1/21/2011

ஏவல், பில்லி, சூனியம், வைப்பு, வசியம், செய்வினை, மாந்திரீகம்

”எங்கடா உங்கம்மா போயிருக்கு?”

“எங்கம்மா கொழிஞ்சாம்பாறைக்கு, எங்களுக்கு வெச்ச செய்வினைய எடுக்கப் போயிருக்குதுடா!”

எம் நினைவுக்கு எட்டிய வரையிலும், செய்வினை எனும் சொல் முதன்முதலாக மேற்கூறிய உரையாடலின் மூலம்தான் அறிய நேரிட்டது. அதற்குப் பின், எங்கள் ஊரில் சின்னக்கண்ணான் என்பவர் அடிக்கடி பல வீடுகளுக்குச் சென்று வருவதை அவதானித்து இருந்தோம். எங்கள் வீட்டில் அவர் குறித்து வினவியதற்கு, ”பில்லி சூனியம் விடுவிக்கும் வேலை அவருக்கு. அதனால்தான் அவர் மற்றவர் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வருகிறார்” எனக் கூறினார்கள்.

அவர் என்ன செய்கிறார் என்பதை அறியும் ஆவல் மிகுதியால், அவரைப் பின் தொடர்ந்து சென்று அவர் செய்வதை எல்லாம் கண்டு வந்த நாட்கள் பல.

உடுக்கை அடித்து, மந்திரப் பாடல்கள் பல பாடி, ஒருவருக்குள் இருக்கும் பில்லி மற்றும் சூனியத்தை விடுவிப்பார். வேப்பிலையால் மந்திரங்கள் ஓதி, வசியத்தை அகற்றுவார். பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்குச் சென்று, பூசனைகள் நடத்தி, பூசனைக்கு வைத்த எலுமிச்சம் பழங்களை வீடுகளுக்கு அரணாக விட்டெறிந்து ஏவலை முறியடிப்பார். கோழிக் குஞ்சுகள் மற்றும் நரபலி இட்டு, இருப்பதாகக் கருதப்படும் வைப்புகளை நிர்மூலமாக்குவார்.

பில்லி என்றால், ஒருவரை ஆட்கொண்டு இருக்கும் நச்சு நிரலி என்பதாகும். அதாவது, ஒவ்வொரு மனிதரும் தன்னுள் இருக்கும் ஆன்மா எனும் நிரலியின் சொல்கேட்டுச் செயல்படக் கூடியவராகும். காலையில் எழுந்து, இந்த நேரத்திற்கு இங்கு செல்ல வேண்டும் என எண்ணம் துளிர்க்க, மெய்யானது அக்கட்டுப்பாட்டுக்கு இயங்கும். அக்கட்டுப்பாட்டில் குழப்பத்தை உண்டு செய்யும் விதமாக இயங்குவதுதான் பில்லி என்பதாகும்.

சூனியம் என்றால், ஒருவருக்கு எதுவுமே வாய்க்காது போதல். “அவனுக்கு யாரோ சூன்யம் வெச்சிட்டாங்க”, “அவன் ஒரு சூன்யம்டா” என்றெல்லாம் கிராமங்களில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். மந்திரிக்கப்பட்ட தகடுகளை வீடுகளில் வைத்தல், ஒருவரது மயிரில் மூன்று இழைகளைச் சேகரித்து அவர்தம் வீட்டில் அவர்தம் காலடி மண்ணோடு சுழியம் போல் புதைத்தல் என்பன அந்த வீட்டிற்கும், காலடி மண்ணுக்கு உரியவருக்கும் சூனியத்தை உண்டு செய்யும் என்பது நம்பிக்கை.

ஏவல் என்றால், துர்ப்பாக்கியமான காரியங்களுக்கு ஒருவரைத் தூண்டுவதன் மூலம் அவரைச் சீரழிப்பது அல்லது பாதிப்புக்கு உள்ளாக்குவதாகும். ஒருவருக்குப் பிடித்தமான பானங்கள், பண்டங்கள் முதலானவற்றைப் பூசனையில் வைத்து மந்திரங்கள் பல ஓதி, அவற்றை எல்லாம் அவ்ரைக் கொண்டு நுகரச் செய்வதன் மூலம், ஏவலில் சிக்க வைக்க முடியும் என்பது நம்பிக்கையாகும்.

வசியம் என்றால், தன்வசம் வயப்படுத்துவது. அல்லது, ஆகாக் குணங்களுக்கு ஒன்ற வைப்பது என்பதாகும். இறைச்சி உணவுகள் கொண்டு வசியம் செய்வது. அல்லது ஒரு பெண்ணின் வசம் வீழ்த்துவதற்கு, அப்பெண்ணின் நகம், மயிர் முதலான உடற்கூறினை மந்திரித்து அவரது இருப்பிடத்தில் தரிப்பது போனற செய்லகள் எல்லாம் வசியம் வைத்தல் என்பதாகும்.

வைப்பு என்பது, மேற்கூறியவற்றுக்காக எதோ ஒன்றை வைத்திடச் செய்வதே. அவர்தம் இடத்தில்தான் வைக்க வேண்டும் என்பது இல்லை. அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் வைக்கலாம். அவருக்கு முற்றிலும் தொடர்பில்லாத இடத்திலும் வைக்கலாம்.

செய்வினை என்பது, ஒவ்வாத மாந்திரிகச் செயல்களைச் செய்தல் என்பதாகும். ஆனைமலைக் கோயிலுக்குச் சென்று, அவன் நாசமாகப் போக வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து, மாசாணியம்மனுக்குச் சினத்தை உண்டாக்கும் வகையில் மிளகாயை அரைத்து அம்மனுக்கு அப்புவதெல்லாம் செய்வினை என்பதே ஆகும்.

மாந்திரீகம் என்பதில் எழுத்துப் பிழை இருக்கிறது. மாந்திரிகம் என்பதே சரி. மந்திரங்கள் அறிந்தவரைக் கொண்டு, மற்றவருக்குக் கெடுதல் விளைவிக்கும் பொருட்டு எதைச் செய்தாலும் அதை மாந்திரிகம்/மாந்திரிகன் என்றழைக்கப்படுவது வழக்கம். ஆனால், மாந்திரிகம் என்பது நன்மை பயக்கவும் செய்யும்.

கோயமுத்தூர், காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முனியப்பன் கோவிலின் மந்திரங்கள் ஓதிப் பூசித்துத் தரும் கயிற்றைக் கட்டுவதன் மூலம், உடல் உபாதைகள் நீங்குகிறது எனப் பலர் நம்புகிறார்கள். அதுவும் மாந்திரிகம்தான்.

தூக்கமின்மை, குளிர்காய்ச்சல் முதலானவற்றுக்கு, கிட்டா எனும் மூதாட்டி எங்களுக்குச் சிறுவதின் போது துண்டை வீசிக் கொண்டே மந்திரம் சொல்லி, இறுதியில் திருநூறு வைத்துவிடுவது வழக்கம். இதுவும் மாந்திரிகம்தான்!

யார், என்ன பில்லி, சூன்யம், ஏவல், வசியம் ஆகியன வைத்தாலும், திருமுருகன் பூண்டி, அரசூர்ப் பரமசிவன் கோவில் மற்றும் கொடிமாடுச் செங்குன்றூர் எனும் திருச்செங்கோடு முதலான இடங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வருவதன் மூலம், அவற்றை எல்லாம் முறியடிக்க முடியும் என்பதும் ஐதீகம்.

அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா
திருநீல கண்டம்! .

5 comments:

வருண் said...

***யார், என்ன பில்லி, சூன்யம், ஏவல், வசியம் ஆகியன வைத்தாலும், திருமுருகன் பூண்டி, அரசூர்ப் பரமசிவன் கோவில் மற்றும் கொடிமாடுச் செங்குன்றூர் எனும் திருச்செங்கோடு முதலான இடங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வருவதன் மூலம், அவற்றை எல்லாம் முறியடிக்க முடியும் என்பதும் ஐதீகம்.***

ஆக பில்லி, சூனியம், வசியம் எல்லாம் அப்பன் முருகன், அவன் அப்பன் பரமசிவனுக்கு பக்தர்களை கொண்டுவந்து குவிக்குதுனு சொல்றீக!

ஆண்லைன்ல பில்லி, சூனியம்லாம் வைக்க முடியுமா?

அப்போ ஆண்லைன்லயே முருகன், பரமசிவன் எல்லாருக்கும் பதிகம் பாடி முடிச்சுடலாம்!

என்னவோ போங்கப்பா!

அப்பாதுரை said...

வசியம் விசயம் நிறைய நேரில பாத்திருக்கேன். கண்ணைக்கட்டும் வித்தை - மெத்த படிச்ச ஹிப்னாசிஸ் வைத்திய முறைக்காரங்களைத் தோற்கடிக்கும் நம்ம ஊர் மோடி மஸ்தான் (அறுபதுகளில்) அரை செகண்டுல செய்யுற கண்கட்டும் வசியமும் அசர வைக்குறதைப் பாத்திருக்கேன். பல மஸ்தான்கள் போலிகள் என்றாலும், நாகூர் வட்ட மஸ்தான்கள் குடுகுடுப்பைக் காரர்கள் கூட - விசயம் அறிந்தவர்கள். கூட்டத்திலிருந்து random ஆட்களை வசியம் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

Chitra said...

இதெல்லாம் கேலியாக பேசும் போதும் - கோபமாக பேசும் போதும் - ஊருபக்கம் சொல்ல கேட்டு இருக்கிறேன். அதில் இத்தனை விஷயங்கள் இருக்குதா? நம்பியவருக்கு உண்டு. இல்லாதவருக்கு இல்லை . :-)

Benzrajan said...

super

Benzrajan said...

super