10/08/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 4!

அவனாசி சாலை ஓரத்துல, குரும்ப பாளையத்துக்கும் அரசூருக்கும் நடுவில் இருக்கும் அழகான சிற்றூர்தாங்க, செங்கோட கவுண்டன் புதூர். அந்த ஊரில் வாழ்ந்த காலம் என் வாழ்க்கையில மறக்க முடியாத நாட்கள். பல கோவில்களுக்கும் மத்தியில் அமைஞ்ச ஊர்தான் அது.

வருசா வருசம், எதோ ஒரு ஊர்ல ஒரு நோம்பி வந்திடும். குறிப்பா, கோடைகாலத்துல குதூகலந்தான். அரசூர் மாரியம்மன் கோயில், முத்துக்கவுண்டன் புதூர் மாகாளி அம்மன் கோயில், அருகம்பாளையம் காளியம்மன் கோயில், உள்ளூர்ல தங்கநாயகி அம்மன் கோயில் இப்படி....

ஒரு மண்டலத்து நோம்பி, மூனு கிழமை(21 நாட்கள்) நோம்பின்னு வகை வகையாக் குறிப்பிட்டுச் சொல்வாங்க. முதல்ல நோம்பி சாட்டுவாங்க. அப்பறம் ஊர்த்தலைவர் கம்பம் போடுவாரு. கம்பம் போட்டவின்னாடி, அந்த மூனு கிழமையும், சாயங்காலம் சாயங்காலம் கம்பஞ் சுத்தி ஆடுவாங்க.

கொடுமுடி, செஞ்சேரின்னு போயித் தீர்த்தம் கொண்ட்டு வந்து சாமிக்கு படைப்பாங்க. நோம்பி அன்னைக்கு காலையில தீ மிதிக்கிறது, தேர் இழுக்குறது, விளக்கு மாவு, முளைப்பாரி, பூவோடு எடுக்குறதுன்னு கோலாகலமா இருக்கும். கடைசியா சாமி சப்பரம் எடுத்து, மஞ்சத்தண்ணி ஊத்துற வைபவமும்.

இதுல நாம கம்பஞ் சுத்துற பேர்வழிங்க. எங்க நோம்பின்னாலும் வங்கணனுக கூடச் சேந்துட்டு ஏழெட்டுப் பேராக் கிளம்பீருவோம். அங்க போயி வாத்தியத்துக்கு ஏத்த மாதர ஆடி, வேடிக்கை பாக்க வந்த அம்மணிககிட்ட பேர் வாங்குறதுல ஒரு குதூகலம்! மேழியாட்டம், தயிர் சிலிப்பி, தொக்குமிதின்னு அதுக ஒவ்வொன்னுக்கும் ஒரு பேரு இருக்கு.

முதல்ல ஒருத்தர், வாசல்ல இருக்குற அந்த தீபம் எரியுற கம்பத்துக்கு கீழ நின்னுட்டு சாமியப் பாத்து, பாட்டு அடிகளை ஒவ்வொன்னாக் கூவ, கூடி இருக்குறவங்க ‘சபாசு’ சொல்வோம். கடைசியில, போடுறா மத்தளத்தைன்னு முடிக்கவும், பறை அடிக்கிறவங்க எதோ ஒரு தாளத்துக்கு அடிப்பாங்க. அதைச் சரியாப் புரிஞ்சுட்டு, கூடி இருக்குறவங்க எல்லாம் கணக்குத் தப்பாம ஆடணும். இப்ப நினைச்சாலும், ஆடணும் போலவே இருக்கு; சரி ஒரு பாட்டைப் பாக்கலாம் வாங்க!


சின்ன முத்தாம் சிச்சிலுப்பை
சபாசு

சீரான கொப்பளிப்பான்
சபாசு

வண்ண முத்தாம் வரகுருவி
சபாசு

வாரிவிட்டா தோணியிலே
சபாசு

மாரியம்மா தாயே நீயி
சபாசு

மனமிரங்கித் தந்த பிச்சை
சபாசு

தற்காத்து நீகுடும்மா
சபாசு

உஞ்சன்னதிக்கு நாங்கதான வந்திடுவோம்
சபாசு

எங்கூரு மக்களைத்தான்
சபாசு

காப்பாத்த வேணுமின்னு
சபாசு

தனிச்சு அடிச்சா கூடாரம் எங்கமாரி
சபாசு

மாரிக்கு நல்லா நாங்க சீர்வரிசை
சபாசு

சிறப்பாச் செய்திடுவோம்
சபாசு

மாரியுந்தான் மனமிறங்கி மனசுவெப்பா
சபாசு

இப்பப் போடுகணக்கா மத்தளத்தை!
இப்பப் போடுங்கையா மத்தளத்தை!!

சொல்லி முடிச்சதுதான் தாமதம், பறை அடி காதைப் பொளக்குமில்ல! நாங்களும் சாமந்தாண்டி வெடியற வரைக்கும் ஆடுவம்ல?! என்னா சொகமான வாழ்க்கைடா சாமி!

நாம போடுற ஆட்டத்துக்கு அம்மணி கெரங்குச்சா இல்லையாங்குறது, ஆடி முடிச்சவுட்டு குடிக்கிறதுக்கு நீட்டுற சொம்புல தெரிஞ்சிடும்ல?! சொம்பு எதுவும் நீட்டுப்படாம, நாமளாப் போயித் தண்ணி கேக்குற சூழ்நிலைன்னா, நம்ம ஆட்டம் அன்னைக்கு எடுபடலைன்னு அர்த்தம்! இஃகிஃகி!!

சரி சரி, ஈரோட்டு மாப்பு கோவிச்சுக்குவாரு, வாங்க மேல்க்கரை பூந்துறை நாட்டுல எந்தெந்த ஊருக வருதுன்னு பாக்கலாம் இன்னைக்கு!


பூந்துறைசை வெள்ளோடை நசியனூ ரெழுமாதை
புகழ்சேர்ப் பாரிநகரம்
பூங்கமழு மீங்குயூர்பெ ருந்துறை சாத்தனூர்
பொன்காள மங்கலமதும்
ஆய்ந்ததமிழ் கூறுங் குழாநிலை கிழாம்பாடி யாண்மை
கொண்மு டக்குறிச்சி
யநுமரகர் பழமங்கை குளவிளக் குக்காக மறச்சலூர்
விளக்கேத்தியும்
வேந்தர்மகி ழீஞ்சநகர் சத்திமங்கலமதும் மிக்கசே
மூர்மங்கலம்
வீரநகரீரோடு பேரோடு சித்தோடு மிக்கான
திண்டற் புதூர்
சேர்ந்துமழை பேய்ந்தருளி மிலவமலை திருவாச்சி
திகழ்பனசை யோடாநிலை
தென்முருங் கைத்தொழுவு முப்பத்தி ரண்டூர்சி
றந்தபூந் துறைசை நாடே!

பூந்துறை, வெள்ளோடை, நசியனூர், எழுமாத்தூர், பிடாரியூர், ஈங்கூர், பெருந்துறை, சாத்தம்பூர், சாளமங்கலம், குழாநிலை, கிழாம்பாடி, முடக்குறிச்சி, அநுமன்பள்ளி, பழமங்கலம், குளவிலக்கு, காகம், அறச்சலூர், விளக்கேத்தி, ஈஞ்சம்பள்ளி, சத்தி, சேமூர், மங்கலம், வீரகநல்லூர், ஈரோடை, பேரோடை, சித்தோடை, திண்டல்புதூர், இலவமலை, திருவாச்சி, பனயம்பள்ளி, ஓடாநிலை, முருங்கைத் தொழுன்னு ஆக மொத்தம் முப்பத்தி ரெண்டு ஊருக!

நாளைக்கு கீழ்க்கரைப் பூந்துறை நாடு பார்க்கலாஞ் செரியா? இன்னைக்கு ஈரோட்டு மாப்புக்கு வெச்ச ஆப்பு என்ன? நீங்க தெரிஞ்சிக்க ஆர்வமா இருப்பீங்க இல்லையா?! அப்ப, மேல படீங்க!!

“மாப்பு, நான் கேட்டது இன்னும் வந்து சேரலையே?”

“நாளை அனுப்புகிறேன்!”

“நாளை, நீங்க என்ன அனுப்புறது? அதுபாட்டுக்கு வெடியுது; சாயங்காலம் ஆவுது. இப்படித் தானா, கிரமமா அது வந்து போய்ட்டுதான இருக்கு? நீங்க என்ன வெங்காயம், அதை அனுப்புறது??”

“அய்யோ, அய்யோ, தினமும் உங்ககூட என்ன இழவாப் போச்சு எனக்கு! நாளைக்கு அனுப்புறேன் செரியா?”

”இப்பச் சொன்னது செரி!”


இறங்கு பொழுதில் மருந்து குடி! இங்க பொழுது எறங்கி வெகு நேரமாச்சு, நான் வாறேன்! எங்கப்பா இங்க வெச்ச அந்த பாட்டுலைக் காணம்?!

18 comments:

Kasi Arumugam said...

Pazamai,
Where from you pick up there verses? Waiting to see sitthur.

ILA (a) இளா said...

இதெல்லாம் எப்படிங்க ஞாபகம் எப்படி வெச்சிருக்கீங்க?

பழமைபேசி said...

//காசி - Kasi Arumugam said... //

வாங்ணா, வணக்கம்! நெகமம், செஞ்சேரி மலைன்னு ஒரு வாக்குல வாக்கரை நாடு முடிஞ்சதுங்க....

இன்னும் சித்தூர், கரையாம் பாளையம், செட்டிபாளையம், கிணத்துக்கெடவு எல்லாம் வரலைங்ணா.... கொங்கு சதகம் ரெண்டு மூனு இருக்குதுங்னா... அதுல இருந்துதானுங்....

பழமைபேசி said...

//ILA(@)இளா said... //

நீங்க வேற, நெம்ப மறந்து போச்சுங்க...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பாராளும் வம்சம் இது

சாமி

பச்சை தண்ணியில் விளக்கெரியும்

சாமி

Anonymous said...

எங்கிருந்து தான் இந்த பாட்டெல்லாம் கண்டு புடிக்கிறீங்களீ. சபாசு!!!!!!

பிரபாகர் said...

//நோம்பி வந்திடும்//

நாங்களும் அப்படித்தான் சொல்லுறோம்... அப்படின்னா சரியான அர்த்தம் என்ன?

//சபாசு//

அருமை. எங்களூரிலும் இளசுகள் நான் பொடிசாய் இருக்கும்போது சுத்தித்தி கலக்குவாங்க. அப்பாவோட மாமாதான் குரு.

//சொம்பு எதுவும் நீட்டுப்படாம, நாமளாப் போயித் தண்ணி கேக்குற சூழ்நிலைன்னா, நம்ம ஆட்டம் அன்னைக்கு எடுபடலைன்னு அர்த்தம்! இஃகிஃகி!!//

அடிக்கடி தண்ணி கேப்பிங்கன்னு சொல்லுங்க... இஃகிஃகி... இஃகிஃகி

நினைவாற்றல எண்ணி பிரமிக்கிறேன். ஆமா, நாங்கெல்லாம் எந்த நாட்டுல வர்றோம்? (சேலம்/ஆத்தூர்/கெங்கவல்லி/தெடாவூர்)...

பிரபாகர்.

vasu balaji said...

/நான் வாறேன்! எங்கப்பா இங்க வெச்ச அந்த பாட்டுலைக் காணம்?! /

ஏன்! அம்முணி நீட்டுனாத்தான் சொம்புத்தண்ணியாக்கு. இல்லைன்னா பாட்டில் தேடுதோ?இஃகி

/இன்னைக்கு ஈரோட்டு மாப்புக்கு வெச்ச ஆப்பு என்ன? நீங்க தெரிஞ்சிக்க ஆர்வமா இருப்பீங்க இல்லையா?! /

இல்லையா பின்ன

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமையண்ணன் போட்ட பாட்டு
சபாசு

பழமையண்ணன் கொடுத்த விளக்கம்
சபாசு

மேல்க்கரை பூந்துறை நாட்டுக்கொரு
சபாசு

ஈரோட்டு மாப்புக்கு வச்ச ஆப்புக்கு
சபாசு... போடுங்கய்யா ஆட்டத்தை..

தமிழ் நாடன் said...

அந்த கெடா வெட்டயெல்லாம் விட்டுட்டீங்க! நான் கொங்கு மண்ணுக்கு போகும் போதெல்லாம் அடிக்கடி கேக்குற வார்த்தைகள் நோம்பி அப்புறம் கெடா வெட்டு.

பாட்டெல்லாம் எப்படி நினைவில் வச்சிறுக்கீங்க? பெரிய ஆளு நீங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

அழகா...எங்க இருக்கீங்க நீங்க

இதெல்லாம் நீங்க பேசி நான் நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு...

ஆரூரன் விசுவநாதன் said...

வழி வழியாக பாடப்பட்ட பாடல்கள் கேட்பதற்கு இனிமை......இது போன்ற ஒரு பாடலை நானும் கேட்டிருக்கிறேன்.

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்


மாப்பு வோட ஆப்பு மட்டும் புரியல...சரி மாப்புகிட்டயே கேட்டுக்கறனுங்...

ஈரோடு கதிர் said...

நம்ம பகுதியில
மாரியம்மன் பண்டிகைக்கு
கம்பத்தை சுத்தி நடு சாமம் வரைக்கும் நம்ம சோட்டு பசவ ஆடுவாங்க...

அந்த ஒன்னான் அடி, ரெண்டான் அடினு பறைக்கு ஏத்த மாதிரி ஆடுறப்போ... வேடிக்கை பாக்கற நமக்கு... உடம்புக்குள்ளே எலும்பெல்லாம் ஆடும்ங்க... ஆனா ஆடறத பாக்கறதோட செரி... ஆடறதுக்கு வெக்கம்..

ஈரோடை, சித்தோடை, பேரோடை வரைக்கும் வந்துட்டீங்க...
அப்பிடியே கொஞ்சம் வடக்கே... பவானி, அந்தியூர் வந்துட்டு போங்க மாப்பு

ஈரோடு கதிர் said...

//மாப்பு வோட ஆப்பு மட்டும் புரியல...சரி மாப்புகிட்டயே கேட்டுக்கறனுங்...//

ம்ம்ம்.. அது ரகசியம்
வரலாறில் பதிக்க விடமாட்டோம்ல

என் தவறைத் திருத்திய மாப்புக்கு நன்றி

அமுதா கிருஷ்ணா said...

எங்கே இருந்தாலும் நாம் வளர்ந்த இடங்கள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே...நல்ல பாட்டு....

க.பாலாசி said...

//நம்ம பகுதியில
மாரியம்மன் பண்டிகைக்கு
கம்பத்தை சுத்தி நடு சாமம் வரைக்கும் நம்ம சோட்டு பசவ ஆடுவாங்க...//

நானும் இதை பார்த்திருக்கேன்.

//இதுல நாம கம்பஞ் சுத்துற பேர்வழிங்க. எங்க நோம்பின்னாலும் வங்கணனுக கூடச் சேந்துட்டு ஏழெட்டுப் பேராக் கிளம்பீருவோம். அங்க போயி வாத்தியத்துக்கு ஏத்த மாதர ஆடி, வேடிக்கை பாக்க வந்த அம்மணிககிட்ட பேர் வாங்குறதுல ஒரு குதூகலம்!//

அப்படியே ஊர் வம்ப வாங்கிகிட்டு வர்ரதுல ஒரு சுகம்....

பாட்டெல்லாம் நல்லாயிருக்கு....

Unknown said...

வெடிய வெடிய கம்பம் ஆடிப்போட்டு வந்தா, காலங்காத்தால எங்கம்மா சீவக்கட்டய கைல வச்சுக்கிட்டு நிக்கறது அப்படியே கண்ணுக்குள்ள வருதுங்க.. சோடியாட்டம்னா சோடியாட்டம் போங்க, வண்டில பூட்டுன காளைக மாதர அப்படி அருமையா இருக்குமுங்க..
இந்த வாக்குவரம் பத்தி சொல்லாம விட்டுடீங்களே, அம்மணிகள மயக்குரதுக்குனே ஒரு சில வாக்குவரம் நான் அப்பப்போ எடுத்துவிடுவேன்..

இந்த கும்மிப்பாட்டு எல்லாம் நீங்க பாடுவிங்களா? எங்க பக்கத்தூர்க்காரனுகளுக்கும் எங்களுக்கும் அதுலதான் சண்டையே வரும்..

பழமைபேசி said...

மக்களே, அனைவருக்கும் நன்றி! மீண்டும் அடுத்த இடுகையில சந்திக்கலாம்!