3/06/2025

எளியமுறை யாப்பிலக்கணம்

எளியமுறை யாப்பிலக்கணம்

பிற்பகல் நேரம்.  பதிவில் இல்லாத எண்ணில் இருந்து ஒரு வாட்சாப் தகவல் வந்து விழுந்தது. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக்குழுவின் அறிவிப்பு ஒன்றைக் குறிப்பிட்டு, இது பிழையன்றோயென வினவி இருந்தார். என்னுள் பல வினாக்கள் கிளர்ந்தன.

முதலில் இவர் யார்? இலக்கியக்குழுவின் அறிவிப்பைச் சுட்டி என்னிடம் ஏன் விடுக்க வேண்டும் வினாவை?? இருந்தும், அவற்றை ஒதுக்கி வைத்து விட்டுச் சொன்னேன், ’பிழைதிருத்தத்துக்கு ஆட்பட்டு மட்டுறுத்தலுக்கு ஆட்பட்டிருக்கும் அறிவிப்பு அது’. தற்போதைய அறிவிப்பில் பிழை களையப்பட்டிருக்கின்றதெனச் சொன்னேன். நாம் ஏற்கனவே பேசியிருக்கின்றோம், ”உங்கள் வலைப்பதிவில் இருக்கும் வாசகம்” என அவர் கூறியதும்தான் மெலிதாக நினைவுக்கு வந்து நிழலாடியாது. 2009/2010 காலகட்டத்தில் நிகழ்ந்த உரையாடல்கள் நினைவுக்கு வந்தன.

தொடர்ந்து அளவளாவியதில், நான் அவர் வீட்டு முகவரியைக் கேட்டேன். மறுமொழியாக அவரும் என் வீட்டு முகவரியைக் கேட்டு வாங்கிக் கொண்டார். பல பணிகள். மறந்து போய்விட்டேன். இதற்கிடையில் மேலுமொரு நிகழ்வு.

வட அமெரிக்க வாகை சூடி போட்டிகள் குழுவினருடன் பேசிக் கொண்டிருக்கையில், படைப்புத் தேனீ குழுவைச் சார்ந்த கார்த்திக் காவேரிச்செல்வன் எனும் நண்பர் சொன்னார், ’எல்லாமும் பட்டியல் இட்டிருக்கின்றீர்கள்; மரபுச்செய்யுள் எனும் பிரிவு இல்லையே?’ என வினவினார். நாங்கள் எல்லாம் சிரித்துக் கொண்டோம். அவர் சொன்னார், “அதற்கான பதிவு நிகழ்கின்றதோ இல்லையோ, ஆனால் பட்டியலில் இடம் பெறச் செய்வதே தமிழுக்கான அணியாக இருக்கும். அல்லாவிடில் அது பிழை; வேண்டுமானால் நாம் பயிற்சியும் அளிக்கலாம்” என்றார். சரியாகப்பட்டது. உடனே அப்பிரிவும் சேர்க்கப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், “நின்று வென்ற தமிழ்” எனும் தலைப்பிலும் உரையாடி இருந்தோம். தமிழ் எப்படியாக நிலைபெற்று வென்றதென்பதன் பின்னணியாக, ஓரிரு பற்றியங்களைக் குறிப்பிட்டிருந்தோம்.

இன்று(03/06/2025) பிற்பகல். நூலஞ்சலில் சில நூல்கள். அவரும் சொல்லியிருக்கவில்லை, இப்படியிப்படியாக நூல்கள் எழுதியிருப்பதாக. வியப்பாக இருந்தது. “எளிமையாய்ப் பாக்கள் எழுதலாம்” எனும் நூலைக் கண்டதும் கூடுதலான வியப்பு மேலோங்கியது. வட அமெரிக்க வாகை சூடி குழுவினரிடம் கேட்டறிந்து கொண்டேன்.  மரபுச்செய்யுள் எழுதும் போட்டியில் இதுவரையிலும் எத்தனை பதிவுகள் ஆகியிருக்கின்றன? 11 பதிவுகள் ஆகியிருக்கின்றனவாம்! நின்று வென்ற தமிழ்!!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், வாழ்க தமிழ்!


No comments: