பேரவை விழாக்களால் மிகவும் பயனடைந்தவன் நான் என்பதில் எப்போதும் எனக்கு ஒரு பெருமை உண்டு. எத்தனையோ காரணங்கள் இருப்பினும் இதனை இன்று முன்னிறுத்த விரும்புகின்றேன்.
பிள்ளைகளுக்கு ஊக்கமளிக்கும் ஓர் உந்துசக்தியாகப் பேரவை எங்களுக்கு அமைந்தது. நான் கலந்து கொண்ட முதல் விழாவின் போது, முதலாம் மகருக்கு வயது 5. தொடர்ந்து பேரவை விழாக்களில் பங்கு கொண்டு, முதன்மை மேடையில் வைத்துப் பல பரிசுகள் பெற்றார். Tamil Jeopardy போட்டியில் வாகை சூடினார். தமிழ் சேம்பியன் பரிசும் பெற்றார்.
நான் கலந்து கொண்டதில் மூன்றாம் விழா, சார்ல்சுடன் நகரில் இடம் பெற்றது. நிறைய, அறிவியல் துறையில் பணியாற்றும் முனைவர் நண்பர்கள் கிடைத்தனர். பொதுவாக, ஐடி துறையில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களுக்கு, கல்வித்துறையில் ஒரு மண்ணும் தெரியாது. ஆனால், அறிவியல்துறைசார் பெற்றோரின் பிள்ளைகள் மேம்பட்டதான போக்கில் இருப்பர். பேரவையினால் கிடைத்த முனைவர் உதயசூரியன் பொன்னுசாமி, முனைவர் கண்ணன் குஞ்சிதபாதம் ஆகியோர் எங்கள் பிள்ளைகளுக்கான வழிகாட்டிகளாக ஆகிப் போயினர்.
இடைநிலைப் பள்ளியிலிருந்தேவும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது, ஆய்வுப்பணிகள் செய்வது முதலானவற்றில் இவர்கள் உதவி வந்தனர். மூன்று பிள்ளைகளும், பள்ளியில் இருக்கும் போதேவும் பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு, மாகாண அளவிலான போட்டிகளில், மாகாண செனட்டர், காங்கிரசுமேன் போன்றோர் நடத்தும் அறிவியல் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கின்றனர். பரிசில்கள் பெற்றிருக்கின்றனர். அத்தனைக்கும் வித்து இவர்கள்தாம்.
4/5 ஆண்டுகளுக்கு முன்பு மாகாண அளவிலான போட்டியில் கலந்து கொள்ளச் சென்ற போதுதான், தேடி வந்து அறிமுகம் செய்து கொண்டார் முனைவர் பாரதி பாண்டி அவர்கள். அவர் நடுவர் என்பதால், போட்டி முடிந்த பின்பு, ஆய்வுப்பணிகள் இன்னும் மேம்பட என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதற்கான வழிகாட்டுத்தாள் ஒன்றினைக் கொடுத்தார்.
பிள்ளைகள், இன்றைக்கு, பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவர், இளம் ஆய்வாளர்கள் பள்ளியில் மாணவர்கள் என்றெல்லாம் ஆகிப் போயிருக்கின்றனர். இந்தப் பின்னணியில்தாம், அறிவியல்தேனீ களத்தினைக் காண்கின்றேன். முனைவர்கள் சுவாமி, மனோகரன் முதலானோரைக் கொண்டு அமைந்திருக்கின்ற நல்லதொரு முன்னெடுப்பு. ஐ.டி துறை பெற்றோர்களுக்கான அடுத்தகட்ட வழிகாட்டிகளாகத்தான் நான் அவர்களைப் பார்க்கின்றேன். அறிமுகப்படுத்திய நண்பர் செளந்தர் ஜெயபால் அவர்களுக்குச் சிறப்பு நன்றிகள்.
நமக்காக நம்மால் நடத்தப்படுவதுதான் நம் பேரவை. பங்களிப்புச் செய்தலும் பயனடைதலும் நம் வசமே இருக்கின்றன.
No comments:
Post a Comment