2/13/2011

காதல் என்பது இதுதானா??

கொறையில மாடு மேய்க்க நாம் போவேன்!
பள்ளத்துல முள் பொறுக்க நீ வருவே!!

ஓடையில துணி தொவைக்க நீ போவே!
ஓடக்கல் பொறுக்க நான் வருவேன்!!

சங்கத்துல பால் ஊத்த நான் போவேன்!
கோயல்ல விளக்கு வெக்க நீ வருவே!!

தையக்காரன்கிட்ட துணி தெக்க நீ போவே!
தச்சங்கிட்ட கீல் வாங்க நான் வருவேன்!!

கண்ணடக்கம் வாங்க நான் போவேன்!
பொன்னரளி பொறிக்க நீ வருவே!!

கொடுமுடித் தீர்த்தம் பாக்க நீ போவே!
நீநிக்க இடஞ் செய்ய நான் வருவேன்!!

பூளைப்பூவு வாங்க நான் போவேன்!
கோலமாவு வாங்க நீ வருவே!!

கோதும்பி அரைக்க நீ போவே!
தவுடு வெலை கேக்க நான் வருவேன்!!

அறுவடையின்னு மக்கிரி வாங்க நான் போவேன்!
பொடைக்க மொறம் வேணுமின்னு நீ வருவே!

சுண்டப்பானை வாங்கியாற நான் போவேன்!
தீபம் வெக்க விளக்கு வாங்க நீ வருவே!!

தூரிகட்ட கயிறு வாங்க நீ போவே!
பட்டம்வுட கைநூலு வேணுமின்னு நான் வருவேன்!!

காய்ச்சலுன்னு செறகடிக்க நான் போவேன்!
கணுக்கால்ச் சுளுக்குன்னு நீவியுடச்சொல்லி நீ வருவே!!

உன்ற வயசு பதிமூணு
என்ற வயசு பதினாலு
பார்க்காத நாளில்லை
நெனைக்காத பொழுதில்லை
கடைசி வரைக்கும்
ஒரு சொல்லுக்கூட சொல்லாம
இருந்துட்டமேடி?!

உள்ளத்தில் நீங்காச் சுடர்கள், எங்கிருந்தாலும் வாழ்க!

2/12/2011

சின்ராசூ.... அட்லாண்டாவுல ஆத்தா ஆடுறத சித்த பாக்குலாம் வாடா....


கரக்பூரில் இடம் பெற்ற மயிர்க்கூச்செரியும் நாட்டியம்!

இக்காணொலியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இதில் இடம்பெறும் இசையும், நாட்டியக் கூறுகளும் என்னுள் இருக்கும் அகந்தை, இறுமாப்பு, ஆணவம், திமிர், கள்ளம் என ஏதாவதொன்றைத் துடைத்தெறிவது போன்ற உணர்வு!!

2/07/2011

ஒரு நாடு! ஒரு வாழ்க்கை!! ஒரு மனிதாலோகம்?!

பூமியில்?
அகோரம்!

நிலத்தில்?
மோசடி!

நீரில்?
அசுத்தம்!

காற்றில்?
மாசு!

தொழிலில்?
அநியாயம்!

கல்வியில்?
வியாபாரம்!

நம்பிக்கையில்?
துரோகம்!

மந்திரி சபையில்?
கொள்ளை!

சிறையில்?
நிம்மதி!

ஆட்சியில்?
ஊழல்!

அரசியலில்?
சூழ்ச்சி!

கூட்டணியில்?
குழப்பம்!

குடும்பத்தில்?
கள்ளம்!

உறவில்?
விரிசல்!

அன்பில்?
போலித்தனம்!

காதலில்?
??????!

ஒரு நாடு! ஒரு வாழ்க்கை!! மனிதாலோகம்?! நடக்கட்டும்...நடக்கட்டும்!!!

2/02/2011

உடுமலை மகானுக்கு அஞ்சலி!

உடுமலை :உடுமலை நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முக்கிய காரணமாக இருந்த தொழிலதிபர் வித்யாசாகர்(87) காலமானார்.

உடுமலையில் 1924ம் ஆண்டு பிறந்த வித்யாசாகர், கல்லூரி படிப்பை முடித்தும், 1949ல் நூற்பாலை துவங்கினார். தென்னிந்திய நூற்பாலைகள் மற்றும் பருத்தி ஆராய்ச்சி கழகத்தில் தலைவராகவும், துணை தலைவராகவும்பதவி வகித்தார். நாட்டில் முதல்முறையாக 100கவுண்ட் நூல் உற்பத்தி செய்யதேவையான "சுவின்' என்ற பருத்திரகத்தை தனியார் பண்ணை நிலங்களில் உருவாக்கியவர்.

1955ம் ஆண்டு உடுமலை நகராட்சி தலைவராக பொறுப்பேற்றார். அப்போதைய முதல்வர் காமராஜரிடம் உடுமலைக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தினர். திட்டத்திற்கு அரசு குறிப்பிட்ட தொகையை மட்டும் வழங்கிய நிலையில், தனதுசொந்த பணத்தைசெலவிட்டார். மின்சாரம் மற்றும் எவ்வித மோட்டார்களும் இல்லாமல் புவி ஈர்ப்பு விசையில் திருமூர்த்திமலையிலிருந்து 22 கி.மீ., தூரத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட்ட முதல் கூட்டுக்குடிநீர் திட்டம், பாதிப்பு இல்லாமல் செயல்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கடலில்சென்று வீணாக கலக்கும் ஆறுகளை அணை கட்டிபாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் பி.ஏ.பி., திட்டத்தை செயல்படுத்த அரசை வலியுறுத்தினார். 1976ம் ஆண்டு 2.40 லட்சம் ஏக்கர் பரப்பை 3.55 லட்சம் ஏக்கராக உயர்த்த அப்போதைய அரசு தடை போட திட்டமிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரம்பிக்குளம் - ஆழியாறு ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் வித்யாசாகர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டு, சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நடத்த 20 லட்சம் ரூபாய் வரை தனது சொந்த பணத்தை செலவிட்டு பாசன விவசாயிகள் பாதிக்காமல் தடுத்தார்.

இவரது மறைவயைடுத்து, உடுமலையில் நேற்றுமாலை வர்த்த நிறுவனங்கள், கடைகள் அடைத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சமநிலப்பரப்பில் கடல் மட்டத்தினின்றும் மிகவும் மேடான பகுதியில் இருக்கும் ஊர்களில் எங்கள் கிராமமும்(உடுமலை, அந்தியூர்) ஒன்றாகும். குடிதண்ணீருக்காக சொல்லவொண்ணாத் துயரத்தை அனுபவித்தவர்கள் நாங்கள். அப்படியான நிலையில், முன்னாள் அமைச்சர் ப.குழந்தைவேலு அவர்கள்தான் விசையுந்துகள் மூலம் எங்கள் ஊருக்குத் திருமூர்த்தி மலைக் குடிநீரானது நேரடியாக வீட்டுக்கே வரும் வண்ணம் பேருதவி புரிந்தார். அவரது திட்டத்திற்கு, மேதகு வித்தியாசாகர் அவர்களுடைய திட்டமே அடிப்படையாகும். எங்கள் ஊரின் சார்பாக, அன்னாரது மறைவுக்கு நன்றிப் பெருக்கோடு அஞ்சலியை உரித்தாக்க்குகிறேன்.

2/01/2011

தமிழ்நாட் அசெம்பளி எலக்சன்: முதல்வர் பிக்ரம் ஓஜா?!

மே 20, சென்னா.

அடுத்த ஆண்டு 2046ல் நடக்க இருந்த தமிழ்நாட் அசெம்பளித் தேர்தலை அட்வான்சாக நடத்தியதற்கு, ஆளும்கட்சியான ந்யூ காங்கிரஸ்மேளாவுக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. காவிரி ரிவர் ஓடிக் கொண்டிருந்த இடங்களைச் சீரமைத்துத் தமிழர்களை அங்கு குடியமர்த்தியதனால், கூடுதலாக 16 இடங்கள் பெற்று ஆளுங்கட்சி மூன்றில் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கிறது.

பீகார் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் திக்காக வாழும் சூலூர்த் தொகுதியில் போட்டியிட்ட ஆளுங்கட்சியின் இந்நாள்த் தலைவர் பிக்ரம் ஓஜா, தனக்கு அடுத்தபடியாக வந்த மனோஜ் பணிக்கரைக் காட்டிலும் 17000 வோட்ஸ் அதிகம் பெற்று ஜெயித்துள்ளார்.

ந்யூ காங்கிரஸ்மேளாப் பார்ட்டியின் செக்ரட்டரி மொகித் கார்கே, சென்னா டவுனில் இருக்கும் டிநகரில் தன்னையடுத்து வந்த ஜன்ரோஜ் கட்சியின் தலைவர் விக்ரம் சிங்கைப் பனிரெண்டாயிரம் ஓட்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழர்கள் திக்பாப்புலேசனாக வாழும் மதுரா, திருநல்வாலி ஆகிய ட்ஸ்ட்ரிக்டுகளில், தமிழர்களையே கேன்டிடேட்ஸாக நிறுத்திய ஜன்ரோஜ் கட்சிக்கு நல்ல க்ரிடிட் கிடைத்திருக்கிறது. இந்த டிஸ்ட்ரிக்ட்களில் இருக்குற எல்லா சீட்கள்லயும், 12 இடங்கள்லயும் ஜன்ரோஜ் கட்சியே வின் செய்திருக்கிறது.

சிவகங்காத் தொகுதியில் போட்டியிட்ட சினிமா ஏக்ட்ரஸ் ஆதர்ஸ்னா தாக்கர், தனக்கு அடுத்து வந்த ஓல்டு காங்கிரஸ் வேட்பாளர் ஃபர்மா சிதம்பரத்தை விட 46000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்து இருக்கார். சோசியல் வெல்ஃபேர் மினிஸ்டர் ஆவேன்னு சொல்லியே ஓட்டுக் கேட்டு ஜெயித்துள்ளார் இவர். முன்னாள் மினிஸ்டராக இருந்த தனது தாத்தா வழியில் பப்ளிக் சர்வீசில் ஈடுபடுவேன் என்றும் ப்ராமிஸ் செய்திருக்கிறார்.

லேபர் யூனியன் எலக்சன் ஆபிஸர்களாக, பீகார் மற்றும் ஒரியா மொழி பேசுபவரோடு தமிழ் பேசும் அதிகாரியையும் நியமித்துப் ப்ராப்ளத்துக்கு ஆளான மினிஸ்டர் பரதேஸ் மக்னாலியா, மதுரா சென்ட்ரல் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். ஜன்ரோஜ் கட்சியின் அனுபவ் த்ரதோஷ் 36000 ஓட்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.

ஃபர்தர் ந்யூசுக்கு 12வது பேஜுக்குச் சென்று பாருங்கள்!

-ஈரோட்டில் கிடைக்கும் ஒரே தமிழ் ந்யூஸ் பேப்பர் ”தமிழ்ச்சேதி” ஜர்னலிஸ்ட் மனோஜ்.