கொடுத்தாரு. அன்றைய தினத்தில இருந்து, நான் நுளம்புநாதன்ங்ற பேருக்கு மாறிட்டேன்.”

“கிள்ளுற மாதிரி இருந்த உணர்வுக்கும், இந்தப் பெயருக்கும் என்ன தொடர்பு? ஒன்னும் புரியலையே?”

“கிள்ளலை, நுள்ளல்ன்னும் சொல்லலாம். எந்தவொரு பற்றியத்தையும், அதுக்குள்ள ஆழமாப் போயி அறிஞ்சுக்கும் ஆற்றல் நுளம்பம்னு சொல்றது. அதையொட்டித்தான் நுளம்புநாதன்ங்ற பேரு எனக்கு அமைஞ்சது!”

”முடியலை. நீங்களா சொல்வீங்க... அதையும் நாங்க நம்பணும். எப்படி இது?”

”நாங்களா சொல்றது கெடையாது. குறுந்தொகையில கூட வருதே?

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே!

கடுங்குளிர்காலமதில், ஊதக்காற்று பெரும் வேகமெடுத்து வீசும் நள்ளிரவு நேரம். புறக்கொல்லையில் இருக்கும் பசு, வேகமெடுத்து வீசும் ஊதக்காற்று தன் மேல் படுவதால் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது. அந்நடுக்கத்தின் ஊடாக நுளம்பு ஒன்று அப்பசுவினைக் கடிக்க, அப்பசுவோ தன் தலையைத் திருப்பி வாலால் வீசியடித்து அந்நுளம்பினைத் தூரத் துரத்தி விடுகிறது.

அப்படியாகத் தன் தலையைத் திருப்பும் போது, கழுத்து மணியின் ஓசையானது தலைவியின் காதில் விழுந்து நித்திரையைக் கலைத்துவிடுகிறது.

’கார்காலத்துப் பனியானது எம்மைக் குளிர்ச் சிறையில் ஆழ்த்துகிறது. அச்சிறையினை உடைத்துக் கொண்டு, என் கண்கள் மழை பொழிகிறது. என் தலைவன் உடன் இருப்பின், இந்நிலை வருமா எனக்கு?’ எனப் பசலை நோய் கண்டவளாய்த் தன் தோழியிடம் தலைவி கூறுவதாக அமைந்த பாடல்தான் இது.

இதிலே நுளம்பு எனும் சொல் வருகிறது கண்டாயா?”

“ஆகா! அருமையான தகவலுங்க நுளம்பண்ணே! அப்புறம் ஏன் நுளம்பைக் ’கொசு’ங்றாய்ங்க?”

“கொசு அப்படின்னா, சின்னது அப்படிங்ற அர்த்தம் வரும். கொசுவம், கொசுறு மாதிரியான சொற்கள் எல்லாம் அதனோட நீட்சிதான். சின்னதான தொங்கல், கொசுவம். சின்ன சின்ன சில்மிசம், கொசுறு! இப்படி நிறைய கொசுங்ற வேர்ச்சொல்லுல இருந்து வரும்.”

“நுளம்புன்னே சொல்ல வேண்டியதுதானே? அப்புறம் எதுக்கு கொசுன்னு இனியொரு சொல்?”

“தமிழறியா அரைகுறைகள் செய்யுற வேலைதான் இது. Mosquito அப்படிங்ற நுளம்பம், Culicidaeங்ற குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூச்சி. Culicidaeங்ற இலத்தீன் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கொசு. ஆக, கொசுக் குடும்பத்தைச் சார்ந்த நுளம்பம் அப்படின்னு வரணும். ஆனா, Mosquito அப்படிங்றதுக்கே கொசுன்னு சொல்லாக்கம் செய்துட்டாங்க யாரோ!”

“கேட்கிறேன்னு கோவிச்சுக்க கூடாது நீங்க. ’குசு’வுக்கும், ’கொசு’வுக்கும் எதனா தொடர்பு இருக்கா?”

“இருக்கு. ஆனா, இல்லை. குசு அப்படின்னா, மறைபொருளா ஊடுவது. ஆசனவாயில்ல இருந்து வெளியில் ஊடுவதும் குசுதான்.

காதும் காதும் வெச்ச மாதிரி, ஒரு பற்றியத்தை ஊடால விடுவதும் குசுதான். இதைத்தான் குசுகுசுன்னு சொல்றதுன்னும் சொல்றோம். குசுன்னு சொல்லத் தயங்கறவங்க கிசு கிசு ஆக்கிப்புட்டாங்க. தெலுங்குலயும் குசு குசுதான்; சப்பானிய மொழியிலயும் குசு குசுதான். வட மொழியில, உசிர் குசுர்ங்றாங்க.

குசு நாற்றம் கொசுவுக்கு ரொம்பப் பிடிக்கும். குசுன்னு மட்டும் அல்ல, கரியுமில வாயு அடங்கிய எதுவும் அதற்குப் பிடித்தமான ஒன்னு. ஆக, தூய்மையா இருக்கும் போது நுளம்பத்தின் இடைஞ்சல் குறைவா இருக்கும்.”

”நுளம்பண்ணே, குசுவுக்கும் கொசுவுக்கும் உண்டான வேறுபாட்டை நல்லாச் சொன்னீங்க. பொதுவா, கொசுங்ற நுளம்பு ஏன் நம்மைக் கடிக்குது?”

“ஆண் நுளம்பு நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான். நான் கொசு குடும்பத்தைப் பத்தி சொல்றேன். ஆண் நுளம்புகள் பொதுவா, தாவர அமிழ்தம்(nector) மற்றும் தாவர இரசங்களைத்தான் பருகும்.

பெண் கொசுக்களுக்கு, முட்டை வைப்பதற்காக, proteinங்ற புரதச் சத்து தேவைப்படுது. அதனால, இரத்தத்தை உறிஞ்சுகுழலால உறிஞ்சிக் குடிக்குது அது. அப்படி உறிஞ்சிக் குடிக்கும் போது என்ன ஆகுதுன்னா, அந்த பெண் கொசுவோட உமிழ்நீர், எச்சில், நம்மை உடம்புல இறங்கிடுது. அது, பல நோய் மற்றும் அசெளகரியங்களுக்குக் காரணமாப் போய்டுது.”

”சரிங்ணே, உங்களுக்கு கொசுனால எந்தத் தொல்லையுமே இல்லையா? நீங்க எப்படி அதை, எதிர் கொள்றீங்க?”

“நான் பொதுவா, தூய்மையாகவும் சுகாதாரமாவும் இருக்குறதை விரும்புறவன். அதனால அவ்வளவா என்னை அதுக கடிக்காது. ஆனா, நித்திரையில இருக்கும் போது காதுல புகுந்துட்டு, உர்ர்ர்ர்ன்னு சத்தம்வுட்டு மனுசனுக்கு எரிச்சலூட்டும்”

“அப்ப, அதை எப்படி சமாளிப்பீங்க?”

“பெண் கொசுக்கள்தான நம்மகிட்ட வருது? அதனால, பக்கத்துல படுத்துட்டு இருக்குற பொண்டாட்டிக்கு நல்லா நாலு அறை, ரய்ய்ய்யுன்னு உடுவேன். எனக்கு இருக்குற கோவம் எல்லாம் தாழ்ந்து போயிரும்.”

“என்னண்ணே சொல்றீங்க? அப்புறம் உங்களுக்கு எதும் நடந்துறாதா?”

“அதையெல்லாம் வெளில சொல்ல முடியுமா?”

“சரி விடுங்கண்ணே! அப்புறம் இந்த நுளம்பு, கொசு, தினாசு எல்லாம் ஒன்னுதானா?”

“கெடையாது, கெடையாது! கொசுக் குடும்பத்துல வர்றது நுளம்பும், தினாசும். தினாசுன்னா, நாய், ஆடு, மாடுகள்ள இருக்குற சிறு பூச்சி.”

“ஓ, ஆடு, மாடுகள்ல இருக்குறது? அப்ப, தினாசும் உன்னியும் ஒன்னா?”

“வேற, வேற!”

"சரிங்ணா. அப்புறம் கொசுவைப் பத்தின வேற தகவல்கள்?”

“கொசுக்கள் ஒரு அபூர்வமான பிறவின்னுதான் சொல்லணும். ஐந்து மாதங்கள் வரை வாழக் கூடியது. ஒரு வினாடிக்கு, முந்நூறுல இருந்து அறுநூறு முறை தன் சிறகுகளை வேகமா அடிக்கும் வல்லமை கொண்டது. ஒரு மணி நேரத்துல கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் பறக்க வல்லது.

ஒருவனுக்கு ஒருத்திங்ற முறைப்படிதான் கொசுக்கள் வாழ்க்கை நடத்தும். தன்னுடைய இணை எங்க இருக்குன்னு, அந்த பெண் கொசுவினுடைய சிறகடிப்பின் அதிர்வை வெச்சே கண்டுபிடிக்கும் தன்மை கொண்டவை ஆண் கொசுக்கள்.

ஒரு மனிதனின் சஞ்சாரத்தை, அம்மனிதன் வெளியேற்றும் கரியுமில வாயுவை மோப்பம் கொண்டு, எழுபத்தி அஞ்சு அடி தூரத்திலிருந்தே கண்டுபிடிச்சிடும் பெண் கொசுக்கள். பொதுவா, கொசுக்கள் பெண்களைத்தான் அதிகம் விரும்பிக் கடிக்கும்”

“நுளம்பண்ணே, நல்ல தகவல்களை அறியக் கொடுத்தீங்க. மிக்க நன்றி!”

”குசுவும், கொசுவும் இல்லாம நல்ல வாழ்க்கை வாழ வாழ்த்துகள்! நன்றி!!

12 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
கொசுவைக்கொண்டு யானை அளவு
(சங்ககாலம் முதல் விஞ்ஞானம் வரை)
ிவிஷயங்களை மிகச் சரளமாகச் சொல்லிபோகிறர்ீகள்
கொசுவில் கூட பெண் கொசுதான் கடிக்குமா ?
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Yoga.s.FR said...

///ஆண் நுளம்பு நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான்(நான் கொசு குடும்பத்தைப் பத்தி சொல்றேன்.)///“பெண் கொசுக்கள்தான நம்மகிட்ட வருது? அதனால, பக்கத்துல படுத்துட்டு இருக்குற பொண்டாட்டிக்கு நல்லா நாலு அறை, ரய்ய்ய்யுன்னு உடுவேன். எனக்கு இருக்குற கோவம் எல்லாம் தாழ்ந்து போயிரும்.”

///“என்னண்ணே சொல்றீங்க? அப்புறம் உங்களுக்கு எதும் நடந்துறாதா?”

“அதையெல்லாம் வெளில சொல்ல முடியுமா?”/// ஙே!!!!!!!!!!!!!!!!!!!

இராஜராஜேஸ்வரி said...

“நுளம்பண்ணே, நல்ல தகவல்களை அறியக் கொடுத்தீங்க. மிக்க நன்றி!”

பழமைபேசி said...

//Mahesh has left a new comment on your post "கொசு!!":

அப்ப "சொள்ளை"??? அது வேறயா//

அதுவும்தானுங்க... ஒல்லியா, சன்னமா இருக்குற்தச் சொல்றது சொள்ளைன்னு... உவமைப்பெயர்..

சொள்ளைக் கடில தூக்கமே வருல... இஃகி!

ஓலை said...

நுளம்புநாதன் அவர்களுக்கு வணக்கமுங்க!

kathir said...

ஆகா!

மாப்பு அசத்திப்புட்டீங்க!!!

ஒரு சந்தேகம் ரொம்ப நாளா இருந்துச்சு தெளிவாயிடுச்சு! :))

மதுரை சரவணன் said...

அற்புதமான தகவல்கள் ... பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்

கயல் said...

இஃகி! இஃகி! இஃகி!

LinuxAddict said...

Brother, One question, Kosu kku kusu varuma?

குடுகுடுப்பை said...

LinuxAddict said...
Brother, One question, Kosu kku kusu varuma?//

குசுவிற்கு கொசு வருமா?

பழமைபேசி said...

// LinuxAddict said...
Brother, One question, Kosukku kusu varuma?//

Birds don't typically carry the same kinds of gas-forming bacteria in their gut as humans and other mammals to help digest food, so there's nothing to let loose, says Mike Murray, a veterinarian at the Monterey Bay Aquarium in California.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...

குசுவிற்கு கொசு வருமா?//

உம்மைச் சுத்தியும் கொசு மொய்க்குறதுல இருந்தே தெரியுது....