4/30/2009

குண்டக்கமண்டக்க செயலாற்றும் பஞ்சமாபாதகன்!

எங்கு நோக்கிடினும் எளிதாய்ச் சொற்கள் பரிவர்த்தனை. அன்பும் பண்பும் மனிதநேயமும் மலினப்பட்டுப் போனதில், இன்றைய நாளில் மலிவாய்க் கிடைப்பவை துரோகி, கயவன், கபடன், எதிரி, சோரன், மாயன், வக்கிரன், வஞ்சகன், வேடதாரி என்று எத்துனை எத்துனை சொற்கள் கொண்டு பட்டங்கள் சூடுவதும், எள்ளி நகையாடுவதும்? அவற்றுகெல்லாம் உண்டான பொருளறிய எவர் தலைப்பட்டார்? ஆயினும், புழங்குவதற்கு ஏது தயக்கம்?! தமிழாட்சி, தூற்றுவதில் கோலோச்சும் காலமன்றோ?!

வாய்ச்சாடலில் ஒருவர் அறைகிறார், பஞ்சமாபாதகன், இனத்தைக் கெடுக்க வந்த கயவன் என்றெல்லாம்.... உமது தூற்றலில் எதிரி குளிர் காய்கிறானே? அதை நினைந்து, நமக்கு ஆவதென்ன அன்பர்காள்? வாருங்கள் பஞ்சமா பாதகத்தின் பொருளறிவோம்!

வரும் மாசுகள் கொண்டவன் பஞ்சமாபாதகன் என்றறிவார்: கொலை, காமம், களவு, பொய், குருநிந்தை. வடவர் கூற்றுப்படி, அகங்காரம், உலோபம் (ஈயாமை), காமம், பகை, போசனவேட்கை, சினம், சோம்பல் உடையோர் நவகயவன் ஆவர்.

குண்டக்கமண்டக்க செயலாற்றுபவர் என்கிறார் ஒருவர். அதற்கும் ஆயிரமாயிரம் கரங்களின் பின்னொலியில் ஆமோதகம். பொருளறியாமல், தலைவனின் உச்ச குரலுக்கு மயங்கும் தகைமை உடைத்தெறிந்து, குடிகளுக்கென பிறப்பவர் இனி உண்டோ? காலமே விடை தருக! சரி, அது என்ன குண்டக்கமண்டக்க?

குண்டக்க என்றால், சாய்ந்தும், வளைந்தும், நெளிந்தும் ஒரு சீரில்லாமல் இருக்கும், கிடக்கும் எதுவும். மண்டக்கம் என்றால், ஆழ்நீர்நிலையில் இருப்பவரைக் கட்டி இழுக்கும் கயிறு. இழுபடுதல் ஆனபின்னர், சுருட்டிச் சீர்பட எடுத்து வைக்காமல் எறிந்து கிடப்பது குண்டக்கமண்டக்கம். தெளிவில்லாமல், அங்குமிங்குமாய் தான்தோன்றியாய் இருப்பவன் குண்டக்கமண்டக்கன். எந்தத் தலைவரும் குண்டக்கமண்டக்க செயலாற்றும்படியாய் இல்லை, ஆனால் அவர்கள் பின்னால் செல்லும் அபிமானிகள்?!

19 comments:

அப்பாவி முரு said...

//குண்டக்கமண்டக்க செயலாற்றும்படியாய் இல்லை, அவர்கள் பின்னால் செல்லும் தொண்டர்கள்?!//

ஆழ்நீரில் அமிழ்ந்து போக வேண்டியது தான்

குடந்தை அன்புமணி said...

ஆழமான கருத்துகள்...!

RAMYA said...

அருமையான கருத்துக்கள் சொல்ல உங்களை விட்டால் எங்களுக்கு வேறே ஆளே கிடையாது அண்ணா!!


ஆழமான கருத்துக்கள் !!

vasu balaji said...

'Abettor'(ref sec 18 USC 2)கு சரியான தமிழ்ச் சொல் என்ன?

/தமிழாட்சி, தூற்றுவதில் கோலோச்சும் காலமன்றோ?!/

இயலாமையின் வெளிப்பாடு. கல்லு தடுக்கிடிச்சின்னு தானெ சொல்றது?

/எந்தத் தலைவரும் குண்டக்கமண்டக்க செயலாற்றும்படியாய் இல்லை/

செயலாற்றுவதெல்லாம் தொண்டர்கள்தான். விரும்பியோ விரும்பாமலோ.

லொள்ளு தமிழ் வார்த்தையா? இஃகிஃகி

Unknown said...

நல்ல கருத்துக்கள்.......

பழமைபேசி said...

'Abettor' = உடந்தை

லொள்ளு = தமிழ் ஒலிக்குறிப்புச் சொல்தான் வேர்ங்க பாலாண்ணே!!!

நசரேயன் said...

யோசிக்க வேண்டிய விஷயம்

ஷண்முகப்ரியன் said...

அப்பாவி முரு said...

//குண்டக்கமண்டக்க செயலாற்றும்படியாய் இல்லை, அவர்கள் பின்னால் செல்லும் தொண்டர்கள்?!//

ஆழ்நீரில் அமிழ்ந்து போக வேண்டியது தான்//
Well-said !!

vasu balaji said...

'Abettor' = உடந்தை

பழமைட்ட கேக்கறதுன்னா அவ்வளவு எளிதா கேட்டுடுவமா. அதனால தான் சட்டப் பிரிவு சொன்னது. உடந்தைன்னு அர்த்தம் மட்டுமே பொருந்தாது. முடியறப்போ பார்த்து சொல்ல முடியுமா தம்பி?

பழமைபேசி said...

//பாலா... said...
'Abettor' = உடந்தை

பழமைட்ட கேக்கறதுன்னா அவ்வளவு எளிதா கேட்டுடுவமா. அதனால தான் சட்டப் பிரிவு சொன்னது. உடந்தைன்னு அர்த்தம் மட்டுமே பொருந்தாது. முடியறப்போ பார்த்து சொல்ல முடியுமா தம்பி?
//


சக்கமனதாரி போதுங்களா அண்ணே? நான் இதைச் சொன்னா, அது ரொம்ப கடினமா இருக்குமேன்னு பார்த்தேன்...

அப்படீன்னா, நேரிடையா உடன்படுதல், ஊக்கம் தருதல், உசுப்புதல்ன்னு பலதும் உள்ளடங்கி இருக்குங்க அண்ணே!

Muniappan Pakkangal said...

Nice explanation for Panchamaapaathaham.Plz visit my blog for a Pazhamai topic.

vasu balaji said...

/சக்கமனதாரி போதுங்களா அண்ணே? /

புது வார்த்தை. நன்றி!

dondu(#11168674346665545885) said...

நேற்று வடிவேலு கனவில வந்து ஒரே அழுவாச்சி போங்க. குண்டக்கன்னா என்ன மண்டக்கன்னா என்னன்னு கேட்டு கேட்டு இந்த பார்த்திபன் என்னை அடிக்கறதுக்கு முன்னாலேயே இந்த பழமை பேசி பதிவை போட்டிருக்கக் கூடாதான்னு ஒரே ஃபீலிங்ஸ்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பழமைபேசி said...

//RAMYA said...
அருமையான கருத்துக்கள் சொல்ல உங்களை விட்டால் எங்களுக்கு வேறே ஆளே கிடையாது அண்ணா!!
//

சகோதரி, இதெல்லாம் என்னுங்க? அவ்வ்வ்...

கயல் said...

நன்றி!!! நல்லாயிருக்குதுங்க உங்க குண்டக்கமண்டக்க விளக்கம்!!!

பழமைபேசி said...

@@அப்பாவி முரு
@@குடந்தைஅன்புமணி
@@RAMYA
@@பாலா...
@@நசரேயன்
@@ஷண்முகப்ரியன்
@@Muniappan Pakkangal
@@ கயல்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

பழமைபேசி said...

//dondu(#11168674346665545885) said...
நேற்று வடிவேலு கனவில வந்து ஒரே அழுவாச்சி போங்க. குண்டக்கன்னா என்ன மண்டக்கன்னா என்னன்னு கேட்டு கேட்டு இந்த பார்த்திபன் என்னை அடிக்கறதுக்கு முன்னாலேயே இந்த பழமை பேசி பதிவை போட்டிருக்கக் கூடாதான்னு ஒரே ஃபீலிங்ஸ்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

வணக்கம் ஐயா!

உங்களுக்கும் கனவுல வர ஆரம்பிச்சிட்டாங்களா? நல்லதுங்க ஐயா!! இஃகிஃகி!!!

கல்கி said...

பொதுவா உங்க பதிவுகளை படிக்கும் போது எங்க தமிழய்யா தான் நியாபகம் வருவார். இந்த பதிவை படிக்கும் போது அவருக்கு இந்த வார்த்தைகளும் விளக்கங்களும் தெரியுமான்னு சந்தேகம் வருது.... :-)

பழமைபேசி said...

//கல்கி said...
பொதுவா உங்க பதிவுகளை படிக்கும் போது எங்க தமிழய்யா தான் நியாபகம் வருவார். இந்த பதிவை படிக்கும் போது அவருக்கு இந்த வார்த்தைகளும் விளக்கங்களும் தெரியுமான்னு சந்தேகம் வருது.... :-)
//

அப்படீங்களா? நன்றிங்க!!!